பேயோன்

படித்ததில் பிடித்தவன்

இல்லை

May 19th, 2010

இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலே கூட இருக்கலாம்; பிரச்சினை அது இல்லை. இல்லை என்பதுதான் பிரச்சினை.

நீங்கள் கடந்த காலத்தில் எனக்குச் செய்த நன்மைகளுக்கு மிக்க நன்றி. இனி செய்யப் போகிறவற்றுக்கும் நன்றி. ஆனால் உங்களுக்கு என் பதில் “இல்லை”தான். நீங்கள் எனக்கு நிறைய நன்மைகள் செய்தவராக இருப்பின் உங்களுக்கு ஒரு பதில்: என்னடா இவன் நன்றி கெட்டவனாக இருக்கிறானே என்று நினைப்பதற்கு முன் நீங்கள் எனக்கு எத்தனை தீமைகள் செய்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். நினைவில் எதுவும் அகப்படவில்லை என்றால் என்னிடம் கேளுங்கள்.

உலகில் யாரும் யாருக்கும் பெரிதாக நன்மைகள் அதிகம் செய்துவிட முடியாது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இவன் ஒரு தடவை இல்லை என்று சொல்லிவிட்டதால் இவன் நண்பன் இல்லை என்று முடிவு கட்டிவிடாதீர்கள். இல்லை என்று சொல்லுமுன்பே நான் உங்களுக்கு நண்பன் இல்லைதான்.

யோசித்துப் பாருங்கள் நீங்கள் யார், நான் யார் என்று. நம்மைப் போல் இரண்டு பேர் நண்பர்களாக இருந்தால் உலகம் தாங்குமா? மூன்றாவது உலக நாடுகள் இது வரை பட்டது போதாதா? நம்மால் வேறு இன்னும் படவேண்டுமா? உங்களோடு என்னைப் பார்த்தால் எனக்கு அசிங்கம். என்னோடு உங்களைப் பார்த்தால் உங்களுக்கு அசிங்கம்.

இல்லை என்று சொல்வதால் நான் உங்களை வெறுக்கிறேன் என்று அர்த்தமில்லை. மனதிற்குள் சபித்துக்கொண்டு கொடுப்பதை விட இல்லை என்று சொல்வதையே நீங்கள் விரும்புவீர்கள், குடி போதையிலாவது. குடித்திருக்கும்போது நீங்கள் எல்லாரும் மனிதருள் மாணிக்கங்கள் என்று எனக்குத் தெரியும். நான் அவ்வளவு மோசம் இல்லை. நான் அது வரை போவதில்லை. என் எல்லை எனக்குத் தெரியும். பேலன்ஸ் தவறி உத்தமன் ஆகிவிடும் ரகம் இல்லை நான்.

உங்கள் தேவையைத் தற்காலிகமாக மறந்துவிட்டு இல்லை என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தேவை உங்களுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதையும் உங்கள் பிரச்னைகள் என்னைத் துளி கூட பாதிப்பதில்லை என்பதையும் தயவுசெய்து மறக்காதீர்கள். இல்லை என்ற வார்த்தை ஆமாம் என்பதை விடத் தெளிவானது. ஆமாம் என்பதற்கு சமயத்தில் இல்லை என்றும் அர்த்தமாகும்.

இல்லாதவன், இருப்பின் இன்மை என்கிற ஓல் பஜனை எல்லாம் என்னிடம் வேண்டாம். நான் என்ன சொன்னேன்? ‘இல்லை’ என்றுதானே சொன்னேன்? அதற்குப் பிறகு எப்படி இல்லாதவன் பற்றியும் இருப்பின் இன்மை பற்றியும் பேச்சு வர முடியும்? இல்லை என்று சொன்னால் புரிந்துகொள்ள மண்டையில் மசாலா இல்லாதவர்கள் கேட்கவே தகுதி இல்லாதவர்கள். அவர்களுக்கு இல்லை என்ற பதிலே அதிகம். அவர்களிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரு அரூப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்கு ‘சுயத்தின் எச்சங்கள்’ என்பது போன்றொரு தலைப்பு வைக்கலாம். கேட்டவர்கள் மனம் நிறைந்து போகட்டும்.

