இன்றைய பொழுது

காலையிலிருந்து ஜன்னலோர மேஜை மேல் ஒரு அன்ரூல்டு நோட்டுப் புத்தகம் கிடந்தது. ஸ்டேஷ்னரி கடையில் எட்டு ரூபாய் வீசியெறிந்தால் கிடைக்கும் 192 பக்க நோட்டுப் புத்தகம் அது. அங்குமிங்கும் நகராமல் அசையாமல் அதனுலகத்தில் ஆழ்ந்து கிடந்தது அந்த நோட்டுப் புத்தகம். நாள்பட்ட மனிதப் பயன்பாட்டின் அடையாளமாகச் சில தாள்கள் தனித்தனியாகவும் சக தாள்களோடும் லேசாக உடலை வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. வரிசையை மீறித் தெரிந்த தாள்களின் விளிம்பில் பால் பாயின்ட் பேனாவின் எல்லை மீறல்கள். மேற்பகுதியில் பைண்டிங் உரிந்து மெல்லிய நூல்நுனிகள் வெளிப்படத் தொடங்கியிருந்தன. நிறம் மங்கிக் கீறல் விழுந்த பூக்களைச் சுமந்த அட்டையின் இரு வெளிமுனைகள் மடங்கியிருந்தன. ஜன்னல் வழியாக வந்திருந்த வெயில் சூரியகாந்திகளை சூடாக்கிக்கொண்டிருந்தது. அந்த இடத்தையே தூசு சாம்ராஜ்யமாகக் காட்டியது புகுவெயில்.

அருகிலிருந்த பேப்பர் வெயிட்டிடம் மணி 12.30 என்றது குமாரின் கைக்கடிகாரம். குமார் மணிக்கட்டை உயர்த்திப் பார்த்து அதைத் தெரிந்துகொண்டான். ஒரு மணிப் பேருந்திற்கு இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும். – என்று நினைத்தானே தவிரக் கிளம்பவே வரவில்லை அவனுக்கு மனம். இந்த நோட்டுப் புத்தகம், பேப்பர் வெயிட், பால்பாயின்ட் பேனா ஆகிய இத்யாதிகளோடு இத்யாதியாய் நாமும் இருந்துவிட்டால் எத்தனை சுமைகள் மிச்சம் என்று பெருமூச்சு விட்டான். வெயிலும் நிழலும் மாறிமாறிப் படிந்த காலித் தெருக்களின் மதிய மந்தம் அவன் ஏறப்போகும் பேருந்தில் பிரதிபலிக்காது. கூட்டம் நெருக்கித் தள்ளும். சொந்த முயற்சியால் இம்மிகூட அசைய முடியாத நிலையில் ஒரு மணிநேர கடும் உடற்பயிற்சி பெறும் அனுபவத்தை பேருந்து அவனுக்குத் தந்துவிடும். அந்தப் பேருந்தில் ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து முடித்துவிட்டு தன் நிறுத்தத்தில் தன்னை உமிழ்ந்துகொண்ட பின் இருக்கிறது அலுவலகத்தில் பணிபுரி படலம்.

பேப்பர் வெயிட்டிற்குள் ஒரு கடலும் அதில் ஒரு பனி மலையும் இருந்தன. மலையின் அடிவாரத்தில் இருந்த கரையில் ஐந்து பெங்குவின்களும் ஒரு நீர் நாயும் குழுமியிருந்தன. அவை என்ன பேசினாலும் சத்தம் கண்ணாடியைத் தாண்டி வெளியே வரப்போவதில்லை. அலுவலகத்திற்கு போன் போட்டு உடல்நிலை சரியில்லை, இன்று வரவில்லை என்று சொல்லத் தோன்றியது குமாருக்கு. எந்த ஒரு பொய்மையையும் அவன் குரலை வைத்தே மேலாளர் கண்டுபிடித்துவிடக்கூடியவர். போதாக்குறைக்கு பியூன் யாரையாவதும் அனுப்புவார். இன்றைக்கு என்னென்ன வேலை? இன்றைக்குச் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருந்தது. அதை இன்றைக்குச் செய்யாமல் விட்டால் உலகம் அழிந்துவிடாது. அழிவதாக இருந்தால் இளவரசி பெண் பார்ப்பு விழாவிற்கு திடீர் விடுமுறை போட்டபோதே அழிந்திருக்க வேண்டும். அற்ப விஷயங்களுக்காக அழிந்து என்ன பயன்?

