சம்பவக் காலை

புலர்காலை வேளை நாலரை மணி இருக்கும். ஏழு மணிக்கே வெயில் சுள்ளென்று அடிப்பதன் சாத்தியத்தைத் தன்னுள் பதுக்கியிருந்தது சூரியன். என் வீட்டுத் தெருவிற்கு அடுத்த பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் என் நண்பர் ஒருவர் பேருந்துக்காகக் காத்திருந்தார். அவர் முகத்தில் கவலை நிரந்தரமாக ரேகை போட்டிருந்தது. ஆனால் அன்றைய கவலை ரேகைகளுக்கு ஒரு அவசர காரணம் இருந்தது. அன்று வாடகை தினம். பத்து மணிக்கு வீட்டுக்காரன் வந்து வாடகை கேட்பான். செல்வம் அதற்குள் வந்து பாக்கியைக் கொடுத்துவிடுவானா? இம்மாத சம்பளத்தை முன்பணமாக வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டார் என் நண்பர். வாடகை தரத் தாமதமானால் வீட்டுக்காரனின் நடத்தை போகிற போக்கு பற்றி முன்பே செல்வத்தை நண்பர் எச்சரித்திருந்தார். ஒருவேளை வழக்கம் போல் செல்வம் வராமல் கழுத்தறுத்துவிட்டால்? நினைத்ததும் குடல் புரண்டு படுத்தது நண்பருக்கு. சரி, வீட்டுக்காரன் பத்து மணிக்குதானே வருவான், எட்டு மணிக்கே நான் போய் செல்வத்தைப் பார்த்துப் பணத்தை வாங்கிவிடுகிறேன் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார். அப்போது அந்தப் பக்கமாக யாரோ வேகவேகமாகத் தன் திசையில் வருவது போல் தெரிந்தது நண்பருக்கு. அந்த உருவமும் நடையின் பாணியும் நண்பரின் மனதில் எதையோ மீட்டியது. அந்த நபர் அருகில் வரத் தொடங்கியதும் பரிச்சயம் உறுதிப்பட்டது. அது நான்தான். வியர்க்க விறுவிறுக்க, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, கீழ் உதடெல்லாம் பிதுங்கி, கைவீசப்பா கைவீசு என்கிற ரீதியில், முன்னாள் தென்றலாய், அரை ஓட்டமாய் நடந்து வந்துகொண்டிருந்தேன். நண்பருக்கு என்னைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை. ‘எந்தக் கோட்டையைப் பிடிக்க மற்றும்/அல்லது யாரை அடிக்கப் போகிறார்?’ எனப் புதிருற்றார். “எங்க சார் வேகமா?” என்றார் என்னைப் பார்த்து. நான் நிற்காமல், “என்னை ஒருத்தன் திட்டிட்டான்” என்று ஆத்திரமாக பதிலளித்துவிட்டு விறுவிறு என்று போய்க்கொண்டேயிருந்துவிட்டேன். நண்பர் பிளந்த வாய் மீள்சேராமல் நினைத்துக்கொண்டார் – “வாட் எ மேன்!”

“வெப்காமிக்”

ஓவியத்துவம் என்கிற பெயரில் ஒரு வலைப் படக்கதையினைத் தொடங்கியுள்ளேன். கவிதை, கார்ட்டூன், ஓவியம் முதலானவற்றின் நடுவிலான கோடுகளை அழிக்கும் முயற்சியாக இது அமைந்திடும். குறிப்பாக கவிதையும் நகைச்சுவைத் துணுக்கும் காமிக்ஸ்டிரிப்பும் பரஸ்பரத் தொடுப்புள்ள கலை வடிவங்களாக இருக்கக்கூடும். நானொரு அமெச்சூர் ஓவியனாகவும் இருப்பதால் இத்தகையதொரு முயற்சி எதிர்பார்த்ததுதான். எனினும் எனக்கிது பரிசோதனை மூலம் பரிச்சயம் ஈட்டுவதற்கான ஒரு ஊடகம். இந்த காமிக் குறிப்பிட்ட கால இடைவெளி இன்றி சிற்றிதழ் போல் அவ்வப்போது வெளியிடப்படும்.

தொடக்க அடியாக எனது கவிதைகள் ஒன்றிரண்டினை முயற்சித்துப் பார்த்தவண்ணம் இருக்கிறேன். ஒரு பேனலின் மையப் பொருளை எங்கே வைப்பது, எவ்வளவு காலி இடம் விட வேண்டும், எழுத்துகளை வைக்குமிடம் என ஒவ்வொன்றையும் செய்துபார்த்து உருவாக்குவது சுவாரசியம். பல சாத்தியங்களைக் கொண்டதாயிருக்கிறது இந்த வடிவம். இந்த காமிக்கின் வடிவமைப்பு, உள்ளடக்கம், மற்றும் தன் முறையில் அந்த உள்ளடக்கத்தில் அடங்கியிருப்பது ஆகியவை எனக்குப் பெரும் சவாலாக உள்ளன. வாசகர்களுக்கும் அவ்வாறே இருக்குமென நம்புகிறேன்.