Archive for June, 2010

உள்ளே, வெளியே

பிரதிக்கு
உள்ளே ஒருவிதமும்
வெளியே ஒருவிதமுமாய்
பேசுவதேனோ
கடற்கண்ணி?

12 Comments »

பேயோன் on June 30th 2010 in கவிதை

மரத்தில் சிக்கிய கவிதை

மாடி ஜன்னலோர மேஜை மேல் வைத்து எழுதிய கவிதை ஒன்று பால் பாயின்ட் பேனாவின் எடை போதாமல் நழுவிப் படபடத்து வெளியே பறந்தது.

பதறிப்போய் நான் பார்க்கும்போதே எதிர்வீட்டு மரத்தின் முனையுடைந்த கிளையில் ஓட்டல் பில் போல் குத்திக்கொண்டது. உடனே போய் அதை எடுக்கவா முடியும்?

முக்கியமான ஆவணம் காற்றில் பறந்து உங்கள் வீட்டு மரத்தில் மாட்டிக்கொண்டுவிட்டது என எதிர்வீட்டுக்காரரிடம் உதவி கேட்பதற்கில்லை. மரத்திலேறி மீட்டுக்கொடுத்ததை அவர் படித்தால் ரசாபாசமாகிவிடும்.

காற்றாடிக் குச்சி போன்ற அந்தக் கிளை முனையில் மழை, காற்று எதற்கும் அசராமல் குத்திய நிலையில் காகிதம் மாதங்கள் கிடந்தது. வெட்டுவாரின்றி மரமும் கிடந்தது.

பார்ப்பவருக்குத் தெரியாது அது (என்) கவிதை என்று. தினமும் காலையில் ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் கண் பதிவது மரத்தில் குத்திய கவிதை மேல்தான். துளையிடப்பட்டது எந்த வார்த்தை? ஊகித்தேன்.

பால் பாயின்ட் மை மழைநீரில் அழியாதென்றாலும் காகிதத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. காற்றின் ஈரம் மிச்சம்வைத்த சில வார்த்தைகளை காக்கையின் எச்சம் அழித்திருக்கக்கூடும்.

இரண்டாவது, மூன்றாவது, நான்காவது முறையாக அந்தக் கவிதையை மீண்டும் எழுதிப் பார்த்துவிட்டேன். அதற்குப் பிறகு பலவற்றை எழுதிக் கிழித்தாயிற்று. கழுவேறிய மரியாதை அந்த ஒரு கவிதைக்குத்தான்.

16 Comments »

பேயோன் on June 29th 2010 in கவிதை

இட்டுக்கட்டி எழுதிடும்…

இந்த கவிதைக்கு பதிலாக தனி இடுகையாக ஒரு முறை….

இட்டுக்கட்டி எழுதிடும்
எட்டுப்பட்டி இலக்கியன்
கட்டப்பட்டு உருட்டிய
லிட்டரேச்ச எழுத்தினை

நட்டகல்லு என்றிடும்
திட்டமிட்ட உள்ளுறை
பட்டவர்த்த னத்தைகை
தட்டிமெச்சும் போதிலே

அட்டதிக்கு முழுவதை
அட்டுபீசு ஆள்கையில்
தொட்டதைத் துலக்குமிக்
கட்டமைப் புடைப்பவன்

கட்டுவித்த பனுவலும்
நட்டகல்லென் றாகினால்
எட்டிநிற்கும் வாசகன்
நாதனாவ தெப்படி?

6 Comments »

பேயோன் on June 23rd 2010 in கவிதை

Rss Feed Tweeter button Facebook button Delicious button Stumbleupon button

பேயோன் is using WP-Gravatar