தன் அளவைவிடப் பெரிதான பூட்ஸை ஒற்றைக் காலில் அணிந்துகொண்டு நீந்தப் பார்க்கும் வாஷ்பேசின் போலக் கதவருகில் காரை பெயர்ந்திருந்தது. மனிதன் உருவாக்கிய தற்செயல் மேகம் போலப் பல வாரங்களாக வடிவம் மாறாமலே இருந்தது காரை. இந்தத் தொலைவிலிருந்து பார்க்கக் கறுப்பா சிவப்பா என்று தெரியாத ஒரு எறும்பு, காரைப் பிரதேசத்தை கவனமாகத் தவிர்த்து மொத்தப் பரப்பையும் சுற்றிவளைத்துச் சென்றுகொண்டிருந்தது. நேர்ப் பாதையில் செல்லத் தேவையில்லாத அளவிற்கு அவசரம் இல்லை போல; அவசரம் எல்லாம் நமக்குத்தான் போல என்று விரக்தியுடன் நினைத்துக்கொண்டான் குமார்.

அவனுக்கு ஒன்று புரியவேயில்லை. ஒரு விலங்கு என்ற முறையில் உயிர் பிழைத்திருப்பதுதானே மனிதனின் வேலை? காட்டில் வேட்டையாடி உண்டபோது அவன் நன்றாகத்தானே இருந்தான்? நாகரிகம் மனித வாழ்க்கைக்கு அப்படி என்ன மதிப்புக் கூட்டலைச் செய்துவிட்டது? சக்கரத்தையும் நெருப்பையும் கண்டுபிடித்தது போதாதா? எதற்காக இத்தனை கட்டிடங்கள், வாகனங்கள், இயந்திரங்கள், கோடானுகோடி சிக்கல்கள்? மனித அறிவின் உன்னதம் என்று சொல்லிக்கொண்டு ஒரு ராட்சத அபத்தத் தொழிற்சாலையை முடுக்கிவிட்டுவிட்டோம். விளைவு? மற்ற விலங்குகள் மனிதனை நம்பிச் சிக்கலில்லாது வாழ்க்கை நடத்துகின்றன. நாம்தான் ஆறறிவு என்ற பெயரில் அறிவுக்கொன்றாக அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறோம். வேலியில் போகிற ஓணான் நமக்குள்தான் உறங்கிக்கொண்டிருந்திருக்கிறது. நல்ல கூத்து இந்த அறிவு.

குமாருக்கு சக ஊழியர்கள் அனைவரும் மரவுரி தரித்துத் தன்னுடன் காட்டில் வேட்டையாடிக்கொண்டிருப்பது போன்ற காட்சி மனதில் தோன்றியது. சுடிதாரிலேயே சுண்டியிழுக்கும் இளவரசி மரவுரியில் கிறங்கடித்தாள். மற்றவர்களின் மும்முரம் கூர்தீட்டிய கம்பைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு கரடியைப் பின்தொடர்வதிலேயே இருந்தது. வழக்கமாக ஏதாவதொரு சாக்கு வைத்துக்கொண்டு அவளுடன் பேச்சு வளர்த்தும் சுகுமாரே காலடிச் சத்தம் எழுப்பக்கூடாததில் உறுதியாக இருந்தான். இளவரசி அதே கோலத்தில் முன்னேறிச் சென்றாள், ஆனால் குமாரின் கவனமெல்லாம் அவள் மேல்தான் இருந்தது. அவன் அவளை வெவ்வேறு உடைகளில் கற்பனை செய்து பார்த்திருக்கிறான் என்றாலும் மரவுரி அவனுக்குப் புதிது. குமார், இளவரசி, சுகுமார், – இல்லை, இளவரசி, குமார், சுகுமார், – லிங்கேசன் சார், வேலு சார் எல்லோருமாகச் சேர்ந்து கரடியை அடித்தாயிற்று. அதை நெருப்பில் வாட்டி சாப்பிட்டுப் பசியும் ஆறியாயிற்று. அடுத்து என்ன? சுகுமார் இளவரசியை அணுகுகிறான். இளவரசி உறுமிச் சபித்து அவனை விரட்டுகிறாள். லிங்கேசன் சாரும் வேலு சாரும் நிஜத்தில் தமது வயது காரணமாகக் கல்பனாவைப் பொருட்படுத்தாதவர்கள். ஆனால் ஒரு அழகிய இளம்பெண் மரவுரியில் இருந்தால் எந்த நடுத்தர வயது ஆண்களுக்குத்தான் சபலம் ஏற்படாது? திருமணம் நிச்சயமாகிவிட்ட பாதுகாப்பு, கற்காலத்தில் செல்லாது. வேட்டையாடி வேட்டையாடி உடல் இந்த இருவருக்கும் கல்லாகியிருந்தது. ஒரே சமயத்தில் இருவரையும் கையாள்வது கடினம்… குமாருக்கு இந்தச் சிந்தனையோட்டம் கசப்பூட்டியது. அநாவசிய நினைவுகளைக் கிளறியது. இன்றைக்கு அலுவலகத்திற்குப் போகாமல் இருக்க இன்னொரு அரூபக் காரணம் கிடைத்தாற்போல் ஆனது.

