நம்மை வாசிக்கும் புத்தகங்கள்

நாம் புத்தகங்களை வாசிப்பது போல புத்தகங்களும் நம்மை வாசிப்பது உங்களுக்குத் தெரியுமா? அனுபவப் பக்கங்களைத் தங்கள் அறிவிற்குள் கோர்த்துக்கொண்டு நடமாடும் புத்தகங்களாக விளங்கும் மனிதர்களை நான் பார்க்கிறேன். மனிதர்களான நாம் புத்தகங்களை வாசிப்பது போல இந்த மனிதர்கள் நம்மைப் புத்தகங்களாக வாசிக்கிறார்கள். நாம் விளிம்பிற்குத் தள்ளப்படும்போதெல்லாம் வாழ்க்கைப் புத்தகத்தில் தாங்கள் கடந்து வந்த பக்கங்களை நமக்குப் படித்துக் காட்டி நம்மை மீட்கிறார்கள்.

எனது பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத அனுபவங்களை எனது பள்ளி நூலகம் எனக்குத் தந்தது. தொலைக்காட்சித் தொடர் வசதி எங்கள் கிராமத்திற்கு இன்னும் வந்தபாடில்லாத காலகட்டம் அது. பள்ளி முடிந்தபின் ஓணான் அடிக்க சக பிள்ளைகள் ஓடுகையில் என் போன்ற வெகு சிலர் பள்ளி நூலகத்தில் தஞ்சம் புகுவோம்.

நான் படிக்கும் புத்தகங்களில் தென்படும் சுவாரசியமான வாக்கியங்களை கருப்பு ஸ்கெட்ச் பேனாவால் வட்டமிட்டு அதனருகே மார்ஜினில் சிவப்பு ஸ்கெட்ச்சால் எனது கருத்துகளைப் பதிவுசெய்யும் பழக்கம் எனக்கிருந்தது. எனது முதல் நூல் மதிப்புரை இப்படித்தான் உருப்பெற்றது. சில கதைப் புத்தகங்களில் கதைகளின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லாதுபோனால் கத்தரித்த வெள்ளைத் தாளை அதன் மேல் ஒட்டி மாற்று முடிவை எழுதும் பழக்கமும் அப்போதே எனக்கிருந்தது.

இப்படி எங்களூரில் ஒரு தலைமுறைக்குப் பள்ளி நூலகமே ஒரு புத்தகமாக இருந்தது. மயிலிறகை இனப்பெருக்கம் செய்யவைக்க எந்த ஆசிரியரும் எங்களுக்குப் பயிற்சியளிக்கவில்லை. எந்த இறகுக்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும், எந்த இறகுக்கு அப்சரா ஒவ்வாமை இருந்தது என புத்தகங்களின் வாயிலாகவே நாங்கள் கற்றுக்கொண்டோம். தனது பக்கங்களை எங்களுக்குப் படிக்கக் கொடுத்த புத்தகமாகத்தான் எங்கள் பள்ளி நூலகத்தை நான் பார்க்கிறேன். நம் ஒவ்வொருவர் விஷயத்திலும் புத்தகங்கள் பல வடிவங்களில் வந்து நம் வாழ்க்கையின் ஓரங்களில் சாலைகளை அமைக்கின்றன. மரங்களை நட்டு மலர்களைப் பொழியவிடுகின்றன.

சமீபத்தில் நான் பார்த்த டாஸ்மேனிய இயக்குநர் ஜி்ம்மி வேல்ஸின் The Paid Piper of Libria என்ற சினிமாவின் முழுக் கதையை வேலை மெனக்கெட்டுச் சொல்கிறேன். லிப்ரியா என்ற ஒரு கற்பனை நாட்டில் எல்லா நூலகங்களிலும் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த தேசத்தில் மனித எண்ணிக்கையைவிட எழுத்தாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வீட்டுக்கொருவரின் படைப்பு பிரசுரம் கண்டுவந்ததால் மரங்கள் நிறைய அழிக்கப்படுகின்றன. மர அழிவால் மழை பொழிவு நின்றுபோய் ஒரு கட்டத்தில் லிப்ரியா நாட்டினர் மழைக்காக அண்டை நாட்டிற்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட லிப்ரியா அமைச்சரவை ஜேம்ஸ் என்கிற ஒரு அறிமுகவாதியை ஏற்பாடு செய்கிறது.