ப்ளீஸ்! நானும் உங்களைப் போன்று டீசன்ட்டானவன்தான். நானும்தான் கோல்ட்ஃப்ளேக் கிங்ஸ் பிடிக்கிறேன். நானும்தான் உங்களைப் போல ‘லாஜிக் இடிக்கிறது’ என்பதற்கு பதில் ‘தர்க்க இடிபாடுகளிடையே சிக்கியுள்ளது’ என்று சொல்ல விரும்புகிறேன். நானும் கஷ்டப்பட்டும் முன்னுக்கு வர முடியாதவன்தான். ஆனால் இதே போலொரு சூழ்நிலையில் நீங்கள் என்னிடம் ‘இல்லை’ என்று சொன்னால் புரிந்துகொள்வேன். என்னவோ நீங்கள்தான் என்னிடம் கையேந்தி நிற்பது போல் நடந்துகொள்ள மாட்டேன்.

கடைசியாக ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது முதலில் நான் உங்களுக்கு சொன்னதுதான்: இல்லை. நான் சொல்வது புரிகிறதா? புரியவில்லை என்றால் அது என் பிரச்னை இல்லை. இல்லை என்று நிறைய தடவை சொல்லிவிட்டேன். ஒரு விஷயத்தைப் பல தடவை சொன்னால் புரிந்துவிடாது என்பது எனக்கும் தெரியும். புரிந்துகொள்ள மிக எளிமையான ஒரு விஷயத்தைப் பல முறை சொன்னால் இன்னும் தெளிவாகவெல்லாம் புரிந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும். தெளிவுக்கும் வரம்புகள் உண்டு. நான் திரும்பத் திரும்ப சொல்லக் காரணம், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல். உங்களுக்கு ஒரு சொல் போதவில்லை. அதனால்தான் இவ்வளவும்.

வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாக சொல்லுங்கள். நீங்கள் நான் பார்த்துப் பல வருடங்களான நண்பராக இருந்து உங்கள் குடும்பத்தினரில் யாராவது நடுவில் இறந்துவிட்டிருந்தால் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் வந்திருப்பேனே! நண்பர்கள் எதற்கு இருக்கிறார்கள், சொல்லுங்கள். இடையில் யாருக்காவது திருமணம் ஆகிவிட்டதா? என் வாழ்த்துக்கள். அதே நாளில் என் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம், அதனால்தான் வர முடியவில்லை.

பார்த்தீர்களா, என்னைத் தவிர உங்களுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்களைக் கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்பது ஏன்? என்பால் உள்ள அன்பினாலா? என்பால் உள்ள அன்பைக் காட்ட உங்களுக்கு இதுதானா சமயம்? அதான் இல்லைன்னு சொல்லிட்டேனே, அப்புறம் ஏன் நிக்கிறே? போ, போ!

Comments

5 Comments

RSS
  • ஆயில்யன்No Gravatar says on: May 19, 2010 at 10:32 am

     

    இல்லை படிக்கவே இல்லை என்று சொல்லமுடியாத அளவுக்கு இல்லை இங்கு பந்தி வைச்சு பரிமாறிட்டீங்க!

  • dagaltiNo Gravatar says on: May 19, 2010 at 11:54 am

     

    இத்தகைய கேசவிரோத கதாசிரியர்களைக் கேட்பார் ______

  • SanthoshNo Gravatar says on: May 19, 2010 at 12:18 pm

     

    //ஒரு அரூப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்கு ‘சுயத்தின் எச்சங்கள்’ என்பது போன்றொரு தலைப்பு வைக்கலாம்
    //இடையில் யாருக்காவது திருமணம் ஆகிவிட்டதா? என் வாழ்த்துக்கள். அதே நாளில் என் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம், அதனால்தான் வர முடியவில்லை.

    :-D

  • ArunKrajanNo Gravatar says on: May 19, 2010 at 12:23 pm

     

    //மனதிற்குள் சபித்துக்கொண்டு கொடுப்பதை விட இல்லை என்று சொல்வதையே நீங்கள் விரும்புவீர்கள்

    //புரிந்துகொள்ள மிக எளிமையான ஒரு விஷயத்தைப் பல முறை சொன்னால் இன்னும் தெளிவாகவெல்லாம் புரிந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும்

    Nice Lines :)

  • பேயோன்No Gravatar says on: May 21, 2010 at 5:05 pm

     

    நன்றிகள் சில.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar