அடைத்தாலும் தப்புவேன்!
(என் விமர்சகர்களுக்கு, வைரமுத்து பாதிப்புடன்)
என் வறிய எதிரிகளே!
மழைக்கால வெயிலில் உங்களை
நினைத்தால்
உடல் கொஞ்சம் விறைக்கிறது.
உங்கள் முகவரியை
நீங்கள் ஏன் என்
நிமிராத வாலில்
எழுதிவிட்டுப் போகிறீர்கள்?
எருக்கம் பூவையும்
மல்லிகைப் பூவையும்
எப்படி உங்களால்
ஒரே நாறில்
ஒரே நேரத்தில்
கோர்க்க முடிகிறது?
இப்போதெல்லாம்
உங்கள் பேனா
எழுத்துக்களையும் எண்களையும் தவிர
வேறெதையும்
எழுதுவதில்லையே!
நீங்கள் தூவிய
பூக்கள் என் காலைத் தடுக்கியது.
நீங்கள்
தட்டிக் கொடுத்தபோது
என் சட்டையில் தையல் விட்டது.
வறிய எதிரிகளே!
பீடியால் சுட்டு – என்
வெள்ளத்தை வற்றச் செய்யத் திட்டமா?
என்ன செய்வீர்கள் என்னை?
பணமும் புகழும் சோறும்
இல்லாத தேசத்திற்கா
என்னை நாடு கடத்திவிட முடியும்?
பூண்டி நீர்த் தேக்கத்தில்
எனக்கான நீரைக்
களவாடிவிடவா முடியும்?
தமிழகப் பெட்டிக் கடைகளில்
எனக்கான தேன்மிட்டாய்களை
அமுக்கிவிடவா முடியும்?
எழுதிக்கொள்ளுங்கள்
எதிரிகளே!
என்னைச் சிறையிலடைத்தாலும்
நான் கம்பியிடம் கவிதை பாடி
வெளியே வந்துவிடுவேன்.
என் வறிய எதிரிகளே!
நீங்கள் என் மேல் எறிந்த
தீப்பந்தங்களைக்
கொண்டு நான் முதுகு
சொறிந்துகொள்கிறேன்.
என் மீது வீசும் காகித
அம்புகளால் நான் காது
குடைந்துகொள்கிறேன்.
என் மானம் அறிவு தொட முடியாத
தூரத்தில் இருக்கிறது.
சமூகத்தின் சம்மதத்தோடு
நான் சாகாமல் இருக்கிறேன்.
என் பென்சிலுக்கு ரப்பர் இல்லை.
என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.
என் கவிதைகளை
பல்லிகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுப் போவேன்.
என் எழுத்து
படிக்கும் மக்களின் தலையெழுத்து!
என் வறிய எதிரிகளே
என் இதயத்தைச் சொறியாதீர்கள்.
பேண்ட்டைக் கிழித்து
பெர்முடாஸ் ஆக்கிவிடலாம் என்று
பிழை செய்யாதீர்கள்.
சில நூற்றாண்டுகளுக்குத்
தேவையான தாட்களை – என்
கொடவுனில் நான்
சேமித்து வைத்திருக்கிறேன்.
(வைரவரிகளில் ஒரு பகுதி: இவள் வியந்து நிற்கின்றாள்!)
பேயோன் on July 29th 2010 in கவிதை
ஜ்யோவ்ரம் சுந்தர்
responded on 29 Jul 2010 at 5:40 pm #
இந்த மாதிரியெல்லாம் கவிதையெழுதினால், நீங்கள் தப்பினாலும் அடைப்பேன்!
கார்மேகராஜா
responded on 29 Jul 2010 at 5:41 pm #
//என்னைச் சிறையிலடைத்தாலும்
நான் கம்பியிடம் கவிதை பாடி
வெளியே வந்துவிடுவேன்.///
இந்த வரிகள் என்னை கவர்ந்தன!
ஆயில்யன்
responded on 29 Jul 2010 at 5:41 pm #
//தமிழகப் பெட்டிக் கடைகளில்
எனக்கான தேன்மிட்டாய்களை
அமுக்கிவிடவா முடியும்?//
தேன் முட்டாய் பிடிக்கும் அதை வரியில் பிடிக்கும் உமது கவிதையும் இனிக்குது!
ஆமாம் யாரு சும்மா இருந்த உங்களை உஷ்ணபடுத்தியது ஒரே டெரரிசமா இருக்கு வரிகள் ?
அதிஷா
responded on 29 Jul 2010 at 5:42 pm #
அலுவலக நேரத்தில் இப்படிப்பட்ட கவிதைகள் போடவேண்டாமே ப்ளீஷ்.. சத்தம் போட்டு சிரிக்கவே முடியமால்.. மூக்கைப்பிடித்துக்கொண்டு முனகியபடி சிரிப்பது மிக கடினமாக இருக்கிறது. மற்றபடி உங்கள் கவித்துவத்திற்கு ஞான் அடிமையானு
Karthikeyan G
responded on 29 Jul 2010 at 5:44 pm #
//என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.