ஜன்னல் சட்டத்து ஆணியில் மாட்டியிருந்த சைக்கிள் சாவி எந்த உணர்ச்சியுமின்றி குமாரை வெறித்தது. கடலில் ஊறும் பனி மலையை மேஜை மேல் வைத்து உருட்டத் தொடங்கினான் குமார். ஒரு பெங்குவினின் மண்டையிலிருந்து ஆகாயம் வரை விரிசல் விரிந்திருந்ததை அப்போதுதான் கவனித்து எரிச்சலடைந்தான். இது எப்போது? விடுமுறை கிடைக்காத சாத்தியங்கள் சட்டெனக் குறைந்துவிட்டது போலிருந்தது… ஏதோ திடீர் வாசனை. மண். பலமாகத் தூறிக்கொண்டிருந்தது. வானமும் அதனால் அறையும் இருண்டிருந்ததை அவன் கவனித்திருக்கவில்லை. வேலைக்குச் செல்ல விடாத சோம்பல் வெறுப்பு, மழையால் வலுத்தது. நாட்களை எண்ணினான் குமார். ஞாயிறு வருவதற்கு இன்னும் இரு நாட்கள். தன் மொத்த வாழ்க்கையுமே ஞாயிறுகளை நோக்கிய தளர்ந்த நடையாக அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை இளவரசிக்குத் திருமணம் நிச்சயமாகாமல் இருந்திருந்தால் அலுவலகம் இவ்வளவு கசக்காதோ என்று கேட்டுக்கொண்டு உடனே அந்தக் கேள்வியை நிராகரித்தான். இளவரசியுடனான உறவு, வேலையுடன் இருந்த உறவு போல் தொடக்கத்திலேயே சபிக்கப்பட்டிருந்தது. நாம் இப்போது எதிர்கொண்டுவருவது வாழ்க்கை. வாழ்க்கையிலிருந்து யாரையும் யாராலும் காப்பாற்ற முடியாது. சக அறைவாசிகளைப் பொறாமைப்படவைத்த பிச்சை சம்பளத்தையும் தாண்டி வேலை இருப்பதும் ஒன்று, இல்லாததும் ஒன்று என்னும் தத்துவ மனப்பான்மைக்குத் தட்டுத் தடுமாறி வந்து சேர்ந்துவிட்டதாக நினைத்துக்கொண்டான் குமார்.

“பழைய பேப்பர், இரும்பு சாமான்!”

அமைதிக்குள் தலையை நுழைத்த கூக்குரலைக் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தான் குமார். இருட்டியது இருட்டியதாகவே இருந்தது. ஆனால் தூறல் நின்றுவிட்டிருந்தது. தெருவில் தனியாக வாடிக்கை வியாபாரி பாலிதீன் உறையைத் தலையில் கவிழ்த்துக்கொண்டு தள்ளுவண்டியை சாவகாசமாகத் தள்ளிச் சென்றுகொண்டிருந்தான். மழை நனைத்த தரையில் தள்ளுவண்டி இரும்புகள் தடதடக்க நகர்ந்தது. வியாபாரி வண்டியைத் தள்ளுவதைவிட அதன் கரங்களைத் தட்டாமாலை சுற்ற விரும்பியது போல் பிடித்துக்கொண்டு பின்தொடர்வது போலிருந்தது. பண்டங்களைக் கூவியபடி எந்தப் புறமும் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான் வியாபாரி, தெருக் கோடி மரத்தில் வண்டியும் தானுமாய்க் கரையும் வரை.

வரும் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்

வரும் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் 124 புத்தகங்கள் என்னுடையவை வெளிவருவனவாகத் திட்டமிருந்தது. பல சிக்கல்களால், இடைப்பட்ட பயணங்களால் 106 புத்தகங்கள்தான் எழுத முடிந்தது. இருந்தாலும் வட்டமாக நூற்றியெட்டு புத்தகங்கள் எழுதிக் கொடுங்கள் என்று பதிப்பாளர் கேட்கவே, சட்டென ஒரு கவிதைத் தொகுப்பும் கட்டுரைத் தொகுப்பும் கொடுத்தேன். நல்ல வேளையாக அவர் கேட்டது ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு. பிரதி ஞாயிறு நான் என் மகனுக்கு ஹோம்வோர்க் செய்து தருவேன். அந்த நேரத்தில் அவன் எனக்குச் சில கவிதைகளோ கட்டுரைகளோ எழுதித் தருவான். ஒரு புத்தகத்தை அவனை எழுத விட்டாயிற்று.

பதிப்பகத்தினர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய எனது நூல்களின் பட்டியலை அப்படியே கீழே தருகிறேன். நான் தொடாத விசயங்களே அவ்வளவாக இல்லை என்றுவிடலாம். இந்த 108 புத்தகங்களுக்காக இரண்டு ஸ்டால்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்டால்களில் கூட்டத்தை நிர்வகிக்க பாப்பாசி பத்து என்.சி.சி. மாணவர்களை நியமித்துள்ளது.

