ஒன்பது காதல் கவிதைகள்
1
திருமணம் ஆனபிறகு
உனக்கு என் ஞாபகம் வருமா
எனக் கேட்கிறாய்.
நான் உன்னையே
திருமணம் செய்துகொண்டுவிட்டால்?
2
அழகான பெண்களைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது.
உன்னைப் பார்க்கும்போது
அழகான பெண்களின் ஞாபகம் வருகிறது.
3
வாழ்க்கையில்
ஒரு புத்தகமாவது
எழுதிவிடவேண்டும்
உன்னைப் பற்றி.
4
தொலைவினால்
ஆனது
நம் பிரிவு.
5
நான்
இல்லாமல்
வாழக் கற்றுக்கொள்.
6
நேற்று நீ என்னுதட்டில் பதித்த காயம்
கண்ணாடியில் தனைக் கண்டு சிவக்கிறது.
7
என்னென்னவோ
சொல்கிறதுன் பார்வை.
அட வேண்டாமடி,
வாயைத் திற
கேட்கிறேன்
உன் குரலையாவது.
8
எங்கோ போகும் வழியில்
திடீரென எதிர்ப்படும் உன்னை
எதிர்பாராமல் திகைக்கிறேன்
ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய்.
9
நான் மட்டும் இல்லையென்றால்
எதைப் பற்றிக் கவிதை எழுதுவாய் என்கிறாய்.
யாரைப் பற்றி என்று கேள்.
பேயோன் on March 10th 2010 in கவிதை
ஆயில்யன்
responded on 10 Mar 2010 at 3:45 pm #
வேதனை,கிளுகிளுப்பு,ஆதங்கம்,சோகம்,அறிவுரை,லவ்ஸ்சு,நக்கல் எல்லாம் கலந்த டெரர் கவிதைகள்!
பேயோன்
responded on 10 Mar 2010 at 3:50 pm #
மூன்றாவது கவிதையை கவனமாக படித்தீர்களானால் அப்பட்டமான காமம்கூட இருப்பது தெரியும்.
ஆயில்யன்
responded on 10 Mar 2010 at 3:57 pm #
//மூன்றாவது கவிதையை கவனமாக படித்தீர்களானால் அப்பட்டமான காமம்கூட இருப்பது தெரியும்//
நான்கு சுவர்களுக்கு நடக்கும் விசயத்தை நான்கு வரிகளுக்கு அப்பட்டமாகவா? ஆச்சர்யமே!
இனி கவனமாக படிக்கிறேன்
வெற்றி
responded on 10 Mar 2010 at 9:17 pm #
அனைத்தும் அருமையான உணர்வுகளின் வெளிப்பாடுகள் !
ssrajapriyan
responded on 11 Mar 2010 at 11:56 am #
நன்று …….!
CNRA
responded on 11 Mar 2010 at 12:00 pm #
வெகு அருமை!!
salam
responded on 10 Jun 2010 at 12:59 pm #
“இரண்டாம் வாய்பாடு மறந்தவனாய்… ” என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும் ஒரு small அபிப்ராயம்
பேயோன்
responded on 10 Jun 2010 at 3:16 pm #
சலாம்: அப்படியா? அந்த கவிதையை நீங்கள் எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைத்தாலே குலைநடுங்குகிறது.