என் கவிதைகளை
பல்லிகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுப் போவேன்.
//
பல்லியையும் கழுதையையும் இடம்மாற்றி.. அடடே.. என்னே ஒரு ஷொல் விளையாட்டு..
கென்
responded on 29 Jul 2010 at 5:45 pm #
பேண்ட்டைக் கிழித்து
பெர்முடாஸ் ஆக்கிவிடலாம் என்று
பிழை செய்யாதீர்கள்.
சில நூற்றாண்டுகளுக்குத்
தேவையான தாட்களை – என்
கொடவுனில் நான்
சேமித்து வைத்திருக்கிறேன்.
பேயோன்
responded on 29 Jul 2010 at 6:18 pm #
ஜ்யோவ்ராம் சுந்தர்: கடைசியில் இந்த விநோத பெயரை நானே தட்டச்சு செய்யும்படி ஆகிவிட்டது பாருங்கள். கவிதையை கவித்துவம் இல்லாமல் எழுதினால் நன்றாக இருக்காது சார்.
கார்மேகராஜா: முழு கவிதையையும் மொத்தமாக படித்து பார்த்தால் உங்கள் அனுபவமே வேறு விதமாக இருக்கும்.
ஆயில்யன்: வைரமுத்து போல முயன்றேன், அவ்வளவுதான். மற்றபடி என்னை உஷ்ணமூட்டுவன புளூரே டிவிடிகள் மட்டுமே.
அதிஷா: நன்றி. நீங்கள் என்ன ஹிட்லர் அலுவலகத்திலா வேலை பார்க்கிறீர்கள்?
கார்த்திகேயன் ஜி, கென்: நன்றி.
பரிசல்காரன்
responded on 29 Jul 2010 at 6:44 pm #
மிகப் பிரமாதம்.
கூடிய விரைவில் அரசாங்க விழாவுக்கு கவிபாட அழைக்கப்படுவீராக.
சுவாசிகா
responded on 29 Jul 2010 at 6:48 pm #
//ஆயில்யன்: வைரமுத்து போல முயன்றேன், அவ்வளவுதான். மற்றபடி என்னை உஷ்ணமூட்டுவன புளூரே டிவிடிகள் மட்டுமே.//
பேயோன் சார், கவுண்டமணி சாருக்கு அப்புறம் சீரியஸா பேசி மத்தவங்களை சிரிக்க வைக்கிற கலை உங்களுக்குதான் நல்லா கைவந்திருக்கு
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
drongo
responded on 29 Jul 2010 at 7:29 pm #
//என் பென்சிலுக்கு ரப்பர் இல்லை.
என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.
என் கவிதைகளை
பல்லிகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுப் போவேன்.//
எருமைக்குக்கூட சொரணை வருமளவுக்கு அருமையான வரிகள்!
dagalti
responded on 29 Jul 2010 at 7:54 pm #
//பூக்கள் என் காலைத் தடுக்கியது//
ஆஹா! இவ்வரியில் வித்தகக் கவிஞர் விஜய்யின் influence தெரிகிறது.
பேயோன்
responded on 29 Jul 2010 at 8:14 pm #
பரிசல்காரன்: ஏன் சார், ஆக்கபூர்வமாகவே சிந்திப்போமே.
சுவாசிகா: உயர்கவிதையை படித்தால் உங்களுக்கு ஏன் சிரிப்பு வர வேண்டும்?
drongo: போக்குவரத்து காவலர்களிடம் சொன்னால் சாலையில் நெரிசல் குறையும் போல.
டகால்டி: நீங்கள் என்னையல்ல, நேராக வைரமுத்துவினையே இழிவுபடுத்துகிறீர்கள்.
incrediblemonke
responded on 29 Jul 2010 at 9:16 pm #
உங்கள் நக்கலுக்கு எல்லையே இல்லையா.
எனக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி
விட்டது.
சிரிக்க வைக்க இந்த கவிதையை
எழுதினீர்களா சிந்திக்க வைக்க
எழுதனீர்களா.
கவலை ஏதுமில்லை ரசிக்கும்
மேட்டுக்குடி ஏழைக்கும் சேரவேண்டும்
அதுக்கும் பாட்டுபடி என்ற அறிவுரை
கேட்டு எழுதினீர்களா.
மனதில் உள்ள வைரமுத்து இமேஜ்
ரொம்ம டேமேஜ்.