வரும் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் என்னுடைய நூல்கள்:-

1. ஒரு லோட்டா ரத்தம் (நாவல்)
2. தேர்ந்தெடுத்த கவிதைகள் (கட்டுரைகள்)
3. பேபல் இவ்வாறு பேசுகிறான் (கட்டுரைகள்)
4. உற்பத்தி (பத்தி தொகுப்பு)
5. உருவகக் கதைகள் (சிறுகதைகள்)
6. தாங்களும் யானும் (நேர்காணல்கள்)
7. அன்புள்ள கடிதங்களே (கடிதங்கள்)
8. பூபாளம் பாடும் பல்லவி (இசை பற்றிய கட்டுரைகள்)
9. பேயோன் 2000 (ட்விட்டர் நுண்பதிவுகள்)
10. என் வாழ்க்கை (நாவல்)
11. இழவு (நாவல்)
12. படலம் (நாவல்)
13. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (நாவல்)
14. பூனை கோர்த்த மாலை (கட்டுரைகள்)
15. நிமித்தங்களின் நதியில் (நெகிழுரைகள்)
16. உரையுடைமை (செய்யுள் உரைத் தொகுப்பு)
17. ஒரு பேனாவின் காமிரா (திரைக்கதைத் தொகுப்பு)
18. பேயோனின் குற்றமும் தண்டனையும் (மொழியாக்க நாவல்)
19. நான்காம் சுழி (சிறுகதைகள்)
20. விண்ணை எட்டும் தூரிகை (ஓவியம் பற்றிய கட்டுரைகள்)
21. நீங்களும் எழுதலாம் PHP (சுயஉதவி நூல்)
22. அ முதல் னௌ வரை (தமிழ் எழுத்துகள் தொகுப்பு)
23. சுயநானூறு (செய்யுள் தொகுப்பு)
24. நிறைய பக்கங்கள் (கட்டுரைத் தொகுப்பு)
25. எவன் எவனோ (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்)
26. தாம்பரம் முதல் திருவான்மியூர் வரை (பயண நூல்)
27. மீள்பாரதி (பாரதி ஆய்வு நூல்)
28. வடகிழக்கு சினிமா (கட்டுரைகள்)
29. நூன்முகம் (ஃபேஸ்புக் இடுகை தொகுப்பு)
30. அன்னிய தரிசனம் (சிறுகதைகள்)
31. ஆறு கவிதைகள் (கவிதைகள்)
32. காதல் கவிதைகள் முழுத் தொகுப்பு
33. தகவல் பிழை (பத்தி தொகுப்பு)
34. ஐரோப்பியச் சிறுகதைகள் (சிறுகதைகள்)
35. வறுமைக் கோடு (கோட்டோவியத் தொகுப்பு)
36. எதெல்லாம் இலக்கியம்? (கட்டுரைகள்)
37. வண்ணக் கலரி (ஓவியத் தொகுப்பு)
38. ஊராந்திரம் (பயண நூல்)
39. ஜப்பான் முன்னேறியது எப்படி? (அபுனைவு)
40. சங்க இலக்கியத்தில் இலக்கியச் சங்கங்கள் (ஆய்வு நூல்)
41. இப்படி திடீரென்று நாளை காலைக்குள் இன்னொரு புத்தகம் எழுதச் சொன்னால் எப்படி? (கட்டுரைகள்)
42. கதகதக்கும் உலகம் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)
43. ஜெர்மானிய பதின்பருவத்தினர் மத்தியில் சூயிங்கம் பயன்பாடு (ஆய்வு நூல்)
44. இன்னும் எத்தனை (கவிதைகள்)
45. கையால் எழுதுபவன் (உலக இலக்கிய கட்டுரைகள்)
46. 130 கிராம் (சிறுகதைகள்)
47. இலக்கண இம்சைகள் (கட்டுரைகள்)
48. இன்னும் வரும் (பத்தி தொகுப்பு)
49. பண்பாட்டின் அறிகுறிகள் (பயண நூல்)
50. வராக பர்வம் (நாவல்)
51. இம்ப்ரஷனிசம் முதல் ஃபாவிசம் வரை (அபுனைவு)
52. பாரதி யார்? (சிறு புத்தகம்)
53. எதெல்லாம் பின்நவீனத்துவம்? (கட்டுரைகள்)
54. தலைப்பு நல்லதாகக் கிடைக்கவில்லை. நீங்களே ஏதாவது ரம்மியமான தலைப்பாக யோசித்து வைத்துவிடவும். நான் பிறகு பார்த்துக்கொள்கிறேன். சில படங்கள் மின்னஞ்சலில் நான் அனுப்பினேன் பார்த்தீர்களா? கருத்து சொல்லுங்கள். புகைப்படத் தொகுப்பும் போடலாமென உத்தேசம். எப்படி வசதி? மற்றவை போனில் – பேயோன். (கட்டுரைகள்)
55. ஏர்டெல் ஜூனியர் சூப்பர் சிங்கர் – சீசன் 1 (திரைக்கதை-வசனம்)
56. நீயா நானா (திரைக்கதை-வசனம்)
57. விசுவின் அரட்டை அரங்கம் (திரைக்கதை-வசனம்)
58. ஜெயா செய்திகள் (சிறுகதைகள்)
59. வங்க சினிமா (கட்டுரைகள்)
60. கனவுகளின் இரவு (நெகிழுரைகள்)
61. டின்னர் செட் முதல் வால் கிளாக் வரை: சமகால கிப்ட் ஐடியாக்கள் (சுயஉதவி நூல்)
62. ஆடவர் சுயஉதவி (சுயஉதவி நூல்)
63. கட்டுரைகள் (கட்டுரைகள் (கட்டுரைகள்)) (கட்டுரைகள்)
64. ஒவ்வொரு இசத்திற்கு ஒவ்வொரு கதை (சிறுகதைகள்)
65. சாப்ளின் என்னும் பிறவி (வாழ்க்கை வரலாறு)
66. ஜென் திருத்தலங்கள் (தல புராண தொகுப்பு)
67. சிதையளவு நெருப்பு (பத்தி தொகுப்பு)
68. மலையாள சினிமா (கட்டுரைகள்)
69. மீந்தவனின் விழிகள் (நெகிழுரைகள்)
70. சட்டத்தில் இடமிருக்கிறது (கட்டுரைகள்)
71. வளம் தரும் வாஸ்து (சுயஉதவி நூல்)
72. நியூமராலஜி: பெயரெழுத்துகளை மாற்றி நீங்களும்கூட கலக்கலாம் (சுயஉதவி நூல்)
73. அதையும்தான் பார்த்துவிடுவோமே! – @borehayயுடன் சில உரையாடல்கள்
74. தூரத்து சொந்தம் (திரைக்கதை-வசனம்)
75. நைஜீரியா: பணத்தோட்டம் (சுயஉதவி நூல்)
76. தமிழ் அறிவியல் நூல்களில் தற்செயலாக அமைந்த அடுக்குத் தொடர்கள் (ஆய்வு நூல்)
77. இந்திய வரலாறு: நீங்களும் எழுதலாம் அதை (சுயஉதவி நூல்)
78. நோக்கியா 2330 பயனர் கையேடு (சுயஉதவி நூல்)
79. இந்தா பிடி இன்னும் ஐம்பது (கவிதைகள்)
80. இரைப்பை நோய்களுக்கு சைக்ளோஸ்போரின் பயன்பாடு (அபுனைவு)
81. ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன் (கட்டுரைகள்)
82. எது எடுத்தாலும் இலக்கியம் (குறுநாவல்கள்)
83. பேயோனின் கேம்பிரிட்ஜ் மாணாக்கர் அகராதி (மொழியாக்கம்)
84. ஆஸ்கார் ஒயில்டு பொன்மொழிகள் (மொழியாக்கம்)
85. மறவன் புலவு: தமிழர் உணவுகள் (கட்டுரைகள்)
86. பாம்புத் தைலம் (கட்டுரைகள்)
87. 87 (நாவல்)
88. உயர்கவித்துவம் (கவிதைகள்)
89. நியான் ஹோலோகிராம் (அறிபுனை நாவல்)
90. கி.பி. எதிர்காலம் (அறிபுனை சிறுகதைகள்)
91. போடி உள்ளே!: தமிழ் சினிமாவில் பெண்கள் (ஆய்வு நூல்)
92. 108 உலக இலக்கிய நாவல்கள் (கட்டுரைகள்)
93. முன்னேறிடு சுயமே! (சுயமுன்னேற்ற நூல்)
94. சிற்பங்களின் இந்தியா (கட்டுரைகள்)
95. தீராத கப்பங்கள்: ஐ.டி. ரிட்டன்ஸ் செய்வது எப்படி (சுயஉதவி நூல்)
96. மை தீர்ந்த மனம் (கவிதைகள்)
97. பேயோனின் சண்டையும் சமாதானமும் (மொழியாக்கம்)
98. ரோடு போடும் கோடுகள் (கோட்டோவிய தொகுப்பு)
99. ஓ. ஹென்றி கதைகள் (மொழியாக்கம்)
100. அது ஒரு செவ்வாய்க்கிழமை (தூர்தர்ஷன் நாடகத் தொகுப்பு)
101. அங்கே என்ன சத்தம்?: மேலை இசை வடிவங்கள் (கட்டுரைகள்)
102. பேயோன் நாடகங்கள் (நாடகங்கள்)
103. கானலைத் தேடும் தண்ணீர்கள் (நெகிழுரைகள்)
104. பவர்பாயிண்ட் உங்கள் நண்பன் (சுயஉதவி நூல்)
105. சொற்களின் தலைநகரம் (கட்டுரைகள்)
106. ஓட்டல் துறை வேலைவாய்ப்புகள் (சுயஉதவி நூல்)
107. திசை காட்டிப் பறவை – 2
108. சிகரம் தொட்ட சிலபலர் (சுயமுன்னேற்ற நூல்)

