மரத்தில் சிக்கிய கவிதை

மாடி ஜன்னலோர மேஜை மேல் வைத்து எழுதிய கவிதை ஒன்று பால் பாயின்ட் பேனாவின் எடை போதாமல் நழுவிப் படபடத்து வெளியே பறந்தது.

பதறிப்போய் நான் பார்க்கும்போதே எதிர்வீட்டு மரத்தின் முனையுடைந்த கிளையில் ஓட்டல் பில் போல் குத்திக்கொண்டது. உடனே போய் அதை எடுக்கவா முடியும்?

முக்கியமான ஆவணம் காற்றில் பறந்து உங்கள் வீட்டு மரத்தில் மாட்டிக்கொண்டுவிட்டது என எதிர்வீட்டுக்காரரிடம் உதவி கேட்பதற்கில்லை. மரத்திலேறி மீட்டுக்கொடுத்ததை அவர் படித்தால் ரசாபாசமாகிவிடும்.

காற்றாடிக் குச்சி போன்ற அந்தக் கிளை முனையில் மழை, காற்று எதற்கும் அசராமல் குத்திய நிலையில் காகிதம் மாதங்கள் கிடந்தது. வெட்டுவாரின்றி மரமும் கிடந்தது.

பார்ப்பவருக்குத் தெரியாது அது (என்) கவிதை என்று. தினமும் காலையில் ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் கண் பதிவது மரத்தில் குத்திய கவிதை மேல்தான். துளையிடப்பட்டது எந்த வார்த்தை? ஊகித்தேன்.

பால் பாயின்ட் மை மழைநீரில் அழியாதென்றாலும் காகிதத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. காற்றின் ஈரம் மிச்சம்வைத்த சில வார்த்தைகளை காக்கையின் எச்சம் அழித்திருக்கக்கூடும்.

இரண்டாவது, மூன்றாவது, நான்காவது முறையாக அந்தக் கவிதையை மீண்டும் எழுதிப் பார்த்துவிட்டேன். அதற்குப் பிறகு பலவற்றை எழுதிக் கிழித்தாயிற்று. கழுவேறிய மரியாதை அந்த ஒரு கவிதைக்குத்தான்.

இட்டுக்கட்டி எழுதிடும்…

இந்த கவிதைக்கு பதிலாக தனி இடுகையாக ஒரு முறை….

இட்டுக்கட்டி எழுதிடும்
எட்டுப்பட்டி இலக்கியன்
கட்டப்பட்டு உருட்டிய
லிட்டரேச்ச எழுத்தினை

நட்டகல்லு என்றிடும்
திட்டமிட்ட உள்ளுறை
பட்டவர்த்த னத்தைகை
தட்டிமெச்சும் போதிலே

அட்டதிக்கு முழுவதை
அட்டுபீசு ஆள்கையில்
தொட்டதைத் துலக்குமிக்
கட்டமைப் புடைப்பவன்

கட்டுவித்த பனுவலும்
நட்டகல்லென் றாகினால்
எட்டிநிற்கும் வாசகன்
நாதனாவ தெப்படி?

திசை காட்டிப் பறவை – 18

அத்தியாயம் 18 – கணேசு என்னும் கருதுகோள்

குமாருக்கு கணேசு கணேசு என்று ஒரு நண்பன் இல்லை. இருந்திருந்தால் குமார் அவனை கணேசு கணேசு என்றே அழைத்திருப்பான். கணேசு என்று ஒரு நண்பன் இல்லாததை குமார் ஒரு சுமையாகக் கருதவில்லை. என்றாலும் சில நடைமுறைப் பிரச்சினைகள் எழவே செய்தன.

கணேசுவின் தங்கை வசந்தலட்சுமியை ஒரு வருடமாகவே காதலித்தான் குமார். வசந்தலட்சுமியிடம் காதல் கடிதம் கொடுக்க நண்பன் என்ற முறையில் கணேசுதான் பொருத்தமான தூதுவன். ஆனால் கணேசு இல்லை. காதலிக்கத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே வசந்தலட்சுமிக்குப் பல காதல் கடிதங்கள் எழுதிப் பார்த்துவிட்டான் குமார். ஆனால் கொடுக்க ஆளில்லாததால் குமார் எழுதுவதும் கிழித்துப் போடுவதுமாக இருந்தான்.

பிறகுதான் வசந்தலட்சுமிக்கு சாந்தலட்சுமி என்று ஒரு தங்கை இருப்பது தெரியவந்தது. அதாவது கணேசுவின் இளைய தங்கை. இரண்டு தங்கைகளுமே பெயருக்கேற்ப அமைந்திருந்தார்கள். ஒன்று வசந்தம் என்றால் இன்னொன்று சாந்தம். வசந்தலட்சுமி முகத்தின் எடுப்பான அம்சங்களையெல்லாம் மழுப்பிவிட்டால் சாந்தலட்சுமி கிடைத்துவிடுவாள். மற்றபடி பெரிய வித்தியாசம் இல்லை.

