பேயோன்

படித்ததில் பிடித்தவன்

வரும் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்

November 23rd, 2011

வரும் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் 124 புத்தகங்கள் என்னுடையவை வெளிவருவனவாகத் திட்டமிருந்தது. பல சிக்கல்களால், இடைப்பட்ட பயணங்களால் 106 புத்தகங்கள்தான் எழுத முடிந்தது. இருந்தாலும் வட்டமாக நூற்றியெட்டு புத்தகங்கள் எழுதிக் கொடுங்கள் என்று பதிப்பாளர் கேட்கவே, சட்டென ஒரு கவிதைத் தொகுப்பும் கட்டுரைத் தொகுப்பும் கொடுத்தேன். நல்ல வேளையாக அவர் கேட்டது ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு. பிரதி ஞாயிறு நான் என் மகனுக்கு ஹோம்வோர்க் செய்து தருவேன். அந்த நேரத்தில் அவன் எனக்குச் சில கவிதைகளோ கட்டுரைகளோ எழுதித் தருவான். ஒரு புத்தகத்தை அவனை எழுத விட்டாயிற்று.

பதிப்பகத்தினர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய எனது நூல்களின் பட்டியலை அப்படியே கீழே தருகிறேன். நான் தொடாத விசயங்களே அவ்வளவாக இல்லை என்றுவிடலாம். இந்த 108 புத்தகங்களுக்காக இரண்டு ஸ்டால்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்டால்களில் கூட்டத்தை நிர்வகிக்க பாப்பாசி பத்து என்.சி.சி. மாணவர்களை நியமித்துள்ளது.