சம்பவக் காலை

புலர்காலை வேளை நாலரை மணி இருக்கும். ஏழு மணிக்கே வெயில் சுள்ளென்று அடிப்பதன் சாத்தியத்தைத் தன்னுள் பதுக்கியிருந்தது சூரியன். என் வீட்டுத் தெருவிற்கு அடுத்த பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் என் நண்பர் ஒருவர் பேருந்துக்காகக் காத்திருந்தார். அவர் முகத்தில் கவலை நிரந்தரமாக ரேகை போட்டிருந்தது. ஆனால் அன்றைய கவலை ரேகைகளுக்கு ஒரு அவசர காரணம் இருந்தது. அன்று வாடகை தினம். பத்து மணிக்கு வீட்டுக்காரன் வந்து வாடகை கேட்பான். செல்வம் அதற்குள் வந்து பாக்கியைக் கொடுத்துவிடுவானா? இம்மாத சம்பளத்தை முன்பணமாக வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டார் என் நண்பர். வாடகை தரத் தாமதமானால் வீட்டுக்காரனின் நடத்தை போகிற போக்கு பற்றி முன்பே செல்வத்தை நண்பர் எச்சரித்திருந்தார். ஒருவேளை வழக்கம் போல் செல்வம் வராமல் கழுத்தறுத்துவிட்டால்? நினைத்ததும் குடல் புரண்டு படுத்தது நண்பருக்கு. சரி, வீட்டுக்காரன் பத்து மணிக்குதானே வருவான், எட்டு மணிக்கே நான் போய் செல்வத்தைப் பார்த்துப் பணத்தை வாங்கிவிடுகிறேன் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார். அப்போது அந்தப் பக்கமாக யாரோ வேகவேகமாகத் தன் திசையில் வருவது போல் தெரிந்தது நண்பருக்கு. அந்த உருவமும் நடையின் பாணியும் நண்பரின் மனதில் எதையோ மீட்டியது. அந்த நபர் அருகில் வரத் தொடங்கியதும் பரிச்சயம் உறுதிப்பட்டது. அது நான்தான். வியர்க்க விறுவிறுக்க, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, கீழ் உதடெல்லாம் பிதுங்கி, கைவீசப்பா கைவீசு என்கிற ரீதியில், முன்னாள் தென்றலாய், அரை ஓட்டமாய் நடந்து வந்துகொண்டிருந்தேன். நண்பருக்கு என்னைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை. ‘எந்தக் கோட்டையைப் பிடிக்க மற்றும்/அல்லது யாரை அடிக்கப் போகிறார்?’ எனப் புதிருற்றார். “எங்க சார் வேகமா?” என்றார் என்னைப் பார்த்து. நான் நிற்காமல், “என்னை ஒருத்தன் திட்டிட்டான்” என்று ஆத்திரமாக பதிலளித்துவிட்டு விறுவிறு என்று போய்க்கொண்டேயிருந்துவிட்டேன். நண்பர் பிளந்த வாய் மீள்சேராமல் நினைத்துக்கொண்டார் – “வாட் எ மேன்!”

பாலம்

(ஜெர்மன் மொழிச் சிறுகதை)

ஹைன்ரிஷ் போல்*

என் கால்களை எப்படியோ ஒட்டி சரிசெய்து, உட்கார்ந்து பார்க்கிற வேலை ஒன்று கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் புதிதாகக் கட்டியிருக்கும் பாலத்தை எத்தனை பேர் கடந்து போகிறார்கள் என்று எண்ணுவதுதான் என் வேலை. தங்கள் திறமையான பணி பற்றிப் புள்ளிவிவரங்களோடு தகவல் பதிவு செய்வதில் அவர்களுக்கு அப்படியொரு போதை கிடைக்கிறது. ஒரு சில இலக்கங்களில் ஆன அந்த அர்த்தமற்ற பூஜ்யம் அவர்கள் தலைக்கு ஏறிவிடுகிறது. அதே சமயம் நாள் முழுக்க, ஒரு நாள் முழுக்க என் வாய் சத்தமில்லாமல் கடிகார முள் போல அசைந்துகொண்டிருக்கிறது, ஒவ்வொரு எண்ணாக சேர்த்துக்கொண்டு. பிறகு ஒவ்வொரு மாலையும் நான் அவர்களிடம் வெற்றிகரமான எண்ணிக்கை ஒன்றை சமர்ப்பிப்பேன்.