இந்த கவிதையை விரைவில் வைரமுத்து
படிப்பார் என்று நம்புகிறேன்.
dagalti
responded on 29 Jul 2010 at 9:53 pm #
//டகால்டி: நீங்கள் என்னையல்ல, நேராக வைரமுத்துவினையே இழிவுபடுத்துகிறீர்கள்.//
பன்மையில் ஒருமை என்ற தேசியக் கொள்கையை அடிக்கோடிடும் விதமாக, “ஒவ்வொரு பூக்களுமே” என்று பாடி தன்னம்பிக்கையூட்டி பரிசில் பெற்று பாடநூல் புகுந்த புலவனோடு ஒப்பிடுதல் இழிவோ?
பேயோன்
responded on 29 Jul 2010 at 11:09 pm #
incrediblemonke: வைரமுத்துவிற்கு பதிலாகத்தான் யுகபாரதி இருக்கிறார் இணையத்தில்.
டகால்டி: உன்னத வரிகள், மறுப்பதற்கில்லை, இலக்கண பிழையும் உதவியிருக்கிறது. ஆனால் “எப்போது உருப்படும் இத்தேசம், இனி என்ன செய்வதாய் உத்தேசம்?” என கிளப்பி, “கிழியாத தாவணியே” என ஆண் வாயால் பாடவைத்தவருடன் ஒப்பிட முடியாது.
SB
responded on 30 Jul 2010 at 1:10 pm #
//தமிழகப் பெட்டிக் கடைகளில்
எனக்கான தேன்மிட்டாய்களை
அமுக்கிவிடவா முடியும்?//
ஞெலிநரி வெய்யோன்
responded on 31 Jul 2010 at 5:45 pm #
என்னவென்று புரியவில்லை. இதைப் படிக்கும் போது எனக்குக் குற்ற உணர்ச்சியே மேலிடுகிறது. ‘எப்படிப்பட்ட எழுத்தாளனையும் ஓர் அளவுக்கு மேல் விமர்சிக்கக் கூடாது’ என்பதை எனக்குத் தாங்கள் இந்தக் கவிதை வாயிலாக உணர்த்தியிருக்கிறீர், இதை விடக் கற்பித்திருக்கிறீர் என்றே கூறலாம்!
//என் வறிய எதிரிகளே!// என்று நீங்கள் விளிப்பதே ஒருவாறு ஒருமையில் என்னைத்தானோ என நான் எண்ணிப் பார்த்தேன். அதற்கு நான் ஒரு சற்றும் தகுதியற்றவன் அன்று.
//என் வறிய எதிரிகளே
என் இதயத்தைச் சொறியாதீர்கள்.// இவ்வடி உண்மையாகவே என்னை வெட்கித் தலை குனியச் செய்தது.
//பீடியால் சுட்டு – என்
வெள்ளத்தை வற்றச் செய்யத் திட்டமா?// என்னைப் பார்த்துக் கேட்டதாகவே நான் உணர்கிறேன்! இதற்கு மேலும் நீங்கள் இதனை நீட்டிப் படைத்திருந்தால் உறுதியாக நான் அழுதே இருப்பேன்! அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடிய எனக்கு இது உங்களால் உருவாக்கப்பட்ட ஓர் ஆயுதம் என்றே நான் கருதுகிறேன்!
நீங்கள் யாரை மனதில் நினைத்து எழுதினீர் என்று எனக்குத் தெரியாது, ஏன் இதனைப் படித்த ஒருவரும் அறிகிலர். ஆனால் இது எனக்காக எழுதப் பட்டதாகவே நான் கருதுகிறேன். முற்காலத் தவறுகள் ஏதும் இனி வருங்காலத்தில் நடக்காது என என்னால் உறுதியளிக்க முடியும்.
(உறுதிக்கு விழுக்காட்டளவு கோல் தேவையில்லை)
உரிய உரிமையுடன்,
ஞெலிநரி வெய்யோன்
http://twitter.com/FirefoxSurya
பேயோன்
responded on 31 Jul 2010 at 9:33 pm #
இக்கவிதைக்கு மூலகாரணமான வைரமுத்து கவிதையை படிக்காமல் ஏன் வார்த்தைகளை வீணடித்துக்கொள்கிறீர்கள்?
சென்ஷி
responded on 02 Aug 2010 at 5:33 pm #
நல்லாயிருக்குங்க
ஞெலிநரி வெய்யோன்
responded on 02 Aug 2010 at 7:48 pm #
@பேயோன்.
ஐயன்மீர், நான் வைரமுத்துவிடம் ஏதும் வைத்துக் கொள்ளவில்லையே!
நான் உண்மையிலேயே கூறுகிறேன், இது என்னை மிகவும் பாதித்தது. நீங்கள் சிறந்த ப(டி/டை)ப்பாளி.
*இது புகழ்ச்சியன்று*
உரிய உரிமையுடன்,
ஞெலிநரி வெய்யோன்
http://FirefoxSurya.blogspot.com