வரும் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் என்னுடைய நூல்கள்:-

1. ஒரு லோட்டா ரத்தம் (நாவல்)
2. தேர்ந்தெடுத்த கவிதைகள் (கட்டுரைகள்)
3. பேபல் இவ்வாறு பேசுகிறான் (கட்டுரைகள்)
4. உற்பத்தி (பத்தி தொகுப்பு)
5. உருவகக் கதைகள் (சிறுகதைகள்)
6. தாங்களும் யானும் (நேர்காணல்கள்)
7. அன்புள்ள கடிதங்களே (கடிதங்கள்)
8. பூபாளம் பாடும் பல்லவி (இசை பற்றிய கட்டுரைகள்)
9. பேயோன் 2000 (ட்விட்டர் நுண்பதிவுகள்)
10. என் வாழ்க்கை (நாவல்)
11. இழவு (நாவல்)
12. படலம் (நாவல்)
13. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (நாவல்)
14. பூனை கோர்த்த மாலை (கட்டுரைகள்)
15. நிமித்தங்களின் நதியில் (நெகிழுரைகள்)
16. உரையுடைமை (செய்யுள் உரைத் தொகுப்பு)
17. ஒரு பேனாவின் காமிரா (திரைக்கதைத் தொகுப்பு)
18. பேயோனின் குற்றமும் தண்டனையும் (மொழியாக்க நாவல்)
19. நான்காம் சுழி (சிறுகதைகள்)
20. விண்ணை எட்டும் தூரிகை (ஓவியம் பற்றிய கட்டுரைகள்)
21. நீங்களும் எழுதலாம் PHP (சுயஉதவி நூல்)
22. அ முதல் னௌ வரை (தமிழ் எழுத்துகள் தொகுப்பு)
23. சுயநானூறு (செய்யுள் தொகுப்பு)
24. நிறைய பக்கங்கள் (கட்டுரைத் தொகுப்பு)
25. எவன் எவனோ (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்)
26. தாம்பரம் முதல் திருவான்மியூர் வரை (பயண நூல்)
27. மீள்பாரதி (பாரதி ஆய்வு நூல்)
28. வடகிழக்கு சினிமா (கட்டுரைகள்)
29. நூன்முகம் (ஃபேஸ்புக் இடுகை தொகுப்பு)
30. அன்னிய தரிசனம் (சிறுகதைகள்)
31. ஆறு கவிதைகள் (கவிதைகள்)
32. காதல் கவிதைகள் முழுத் தொகுப்பு
33. தகவல் பிழை (பத்தி தொகுப்பு)
34. ஐரோப்பியச் சிறுகதைகள் (சிறுகதைகள்)
35. வறுமைக் கோடு (கோட்டோவியத் தொகுப்பு)
36. எதெல்லாம் இலக்கியம்? (கட்டுரைகள்)
37. வண்ணக் கலரி (ஓவியத் தொகுப்பு)
38. ஊராந்திரம் (பயண நூல்)
39. ஜப்பான் முன்னேறியது எப்படி? (அபுனைவு)
40. சங்க இலக்கியத்தில் இலக்கியச் சங்கங்கள் (ஆய்வு நூல்)
41. இப்படி திடீரென்று நாளை காலைக்குள் இன்னொரு புத்தகம் எழுதச் சொன்னால் எப்படி? (கட்டுரைகள்)
42. கதகதக்கும் உலகம் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)
43. ஜெர்மானிய பதின்பருவத்தினர் மத்தியில் சூயிங்கம் பயன்பாடு (ஆய்வு நூல்)
44. இன்னும் எத்தனை (கவிதைகள்)
45. கையால் எழுதுபவன் (உலக இலக்கிய கட்டுரைகள்)
46. 130 கிராம் (சிறுகதைகள்)
47. இலக்கண இம்சைகள் (கட்டுரைகள்)
48. இன்னும் வரும் (பத்தி தொகுப்பு)
49. பண்பாட்டின் அறிகுறிகள் (பயண நூல்)
50. வராக பர்வம் (நாவல்)
51. இம்ப்ரஷனிசம் முதல் ஃபாவிசம் வரை (அபுனைவு)
52. பாரதி யார்? (சிறு புத்தகம்)
53. எதெல்லாம் பின்நவீனத்துவம்? (கட்டுரைகள்)
54. தலைப்பு நல்லதாகக் கிடைக்கவில்லை. நீங்களே ஏதாவது ரம்மியமான தலைப்பாக யோசித்து வைத்துவிடவும். நான் பிறகு பார்த்துக்கொள்கிறேன். சில படங்கள் மின்னஞ்சலில் நான் அனுப்பினேன் பார்த்தீர்களா? கருத்து சொல்லுங்கள். புகைப்படத் தொகுப்பும் போடலாமென உத்தேசம். எப்படி வசதி? மற்றவை போனில் – பேயோன். (கட்டுரைகள்)
55. ஏர்டெல் ஜூனியர் சூப்பர் சிங்கர் – சீசன் 1 (திரைக்கதை-வசனம்)
56. நீயா நானா (திரைக்கதை-வசனம்)
57. விசுவின் அரட்டை அரங்கம் (திரைக்கதை-வசனம்)
58. ஜெயா செய்திகள் (சிறுகதைகள்)
59. வங்க சினிமா (கட்டுரைகள்)
60. கனவுகளின் இரவு (நெகிழுரைகள்)
61. டின்னர் செட் முதல் வால் கிளாக் வரை: சமகால கிப்ட் ஐடியாக்கள் (சுயஉதவி நூல்)
62. ஆடவர் சுயஉதவி (சுயஉதவி நூல்)
63. கட்டுரைகள் (கட்டுரைகள் (கட்டுரைகள்)) (கட்டுரைகள்)
64. ஒவ்வொரு இசத்திற்கு ஒவ்வொரு கதை (சிறுகதைகள்)
65. சாப்ளின் என்னும் பிறவி (வாழ்க்கை வரலாறு)
66. ஜென் திருத்தலங்கள் (தல புராண தொகுப்பு)
67. சிதையளவு நெருப்பு (பத்தி தொகுப்பு)
68. மலையாள சினிமா (கட்டுரைகள்)
69. மீந்தவனின் விழிகள் (நெகிழுரைகள்)
70. சட்டத்தில் இடமிருக்கிறது (கட்டுரைகள்)
71. வளம் தரும் வாஸ்து (சுயஉதவி நூல்)
72. நியூமராலஜி: பெயரெழுத்துகளை மாற்றி நீங்களும்கூட கலக்கலாம் (சுயஉதவி நூல்)
73. அதையும்தான் பார்த்துவிடுவோமே! – @borehayயுடன் சில உரையாடல்கள்
74. தூரத்து சொந்தம் (திரைக்கதை-வசனம்)
75. நைஜீரியா: பணத்தோட்டம் (சுயஉதவி நூல்)
76. தமிழ் அறிவியல் நூல்களில் தற்செயலாக அமைந்த அடுக்குத் தொடர்கள் (ஆய்வு நூல்)
77. இந்திய வரலாறு: நீங்களும் எழுதலாம் அதை (சுயஉதவி நூல்)
78. நோக்கியா 2330 பயனர் கையேடு (சுயஉதவி நூல்)
79. இந்தா பிடி இன்னும் ஐம்பது (கவிதைகள்)
80. இரைப்பை நோய்களுக்கு சைக்ளோஸ்போரின் பயன்பாடு (அபுனைவு)
81. ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன் (கட்டுரைகள்)
82. எது எடுத்தாலும் இலக்கியம் (குறுநாவல்கள்)
83. பேயோனின் கேம்பிரிட்ஜ் மாணாக்கர் அகராதி (மொழியாக்கம்)
84. ஆஸ்கார் ஒயில்டு பொன்மொழிகள் (மொழியாக்கம்)
85. மறவன் புலவு: தமிழர் உணவுகள் (கட்டுரைகள்)
86. பாம்புத் தைலம் (கட்டுரைகள்)
87. 87 (நாவல்)
88. உயர்கவித்துவம் (கவிதைகள்)
89. நியான் ஹோலோகிராம் (அறிபுனை நாவல்)
90. கி.பி. எதிர்காலம் (அறிபுனை சிறுகதைகள்)
91. போடி உள்ளே!: தமிழ் சினிமாவில் பெண்கள் (ஆய்வு நூல்)
92. 108 உலக இலக்கிய நாவல்கள் (கட்டுரைகள்)
93. முன்னேறிடு சுயமே! (சுயமுன்னேற்ற நூல்)
94. சிற்பங்களின் இந்தியா (கட்டுரைகள்)
95. தீராத கப்பங்கள்: ஐ.டி. ரிட்டன்ஸ் செய்வது எப்படி (சுயஉதவி நூல்)
96. மை தீர்ந்த மனம் (கவிதைகள்)
97. பேயோனின் சண்டையும் சமாதானமும் (மொழியாக்கம்)
98. ரோடு போடும் கோடுகள் (கோட்டோவிய தொகுப்பு)
99. ஓ. ஹென்றி கதைகள் (மொழியாக்கம்)
100. அது ஒரு செவ்வாய்க்கிழமை (தூர்தர்ஷன் நாடகத் தொகுப்பு)
101. அங்கே என்ன சத்தம்?: மேலை இசை வடிவங்கள் (கட்டுரைகள்)
102. பேயோன் நாடகங்கள் (நாடகங்கள்)
103. கானலைத் தேடும் தண்ணீர்கள் (நெகிழுரைகள்)
104. பவர்பாயிண்ட் உங்கள் நண்பன் (சுயஉதவி நூல்)
105. சொற்களின் தலைநகரம் (கட்டுரைகள்)
106. ஓட்டல் துறை வேலைவாய்ப்புகள் (சுயஉதவி நூல்)
107. திசை காட்டிப் பறவை – 2
108. சிகரம் தொட்ட சிலபலர் (சுயமுன்னேற்ற நூல்)