ஒரு மகளை ஊரிலேயும் இன்னொன்றை வெளியூர் ஹாஸ்டலிலும் படிக்கவைத்தது ஏன் என்று குமாருக்குப் புரியவில்லை. இருந்தாலும் கணேசு இல்லாத பிரச்சினை தீர்ந்தது.

சாந்தலட்சுமி பூங்கதிருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்திருந்ததை கவனித்தான் குமார். அவளைப் பூங்கதிர் மூலமாக நட்பாக்கிக்கொள்ள அவன் திட்டமிட்டான். அசெம்பிளியில் அவனுக்குப் பக்கத்து வரிசையில் சாந்தலட்சுமி நின்றபோது அவளைப் பார்த்து முறுவலித்தான். அவளுடைய அக்காளுக்குத் தானே பொருத்தமான கணவன் என்று எப்படியெல்லாம் அவளை நம்பவைப்பது?

வழக்கம் போல் பாடபுத்தகங்கள் கைகொடுத்தன. தனது பழைய பாடபுத்தகங்களைத் தேடி எடுத்துப் பூங்கதிர் மூலம் கொடுத்து அனுப்பினான். பூங்கதிருக்கு அறிவுதான் போதாதா, இல்லை வேண்டுமென்றே செய்தாளா தெரியவில்லை, புத்தகங்களைக் கொடுத்தது குமார்தான் என்று சாந்தாவிடம் அவள் சொல்லவேயில்லை. புத்தகங்களைக் கொடுத்த பின் மறுநாள் எதேச்சையாக சாந்தாவின் பக்கம் போவது போல் போனான் குமார். அவள் நகர்ந்து வழி விட்டதோடு சரி. ஒரு வார்த்தை பேசவில்லை. பூங்கதிரிடம் ஒரு முறை கெஞ்சி நினைவுபடுத்திய பிறகுதான் தகவல் போய்ச் சேர்ந்தது.

அதற்குப் பின் சாந்தலட்சுமியுடன் பழகுவதில் குமாருக்குப் பிரச்சினை இருக்கவில்லை. சாந்தலட்சுமி கலகலப்பாகப் பழகினாள். ரத்தக் காயம் ஏற்படுமளவு அடித்துப் பேசி சிரிக்கும் தூரத்திற்குப் பழக்கம் வந்த பின் குமாருக்கு இரண்டு மனமாயிற்று. வசந்தம் கிடைக்கவில்லை என்றால் சாந்தத்தை முயற்சிக்கலாமா என்று யோசிக்கத் தொடங்கினான். மனதிற்குள் இருவரையும் தீவிரமாக ஒப்பிட்டுப் பார்த்த பின், இருவரில் யார் கிடைத்தாலும் நன்மையே என்ற முடிவுக்கு வந்தான். சாந்தலட்சுமிதான் தன்னை விட ஒரு வயது சிறியவள் என்பதால் அவளை அடையலாம் என்று தீர்மானித்தான் குமார்.

குமாரிடம் திடீரென ஒரு மாற்றம் ஏற்பட்டது. சாந்தலட்சுமி பேசும்போது மேலும் உன்னிப்பாகக் கேட்டுத் தீவிரமாகத் தலையசைக்கத் தொடங்கினான். சாப்பிட்டாயா தூங்கினாயா என்று வாஞ்சையுடன் கேட்கத் தொடங்கினான். கணேசுவுக்கு பதிலாக சாந்தலட்சுமியை அமர்த்தப் போய் இப்போது சாந்தலட்சுமிக்காகவே கணேசு தேவைப்படும் நிலை வந்துவிட்டது குமாருக்கு.

கணேசு இருந்தால் இவ்வளவு சிக்கல் இருந்திருக்காது. கணேசுவின், கணேசுவே, கணேசுவுடன், கணேசுவிடம், கணேசுவை, கணேசுவினை, கணேசுவினுடைய, கணேசுவால், கணேசுவுக்கு…

தேவையானவை

பெங்களூர் தக்காளி – 2
குடைமிளகாய் – 1
கோஸ் – 1/4 கிலோ
காரட் – 3
வெண்டைக்காய் – 1/4 கிலோ
தேங்காய் – அரை மூடி
வெங்காயம் (சிறியது) – 5
பச்சை மிளகாய் – 4
துவரம் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
கொத்துமல்லி – 1 ஈர்க்கு
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
பெருங்காயம் – 25 கிராம்
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
நான்கு இன்ச் ஆணி – 8