பேயோன்

படித்ததில் பிடித்தவன்

இயற்கைவழி பாலின சமத்துவத்தின் இன்றைய தேவை

February 17th, 2012

அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்பார் தாத்தா
நீ படித்து என்ன ஆகப்போகிறது என்பார் அப்பா
படித்த திமிர் என்கிறான் கணவன்
எல்லாம் என் நேரம்.
- சொந்த கவிதை

It is amazing how complete is the delusion that beauty is goodness.
- Leo Tolstoy, The Kreutzer Sonata

நடப்புக் காலத்தில் எல்லாமே மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. அதன்வழியில் ஆணாதிக்கவாதம் என்ற புராதன மதிப்பீடும் இன்றைய யுகத்திற்கேற்ப நிகழ்நிலைப்படுத்தப்பட வேண்டும். எப்படி நாம் மரபை முழுவதுமாக நிராகரித்துவிடாமல் அதன் ஆக்கபூர்வமான அம்சங்களை வைத்துக்கொள்கிறோமோ, எப்படி நம்மில் சிலர் கடவுள் நம்பிக்கை இல்லாதபோதிலும் கோவில்களை ரசிக்கிறோமோ, அதே போல ஆணாதிக்கவாதத்தின் எதிர்மறையான அம்சங்களை ஆராய்ந்தறிந்து நீக்கிவிட்டு நல்லவைகளை மட்டும் வைத்துக்கொண்டு புதிய அரசியல் பொருத்தப்பாடுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அது ஆண் என்ற ஓர் இனத்தின் அடிப்படை அடையாளம் சார்ந்த தத்துவம் என்பதன் வெகுஜன புரிபடலுக்கு வழிகோல வேண்டும்.

முதலில், ஆண் ஏன் ஆதிக்கம் செலுத்தக்கூடாது? ஆளுவதில் பெண்ணுக்குள்ள உரிமை ஆணுக்கும் உள்ளதுதானே? என்று நாம் தர்க்கத்திற்காவது கேட்டுக்கொள்ளலாம். இன்று கல்வித், தொழில்துறை, மருத்துவம், கலை-இலக்கியம், அரசியல், அறிவியல்-தொழில்நுட்பம், குற்றம் என எங்குமெதிலும் பெண்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இருப்பது போல் பெண் எழுத்தாளர்களும் கவிஞர்கள் இருப்பது போல் பெண் கவிஞர்களும் இன்றைக்கு உருவாகிவிட்டார்கள் (அதுவும் ஔவையார் வகையறா அல்ல, பாப்லோ நெரூடா வகையறா). சமூக அதிகாரப் பகிர்வில் 95-05 என்ற பங்குநிலை மாறி 60-40 என்று கிட்டத்தட்டிய சமநிலை அடையப்பட்டுள்ளது. இதை நேர்மையான பின்ஆணாதிக்கவியல்வாதிகள் (feminists) யாரும் மறுக்க முடியாது.

அரசியல் பிரச்சினைப்பாடுகள் ஒருபுறமிருக்க, ஆண்கள் என்கிற முறையில் நாம் ஏன் ஆணாதிக்கவாதத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான பெயரை இட்டு மீளறிமுகம் செய்யக்கூடாது (முதலில் அதை ஒரு சித்தாந்தத்திற்குரிய மரியாதையைத் தந்து ‘ஆணாதிக்கவியல்’ என்று அழைப்போம்)? ஏனெனில் ஆணாதிக்கவியல் குறுகிய உலகப் பார்வையுள்ள சில ஆண்களிடம் சிக்கியிருக்கிறது. அவர்களிடமிருந்து அதை மீட்டு அனைத்து ஆண்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரு பொது தத்துவார்த்த மரபின் நீட்சியாக அதை பரவலாக்கப்படுத்த வேண்டும். இது நம்மைப் போன்ற படித்த அறிவுஜீவிகளின் கையில் இருக்கிறது.