சம்பவக் காலை

November 19th, 2011

புலர்காலை வேளை நாலரை மணி இருக்கும். ஏழு மணிக்கே வெயில் சுள்ளென்று அடிப்பதன் சாத்தியத்தைத் தன்னுள் பதுக்கியிருந்தது சூரியன். என் வீட்டுத் தெருவிற்கு அடுத்த பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் என் நண்பர் ஒருவர் பேருந்துக்காகக் காத்திருந்தார். அவர் முகத்தில் கவலை நிரந்தரமாக ரேகை போட்டிருந்தது. ஆனால் அன்றைய கவலை ரேகைகளுக்கு ஒரு அவசர காரணம் இருந்தது. அன்று வாடகை தினம். பத்து மணிக்கு வீட்டுக்காரன் வந்து வாடகை கேட்பான். செல்வம் அதற்குள் வந்து பாக்கியைக் கொடுத்துவிடுவானா? இம்மாத சம்பளத்தை முன்பணமாக வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டார் என் நண்பர். வாடகை தரத் தாமதமானால் வீட்டுக்காரனின் நடத்தை போகிற போக்கு பற்றி முன்பே செல்வத்தை நண்பர் எச்சரித்திருந்தார். ஒருவேளை வழக்கம் போல் செல்வம் வராமல் கழுத்தறுத்துவிட்டால்? நினைத்ததும் குடல் புரண்டு படுத்தது நண்பருக்கு. சரி, வீட்டுக்காரன் பத்து மணிக்குதானே வருவான், எட்டு மணிக்கே நான் போய் செல்வத்தைப் பார்த்துப் பணத்தை வாங்கிவிடுகிறேன் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார். அப்போது அந்தப் பக்கமாக யாரோ வேகவேகமாகத் தன் திசையில் வருவது போல் தெரிந்தது நண்பருக்கு. அந்த உருவமும் நடையின் பாணியும் நண்பரின் மனதில் எதையோ மீட்டியது. அந்த நபர் அருகில் வரத் தொடங்கியதும் பரிச்சயம் உறுதிப்பட்டது. அது நான்தான். வியர்க்க விறுவிறுக்க, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, கீழ் உதடெல்லாம் பிதுங்கி, கைவீசப்பா கைவீசு என்கிற ரீதியில், முன்னாள் தென்றலாய், அரை ஓட்டமாய் நடந்து வந்துகொண்டிருந்தேன். நண்பருக்கு என்னைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை. ‘எந்தக் கோட்டையைப் பிடிக்க மற்றும்/அல்லது யாரை அடிக்கப் போகிறார்?’ எனப் புதிருற்றார். “எங்க சார் வேகமா?” என்றார் என்னைப் பார்த்து. நான் நிற்காமல், “என்னை ஒருத்தன் திட்டிட்டான்” என்று ஆத்திரமாக பதிலளித்துவிட்டு விறுவிறு என்று போய்க்கொண்டேயிருந்துவிட்டேன். நண்பர் பிளந்த வாய் மீள்சேராமல் நினைத்துக்கொண்டார் – “வாட் எ மேன்!”

பாலம்

October 28th, 2011

(ஜெர்மன் மொழிச் சிறுகதை)

ஹைன்ரிஷ் போல்*

என் கால்களை எப்படியோ ஒட்டி சரிசெய்து, உட்கார்ந்து பார்க்கிற வேலை ஒன்று கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் புதிதாகக் கட்டியிருக்கும் பாலத்தை எத்தனை பேர் கடந்து போகிறார்கள் என்று எண்ணுவதுதான் என் வேலை. தங்கள் திறமையான பணி பற்றிப் புள்ளிவிவரங்களோடு தகவல் பதிவு செய்வதில் அவர்களுக்கு அப்படியொரு போதை கிடைக்கிறது. ஒரு சில இலக்கங்களில் ஆன அந்த அர்த்தமற்ற பூஜ்யம் அவர்கள் தலைக்கு ஏறிவிடுகிறது. அதே சமயம் நாள் முழுக்க, ஒரு நாள் முழுக்க என் வாய் சத்தமில்லாமல் கடிகார முள் போல அசைந்துகொண்டிருக்கிறது, ஒவ்வொரு எண்ணாக சேர்த்துக்கொண்டு. பிறகு ஒவ்வொரு மாலையும் நான் அவர்களிடம் வெற்றிகரமான எண்ணிக்கை ஒன்றை சமர்ப்பிப்பேன்.

அந்தந்த நாளில் நான் செய்த உழைப்பின் பலனை அவர்களிடம் கொடுக்கும்போது பூரித்துப் போய்விடுகிறார்கள். எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அதற்கேற்ப அவர்கள் புன்னகை பெரிதாக இருக்கிறது. இரவு தூங்கப் போகும்போது அவர்கள் தங்களைப் பாராட்டிக்கொள்வதில் காரணம் இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பாதசாரிகள் அவர்களுடைய புதிய பாலத்தைக் கடந்து போகிறார்கள்…

ஆனால் அவர்களுடைய புள்ளிவிவரங்கள் எல்லாம் தவறு. சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் அதெல்லாம் தவறு. நான் நம்ப முடியாத ஒரு ஜென்மம். நேர்மையே உருவானவனாக என்னைக் காட்டிக்கொள்வதில் எனக்கு ஒரு சிரமமும் இல்லை என்பது வேறு விஷயம்.

அவ்வப்போது ஒரு பாதசாரியை கணக்கில் சேர்க்காமல் ரகசியமாக நழுவவிடுவது எனக்கு சந்தோஷம் கொடுக்கிறது. ஆனால் பிறகு அவர்கள் பாவம் என்று நினைத்து ஒரு சில பேரை எண்ணிக்கையில் கூட சேர்த்துக்கொள்கிறேன். அவர்கள் சந்தோஷம் என் உள்ளங்கையில்தான் இருக்கிறது. நான் மோசமான மனநிலையில் இருக்கும்போது, என் சிகரெட்களையெல்லாம் புகைத்துத் தள்ளிய பிறகு அவர்களுக்கு சராசரி எண்ணிக்கையைத்தான் தருகிறேன். சில சமயம் சராசரியைவிடக் குறைவாகவே தருகிறேன். இறக்கை கட்டிப் பறப்பது போல் நல்ல மனநிலையில் இருக்கும்போது என் தாராள குணத்தைக் காட்டி ஐந்து இலக்க எண்ணிக்கை ஒன்றைத் தருகிறேன். அதைப் பார்த்து அவர்கள் ஒரேயடியாகக் குஷி ஆகிவிடுகிறார்கள்! நான் எண்ணிய தாளைக் கையிலிருந்து பிடுங்குகிறார்கள். அவர்களது கண்கள் மகிழ்ச்சியில் மின்னுகின்றன. என் முதுகைத் தட்டிக்கொடுக்கிறார்கள். உண்மை தெரியாமல் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்! அப்புறம் அவர்கள் பெருக்குகிறார்கள், வகுக்கிறார்கள், சதவீதத்தைக் கணக்கிடுகிறார்கள்… இன்று ஒரு நிமிடத்தில் எத்தனை பேர் பாலத்தைக் கடந்தார்கள் என்றும் இன்னும் பத்து வருடங்களில் எத்தனை பேர் பாலத்தைக் கடந்திருப்பார்கள் என்றும் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கு எதிர்காலக் கணக்கில் ஒரு காதல். எதிர்காலக் கணக்கு போடுவதுதான் அவர்களுடைய விசேஷத் திறமை – இருந்தாலும் இந்த மொத்த விவகாரமும் கேலிக்கூத்துதான் என்று நினைக்கும்போது எனக்கு வருத்தம் ஏற்படாமல் இல்லை.

என் சின்ன தேவதை பாலத்தைக் கடக்கும்போது (ஒரு நாளில் இருமுறை கடக்கிறாள்) என் இதயத் துடிப்பு நின்றுவிடுகிறது. ஓயாமல் துடித்துக்கொண்டிருக்கும் என் இதயம் அவள் திரும்பி சாலைக்குள் நுழைந்து தொலைந்துபோகும் வரை ஸ்தம்பித்து நிற்கிறது. அந்த சமயத்தில் அந்தப் பக்கம் வருபவர்கள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. அந்த இரண்டு நிமிடங்கள் என்னுடையவை, எனக்குச் சொந்தமானவை. அவற்றை யாரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்ளப் போவதில்லை. ஒவ்வொரு மாலையும் அவள் தன் ஐஸ்க்ரீம் பார்லரிலிருந்து திரும்பி வந்து தொலைவிலிருந்து நடந்து வந்து, எண்ணிக்கொண்டே இருக்க வேண்டிய என் வாயைத் தாண்டிப் போன பிறகுதான் என் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பிக்கிறது. அவள் என் பார்வையிலிருந்து தொலைந்து போகும் வரை நான் எண்ணுவதைத் தொடங்குவதில்லை. அந்த நிமிடங்களின்போது என் காணாத கண்களிலிருந்து தப்பித்த அதிர்ஷ்டசாலிகள் என் புள்ளிவிவரங்களின் மூலம் அமரத்துவம் பெற மாட்டார்கள்: அவர்கள் நிழல் மனிதர்கள், நிழல் மனுஷிகள், எதிலும் சேராத பிராணிகள்; எதிர்காலக் கணக்கின் புள்ளிவிவர அணிவகுப்பில் அவர்களுக்கு அனுமதி இல்லை.

