
பேயோன்
படித்ததில் பிடித்தவன்
Tag Archives: இரவு
ஐந்துக் கவிதைகள்
1.
கண் மூடிக்
கண் திறப்பதற்குள்
கடந்துவிட்டது இரவு
2.
வாளை விட வலியதாம்
விசைப்பலகை
3.
பெண்ணைக் கொடுத்த கிழவனுக்கு
காது மூக்கிலும் நரை
முதுமை புகாத துவாரங்கள் ஏது
4.
விழித்திருந்த நேரத்தில்
ரீவைண்ட் ஆகியிருக்கும் போல
விட்ட இடத்திலிருந்து தொடராமல்
வந்ததே வருகிறது கனவில்
5.
இத்தனை மரங்களை அழித்து
இத்தனை புத்தகங்களை எழுதியிருக்கிறார்
அவருக்கு விருது அவசியம்தான்
நான்கு கவிதைகள்
1.
தூங்காமல் விழித்திருந்தது ஓரிரவு
தூங்கி விழித்திருந்தது ஓரிரவு
தூங்கியும் தூங்காமலும்
விழித்திருந்தன ஓரோர் இரவுகள்
2.
மரபணுக் கொடி போல்
புரளும் கால்களை
நடத்துகிறது இரவுநிறத்
தார்ச்சாலை
3.
நிசப்த வருடலில்
கவியும் தூக்கத்தைக்
கலைத்துக் கலைத்து
விளையாடுகின்றன
கொசுக்கள்
4.
ஆரன் கீச்சொலி
கேட்டுத் திரும்பினால்
ஸ்கூட்டியில் இளம்பெண்
கடந்து சென்றாள்
தெருமுனையில் ஸ்கூட்டி
பார்வையிலிருந்து மறைந்த பின்னும்
தொடர்ந்து கேட்கிறது கீச்சொலி
அனேகமாய்
வெங்கடாசலம் தெருவிலிருந்து