ஆணாதிக்கவியல் ஒரு தோல்வியுற்ற கடவுளாகும். அதிகாரபூர்வமாக அது ஏறத்தாழ வழக்கொழிந்துவிட்டது. திரைப்படங்களில் வெறும் வெற்றிக்கான வணிக “ஃபார்முலாவாகவும்” ஆணின் பாதுகாப்பின்மை உணர்வில் பிறக்கும் வெற்று மிரட்டல்களாகவும் மட்டுமே அதை நாம் இன்று பார்க்க முடிகிறது. இந்தச் சித்தரிப்பானது எந்தவொரு உண்மை நிலையின் கொண்டாட்டப் பிரதிபலிப்பாகவும் இல்லாமல் ஆண் நனவிலியின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் படிமங்களின் தட்டையான தொகுப்பாக நீர்த்துவிடுகிறது. ‘ரொட்டி ஜித்தன்’ என்ற பங்கை ஒருகாலத்தில் தனியாக ஆற்றிய ஆண் இனம், நடப்புக் காலத்தில் அந்தப் பங்கு ‘தாய்க்குலம்’ என்ற பெண் இனத்தால் சிறுத்துவருவதன் கையாலாகாத சாட்சியாகக் கிடக்கிறது. ஆண் தனது இனத்தைப் பெருக்கிக்கொள்ள உருவாக்கப்பட்ட அமைப்பான குடும்பம் என்பதில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க வந்த சட்டங்கள் ஆண் இனத்தையே அதிகளவு தண்டிக்கின்றன.

பெண்மை மட்டும் பல சமூகப் பங்குகளை உள்ளடக்கிய பன்முக அடையாளம் போலவும் ஆண்மையானது பரிணாம வளர்ச்சியின் ஆதிக் கட்டங்களிலேயே தங்கிவிட்ட ஒற்றைப் பரிமாணம் கொண்ட முரட்டியல்பு போலவும் நிறுவ முயலப்படுகிறது. ஆண்மை என்பது கெட்ட வார்த்தையாகி ஆண் அவனது இயல்புக்குரிய நல்லதனங்களை எல்லாம் இழந்து பெண்ணையும்விடத் தாழ்ந்தவனாகப் பார்க்கப்படுகிறான். இது போன்ற அபாண்டமான சித்திரங்களை சில ஆண்களும் நம்பி ஏற்றுப் பரப்புவதுதான் சோகம். ஆண்மை ஆணின் தனித்துவமான பாலினத்திற்கு உரிய இயல்பு எனப் புரிந்துகொள்ளப்படவும் அவன் அதிகபட்சம் ஒரு “genial giant”ஆகப் பார்க்கப்படவும் ஆண் அறிவுஜீவிகளும் ஆணுக்கு முன்னுரிமை தரும் இயற்கைவழி பாலின சமத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கலந்த நம்பிக்கையைக் கொண்ட பெண் அறிவுஜீவிகளும் பாடுபட வேண்டும். ஒரு சுற்றுலாத் தலம் விளம்பரப்படுத்தப்படுவது போல் ஆண்மையின் நல்நிஜங்கள் குறித்து சமூகத்திடமும் சில “reformist” ஆண்களிடமும் விளம்பரப்படுத்த வேண்டும். இல்லை என்றால் விரைவிலேயே ஆண்மை என்பது வெறும் மோட்டார்சைக்கிள் விசயமாகிவிடும்.

பல முகமிலி பிம்பங்கள் கூட்டிணைந்த சமூகம் என்கிற அமைப்பு, பெண் எனும் பிம்பத்தை பலவீனமானதாகக் காட்டுகிறது. பெண்ணுக்குள்ள ‘பொறுப்புச் சுமை’, புற அழகு, குறிப்பாக உடல் சார்ந்த பலவீனம் ஆகியவை இந்த பலவீன நிலையின் அம்சங்களாக முன்வைக்கப்படுகின்றன. ஆயினும் பொறுப்பு, அழகு, பலவீனம் ஆகிய எதுவுமே இல்லாத ஏகப்பட்ட பெண்களை நாம் பார்க்கிறோம். அந்தந்தப் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்தக் குணாம்சங்கள் பெண் இனம் முழுமைக்கும் பொதுமைப்படுத்தப்பட்டு வழக்கமான ஆண்xபெண் இருமை நிலையைச் சுட்டி அந்தப் பலவீனத்திற்கு ஆண்தான் காரணம் என்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது நன்றாக இல்லை என்றால் அது மிகையாகாது.