அந்தந்த நாளில் நான் செய்த உழைப்பின் பலனை அவர்களிடம் கொடுக்கும்போது பூரித்துப் போய்விடுகிறார்கள். எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அதற்கேற்ப அவர்கள் புன்னகை பெரிதாக இருக்கிறது. இரவு தூங்கப் போகும்போது அவர்கள் தங்களைப் பாராட்டிக்கொள்வதில் காரணம் இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பாதசாரிகள் அவர்களுடைய புதிய பாலத்தைக் கடந்து போகிறார்கள்…

ஆனால் அவர்களுடைய புள்ளிவிவரங்கள் எல்லாம் தவறு. சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் அதெல்லாம் தவறு. நான் நம்ப முடியாத ஒரு ஜென்மம். நேர்மையே உருவானவனாக என்னைக் காட்டிக்கொள்வதில் எனக்கு ஒரு சிரமமும் இல்லை என்பது வேறு விஷயம்.

அவ்வப்போது ஒரு பாதசாரியை கணக்கில் சேர்க்காமல் ரகசியமாக நழுவவிடுவது எனக்கு சந்தோஷம் கொடுக்கிறது. ஆனால் பிறகு அவர்கள் பாவம் என்று நினைத்து ஒரு சில பேரை எண்ணிக்கையில் கூட சேர்த்துக்கொள்கிறேன். அவர்கள் சந்தோஷம் என் உள்ளங்கையில்தான் இருக்கிறது. நான் மோசமான மனநிலையில் இருக்கும்போது, என் சிகரெட்களையெல்லாம் புகைத்துத் தள்ளிய பிறகு அவர்களுக்கு சராசரி எண்ணிக்கையைத்தான் தருகிறேன். சில சமயம் சராசரியைவிடக் குறைவாகவே தருகிறேன். இறக்கை கட்டிப் பறப்பது போல் நல்ல மனநிலையில் இருக்கும்போது என் தாராள குணத்தைக் காட்டி ஐந்து இலக்க எண்ணிக்கை ஒன்றைத் தருகிறேன். அதைப் பார்த்து அவர்கள் ஒரேயடியாகக் குஷி ஆகிவிடுகிறார்கள்! நான் எண்ணிய தாளைக் கையிலிருந்து பிடுங்குகிறார்கள். அவர்களது கண்கள் மகிழ்ச்சியில் மின்னுகின்றன. என் முதுகைத் தட்டிக்கொடுக்கிறார்கள். உண்மை தெரியாமல் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்! அப்புறம் அவர்கள் பெருக்குகிறார்கள், வகுக்கிறார்கள், சதவீதத்தைக் கணக்கிடுகிறார்கள்… இன்று ஒரு நிமிடத்தில் எத்தனை பேர் பாலத்தைக் கடந்தார்கள் என்றும் இன்னும் பத்து வருடங்களில் எத்தனை பேர் பாலத்தைக் கடந்திருப்பார்கள் என்றும் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கு எதிர்காலக் கணக்கில் ஒரு காதல். எதிர்காலக் கணக்கு போடுவதுதான் அவர்களுடைய விசேஷத் திறமை – இருந்தாலும் இந்த மொத்த விவகாரமும் கேலிக்கூத்துதான் என்று நினைக்கும்போது எனக்கு வருத்தம் ஏற்படாமல் இல்லை.

என் சின்ன தேவதை பாலத்தைக் கடக்கும்போது (ஒரு நாளில் இருமுறை கடக்கிறாள்) என் இதயத் துடிப்பு நின்றுவிடுகிறது. ஓயாமல் துடித்துக்கொண்டிருக்கும் என் இதயம் அவள் திரும்பி சாலைக்குள் நுழைந்து தொலைந்துபோகும் வரை ஸ்தம்பித்து நிற்கிறது. அந்த சமயத்தில் அந்தப் பக்கம் வருபவர்கள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. அந்த இரண்டு நிமிடங்கள் என்னுடையவை, எனக்குச் சொந்தமானவை. அவற்றை யாரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்ளப் போவதில்லை. ஒவ்வொரு மாலையும் அவள் தன் ஐஸ்க்ரீம் பார்லரிலிருந்து திரும்பி வந்து தொலைவிலிருந்து நடந்து வந்து, எண்ணிக்கொண்டே இருக்க வேண்டிய என் வாயைத் தாண்டிப் போன பிறகுதான் என் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பிக்கிறது. அவள் என் பார்வையிலிருந்து தொலைந்து போகும் வரை நான் எண்ணுவதைத் தொடங்குவதில்லை. அந்த நிமிடங்களின்போது என் காணாத கண்களிலிருந்து தப்பித்த அதிர்ஷ்டசாலிகள் என் புள்ளிவிவரங்களின் மூலம் அமரத்துவம் பெற மாட்டார்கள்: அவர்கள் நிழல் மனிதர்கள், நிழல் மனுஷிகள், எதிலும் சேராத பிராணிகள்; எதிர்காலக் கணக்கின் புள்ளிவிவர அணிவகுப்பில் அவர்களுக்கு அனுமதி இல்லை.