நான் அவளைக் காதலிக்கிறேன். அதைச் சொல்லவே தேவையில்லை. ஆனால் அவளுக்கு அதைப் பற்றிக் கொஞ்சம்கூடத் தெரியாது. அவள் கண்டுபிடிக்காமலே இருந்தால் நன்றாக இருக்கும். என் புள்ளிவிவரக் கணக்குகளில் அவள் என்னென்ன ரகளைகளை ஏற்படுத்துகிறாள் என்பது பற்றி அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாது. அவள் ஒரு சந்தேகமும் இல்லாமல், அப்பாவியாய் அந்த நீண்ட பழுப்புக் கூந்தலோடும் மென்மையான பாதங்களோடும் அமைதியாக, சலனமின்றி தன் ஐஸ்க்ரீம் பார்லருக்கு நடந்து போக வேண்டும்; அவளுக்கு நிறைய டிப்ஸ் கிடைக்க வேண்டும். இதுதான் என் ஆசை. நான் அவளைக் காதலிக்கிறேன். நான் அவளைக் காதலிப்பது அப்பட்டமாகவே தெரிய வேண்டுமே.

நான் ஒழுங்காக வேலை செய்கிறேனா என்று சில நாட்களுக்கு முன் அவர்கள் சோதித்துப் பார்த்தார்கள். தெருவில் எனக்கு நேரெதிரில் உட்கார்ந்து பாலத்தைக் கடக்கும் கார்களை எண்ணும் என் கூட்டாளி பல முறை எச்சரித்தான். அந்த நாள் நான் கண்குத்திப் பாம்பு போல் கவனித்து எண்ணித் தீர்த்தேன். பித்துப் பிடித்த மாதிரி எண்ணினேன் நான்; எந்த ஸ்பீடாமீட்டரும் என்னை ஜெயித்திருக்க முடியாது. தலைமை புள்ளிவிவர அதிகாரியே தெருவின் மறுமுனையில் ஒரு மணிநேரம் நின்று பார்த்தார். பிறகு அவர் கணக்கோடு என் கணக்கை ஒப்பிட்டார். என் கணக்கில் ஒன்று மட்டும்தான் குறைந்தது. என் சின்ன தேவதை கடந்து சென்றிருந்தாள். நான் உயிரோடு இருக்கும் வரை அந்தச் செல்லக் குழந்தையை அவர்களுடைய எதிர்காலக் கணக்கிற்குக் கொத்திக்கொண்டு போவதை நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் என் சின்ன தேவதையை எடுத்துப் பெருக்கி, வகுத்து, அர்த்தமில்லாத ஒரு சதவீதமாக மாற்ற விட மாட்டேன். அவளைத் திரும்பியே பார்க்காமல் தொடர்ந்து எண்ண வேண்டியிருந்தது இதயத்தில் ரத்தம் கசியவைத்தது. தெருவில் எதிர்ப்பக்கம் கார்களை எண்ண வேண்டியிருக்கும் என் நண்பனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். என் வேலையே, வாழ்க்கையே போயிருக்க வேண்டியது.

தலைமை புள்ளிவிவர அதிகாரி என்னைத் தோளில் தட்டி, நான் ரொம்ப நல்ல மாதிரி, நம்பிக்கைக்குரியவன், விசுவாசமானவன் என்றெல்லாம் சொன்னார். “ஒரு மணிநேரத்தில் ஒன்றே ஒன்றை மட்டும் தவறவிடுவதால் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடாது. நாம் எப்போதுமே தவறுகளுக்குக் கொஞ்சம் இடம் விடுகிறோம். உன்னைக் குதிரை வண்டிகளுக்கு மாற்றல் செய்ய விண்ணப்பிக்கப்போகிறேன்” என்றார் அவர்.

குதிரை வண்டிகள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு செய்யலாம். அதில் ஒன்றுமே இல்லை. ஒரு நாளில் இருபது, இருபத்தைந்து குதிரை வண்டிகள்தான் வரும். அரை மணிநேரத்திற்கு ஒரு முறை மனத்தில் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும் – எவ்வளவு சுலபம்!

குதிரை வண்டிகளை எண்ணுவது அட்டகாசமான வேலை. நான்கு மணி முதல் எட்டு மணி வரை குதிரை வண்டிகளுக்குப் பாலத்தைக் கடக்க அனுமதி இல்லை. அந்த சமயத்தில் நான் ஐஸ்க்ரீம் பார்லருக்கு நடந்து போகலாம்… அவள் அழகைக் கண்களால் குடித்துத் தீர்க்கலாம் அல்லது அவளுடன் அவள் வீடு வரை பாதி தூரம் நடந்து போகலாம், என் சின்ன, கணக்கில் சேர்க்கப்படாத தேவதையுடன்…


* Heinrich Böll

ஆங்கில மொழிபெயர்ப்பு: Leila Vennewitz.

ஆங்கிலவழி மொழியாக்கம்: பேயோன்

இன்றைய செய்தித்தாள் (திரைக்கதை)

August 9th, 2011

இது எனது இன்றைய செய்தித்தாள் கட்டுரைக்கான திரைக்கதை. அந்தக் கட்டுரையைப் படிக்காமல் கீழ்க்காண்பது புரியாது.