ஆணின் இனப்பெருக்கத்தில் பெண்ணுக்குள்ள இடம் இன்றியமையாததாலேயே பெண்களுக்குச் சலுகைகள் அளிப்பதில் உள்ள தர்க்கத்தை ஆண்களில் ஒருவன் என்ற முறையில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவை பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்குத் தனி இருக்கை வரிசைகள் போன்ற வெறும் ஆறுதல் பரிசு விநியோகமாக நில்லாமல் ஆட்சியமைப்பில் 33% இடஒதுக்கீடு போன்ற தூக்கிக்கொடுத்தல்களாகப் பெருத்துவிடுவதுதான் நம் முன் உள்ள நிஜமான, அவசரமான பிரச்சினை.

காதலும் காதலர் தினமும்

February 14th, 2012

தமிழின் முக்கிய எழுத்தாளுமையான நீங்கள், கார்ப்பரேட் நிகழ்பொருளாகிவிட்ட காதலர் தினத்திற்கு ட்விட்டரில் வாழ்த்து சொல்கிறீர்களே, இது வாசகர்களுக்குத் தவறான சமிக்ஞைகளை அனுப்பிவிடாதா? என்று நானேதான் என்னைக் கேட்டுக்கொண்டேன். பதில் சொல்லக் கடமைப்படாதிருக்க முடியுமா? நான் ஏன் காதலர் தினத்தை, அதன் மூலம் காதலை, கொண்டாடுவதை ஆதரிக்கிறேன் என்று சில துரித குறிப்புகளின் மூலமாகச் சொல்கிறேன்.

காதலர் தினம் பல நூற்றாண்டுகளாக இருந்துவருவது. காதலர் தினத் துறவியான புனித வேலண்டைன், பெப்சி, கொக்ககோலா நிறுவனங்கள் தோன்றுவதற்கு முன்பே வாழ்ந்து மரித்தவர். இந்து, பௌத்த, சமண மதங்களின் ஸ்வஸ்திக் சின்னத்தை நாஜிகள் தங்களுடையதாக்கிக்கொண்டது போல் வணிக நிறுவனங்கள் காதலர் தினத்தின் ரத்த வாடையை முகர்ந்து “ஹைஜாக்” செய்திருக்கின்றன. கார்ப்பரேட்களுக்கு எல்லாமே விற்பனைக்குரிய பொருட்கள்தாம் என்பதால் அவை காதலர் தினத்திற்கு விசேச அந்தஸ்து கொடுத்து சுவீகரித்திருப்பதாக நினைக்கக்கூடாது. காதலர் தினம் காதலர்களுடையதே. காதலர் தின ப்ராடக்டுகளை வாங்காதிருப்பதையும் காதலர்கள் தங்கள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் காதலைக் கொண்டாடுவது, அதுவும் பகிரங்கமாகக் கொண்டாடுவது முக்கியமான சமூக செய்தியை அனுப்புகிறது.

காதலித்தல் தன்னளவிலேயே புரட்சிகரமான ஒரு செயல். இது தெரிந்தால் நம்மில் பலர் இதைச் செய்யாமல் இருந்துவிட வாய்ப்புள்ளது. நல்லவேளையாக அது தானாக ஏற்படுகிற ஒன்றாக உள்ளது. சமூகம் துதிக்கும் பல மதிப்பீடுகளைக் காதல் மதிப்பதில்லை. கௌரவம், சுதந்திரம் என்னும் மதிப்பீடுகளையும் காதல் தகர்க்கிறது. சுதந்திரம் சுமையாகிறது, அலட்சியத்தின் அறிகுறியாகிறது. காதலில் அடிமைத்தனமும் சரணாகதியும் முக்கியமாகிறது. சமரசம் உதவுகிறது. ஆண்டாளும் பாரதியாரும் பக்தியை வெளிப்படுத்தும் ஒரு உணர்வாகக் காதலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பக்தியின் தீவிரத்தைக் காட்ட அவர்களுக்குக் காதல் வேண்டியிருந்திருக்கிறது. காதலுக்குச் சூடும் சுரணையும்கூட இல்லைதான்.

