மூன்றுக் கவிதைகள்

1.

அறம்செய விரும்பு
ஆறுவது சினம்
என்கிறார் அவ்வையார்
யாராவது கேட்டால்தானே.

2.

கணவன் நான்
மனைவி நீ
நடத்துவோம் இல்லறம்
வீடுதான் தாம்பரம்

3.

கவிதை கவிதை போல்
இருக்கக் கூடாது
என்கிறான் மலையாளி
இதென்ன புதுக் கரடி?

ஐந்துக் கவிதைகள்

1.

கண் மூடிக்
கண் திறப்பதற்குள்
கடந்துவிட்டது இரவு

2.

வாளை விட வலியதாம்
விசைப்பலகை

3.

பெண்ணைக் கொடுத்த கிழவனுக்கு
காது மூக்கிலும் நரை
முதுமை புகாத துவாரங்கள் ஏது

4.

விழித்திருந்த நேரத்தில்
ரீவைண்ட் ஆகியிருக்கும் போல

விட்ட இடத்திலிருந்து தொடராமல்
வந்ததே வருகிறது கனவில்

5.

இத்தனை மரங்களை அழித்து
இத்தனை புத்தகங்களை எழுதியிருக்கிறார்
அவருக்கு விருது அவசியம்தான்

என்கிறாய் கவிதை

என்னை யாருக்கும் புரியவில்லை என்கிறாய்
கவிதை எல்லோருக்கும் புரிந்துவிடுவதில்லை

என் பேச்சை யாரும் கேட்பதில்லை என்கிறாய்
எனக்கு மட்டும் கேட்கட்டுமே உன் பாடல்

நான் யாருக்கும் அழகல்ல என்கிறாய்
அதைக் காலண்டர் அழகியிடம் சொல்!

என்னால் யாருக்கென்ன பயன் என்கிறாய்
இந்தப் பக்கத்தை நிரப்பப் பயன்பட்டது யாராம்?