*

காட்சி 1

ஒரு சமகால வீட்டின் மரக் கதவில் பெயின்டில் வரையப்பட்ட 70 என்ற எண்ணுக்கு க்ளோசப்.

இரு நொடிகள் கழிந்த பின் இருபத்தி சொச்ச வயது முஷ்டி ஒன்று அதை இருமுறை தட்டுகிறது. யாரும் வரவில்லை. இன்னும் இருமுறை தட்டுகிறது. இன்னும் யாரும் வரவில்லை. பின்னணியில் இரு நொடிகளுக்கு பியானோ இசை.

கை ஸ்லோ மோஷனில் வலப்பக்கமாக மேல்நோக்கி நகர்ந்து காலிங் பெல்லை அழுத்துகிறது. கதவு திறக்கிறது. ஒரு நடுத்தர வயதுக்காரர் பனியன், வேட்டி அணிந்து நிற்கிறார். அவருக்குப் பின்னால் அந்த வீட்டின் சிறிய ஹால். பிரீஸ் பிரேம்.

வாய்ஸ் ஓவர்: இவருதான் இந்தப் படத்தோட கதாநாயகர். இவருக்குப் பின்னணி எல்லாம் கிடையாது. இப்பதான் மொத மொதலா இந்தப் படத்துல வர்றாரு.

காமிரா ஒரு சுற்று சுற்றி காலிங் பெல்லை அழுத்தியவனைக் காட்டுகிறது. இளைஞன். வெளியூரிலிருந்து வந்ததற்கு சாட்சியாக டிராவல் பேகுடன் நிற்கிறான். பிரீஸ் பிரேம்.

வாய்ஸ் ஓவர்: இவன் கதாநாயகரோட நெப்யூ. இப்பத்தான் வெளியூர்லருந்து வர்றான். பைய வெச்சிட்டு ரூமுக்குள்ளாற போயிடுவான். அப்புறம் வர மாட்டான்.

இளைஞன்: (கதாநாயகரின் காலில் விழுந்து எழுகிறான்) மாமா, எப்படி இருக்கீங்க?

வாய்ஸ் ஓவர்: நல்லாத்தான் இருக்கேன் தம்பி. இப்பதான் உங்க ஊர்லருந்து வர்றியா?

இளைஞன்: (சுற்றுமுற்றும் பார்த்து) மாமா, இந்தக் குரல் எங்கேந்து வருது?

மாமா: நான்தான் பேசுறேன். நல்லாயிருக்கியா?

இளைஞன்: நல்லாயிருக்கேன். இருங்க, குளிச்சிட்டு வரேன்.

மாமா: தாராளமா வாப்பா.

இளைஞன் பாத்ரூமுக்கு போகும் வழியில் சோபாவைக் கடந்து செல்கிறான். காமிரா சோபாவில் கிடக்கும் தமிழ் செய்தித்தாளைப் பார்க்கிறது. பிரீஸ் பிரேம்.

வாய்ஸ் ஓவர்: இதுதான் இன்னிக்கி வந்த பேப்பர். ஞாயித்துக்கிழமைங்கிறதால நாலு ரூவா. இதுல தமிழ்ல எழுதிருக்கு.

பின்னணியில் மெல்லிய புல்லாங்குழல் இசை தொடங்குகிறது.

இளைஞன்: (செய்தித்தாளைப் பார்த்துவிட்டு மாமாவை நோக்கித் திரும்புகிறான்) மாமா, இது இன்னிக்கி பேப்பரா? காலையிலேந்து இத யாருமே படிக்கலியா? இல்லன்னா கண்டி இப்பதான் கடைலேந்து வாங்கிட்டு வந்தீங்களா? பொதுவா அன்னன்னிக்கி பேப்பர் அந்தி சாயறதுக்குள்ள வித்துருமே? ரெண்டு வருஷத்துல இந்த ஊரு ரொம்ப மாறிப்போச்சு மாமா.

இளைஞன் பையை சோபாவுக்கு அடியில் தள்ளிவிட்டு பாத்ரூமுக்குள் மறைகிறான்.

கதாநாயகரின் முகத்திற்கு க்ளோசப். பின்னணியில் வேகமான மிருதங்க இசை. கதாநாயகர் முகத்தில் திகைப்பு. காமிரா அவர் முகத்தை ஐந்து முறை ஜூம் இன், ஜூம் அவுட் செய்கிறது.

கதாநாயகர்: (டி.வி. மேல் இருக்கும் சிறிய பிள்ளையார் படத்தை எடுத்து அதனிடம்) ம்ம்ம்? வந்ததும் வராததுமா…, இவன் என்ன சொல்லிட்டுப் போறான்?

கதாநாயகர் சோபாவை நோக்கி விரைகிறார். செய்தித்தாளை எடுத்துப் பார்க்கிறார்.

க்ளோசப்: செய்தித்தாள் ஸ்லோ மோஷனில் புரட்டப்படுகிறது.

கதாநாயகரின் குரல் வாய்ஸ் ஓவர்: இவன் சொல்றதுலயும் உண்மை இல்லாம இல்ல. கிட்டத்தட்ட தெனமுமே பேப்பர் இந்த வீட்டுக்கு வந்து சேர்றதுக்குள்ள கசங்கிப் போயிடுது. இதுக்கு பேப்பர் போடுற குழந்தைத் தொழிலாளிய கொற சொல்ல முடியாது. ஏன், சொல்ல வக்கில்லைன்னு கூட சொல்லலாம்.