காதல் பரஸ்பர பிம்பங்களைச் சார்ந்தும் இயங்குகிறது. இந்த பிம்பங்கள் கலையும்போது காதல் உடைகிறது. சில சமயங்களில் இந்த உடைவு அல்லது கண்திறப்பு திருமணத்தால் ஏற்படலாம். இது முதல் காதலுக்கே உரிய பலவீனம். பாலியல் தன்மை தொடங்கும் பருவத்தில் பிறக்கும் முதல் காதல் பெரும்பாலும் உண்மையான, முதிர்ச்சியான காதலுக்குப் பகுதியளவு முன்னோட்டமாக உள்ளது. முதல் காதல் ஒரு அழகிய வாழ்த்து அட்டை போல முக்கியமான நினைவு. ஆனால் அதற்குப் பிறகு வேறு காதல் எதுவும் அமையும் பட்சத்தில் அது வெறும் முக்கியமான நினைவே. முதல் அடியை இரண்டாம் படியிலிருந்தும் வைக்கலாம், அல்லவா?

பெண் பொருளாகப் பார்க்கப்படுவது பற்றி நாம் இன்று வாய்கிழியப் பேசுகிறோம். காதலில் காதலர்கள் இருவரும் பொருளாகிறார்கள். நகைகளைப் போல், வீடு வாசல் போல் பாதுகாக்கப்பட வேண்டிய உடைமைகள் ஆகிறார்கள். காதலின் இலக்கு அன்பு செலுத்துவதே. ஆனால் அன்புக்கு நேரெதிரான செயல் அன்புக்குரியவருக்குத் தீங்கு செய்தல். காதலர் காதலிக்கப்படும் நபருக்கு அறிந்தே சிறியதும் பெரியதுமாகத் தீங்கு செய்வது காதலிலிருந்து பிரிக்க முடியாத அம்சம். அணுவணுவாகக் காதலிப்பவர்கள் இந்த வேதனையை ரசிக்கவே செய்வார்கள். பொதுவாக எதிர்மறையானவையாகக் கருதப்படும் உணர்வுகள் காதலால் ஏற்படும்போது ஒளிவட்டம் சூழப்பெறுகின்றன, இனிய வலியைத் தருகின்றன. கோபம், பொறாமை, பயம், கவலை, உரிமையுணர்வு, பாலியல் வேட்கை, குரோதம், துரோகம், சுயபச்சாதாபம், பகைமை, பழிவாங்கல், நிறுத்தக்குறிப் பிழைகளுடன் கவிதை எழுதுதல் என காதலின் மெனுவில் ஐட்டங்கள் அதிகம்.

தூய்மையான காதல் சாதி, மதம், இனம், மொழி, தேசம், தோற்றம், வயது, அந்தஸ்து, பாலினம் என எதையும் பார்ப்பதில்லை. இதுதான் என்று வரையறுத்துக் குறுக்கிவிட முடியாதபடிக்குக் காதல் பல முகங்களைக் கொண்டிருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிடுவது புரட்சியின் இயல்பு. அதனால்தான் காதலையும் அதன் பகிரங்கக் கொண்டாட்டத்தையும் பாசிச அமைப்புகள் எதிர்க்கின்றன.