எங்கெல்லாம் புத்தகக் குப்பை சேருகிறதோ அங்கெல்லாம் ஒரு நல்ல தொகைக்கு புத்தக அறிமுகம் எழுதி அவற்றை ஒழிப்பது ஜேம்ஸின் தொழில். லிப்ரியாவிற்கு வரும் ஜேம்ஸ் தனது ஹீரோ பேனாவினால் லிப்ரிய நூலக உள்ளடக்க அறிமுக அழிவைத் தொடங்குகிறான். லிப்ரியாவின் தார் மின்னும் தெருக்களில் நடந்தபடி ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு அறிமுகம் எழுத, நூலகங்களிலிருந்தும் புத்தகக் கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் லட்சோபலட்சம் புத்தகங்கள் கிளம்பித் தெருவில் இறங்குகின்றன. அறிமுகவாதியின் சொற்களில் கட்டுண்டு பின்தொடர்கின்றன. நடந்துகொண்டே செல்பவனுக்கு ஒரு மலையுச்சி கால்வருகிறது. ஹீரோ பேனாவை மலை விளிம்பிலிருந்து தூக்கி ஜேம்ஸ் எறிகிறான். அறிமுகித்த புத்தகங்கள் மலையிலிருந்து வீழ்ந்து அழிகின்றன. மலையுச்சியில் ஒரு பாறைக்கு அடியில் முளைத்த ஒரு நெருஞ்சிப் பூவை சட்டையில் குத்திக்கொண்டு வீடு திரும்புகிறான் ஜேம்ஸ்.

நாமும் இப்படித்தான் வீட்டுக்குப் போகிறோம். காரணம், ஒரு வேலை முடிந்தபின் அந்த வேலை நடந்த இடத்தில் நாம் இருப்பதற்கான காரணங்கள் வலுவிழந்துவிடுகின்றன. நமது மனித வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வீட்டிற்கு செல்லும் வழியில் கடைக்குப் போகும் சூழ்நிலைகளும் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. நுகர்வுக் கலாச்சாரத்தின் தேவைகளை உந்துமையமாகக் கொண்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் தள்ளுபடிகள் வகிக்கும் இடம் புறக்கணிக்க முடியாதது.

சில்வியா ஸ்பேட் கெய்ஷா எழுதிய Discounts and Good Deals for Seniors in Texas-ல் 380க்கு மேற்பட்ட டெக்சாசிய நகரங்களில் மனதையள்ளும் 1,200 தனித்துவ தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஒரு நல்ல பேரத்தை கண்டதுமே இனங்காணும்படியாக இந்நூலை வடிவமைத்திருக்கிறார்கள். தங்குமிடங்கள், கடைத்தெரு, உணவகங்கள், கால்ஃப் மற்றும் பிற கேளிக்கை வாய்ப்புகள், மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேவைகள் ஆகியவை உட்பட 16 வகையான ரம்மியம் கொஞ்சும் தள்ளுபடிகள் இருக்கின்றன.

நமக்கு அறிவை அளிக்கும் ஆகச்சிறந்த கருவிகளுள் அதிக பக்கங்களைக் கொண்டிருப்பவை புத்தகங்களே. நாம் புத்தகம் படிக்கும்போது ஒரு பக்கத்திற்கு இத்தனை நியூரான்கள் வளர்சிதைமாற்றத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய பாங்காங் பல்கலைக்கழக ஆய்வு ஒரு கணக்கு காட்டுகிறது. பெரிய விஷயம்தான்.

26 Comments »

பேயோன் on August 16th 2010 in கட்டுரை

பேராயரின் பயணம்

22 Comments »

பேயோன் on August 9th 2010 in ஓவியம்

முதலையும் சியாமள விகாச பட்சியும்

(குழந்தைகளுக்கான புனைவு)

காலமும் வெளியும் இணையுமொரு புள்ளியில் முகிழ்த்த கண்காணா பூமியொன்றில் ஒரு வனம் இருந்தது. பல்வகை விலங்குகள் பூட்டப்பட்ட, பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு விசித்திரப் பிராந்தியம் அந்த வனம். வாசகர்கள் காலடித் தடம் பதியாத இந்தத் தன்னந்தனித்துவப் பிரதேசத்தை பல்வேறுபட்ட உயிர்வாழ் மிருகங்கள் பகிர்ந்துவந்தன.

அந்த வனத்தினூடே மனிதர் அறியா மர்ம மொழியில் தன்னோடு தானே பேசிக்கொண்டு இலக்கில்லாத் திசையில் ஒரு அவர்ண திரவ நாகமாய் சதா பயணித்தபடி இருந்தது அந்த ஜல நதி. விருட்சங்கள் மண்டிய பச்சிருளில் பரவியிருந்த அதன் கரையோரத்தில் பூமிக்கும் ஆகாயத்திற்குமான ஒரு செங்குத்துப் பாலத்தின் எஞ்சிய துண்டு போல் ஒரு நெடுங்கத்தரி மரம் முளைத்திருந்தது. எண்ணிக்கை துறந்த ஆலகால விழுதுகள் ஆயிரங்கால் மண்டபமாய் அம்மரத்தைத் தோற்றங்கொள்ள வைத்தன.

இப்படியான அந்தக் கத்தரி மரத்தில் ஏறி அதன் கனிகளை உண்டு செரிக்கும் பழக்கத்தைத் தனதாக்கிக்கொண்டிருந்தது ஒரு நதி முதலை. அனுதினமும் சூரியன் ஆகாயத்தின் உச்சிக்கு மெல்லத் தாவிக்கொண்டிருக்கும் காலப்பொழுதில் நமது முதலையும் கத்தரிப்பழம் தேடி மரத்தில் ஆரோகணிக்கும்.

ஒருநாள் முதலையின் கண்களில் பட்டவை ஆற்றுநீரின் மேல் கிளைத்தோங்கிய ஒரு கிளையில் தொங்கிய கத்தரிப் பழங்கள். நான்கு கால்களால் மரத்தைப் பிடித்து ஏறி நீள்முகத்தை நீட்டிக் கத்தரிப் பழங்களை அண்மிக்கையில் சறுக்கி விழுந்தது நதி நீரில் தலைகீழாக நமது கதாநாயக உயர்முதலை. வாயிலும் மூக்கிலும் நீரும் சேறும் உட்புகுந்து மூச்சுத் திணறி முதலை தத்தளித்தது. அதன் குட்டைக் கால்களை ஆற்றின் அல்லிப் பாம்புகள் சுற்றிக்கொண்டன.

திடீரென சிறகடிக்கும் சத்தம் கேட்டு அண்ணாந்தது முதலை. அது சறுக்கிய கிளையில் வந்து அமர்ந்தது ஒரு புராதன சியாமள விகாச பட்சி. முதலை திமிறத் திமிற பாம்புப் பிடிகள் இறுகியதைப் பட்சி பார்த்தது. முதலையின் உயிரூசல் நீடித்தால் அதன் பௌதிக இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும் என உணர்ந்தது பட்சி.

இன்னொரு இணை உலகில் ஒரு மூதாட்டியிடம் களவாடியிருந்த வடையைக் காலடி பொந்திற்குள் பதுக்கிவைத்த அந்தச் சிறகுதாரி, விருட்டென எழுந்து கருஞ்சிறகுகளை அடித்தபடி நீரினுள் பாய்ந்தது. கணப்பொழுதில் பாம்புகளைக் கொய்து முதலையை விடுவித்து முதலையின் நன்றிக்குக் காத்திராமல் வானுக்குள் தாவியது. கத்தரி மரத்தின் நீர் தீண்டாக் கிளையில் ஏறிக் கத்தரிப் பழங்களை உண்டு நதிக்கரைக்குத் திரும்பியது முதலை, புராதன சியாமள விகாச பட்சியின் மேலதிக பிரக்ஞையுடன்.

பிறிதொரு நாள், பிறிதொரு சமயம், பட்சியினுடைய முறையின்பேரில் ஒரு வேட்டுவன் அந்த வனத்தில் பிரவேசித்தான். ஆகாயத்தை இடைவிட்டு மறைத்த இலைகளின் பொய்க் கூரையினுடைய நீலப் பொத்தலில் நின்றிருந்த பட்சியை வேட்டுவப் பார்வை அவதானித்தது. அன்றிரவு சியாமள விகாச பட்சியை அடித்து சூப்புச் செய்துவிடத் தீர்மானித்தது வேட்டுவ மனம்.

அந்நேரம் வேட்டுவத் துப்பாக்கி தோளேறியதைக் கண்ணுற்றது நதியில் நீந்திய உயர்கதாநாயக முதலை. சின்னஞ்சிறு கால்களால் நீரை அளைந்தபடி மெல்லக் கரை நோக்கி முன்னேறிய முதலை, வேட்டுவனின் விழிகளூடே மரணம் தன் இரக்கமற்ற பார்வையைப் பட்சியின் மீது செலுத்தியதைக் கண்டு பதைத்தது. பட்சிக்கு நன்றி சொல்ல இது நல்ல தருணம் என உணர்ந்து வேட்டுவனை நோக்கி விரைந்தது.

மிகைப்படுத்திய மனிதத் தலை போன்றதொரு பாறையின் மேல் நின்றிருந்தான் வேட்டுவன். துப்பாக்கியின் எய்விசையில் விரலை அமர்த்திப் பட்சியின் தரிசனத்தில் அவன் ஆழ்ந்தான். முதலை நீரிலிருந்து வெளிப்பட்டு வேட்டுவனுக்கும் பட்சியின் மரணத்திற்கும் இடையிலிருந்த அரை நொடியில் அடியெடுத்து வைத்தது. வணக்கம் சொல்லிப் பிரியும் கைகள் போன்ற வாயைத் திறந்தது. கடித்தது வேட்டுவனுடைய காலை. வலி பொறுக்காமல் வேட்டுவன் அலறி துப்பாக்கியைத் தலை சுற்றி வீசியெறிந்தான். சப்தம் எழும்பிய இடத்தைப் பட்சியின் காதுகள் தேட, அவற்றைப் பின்தொடர்ந்த அதன் கண்கள் இலை இடைவெளிகளூடே ஓடிய வேட்டுவன் மீது பதிந்து புரிதலில் விரிந்தன.

ஒவ்வொரு பிரதிக்கும் ஒரு நீதி உண்டு. குழந்தைகளே, இந்தப் பிரதிக்கும் அது உண்டு. அது என்ன தெரியுமா? மற்றவர்கள் நமக்கு உதவி செய்தால் நாமும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இன்னொரு முறை நமக்கு உதவி செய்வார்கள்.

17 Comments »

பேயோன் on August 4th 2010 in ஓவியம், புனைவு

Rss Feed Tweeter button Facebook button Delicious button Stumbleupon button

பேயோன் is using WP-Gravatar