நான் அவளைக் காதலிக்கிறேன். அதைச் சொல்லவே தேவையில்லை. ஆனால் அவளுக்கு அதைப் பற்றிக் கொஞ்சம்கூடத் தெரியாது. அவள் கண்டுபிடிக்காமலே இருந்தால் நன்றாக இருக்கும். என் புள்ளிவிவரக் கணக்குகளில் அவள் என்னென்ன ரகளைகளை ஏற்படுத்துகிறாள் என்பது பற்றி அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாது. அவள் ஒரு சந்தேகமும் இல்லாமல், அப்பாவியாய் அந்த நீண்ட பழுப்புக் கூந்தலோடும் மென்மையான பாதங்களோடும் அமைதியாக, சலனமின்றி தன் ஐஸ்க்ரீம் பார்லருக்கு நடந்து போக வேண்டும்; அவளுக்கு நிறைய டிப்ஸ் கிடைக்க வேண்டும். இதுதான் என் ஆசை. நான் அவளைக் காதலிக்கிறேன். நான் அவளைக் காதலிப்பது அப்பட்டமாகவே தெரிய வேண்டுமே.

நான் ஒழுங்காக வேலை செய்கிறேனா என்று சில நாட்களுக்கு முன் அவர்கள் சோதித்துப் பார்த்தார்கள். தெருவில் எனக்கு நேரெதிரில் உட்கார்ந்து பாலத்தைக் கடக்கும் கார்களை எண்ணும் என் கூட்டாளி பல முறை எச்சரித்தான். அந்த நாள் நான் கண்குத்திப் பாம்பு போல் கவனித்து எண்ணித் தீர்த்தேன். பித்துப் பிடித்த மாதிரி எண்ணினேன் நான்; எந்த ஸ்பீடாமீட்டரும் என்னை ஜெயித்திருக்க முடியாது. தலைமை புள்ளிவிவர அதிகாரியே தெருவின் மறுமுனையில் ஒரு மணிநேரம் நின்று பார்த்தார். பிறகு அவர் கணக்கோடு என் கணக்கை ஒப்பிட்டார். என் கணக்கில் ஒன்று மட்டும்தான் குறைந்தது. என் சின்ன தேவதை கடந்து சென்றிருந்தாள். நான் உயிரோடு இருக்கும் வரை அந்தச் செல்லக் குழந்தையை அவர்களுடைய எதிர்காலக் கணக்கிற்குக் கொத்திக்கொண்டு போவதை நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் என் சின்ன தேவதையை எடுத்துப் பெருக்கி, வகுத்து, அர்த்தமில்லாத ஒரு சதவீதமாக மாற்ற விட மாட்டேன். அவளைத் திரும்பியே பார்க்காமல் தொடர்ந்து எண்ண வேண்டியிருந்தது இதயத்தில் ரத்தம் கசியவைத்தது. தெருவில் எதிர்ப்பக்கம் கார்களை எண்ண வேண்டியிருக்கும் என் நண்பனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். என் வேலையே, வாழ்க்கையே போயிருக்க வேண்டியது.

தலைமை புள்ளிவிவர அதிகாரி என்னைத் தோளில் தட்டி, நான் ரொம்ப நல்ல மாதிரி, நம்பிக்கைக்குரியவன், விசுவாசமானவன் என்றெல்லாம் சொன்னார். “ஒரு மணிநேரத்தில் ஒன்றே ஒன்றை மட்டும் தவறவிடுவதால் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடாது. நாம் எப்போதுமே தவறுகளுக்குக் கொஞ்சம் இடம் விடுகிறோம். உன்னைக் குதிரை வண்டிகளுக்கு மாற்றல் செய்ய விண்ணப்பிக்கப்போகிறேன்” என்றார் அவர்.

குதிரை வண்டிகள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு செய்யலாம். அதில் ஒன்றுமே இல்லை. ஒரு நாளில் இருபது, இருபத்தைந்து குதிரை வண்டிகள்தான் வரும். அரை மணிநேரத்திற்கு ஒரு முறை மனத்தில் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும் – எவ்வளவு சுலபம்!

குதிரை வண்டிகளை எண்ணுவது அட்டகாசமான வேலை. நான்கு மணி முதல் எட்டு மணி வரை குதிரை வண்டிகளுக்குப் பாலத்தைக் கடக்க அனுமதி இல்லை. அந்த சமயத்தில் நான் ஐஸ்க்ரீம் பார்லருக்கு நடந்து போகலாம்… அவள் அழகைக் கண்களால் குடித்துத் தீர்க்கலாம் அல்லது அவளுடன் அவள் வீடு வரை பாதி தூரம் நடந்து போகலாம், என் சின்ன, கணக்கில் சேர்க்கப்படாத தேவதையுடன்…


* Heinrich Böll

ஆங்கில மொழிபெயர்ப்பு: Leila Vennewitz.

ஆங்கிலவழி மொழியாக்கம்: பேயோன்