க்ளோசப்: கதாநாயகரின் வாய்: கோமதி, கோமதி, இன்னிக்கு பேப்பர் படிச்சியா?

திரையில் சமையலறையைக் காட்ட வெள்ளை மார்க்கரால் அம்புக்குறி வரையப்படுகிறது. பின்னணியில் -

சமையலறையிலிருந்து கோமதியின் குரல்: ஆமா, படிச்சிட்டேன். அதுக்கு என்ன இப்போ?

க்ளோசப்: கதாநாயகரின் முகம்: தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன். நீ வேலையப் பாரு.

கதாநாயகர் சோபாவில் அமர்ந்து பேப்பரை தொடர்ந்து புரட்டுகிறார்.

கதாநாயகர்: (உள்ளறைப் பக்கம் திரும்பிக் கூப்பிடுகிறார்) டேய், இங்க வா.

உள்ளே ஒரு அறையிலிருந்து குண்டாக ஒரு சிறுவன் வருகிறான்.

வாய்ஸ் ஓவர்: இவன்தான் குமார். நம்ம கதாநாயகரோட வாரிசு. ஸ்கூல்ல படிக்கிறான்.

குமார்: என்னப்பா?

கதாநாயகர்: இன்னிக்கு பேப்பரைப் படிச்சியா?

குமார்: நான் கிழிக்கலப்பா.

கதாநாயகர்: அட அதுக்கில்லடா. சரி, போ போ.

குமார் போகத் திரும்புகிறான்.

கதாநாயகர்: டேய், ஒரு நிமிசம் இங்க வா.

குமார் நிற்கிறான்.

குமார்: என்னப்பா?

கதாநாயகர்: அகமதாபாத் சிவில் மருத்துவமனை வெளம்பரம் எத்தனாம் பக்கத்துல வருது சொல்லு பாப்போம்?

குமார்: ஒம்பதாம் பக்கத்துலப்பா.

கதாநாயகர்: சரி. நீ போ.

குமார் போகிறான்.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) அந்த வெளம்பரம் வந்திருக்குறதே…, இவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

Dissolve: fade out.

காட்சி 2

திரையில் எழுத்துக்கள்: சில நொடிகளுக்குப் பின்…

சிறிய அறை. மேஜையில் கணினி, அருகில் படுக்கை, அதில் மூடிய நிலையில் லேப்டாப். இவற்றைக் காட்டியபடி காமிரா லேப்டாப்பை நெருங்குகிறது.

கதாநாயகரின் கை லேப்டாப்பைப் பக்கவாட்டில் திருப்பி புத்தகம் போல் திறக்கிறது. ஸ்கைப்பியில் லாகின் ஆகிறது.

திரையில் இன்னொரு நடுத்தர வயது மனிதர் தோன்றுகிறார்.

வாய்ஸ் ஓவர்: இவர்தான் நம்ம கதாநாயகரோட தம்பி. புள்ள குட்டிங்களோட அமெரிக்காவுல படிக்காரு.

கதாநாயகரின் தம்பி: நாம காலைலதானே பேசினாப்ல?

கதாநாயகர்: (காமிராவை, அதாவது லேப்டாப்பின் வெப்க்யாமை நோக்கி) இதப் பாத்தியா?

…என்று செய்தித்தாளைக் காட்டுகிறார்.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) இது இன்னிக்கி பேப்பர். வீட்ல எல்லாரும் படிச்சாச்சு. எப்புடி இன்னும் கசங்காம இருக்கு பாரு.

கதாநாயகரின் தம்பி ஆச்சரியப்படுகிறாப்ல.

கதாநாயகரின் தம்பி: (காமிராவை நோக்கி) அடடே, இது எப்புடி?

திரும்பிப் பார்த்து மனைவி, குழந்தைகளைக் கூப்பிடுகிறார் -

கதாநாயகரின் தம்பி: சுமதி, வெங்கி, நரேந்திரா, எல்லாருமா சேந்து இங்க வாங்களேன்!

நிறைய நகைகள் அணிந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, 8, 10 வயதுச் சிறுவர்கள் முதலிய எல்லோரும் வந்து பார்க்கிறார்கள்.

கதாநாயகரின் தம்பி: (அவர்களிடம்) இது இன்னிக்கு பேப்பராம். கசங்கவே இல்ல பாரு. பாத்திருக்கியா இது மாதிரி?

கதாநாயகரின் தம்பியின் மனைவி: ஐய, போதுமே உங்கண்ணன் பெருமை!

கதாநாயகர் காமிராவை நோக்கி தம்பியிடம் செய்தித்தாளைப் புரட்டிக் காட்டுகிறார். அகமதாபாத் சிவில் மருத்துவமனை விளம்பரம் வெளிப்படுகிறது.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) உனக்கு இதோட கதை தெரியுமாடா?

ஃப்ளாஷ்பேக்: கதாநாயகர் தன் மகனிடம் அகமதாபாத் சிவில் மருத்துவமனை பற்றிக் கேட்ட காட்சி புகையாலான ஃப்ரேமுக்குள் வருகிறது.

ஃப்ளாஷ்பேக் முடிந்ததும் நடப்பு உலகம் -

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) சரி, இதுக்குத்தான் கூப்புட்டேன். அப்பறமா பேசுவோம்.

கதாநாயகரின் தம்பி லேப்டாப் திரையிலிருந்து மறைகிறார்.

கதாநாயகர் செய்தித்தாளைப் படிக்கிறார்.

அவர் தோளின் பின்பக்கத்திலிருந்து செய்தித்தாளுக்கு க்ளோசப்.

காமிரா இப்போது கதாநாயகரை மூன்றடி தூரத்திலிருந்து காட்டுகிறது. கதாநாயகர் கூரையைப் பார்க்கிறார்.

கதாநாயகர் குரல் வாய்ஸ் ஓவர்: எனக்கு இப்பவே ஒரு கவிதைத் தொகுப்பு எழுதியாகணும். ஆனா இந்த கசங்காத பேப்பர் என்னை சுண்டியிழுக்குது. ஆனாலும் பாருங்க, ஒரு பேப்பரை முதல் முறையா படிக்கிற சொகம் கிடைச்சாலும்… முன்னாடியே படிச்சிட்டதால நேத்து பேப்பர படிக்கிற மாதிரி இருக்கு.

புரட்டும்போது அகமதாபாத் சிவில் மருத்துவமனை விளம்பரப் பக்கம் வருகிறது.

காமிரா கோணம் இப்போது வலப்பக்கம் கதாநாயகரையும் இடப்பக்கம் கணினி முன் அமர்ந்திருக்கும் குமாரையும் காட்டுகிறது. கதாநாயகர் விளம்பரத்தையும் மாறி மாறிப் பார்க்கிறார். குமார் கவனிக்கவேயில்லை. கதாநாயகரின் தலையிலிருந்து வெளிப்படும் சிந்தனை பலூனில் குமார் “ஒம்பதாம் பக்கத்துலப்பா” என்று சொல்லும் காட்சி தோன்றுகிறது. பிறகு பலூன் மறைகிறது.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி தலையை மெல்ல அசைத்து வாஞ்சையுடன் புன்னகைக்கிறார்) இந்த காலத்துப் பிள்ளைங்க!

அடுத்த இரு நொடிகளில் ஏழெட்டு ஷாட்களில் கதாநாயகர் மீதப் பக்கங்களைப் புரட்டுகிறார். படித்து முடித்துவிட்டு செய்தித்தாளை இந்தக் காட்சியில் மட்டும் சோபா எதிரில் வந்திருக்கும் டீப்பாய் மேல் விசிறியடிக்கிறார்.

கதாநாயகர்: ஸ்ஸ்ஸ்ஸப்பா!

கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. கதாநாயகர் சந்தேகத்துடன் டீப்பாய் மீதுள்ள செய்தித்தாளைத் தூக்கி அடியில் பார்க்கிறார்.

காலிங் பெல் சத்தம் கேட்கிறது.

கதாநாயகர் எழுந்து போய் கதவைத் திறக்கிறார். பக்கத்து வீட்டு நடுத்தர வயது மனிதர் பனியனுடன் நிற்கிறார்.

பக்கத்து வீட்டுக்காரர்: நல்லாருக்கீங்களா? இன்னிக்கு பேப்பர் கெடைக்குமா?

சமையலறை அருகிலிருந்து லாங் ஷாட்.

கதாநாயகர்: அதுக்கென்ன, கெடைச்சா போச்சு.

பக்கத்து வீட்டுக்காரர்: அதச் சொல்லுங்க!

கதாநாயகர் சோபாவுக்குத் திரும்பிச் சென்று டீப்பாயிலிருந்து கலைந்து கிடக்கும் செய்தித்தாளை எடுத்து கவனமில்லாமல் ஒழுங்குபடுத்துகிறார். பின்னர் வாசல் வரை நடந்து வந்து பக்கத்து வீட்டு மனிதரிடம் கொடுக்கிறார்.

கதாநாயகர்: இந்தாங்க எடுத்துட்டுப் போங்க. இன்னிக்கு புதுசா நிறைய செய்திகள் வந்திருக்கு!

பக்கத்து வீட்டுக்காரர்: இல்லையா பின்னே? உங்க வீட்டு பேப்பராச்சே!

கதாநாயகரின் குரல் வாய்ஸ் ஓவர்: இனி இந்த பேப்பரோட கதை கந்தல்தான்.

பக்கத்து வீட்டுக்காரர் செய்தித்தாளுடன் கிளம்பிச் செல்கிறார்.

காமிரா அவருடன் வெளியே செல்கிறது. லலலல்லா என்கிற ஹம்மிங் தொடங்குகிறது. காமிரா பக்கத்து வீட்டுக்காரர் தம்முடைய வீட்டுக்குள் புகுவதைக் காட்டிவிட்டு தெருவில் தொடர்ந்து செல்கிறது.

“கதை, திரைக்கதை, வசனம் பேயோன்” என்ற வார்த்தைகளுடன் க்ரெடிட்கள் ஓடத் தொடங்குகின்றன.

வாய்ஸ் ஓவர்: குறிப்பு – திரையில் சப்டைட்டில் போடும் இடத்தில் படம் விழாமல் காலியாக விடவும்.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar