Archive for the 'கவிதை' Category

மழை பற்றி இரண்டு

1.

எனக்கும் மழையைப் பிடிக்கும்.

பக்கெட்டைக் கவிழ்த்ததுபோல்
ஒரேயடியாகக் கொட்டிவிடாமல்

கொஞ்சம் மெனக்கெட்டால்
இங்கு வர வேண்டிய
உவமை போல்

துளித்துளிகளாகப் பெய்யும்
மழையைப் பிடிக்கும் எனக்கு.

2.

மழையில் நனைந்த ராட்சத மரம் ஒன்றை
வானிலிருந்து உலுக்குவது போல்
உதிர்கிறது மழை.

11 Comments »

பேயோன் on August 2nd 2010 in கவிதை

அடைத்தாலும் தப்புவேன்!

(என் விமர்சகர்களுக்கு, வைரமுத்து பாதிப்புடன்)

என் வறிய எதிரிகளே!

மழைக்கால வெயிலில் உங்களை
நினைத்தால்
உடல் கொஞ்சம் விறைக்கிறது.

உங்கள் முகவரியை
நீங்கள் ஏன் என்
நிமிராத வாலில்
எழுதிவிட்டுப் போகிறீர்கள்?

எருக்கம் பூவையும்
மல்லிகைப் பூவையும்
எப்படி உங்களால்
ஒரே நாறில்
ஒரே நேரத்தில்
கோர்க்க முடிகிறது?

இப்போதெல்லாம்
உங்கள் பேனா
எழுத்துக்களையும் எண்களையும் தவிர
வேறெதையும்
எழுதுவதில்லையே!

நீங்கள் தூவிய
பூக்கள் என் காலைத் தடுக்கியது.

நீங்கள்
தட்டிக் கொடுத்தபோது
என் சட்டையில் தையல் விட்டது.

வறிய எதிரிகளே!

பீடியால் சுட்டு – என்
வெள்ளத்தை வற்றச் செய்யத் திட்டமா?

என்ன செய்வீர்கள் என்னை?
பணமும் புகழும் சோறும்
இல்லாத தேசத்திற்கா
என்னை நாடு கடத்திவிட முடியும்?

பூண்டி நீர்த் தேக்கத்தில்
எனக்கான நீரைக்
களவாடிவிடவா முடியும்?

தமிழகப் பெட்டிக் கடைகளில்
எனக்கான தேன்மிட்டாய்களை
அமுக்கிவிடவா முடியும்?

எழுதிக்கொள்ளுங்கள்
எதிரிகளே!

என்னைச் சிறையிலடைத்தாலும்
நான் கம்பியிடம் கவிதை பாடி
வெளியே வந்துவிடுவேன்.

என் வறிய எதிரிகளே!

நீங்கள் என் மேல் எறிந்த
தீப்பந்தங்களைக்
கொண்டு நான் முதுகு
சொறிந்துகொள்கிறேன்.

என் மீது வீசும் காகித
அம்புகளால் நான் காது
குடைந்துகொள்கிறேன்.

என் மானம் அறிவு தொட முடியாத
தூரத்தில் இருக்கிறது.
சமூகத்தின் சம்மதத்தோடு
நான் சாகாமல் இருக்கிறேன்.

என் பென்சிலுக்கு ரப்பர் இல்லை.

என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.

என் கவிதைகளை
பல்லிகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுப் போவேன்.

என் எழுத்து
படிக்கும் மக்களின் தலையெழுத்து!

என் வறிய எதிரிகளே
என் இதயத்தைச் சொறியாதீர்கள்.

பேண்ட்டைக் கிழித்து
பெர்முடாஸ் ஆக்கிவிடலாம் என்று
பிழை செய்யாதீர்கள்.

சில நூற்றாண்டுகளுக்குத்
தேவையான தாட்களை – என்
கொடவுனில் நான்
சேமித்து வைத்திருக்கிறேன்.

(வைரவரிகளில் ஒரு பகுதி: இவள் வியந்து நிற்கின்றாள்!)

20 Comments »

பேயோன் on July 29th 2010 in கவிதை

படித்துறை

குளத்தின் நடுவில் போட்டேன்
இன்னொரு கல்லைப் புள்ளி

(முற்றுப்) பாப்கார்னாய் விழுங்கிக் குளம்
வேடிக்கை பார்க்கிற தெள்ளி.

10 Comments »

பேயோன் on July 23rd 2010 in கவிதை

Rss Feed Tweeter button Facebook button Delicious button Stumbleupon button

பேயோன் is using WP-Gravatar