காதல் மனித ஆயுளைப் போன்றது. அதனால் ஒரு வாழ்நாள் காலம் நீடிக்கவும் முடியும், நொடியில் மறைந்துவிடவும் முடியும். அது எவ்வளவு வலுவானதோ அந்தளவிற்குப் பலவீனமானது. சுயங்கள் அழிந்து ஒரு கூட்டுச் சுயம் பிறக்குமிடம் காதல். சுதந்திரம், தனிநபரியம் போன்ற விசயங்களுக்குக் காதலில் இடமில்லை. காதலுக்கும் மரணத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. அது போல காதலையும் காமத்தையும் பிரிக்கும் கோடு மிக மெல்லியது. காதலைவிட சுவாரசியமான ஒரு விசயம் உண்டென்றால் அது காமம்தான். காமம் மட்டும் காதலைவிட நீண்டகாலம் நீடிக்கிற ஒன்றாக இருந்தால் காமத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கும். காதலைப் பற்றி அடுத்த புத்தகக் கண்காட்சி வரை எழுதிக்கொண்டேயிருக்கலாம். ஆனால் இந்த உணர்வைப் பற்றி தாஸ்தாயெவ்ஸ்கிவும் டர்ஜெனிவும் மார்க்வெஸும் சொல்லாத எதையும் நான் சொல்லிவிடப்போவதில்லை.

எனவே, கடைசி வரியை எதிர்பார்த்தது போல் முடிக்கப்போனால், அனைவருக்கும் என்னுடைய காதலர் தின வாழ்த்துகள்.

காணோளி விவகாரம்

February 10th, 2012

பிப்ரவரி 6ந்தேதி கர்நாடக சட்டமன்ற அவையில் மூன்று பா.ஜ.க. அமைச்சர்கள் செல்போனில் ஆபாச வீடியோ பார்த்தார்கள். இதனையொட்டி எழுந்த சர்ச்சையையடுத்து இவர்கள் மூவரும் பிப்ரவரி 8ந்தேதி ராஜினாமா செய்தார்கள். – செய்தி

பலருக்குக் கர்நாடக பா.ஜ.க. அமைச்சர்கள் சட்டமன்றத்தில் பாலியல் படம் பார்த்த பிரச்சினையின் தீவிரம் புரியவில்லை. காணோளியின் இயல்பான ஆபாசம் போக, வரலாற்றுப்பூர்வமாக சட்டமன்றம் என்ற இடத்தின் ஆபாசத்தன்மையைப் பற்றிக் கூறவே தேவையில்லை மற்றும் கன்னடமே கேட்க ஆபாசமானதொரு மொழி என்பதால் இந்த நிகழ்வு மும்மடங்கு ஆபாசமாகிறது.

ஆபாசம் 1 – காணோளிச் சம்பவம் நிகழ்ந்தது ஒரு சட்டமன்றத்தில் என்பதைப் புதிதாக நிரூபிக்கத் தேவையில்லை. ஆபாசம் 2 – இங்குள்ள அரசியல்வாதிகளிடம் இருப்பது போல மொழிப் பற்றும் மொழி அறியாமையும் கலந்த ஒரு மொழிப் பற்று கர்நாடகத்திலும் உள்ளது. இதன் வாயிலாக அவர்கள் பார்த்தது ஆபாச கன்னடப் படமாகத்தான் இருக்க வேண்டும். இது நம்மைச் சற்று விரிவான இந்த மூன்றாவது புள்ளிக்கு எடுத்துச் செல்கிறது.

ஆபாசம் 3 – காணோளியில் நமக்குக் காணக் கிடைப்பது ஒரு கியூபிச ஓவியத்தில் கிடைப்பது போன்ற அரைகுறையான ஒரு சித்திரமே. ஒரு கியூபிச ஓவியன் அவன் வரையும் படத்தில் மனித உறுப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூவிப் புதிராக்குகிறான். கவிதைக்கும் ஓவியத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளதால் கவிதைக்கும் உரிய புதிர்த்தன்மை இது. பௌலோ பிகாசோ, பெர்டினாண்டு லெஜர் போன்ற கியூபிச ஓவியர்கள் வரைந்த நிர்வாண ஓவியங்களை இன்றைய செய்தித்தாள்களின் ரயில் விபத்துப் புகைப்படங்களின் முன்னோடிகள் எனலாம்.

இப்புதிர்த்தன்மையையும் மீறி காணோளியில் நடப்பதை நாம் ஊகிக்க முடிவது சொந்த ஏக்கத்தால் உந்தப்பட்ட கற்பனையின் வலிமை மட்டுமல்ல, காட்சி ஊடகத்தின் பலமும்கூட. இந்தக் காணோளியில் flesh toneகளின் நடமாட்டத்தை வைத்து காட்சித் தொடரை மனதிற்குள் இட்டு நிரப்ப முடிகிறது. அப்படிக் கிடைத்த சித்திரத்தைக் கொண்டு பார்த்தால் இது மைசூர் மஜ்ஜிகே என்ற பாலியல் படத்தில் வரும் காட்சியாகும். மைசூர் மல்லிகே ஒரு தம்பதியினர் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தங்கள் படுக்கையறைக் காட்சிகளைப் பதிவு செய்வதைப் பேசுகிறது. வணிக ரீதியாகவும் அழகியல் ரீதியாகவும் கன்னட சினிமா இருக்கும் நிலையில் இன்றைய தேதிக்கு அதிகம் காணப்பட்ட கன்னடப் படம், பாலியல் புனைவு வகைப்பட்ட மைசூர் மஜ்ஜிகேதான் என்று கன்னட திரைப்படத் துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சபாநாயகரின் பேச்சொலியை விலக்கி காணோளியிலிருந்து வெளிப்படும் ஒலியை மட்டும் கவனமாய் தனிப்படுத்திக் கேட்டால் “ஈவாகே இல்லி ஜரூராகி பன்பிட் அதனெ தெகது இதல்லி பிட்தீரா”1, “ஸ்நானா ஆயித்தா”1 போன்ற வசனங்களைக் கேட்கலாம். இவ்வசனங்கள் மைசூர் மஜ்ஜிகேயில் வருபவையே.

உடலுறவை வெகுஜன நுகர்வுக்காக அழகியல் ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான2 சமரசங்களுடன் காட்சிப்படுத்துதல், பெண்ணை சமத்துவம் பேசுகிற, கவிதை எழுதுகிற வெறும் பெண்ணாகப் பார்க்காமல் சுவாரசியமான பொருளாகப் பார்த்தல் உள்ளிட்ட சமூக-கலாச்சார அம்சங்களின் பக்கம் நான் போக விரும்பாத அதே சமயத்தில், ‘காணோளி’ என்ற சொல்லின் பிறப்பியல் குறித்த புதிய தெளிவு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

அமைச்சர்கள் பாலியல் காட்சிகளைச் சட்டமன்ற அவையில் கைபேசியில் பார்த்தது வம்புக்கு அழைப்பு விடுக்கும் செயல். இவர்கள் அலுவலக நேரத்தில் அதே கைபேசியில் கிரிக்கெட்டைப் பார்த்திருந்தால் அல்லது ஆபாச மின்னூல் படித்திருந்தால் தம் பதவியைத் துறக்க வேண்டியிருந்திருக்காது. இது ஏன் என ஆழ்ந்து சிந்தித்தால் திரும்பத் திரும்ப காட்சி ஊடகத்தின் பலத்தில்தான் வந்து நிற்கிறது.

1 30 நாட்களில் கன்னட பாஷை, 1971, பாலாஜி பப்ளிகேஷன்ஸ்
2 My Speech to the Graduates, 1979, New York Times, Woody Allen

சில குறிப்புகள்

October 17th, 2011

ஏனெனில் இது குறிப்புகளின் காலம்.

*

சமகால சாகித்யம் குறித்த சாமுவேல் டெய்லர் காலரிட்ஜின் நகைச்சுவை கவிதை ஒன்றினை படித்தேன். ஆனால்…. இதில் சிரிக்க என்ன இருக்கிறது?

A Rhymester

Jem writes his verses with more speed
Than the printer’s boy can set ‘em ;
Quite as fast as we can read,
And only not so fast as we forget ‘em.

*

நாம் நன்றாக உன்னித்துப் பார்த்தோமானால், ஒரு கலைஞன் எப்போதும் தொடக்கத்தில் மட்டுமே சிறப்பான படைப்புகளைத் தருகிறான். பின்னர் பரிணாம வளர்ச்சி அடைந்து, விசயங்களின் உள்ளூடே பயணம் புரிந்து செறிவான படைப்புகளை உருவாக்கத் தொடங்குகிறான். ஆனால் தனது ஆரம்பகால வாசகர்களை இழந்துவிடுகிறான். சில சமயங்களில் திடீரென விசில் சத்தம் நின்றுவிடுகிறது.

*

என்னுடைய சிறந்த படைப்புகள் எனது சுமாரான படைப்புகளை விட மோசமாக இருக்கக் கூடாது. ஒரு படைப்பாளியாக இதுவே என் லட்சியம்.

*

ஒரு சிறுகதைக் கரு: அடிக்கடி ஒருவர் சட்டைப்பையிலிருந்து பணமும் வீட்டிலிருந்து சில பொருட்களும் காணாமல் போகின்றன. அவருக்கு வேலைக்காரி மேல் சந்தேகம் ஏற்படுகிறது. தொடர்ந்து கண்காணிக்கிறார். நீயும் கண்காணிக்குமாறு மனைவியிடமும் சிபாரிசு செய்கிறார். கடைசியில் தன்னுடைய சொந்த மகள்தான் அவற்றைத் திருடித் தன் காதலனுக்குக் கொடுக்கிறாள் என்று அவருக்குத் தெரிகிறது. உண்மையாக உழைக்கும் வேலைக்காரியை சந்தேகப்பட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவருக்கு ஏற்படுகிறது. நல்ல வேளை, எடுத்தது தன் மகள்தானே என்கிற உண்மையாலும் வேலைக்காரர்களை சந்தேகிப்பது தன் வர்க்க இயல்பு மட்டுமே என்கிற ஞானோதயத்தாலும் குற்ற உணர்வு நீங்கிச் சமாதானமடைகிறார்.

*

இணையத்தில் நாம் எழுதுவது/ஒரு விசயத்தைச் சொல்வது நம் கருத்தைத் தெருமுனைச் சுவரில் சுவரொட்டியாக ஒட்டிவைப்பது போன்றதாகும். அதை ஆங்காங்கே கிழித்துவிடுவார்கள். கிழிபட்ட இடங்களில் எல்லாம் முன்பே யாரோ ஒட்டிய சுவரொட்டிக் கிழிசல்கள் சம்பந்தமில்லாமல் தலையைக் காட்டும். கிழித்துக் கிழித்துக் கடைசியில் அர்த்தமில்லாத துண்டுகளே மிஞ்சும். இதில் எது கொடுமை என்றால், இந்தக் கந்தர்வ கோலத்திற்கு அடியில் நம் பெயர் மட்டும் கிழிக்கப்படாமல் இருக்கும்.

*

பெருவெடிப்பிற்கு முன் காலம் இருந்ததா? அல்லது பெருவெடிப்பிற்கு முன் காலம் எங்கே இருந்தது? ஏனென்றால் காலமும் வெளியும் யின்-யாங் பாம்புகளைப் போல் பின்னியுள்ளன. ஒன்று இல்லாமல் இன்னொன்றை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நம்மிடம் இதுதான் ஒரு பெரிய குறை. காலம் ஒரு பிராபஞ்சிக களிமண்ணைப் போன்றது. நாம்தான் அதற்கு நந்நமது இயல்புகளின்படி வடிவம் கொடுத்துக்கொள்கிறோம்.

*

பனியை வெள்ளைக்காரர்கள் சார்ந்த ஒன்றாகவே என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் தாராள எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இந்த எனது முன்முடிவு, எழுத்தாளனாகிய எனக்குத் தர்மசங்கடத்தை அளிக்கிறது. அமெரிக்கவாழ் வாசகர்கள் பனியையும் கருப்பர்களையும் அருகருகே வைத்து எடுத்த புகைப்படம் ஒன்றினை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பக் கோருகிறேன்.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar