பேயோன்

படித்ததில் பிடித்தவன்

ராட்சத மலர்

March 10th, 2012

யானையே, நீ ஒரு ராட்சத மலராவாய்
உன் இதழ்களிலேயே மெல்லியவை உன்னிரு காதுகள்
ஈக்களும் குளவிகளும் மகரந்தம் எடுக்க
ரீங்கரித்தருகில் வருகையில்
உன்னிதழ்கள் சாமரமாய் அசைந்தவற்றை விரட்டுமோ?
அதிசயப் பெருமலரே, உன் நீண்ட வெண்கொம்புகள்
உன் இதழ்களைக் காக்கும் விலைமதிப்பற்ற முட்களாகும்.
தொட விழையும் ஒரு இரு மடங்கு ராட்சத விரலை
குத்திவிடக்கூடியவையோ உன்னிரு வெண்முட்கள்?

இறைச்சி மலை உன்னுடல் எனினும்
தரைதொடு காலடியின் தோற்பரப்பில் மட்டுமேனோ
குழந்தையின் கன்ன மென்மை?
காலிதழ்கள் நான்கிலும் யானைக் கால்
ஆயினும் நீ ஊனம் அறியாய்
கல்லில் வடித்த கருந்தென்றலாய் அசைவாய் நீ
ஒரு சிறுமியின் ஒற்றைச் சடை
போன்றவுன் வால் உனதின்னோரிதழாகும்.

மூக்கு நீண்டு உருப்பெருத்த எருமையாய்
நீ யதார்த்த வனத்தில் வீற்றிருக்கையில்
காற்று உனைப் பூவாய் அசைத்திடாதது எதற்காக?
பாகனோடு பிறக்காத நேற்றின் விலங்கே,
இத்துணைக் காலம் உயிர் பிழைத்ததெங்ஙனம்?
கடல் மட்டத்திற்கு மேல் பிழைக்கும் உயிரினங்களில்
நீதான் ஆகப்பெரிதென அறிவாயா?
ஆமெனில் எப்படி என் குண்டுக் குழந்தையே?

வானூர்தி காணாத காலத்தின் விமானம் நீ
கொடும்பல் விலங்குகளின் வாயிற்படாமல் கானகம் பார்க்க
மலர்த் தண்டு உன் முதுகில் இவர்ந்தாடினால் போதும் என் பாதுகாப்புக்கு.
காட்டுத் தாய் குழைந்த வண்ணங்களைப் பூசியலையும்
புலி, சிங்கம், பனிக் கரடி, ஒட்டகச் சிவிங்கி,
வரிக் குதிரை, பெங்குவின், மலைப்பாம்பு போல்
நீயுமொரு வண்ணத்தைச் சுமந்து திரியக் கிடைக்காததொரு சோகம்.
ஆனால் அதனினும் சோகம் காட்டில் தன்னார்வமாய்த் திரியாமல்
கோவில் சிறையில் சங்கிலி முருகனாகினாய்.
பெரிய இறக்கைகள் போன்ற செவிகளையுடைய பிராணியே,
உடலெடை குறைந்திருந்தால் பறவையாகியிருப்பாயோ நீ?

சுற்றுச்சூழல் படலம் நீங்கிட ஜலத்தினை சுயத்தில் வீசும் கன புஷ்பமே,
உன்னைப் பார்த்தெவனோ ஒருவன் வரைந்த ஓவியத்தை
என் வீட்டுச் சுவரில் மாட்டியிருக்கிறேன்
அலுவலக நேரம் முடிந்து வீடடைந்தபின்
அழுக்கில் குளித்த காலணிகளைக் கழற்றி எறிந்துவிட்டு
வீட்டுக்குள் வந்து சோபாவில் உனக்கெதிரே அமர்கிறேன்
சுவராணியில் மாட்டிக்கொண்டு அசையாமல்
தொங்குமுன்னை ஒருமுறை பார்க்கையில்
கோப்புகள் தோளேற்றிய பணிச் சுமை சடுதியில் மறைகிறது.
புனைவின் மரச் சட்டத்திற்குள்ளிருந்து பார்க்கையில் தெரிவேனோ நானுனக்கு?

சம்பவ மாலை

March 7th, 2012

புதுவையில் ஒரு இலக்கிய நிகழ்வை முடித்துக்கொண்டு திரும்பிய எனக்காக வீட்டில் ஒரு கடிதம் காத்திருந்தது. என் மேஜை மேல் கிடந்த சின்னஞ்சிறு வெளிர்நீல நிற அஞ்சல் உறையது. எனக்கு முன்பு அதை யாருமின்னும் பிரிக்கவில்லை. எனக்கு வரும் கடிதங்களை வேறு யாராவது பிரித்தால் வீட்டை சந்தி சிரிக்கச் செய்துவிடுவேன் என்பதால் இந்த ஏற்பாடு.

கடித உறையில் ஜப்பானிய அஞ்சல் தலை ஒட்டப்பட்டிருந்தது. உள்ளே ஜப்பானியர்களுக்கே உரிய நேர்த்தியான கையெழுத்தில் சீரான ஆங்கிலம். அதைப் படிக்கத் தொடங்கினால் இப்படி இருந்தது -

அன்புள்ள பேயோன் அவர்களுக்கு,

மாலை வணக்கம். உங்களுக்கு என்னைத் தெரியாது, ஆனால் சற்று நேரத்தில் தெரிந்துகொள்ளத்தான் போகிறீர்கள். 1997ல் உங்கள் முதல் ஜப்பான் பயணமாக க்யோட்டோவிற்கு வந்தபோது எங்கள் வீட்டினருகே இருந்த கொமாச்சி விடுதியில் தங்கினீர்கள். நீங்கள் தங்கியது அங்கெனினும் சாப்பாடு எங்கள் வீட்டில் என ஒழுங்காகியிருந்தது. நீங்கள் தினமும் ஐந்து முறை எங்கள் வீட்டில் சாப்பிட்டீர்கள். உங்களுக்குப் பிடித்த உணவு யுடோன் நூடுல்ஸ். ஒவ்வொரு முறையும் அதை நிறைய சாப்பிட்டுவிட்டு “உடல், மனம் இரண்டும் நிரம்பிவிட்டது” என்று அலுப்பில்லாமல் ஒவ்வொரு முறையும் சொல்வீர்கள். நினைவிருக்கிறதா? ஒருமுறை உங்களுக்குப் பிடித்த யுடோன் நூடுல்ஸ் கிடைக்கவில்லை. சுஷிதான் இருந்தது. ஆனால் நீங்கள் ஏமாற்றமடையவில்லை. “ஜப்பானிய உணவுதானே?” என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு அதையும் நிறைய சாப்பிட்டீர்கள்.

உங்களுக்கு அன்று தின்ற சுஷியை நினைவிருந்தால் எங்கள் வீட்டு சச்சிகோவையும் நினைவிருக்கும். சச்சிகோ கிமுரா எங்கள் வீட்டில் இருந்த ஒரு முப்பது வயது முட்டாள். ஆனால் உங்கள் பார்வையில் அவள் அழகாகத் தெரிந்திருக்கிறாள் போலும். நான் அந்த சச்சிகோவின் மகன். அந்த தர்க்கப்படி உங்கள் மகனும்கூட. உங்களைக் காதலித்ததுதான் சச்சிகோ செய்த கடைசித் தவறு என்று சச்சிகோ அடிக்கடி சொல்வாள். இப்போது அவளுக்கு வேறு திருமணமாகிவிட்டது. வசதியாக, திருப்தியாக இருக்கிறாள். நான் க்யோட்டோவின் சகாஷிடாமோன் அகாடமியில் படிக்கிறேன். அந்தப் பள்ளி என் வளர்ப்புத் தந்தையுடையது. அவர் நல்ல மனிதர், ஆனால் பணத்தின் அருமை தெரியாதவர். அதனால் பணத்தை வங்கிக் கணக்கின் பிடியிலிருந்து விடுவிக்க மறுக்கிறார்.

நீங்கள் க்யோட்டோவுக்கு வந்தது 1997ல். இப்போது 2012. ஆக, எனக்கு 14 வயதாகிறது. 14 வயதில் எனக்குள்ள செலவுகளைப் புரிந்துகொள்ள யாருமில்லை. என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் எல்லாமே என் வளர்ப்புத் தந்தையின் பெயரிலுள்ள வங்கிக் கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. இதை நான் எந்தப் பெண்ணிடமாவது சொன்னால் எடுபடுமா? அல்லது என் வளர்ப்புத் தந்தையின் இன்சூரன்ஸ் பத்திரத்தைக் காட்டி கடையில் பீர் வாங்கத்தான் முடியுமா? முடியாதுதானே?

என் உயிரியல் தந்தையைப் பற்றி என் தாயிடம் பல முறை கேட்டிருக்கிறேன். என் கண்கள் உங்களுடையவை போலிருப்பதாக சச்சிகோ சொல்லியிருக்கிறாள். நீங்கள் இறந்துவிட்டதாகச் சிறிது காலம் என்னை நம்பவைத்தாள் சச்சிகோ. ஆனால் என் செலவுகள் அதிகரித்துக்கொண்டே போவதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது, இந்த ஆள் எங்காவது உயிரோடு இருப்பார் என்று. நிறைய செலவு செய்து உங்களைக் கண்டுபிடித்திருக்கிறேன். எனக்கு என் தலைமை ஆசிரியரிடம் பணம் கேட்டு நிற்பது அலுத்துவிட்டது. நீங்கள் அனுப்பப்போகும் சிறு தொகையை முதலீடாக வைத்து என் நண்பர்களுடன் சேர்ந்து டோக்கியோவில் ‘பச்சிங்கோ பார்’ ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன் (பச்சிங்கோ பாருக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் கூகுளில் தேடுங்கள். கூகுளும் தெரியாது என்றால் அகராதியில் பாருங்கள். அகராதி வைத்திருக்கிறீர்கள்தானே?).

நீங்கள் வாழும் கலாச்சாரத்தில் ‘கடந்த காலத்திற்கு’ அனுமதி இல்லை என்று எனக்குத் தெரியும். இதுதான் விஷயங்களைச் சிக்கலாக்குகிறது. ஒருவேளை உங்களால் பணம் அனுப்ப முடியவில்லை என்று வையுங்கள், எனக்கு திடீரென்று சகோதர பாசம் பொங்கி வழியத் தொடங்கிவிடும். எனக்கொரு அரைச் சகோதரன் இருப்பதை நான் அறிவேன். அவனுக்கு ஒரு கடிதம் அல்லது என் அன்பிற்குரிய சின்னம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினால் உங்கள் சொகுசான வாழ்க்கை தடம் புரண்டுவிடாது? போன் செய்து பேச ஆசைதான், ஆனால் எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதை வேகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இதைக்கூட என் வக்கீல்தான் எனக்காக எழுதுகிறார். நீங்கள் அனுப்பும் பணத்தில் ஒரு பகுதி அவருக்குக் கட்டணமாகும்.

உங்கள் பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். என் தொழில் முயற்சி பாதுகாப்பாக நடைபெற என் யாகுசா நண்பர்கள் உதவுவார்கள். நீங்கள் ஒருமுறை அனுப்பினால் போதும். நானும் ஒருமுறைதான் கேட்பேன். 500,000 யென்னுக்குக் குறையாமல் அனுப்புங்கள். கண்டிப்பாக டாலரில் அனுப்புங்கள்.

இவண்
ரியுனோசுகே யோஷிடா,
க்யோட்டோ

உதவியவர்
இச்சிரோ யோஷிடா,
யோஷிடா & பார்ட்னர்ஸ், எல்எல்பி.,
க்யோட்டோ

நான் படித்தது என்னை சிந்திக்கவைத்தது. இதயம் மிக வேகமாக அடித்துக்கொண்டது. சடக்கென்று அந்தக் கடிதத்தைக் கசக்கிப் பந்தாகச் சுருட்டிக் குப்பைத் தொட்டியில் எறிந்தேன். பிறகு என்ன தோன்றியதோ, எறிந்ததை வெளியே எடுத்து இரண்டாக, நான்காக, எட்டாக, பதினாறாக, முப்பத்தியிரண்டாக, அறுபத்திநான்காக, நூற்றியிருபத்தியெட்டாக, நூற்றிமுப்பதாக, நூற்றிமுப்பத்திமூன்றாக கிழித்து மீண்டும் குப்பைத் தொட்டியிலேயே போட்டேன்.

போட்டு நிமிர்ந்தால் அறை வாசலில் மனைவியின் நிழலாட்டம்.

“யாருகிட்டேந்து லெட்டர்?” என்றாள்.

“பணம் கேட்டு யாரோ பையன்” என்றேன் வெலவெலத்து.

9. பூலோக ரம்பம்

March 5th, 2012

(‘ஒரு லோட்டா ரத்தம்’ நெடுங்கதையின் தொடர்ச்சி. முந்தைய அத்தியாயங்கள்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு)

புனித பீட்டர்ஸ்பர்க், 1875.

நெவ்ஸ்கி தெரு அருகே பியோனிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய வேனில் பூங்காவில் ஒரு பிர்ச் மரத்தடியில் அமர்ந்திருந்தார் ஃபியதோர் மிஹைலவிச் தஸ்தயெவ்ஸ்கி என்கிற தாஸ்தாயெவ்ஸ்கி. நரையோரக் காதுகளில் ஒன்றின் மடலுக்குப் பின் செருகியிருந்த பென்சிலை பழகிய லாவகத்தோடு எடுத்தார். கண் முன்னே விரிந்துகொண்டிருந்த மனித நாடகத்தைக் குறிப்பெடுக்கத் தொடங்கினார்.

ஒரு சிறுவன் – பன்னிரண்டு வயதுக்கு மேல் இருக்காது – தன்னைவிட ஏழெட்டு வயது மூத்தவனான ஒரு இளைஞனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான்.

“சாஷா! நீ என்னிடம் இறைஞ்சுவதற்குப் பதிலாக உன் தமக்கையிடம் பேச முயல வேண்டும். இனியும் என்னால் பொறுமை காக்க முடியாது – ”

“காவ்ரில் அலெக்சியெவிச், தயவுசெய்து ஒரு கணம் நான் கூறுவதைக் கேளுங்கள்! ஜென்யாவின் இதயம் எங்கிருக்கிறது என உங்களுக்குத் தெரியாதா?”

இருவரும் பேசிக்கொண்டே அவர் பார்வையை விட்டு விலகிச் சென்றனர். தாஸ்தாயெவ்ஸ்கி குறிப்பேட்டைப் பையில் வைத்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார்.

கண் முன்னே நடந்தவை ஒரு புதிய நாவலின் கருவை அவருக்குள் விதைத்திருந்தன. நூறு பக்கத்தில் அடக்கிவிடலாம். முன்பணத்தில் முதலில் புகையிலைக்காரன் இவான் வசீலியெவிச்சின் கணக்கை பைசல் செய்ய வேண்டும். புது இறகையும் மைப்புட்டியையும்கூடப் பிறகு வாங்கிக்கொள்ளலாம். புதுத் தீர்மான சுறுசுறுப்பில் விருட்டென்று எழுந்து தெருவிற்குச் சென்றார் தாஸ்தாயெவ்ஸ்கி. நெவ்ஸ்கி பாதசாரிகள் ஒவ்வொருவரும் தான் படைக்கவிருக்கும் இளம் கதாநாயகனின் தார்மீகப் போராட்டங்களைப் பற்றி மனதிற்குள் பல விதமாக விவாதித்துச் சென்றபடி இருந்தது போல் தாஸ்தாயெவ்ஸ்கிக்குத் தோன்றியது.

கண்டது கதையாக வளரத் தொடங்குவதற்குள் மண்டையில் ஓங்கி ஒரு போடு. மன வேதனைக்கு ஸ்தூல வடிவம் கொடுத்தது போல் வலித்தது அவர் தலையில். புனித பீட்டர்ஸ்பர்கின் வேனிற்கால இரவு தமக்கெனப் பிரத்தியேகமாகக் கவிந்தது போலிருந்தது தாஸ்தாயெவ்ஸ்கிக்கு. வலியின் தீவிரத்தைக் கொண்டு கட்டையா வெண்கலமா என்று ஊகித்துக்கொண்டு, முந்தைய அனுபவம் ஒன்றின் நினைவில் வெண்கல முனை பொருத்திய பழைய மரத்தடி என்று (சரியாக) தீர்மானித்து மயங்கினார். அவருக்குத் தெளிவதற்குள் இரவாகிவிட்டிருந்தது.

சிறிய, சற்றே இருண்டதொரு அறையில் அவர் கண்விழித்தார். அவர் படுத்திருந்த படுக்கையைச் சுற்றிக் கொசு வலை போல மெல்லிய திரை மூடியிருந்தது. மனிதக் கதகதப்புக்குப் பழக்கப்பட்டதாகத் தெரிந்த அந்த இடத்தில் படுக்கைக்கு எதிரே ஒரு கனத்த நாற்காலியில் ஓர் உருவம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. கண்களுக்கு அரையிருள் பழகப் பழக தாஸ்தாயெவ்ஸ்கி பரிச்சயமான ஓர் இளைஞனை அவ்வுருவத்தில் அடையாளம் கண்டார். பரிச்சய உணர்வு அவரது அதிர்ச்சியை விழுங்கியது. அப்போதும் அது மெய்யென அவர் நம்பவில்லை. அதன் சாத்தியத்தை அவர் அங்கீகரிக்கவில்லை. எனினும் அவர் தன்னைக் கேட்டுக்கொள்ளத் தவறவில்லை – இவன் இடியட் நாவலில் வருபவன் அல்லவா?

அந்த அகன்ற மொரோசோவ் நாற்காலியில் இளவரசன் லெவ் நிகோலாயெவிச் மிஷ்கின் அசையாமல் கிடந்தான். தாஸ்தாயெவ்ஸ்கியின் அசைவுகளை அவன் பார்த்ததோ கேட்டதோ போலத் தெரியவில்லை; ஆனால் அவன் கண்கள் இருளில் கனன்றன, காட்டுத்தனமான ஒரு வெறித்தலில் நிலைகுத்தியிருந்தன.

படுக்கையை விட்டு இறங்கி நின்ற தாஸ்தாயெவ்ஸ்கி அவனை மிகுந்த எச்சரிக்கையுடன் பார்த்தார். திடீரென இளவரசன் குபீரெனச் சிரித்தான், அத்தனை நேரமும் சிரிப்பு விரதம் இருந்தவனைப் போல.

“முற்றிலும் நேர்மறையான, அப்பட்டமான அழகுடைய இயல்புள்ள ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க ஆசைப்பட்டாயாமே?” என்றான் இளவரசன் குத்தலாக.

தாஸ்தாயெவ்ஸ்கி பீதியில் உறைந்து அவனைப் பார்த்தார். கிறிஸ்துவின் உருவமா? இளவரசன் சட்டென அமைதியடைந்தான். தாஸ்தாயெவ்ஸ்கி தன்னை உருவாக்கியதன் நியாயத்தை அவர் முகச் சுருக்கங்களில் படிக்க முயன்றது போல் ஆராய்ந்தான். பிறகு அவரை முழுவதும் மறந்துவிட்டது போல் இருந்தான். அவர் அவனையே பார்த்துக்கொண்டு காத்திருந்தார். அரை மணிநேரம் கடந்தது.

இளவரசன் எழுந்து கைகளை கோட்டுப் பைக்குள் நுழைத்துக்கொண்டு அறைக்குக் குறுக்கும் நெடுக்கும் நடக்கவும் அர்த்தமின்றி முணுமுணுக்கவும் தொடங்கினான்; பிறகு கத்தவும் சிரிக்கவும் ஆரம்பித்தான். தாஸ்தாயெவ்ஸ்கிக்குக் கால்கள் நடுங்கின. அவற்றைச் சிறிது நேரத்திற்குப் பயன்படுத்த முடியாதென உணர்ந்தார்.

“உம்முடைய நகல் கிறிஸ்து எத்தகைய துன்பத்தையும் தாங்குவான். ஆனால் அது புனைவுக்குள். நடந்தது என்ன தெரியுமா?”

தாஸ்தாயெவ்ஸ்கி பதில் சொல்லவில்லை. அவருடைய புகழ்பெற்ற நாக்கு, வாய்க்குள் ஒரு ஓரமாக ஒதுங்கியிருந்தது.

இளவரசன் கோட்டுப் பையிலிருந்து ஒரு அச்சிட்ட தாளை உருவியெடுத்தான்.

“உனக்கு பூலோக கிறிஸ்துவா வேண்டும்? இந்தாரீர், நான் உனக்கு அந்துகிறிஸ்துவைத் தருகிறேன் பின்வருமாறு:”

இளவரசன் மிஷ்கின் உலக இலக்கியத்தின் சிறப்பான பாத்திரங்களில் ஒன்று. மிஷ்கின் தாஸ்தாயெவ்ஸ்கியின் பாத்திரங்களிலேயே மிக நல்லவனும்கூட. ஆண்டவராகிய யேசு கிறிஸ்துதான் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு இந்தப் பாத்திரத்தை உருவாக்குவதற்கான முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். அவருடைய ‘த இடியட்’ நாவலினுடைய இந்தக் கதாநாயகன் நாவலின் தொடக்கத்தில் ஒரு நிகழ்வைச் சொல்கிறான். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவன் அந்தத் தண்டனையை அனுபவிக்கக் கடைசி நிமிடத்தில் தவறுவதால் குழந்தைகளிடம் கல்லடி படுவதை மிஷ்கின் கூறுகிறான். இது தாஸ்தாயெவ்ஸ்கிக்குக் கிடைத்த சொந்த அனுபவம். ஜார் மன்னரால் தடைசெய்யப்பட்ட தத்துவங்களை விவாதித்தமைக்காக தாஸ்தாயெவ்ஸ்கியும் அவரின் நண்பர்களும் சிறையிலடைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை நாளில் அவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்காக வரிசையாக நிறுத்தப்படுகிறார்கள். மரணம் மட்டுமே அவர்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்கிற ஒரே விசயம் என்ற நிலையில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு வெறும் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. மரண தண்டனை நிறைவேறாத அதிர்ச்சியில் சிலருக்கு மனச்சோர்வும் சிலருக்கு மனச்சிதைவும் ஏற்படுகிறது. மொத்த நிகழ்வும் அவர்களை மிரட்டுவதற்காக நடத்தப்பட்டிருக்கிறது (mock execution). தாஸ்தாயெவ்ஸ்கிக்கு நான்கு குழந்தைகள் இருந்தார்கள். 1867இல் அவருடைய மனைவி நிலத்தடி மனிதனுக்கு அருகில் வட்டமாக ஒரு குதிரை…

தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. பெரும் வேதனையை அடக்கிய ஓர் அலறல் அவரது ஆன்மாவிலிருந்து வெடித்துக் கிளம்பியது.

இளவரசன் சலனமின்றி அவரை வேடிக்கை பார்த்தான்.

“பொது அறிவுத் துளிகள் மாதிரி எதையாவது எழுதிவிட்டுப் போக வேண்டியதுதானே, இலக்கியம் என்ன வேண்டிக் கிடக்கிறது?” என்றான் வெறுப்புடன்.

இளவரசனை பூராவும் வேறு விதமாகக் கற்பனை செய்திருந்த தாஸ்தாயெவ்ஸ்கி நொந்து சரிந்தார். கை கால்கள் இழுத்துக்கொண்டன. வாயில் நுரை தள்ளியது.

இளவரசன் தன் கழுத்தில் இருந்த 20 கோப்பெக் தகரச் சிலுவையை அறுத்து அவர் மார்பின் மேல் போட்டான். அதற்குப் பிறகு அவன் அங்கு இருக்கவில்லை.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar