பத்து காதல் கவிதைகள்

1

நகத்தைக் கடிக்கும்போது
நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!
அற்ப வன்முறையையும் அழகாக்கிவிடுகிறாய்.

2

ஒரு பேருந்துக் குலுங்கலில்
நம் உதடுகள் சந்திக்கின்றன
தற்செயல் ஸ்பரிசமாயிருந்தாலும்
அதிகாரி நீ அங்கீகரித்தால்
அது முத்தமாகும்.

3

உன்னை விரும்பித் தொட்ட பின்பு
வேறெந்தப் பெண் மேலும்
தவறிப்போய்கூடப் படுவதாகத்
திட்டமில்லை.

4

அழகாக இருப்பதுதான்
உன் முழுநேர வேலை போல்
நடந்துகொள்கிறாய்.

5

உன் பார்வை
சிலருக்கு உயிர் தருகிறது
சிலரைக் கொல்கிறது
ஆக மொத்தத்தில்
செத்தது சென்சஸ் துறை.

6

சிகரெட்டைப் பொருத்திக்கொள்கிறேன்
வேண்டாமென உதட்டிலிருந்து பிடுங்கி எறிகிறாய்
இன்னொன்றை வைத்துக்கொள்கிறேன்
அதையும் எறிகிறாய் பிடுங்கி
இப்படி ஒரு முழு பாக்கெட்டையும்
நீயே காலி பண்ணுகிறாய்.

7

உன் கொலுசுச் சத்தமும்
உன் குரலில் ஒரு பகுதியாகவே
மாறிவிட்டது.

8

என்னைப் பற்றிய உன்னையும்
உன்னைப் பற்றிய என்னையுமே
நாம் காதலிக்கிறோம்.

9

உன் ஓரக்கண் பார்வைகளுக்கு
ஒரு அகராதி போடவாவது
நான் ஓவியனாக வேண்டும்.

10

உன்னை நான் நினைக்கும்போதெல்லாம்
காதலைக் கண்டுபிடித்தவன்
கல்லறையில் புன்னகைத்துப் புரண்டு படுக்கிறான்.

வரும் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்

வரும் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் 124 புத்தகங்கள் என்னுடையவை வெளிவருவனவாகத் திட்டமிருந்தது. பல சிக்கல்களால், இடைப்பட்ட பயணங்களால் 106 புத்தகங்கள்தான் எழுத முடிந்தது. இருந்தாலும் வட்டமாக நூற்றியெட்டு புத்தகங்கள் எழுதிக் கொடுங்கள் என்று பதிப்பாளர் கேட்கவே, சட்டென ஒரு கவிதைத் தொகுப்பும் கட்டுரைத் தொகுப்பும் கொடுத்தேன். நல்ல வேளையாக அவர் கேட்டது ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு. பிரதி ஞாயிறு நான் என் மகனுக்கு ஹோம்வோர்க் செய்து தருவேன். அந்த நேரத்தில் அவன் எனக்குச் சில கவிதைகளோ கட்டுரைகளோ எழுதித் தருவான். ஒரு புத்தகத்தை அவனை எழுத விட்டாயிற்று.

பதிப்பகத்தினர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய எனது நூல்களின் பட்டியலை அப்படியே கீழே தருகிறேன். நான் தொடாத விசயங்களே அவ்வளவாக இல்லை என்றுவிடலாம். இந்த 108 புத்தகங்களுக்காக இரண்டு ஸ்டால்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்டால்களில் கூட்டத்தை நிர்வகிக்க பாப்பாசி பத்து என்.சி.சி. மாணவர்களை நியமித்துள்ளது.

வரும் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் என்னுடைய நூல்கள்:-

1. ஒரு லோட்டா ரத்தம் (நாவல்)
2. தேர்ந்தெடுத்த கவிதைகள் (கட்டுரைகள்)
3. பேபல் இவ்வாறு பேசுகிறான் (கட்டுரைகள்)
4. உற்பத்தி (பத்தி தொகுப்பு)
5. உருவகக் கதைகள் (சிறுகதைகள்)
6. தாங்களும் யானும் (நேர்காணல்கள்)
7. அன்புள்ள கடிதங்களே (கடிதங்கள்)
8. பூபாளம் பாடும் பல்லவி (இசை பற்றிய கட்டுரைகள்)
9. பேயோன் 2000 (ட்விட்டர் நுண்பதிவுகள்)
10. என் வாழ்க்கை (நாவல்)
11. இழவு (நாவல்)
12. படலம் (நாவல்)
13. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (நாவல்)
14. பூனை கோர்த்த மாலை (கட்டுரைகள்)
15. நிமித்தங்களின் நதியில் (நெகிழுரைகள்)
16. உரையுடைமை (செய்யுள் உரைத் தொகுப்பு)
17. ஒரு பேனாவின் காமிரா (திரைக்கதைத் தொகுப்பு)
18. பேயோனின் குற்றமும் தண்டனையும் (மொழியாக்க நாவல்)
19. நான்காம் சுழி (சிறுகதைகள்)
20. விண்ணை எட்டும் தூரிகை (ஓவியம் பற்றிய கட்டுரைகள்)
21. நீங்களும் எழுதலாம் PHP (சுயஉதவி நூல்)
22. அ முதல் னௌ வரை (தமிழ் எழுத்துகள் தொகுப்பு)
23. சுயநானூறு (செய்யுள் தொகுப்பு)
24. நிறைய பக்கங்கள் (கட்டுரைத் தொகுப்பு)
25. எவன் எவனோ (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்)
26. தாம்பரம் முதல் திருவான்மியூர் வரை (பயண நூல்)
27. மீள்பாரதி (பாரதி ஆய்வு நூல்)
28. வடகிழக்கு சினிமா (கட்டுரைகள்)
29. நூன்முகம் (ஃபேஸ்புக் இடுகை தொகுப்பு)
30. அன்னிய தரிசனம் (சிறுகதைகள்)
31. ஆறு கவிதைகள் (கவிதைகள்)
32. காதல் கவிதைகள் முழுத் தொகுப்பு
33. தகவல் பிழை (பத்தி தொகுப்பு)
34. ஐரோப்பியச் சிறுகதைகள் (சிறுகதைகள்)
35. வறுமைக் கோடு (கோட்டோவியத் தொகுப்பு)
36. எதெல்லாம் இலக்கியம்? (கட்டுரைகள்)
37. வண்ணக் கலரி (ஓவியத் தொகுப்பு)
38. ஊராந்திரம் (பயண நூல்)
39. ஜப்பான் முன்னேறியது எப்படி? (அபுனைவு)
40. சங்க இலக்கியத்தில் இலக்கியச் சங்கங்கள் (ஆய்வு நூல்)
41. இப்படி திடீரென்று நாளை காலைக்குள் இன்னொரு புத்தகம் எழுதச் சொன்னால் எப்படி? (கட்டுரைகள்)
42. கதகதக்கும் உலகம் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)
43. ஜெர்மானிய பதின்பருவத்தினர் மத்தியில் சூயிங்கம் பயன்பாடு (ஆய்வு நூல்)
44. இன்னும் எத்தனை (கவிதைகள்)
45. கையால் எழுதுபவன் (உலக இலக்கிய கட்டுரைகள்)
46. 130 கிராம் (சிறுகதைகள்)
47. இலக்கண இம்சைகள் (கட்டுரைகள்)
48. இன்னும் வரும் (பத்தி தொகுப்பு)
49. பண்பாட்டின் அறிகுறிகள் (பயண நூல்)
50. வராக பர்வம் (நாவல்)
51. இம்ப்ரஷனிசம் முதல் ஃபாவிசம் வரை (அபுனைவு)
52. பாரதி யார்? (சிறு புத்தகம்)
53. எதெல்லாம் பின்நவீனத்துவம்? (கட்டுரைகள்)
54. தலைப்பு நல்லதாகக் கிடைக்கவில்லை. நீங்களே ஏதாவது ரம்மியமான தலைப்பாக யோசித்து வைத்துவிடவும். நான் பிறகு பார்த்துக்கொள்கிறேன். சில படங்கள் மின்னஞ்சலில் நான் அனுப்பினேன் பார்த்தீர்களா? கருத்து சொல்லுங்கள். புகைப்படத் தொகுப்பும் போடலாமென உத்தேசம். எப்படி வசதி? மற்றவை போனில் – பேயோன். (கட்டுரைகள்)
55. ஏர்டெல் ஜூனியர் சூப்பர் சிங்கர் – சீசன் 1 (திரைக்கதை-வசனம்)
56. நீயா நானா (திரைக்கதை-வசனம்)
57. விசுவின் அரட்டை அரங்கம் (திரைக்கதை-வசனம்)
58. ஜெயா செய்திகள் (சிறுகதைகள்)
59. வங்க சினிமா (கட்டுரைகள்)
60. கனவுகளின் இரவு (நெகிழுரைகள்)
61. டின்னர் செட் முதல் வால் கிளாக் வரை: சமகால கிப்ட் ஐடியாக்கள் (சுயஉதவி நூல்)
62. ஆடவர் சுயஉதவி (சுயஉதவி நூல்)
63. கட்டுரைகள் (கட்டுரைகள் (கட்டுரைகள்)) (கட்டுரைகள்)
64. ஒவ்வொரு இசத்திற்கு ஒவ்வொரு கதை (சிறுகதைகள்)
65. சாப்ளின் என்னும் பிறவி (வாழ்க்கை வரலாறு)
66. ஜென் திருத்தலங்கள் (தல புராண தொகுப்பு)
67. சிதையளவு நெருப்பு (பத்தி தொகுப்பு)
68. மலையாள சினிமா (கட்டுரைகள்)
69. மீந்தவனின் விழிகள் (நெகிழுரைகள்)
70. சட்டத்தில் இடமிருக்கிறது (கட்டுரைகள்)
71. வளம் தரும் வாஸ்து (சுயஉதவி நூல்)
72. நியூமராலஜி: பெயரெழுத்துகளை மாற்றி நீங்களும்கூட கலக்கலாம் (சுயஉதவி நூல்)
73. அதையும்தான் பார்த்துவிடுவோமே! – @borehayயுடன் சில உரையாடல்கள்
74. தூரத்து சொந்தம் (திரைக்கதை-வசனம்)
75. நைஜீரியா: பணத்தோட்டம் (சுயஉதவி நூல்)
76. தமிழ் அறிவியல் நூல்களில் தற்செயலாக அமைந்த அடுக்குத் தொடர்கள் (ஆய்வு நூல்)
77. இந்திய வரலாறு: நீங்களும் எழுதலாம் அதை (சுயஉதவி நூல்)
78. நோக்கியா 2330 பயனர் கையேடு (சுயஉதவி நூல்)
79. இந்தா பிடி இன்னும் ஐம்பது (கவிதைகள்)
80. இரைப்பை நோய்களுக்கு சைக்ளோஸ்போரின் பயன்பாடு (அபுனைவு)
81. ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன் (கட்டுரைகள்)
82. எது எடுத்தாலும் இலக்கியம் (குறுநாவல்கள்)
83. பேயோனின் கேம்பிரிட்ஜ் மாணாக்கர் அகராதி (மொழியாக்கம்)
84. ஆஸ்கார் ஒயில்டு பொன்மொழிகள் (மொழியாக்கம்)
85. மறவன் புலவு: தமிழர் உணவுகள் (கட்டுரைகள்)
86. பாம்புத் தைலம் (கட்டுரைகள்)
87. 87 (நாவல்)
88. உயர்கவித்துவம் (கவிதைகள்)
89. நியான் ஹோலோகிராம் (அறிபுனை நாவல்)
90. கி.பி. எதிர்காலம் (அறிபுனை சிறுகதைகள்)
91. போடி உள்ளே!: தமிழ் சினிமாவில் பெண்கள் (ஆய்வு நூல்)
92. 108 உலக இலக்கிய நாவல்கள் (கட்டுரைகள்)
93. முன்னேறிடு சுயமே! (சுயமுன்னேற்ற நூல்)
94. சிற்பங்களின் இந்தியா (கட்டுரைகள்)
95. தீராத கப்பங்கள்: ஐ.டி. ரிட்டன்ஸ் செய்வது எப்படி (சுயஉதவி நூல்)
96. மை தீர்ந்த மனம் (கவிதைகள்)
97. பேயோனின் சண்டையும் சமாதானமும் (மொழியாக்கம்)
98. ரோடு போடும் கோடுகள் (கோட்டோவிய தொகுப்பு)
99. ஓ. ஹென்றி கதைகள் (மொழியாக்கம்)
100. அது ஒரு செவ்வாய்க்கிழமை (தூர்தர்ஷன் நாடகத் தொகுப்பு)
101. அங்கே என்ன சத்தம்?: மேலை இசை வடிவங்கள் (கட்டுரைகள்)
102. பேயோன் நாடகங்கள் (நாடகங்கள்)
103. கானலைத் தேடும் தண்ணீர்கள் (நெகிழுரைகள்)
104. பவர்பாயிண்ட் உங்கள் நண்பன் (சுயஉதவி நூல்)
105. சொற்களின் தலைநகரம் (கட்டுரைகள்)
106. ஓட்டல் துறை வேலைவாய்ப்புகள் (சுயஉதவி நூல்)
107. திசை காட்டிப் பறவை – 2
108. சிகரம் தொட்ட சிலபலர் (சுயமுன்னேற்ற நூல்)

பொய் இனிது

மெய் இனிது. பொய் இனிது. வலதினிது. இடதினிது.
- ‘காற்று’ வசன கவிதையில் பாரதியார்

பொதுவாகவே, பொய் சொல்வது தவறான செயல் என்பது என் துணிபு. நல்ல காரியத்திற்காகச் சொல்வதால் அது உண்மை ஆகிவிடாது. உண்மை ஆகத் தேவையில்லை என்பது விதண்டாவாதம். ஏனெனில் பொய் தன்னளவிலேயே தீமையானது. Some are more Equal என்பது போல நல்லதுக்காகப் பொய் சொல்லலாம் என ஒன்றை கட்டமைத்திருக்கிறார்கள் நம் முன்னோடிகள். இந்தக் கூற்றை நாம் முக்காலத்திற்குமான உலகப் பொதுமறையாக ஏற்காமல் அவர்களுக்கு அந்தந்த சமயங்களில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைக்கான தற்காப்பு எதிர்வினை உத்தியாகப் பார்க்க வேண்டும்.

வெகுஜன அழகியலில் பொய்க்கு இடமிருப்பதை நாமே பார்த்திருக்கிறோம். கவிதைக்குப் பொய் அழகு என்பது பாடம். “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே”யின் நீட்சி அந்தக் கூற்று. ஆக, பொய்யை தார்மீக காரணங்களுக்காகவிற்குப் பதிலாக அழகியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துவது தவறல்ல என்றாகிறது. Truth is beauty என்றார் கீட்ஸ். அவரும் அதைப் பொய்யினால் அழகாக்கப்பட்ட தனது கவிதையில் சொல்லியிருக்கிறார். சிலருக்குப் பொய் சொல்வதே தொழில். அதே போல முழுநேரக் கவிஞர்களும் இருக்கிறார்கள்.

பாரதியார் என்ன சொல்லுகின்றார்? கவிதை எழுதுகிறது மட்டும்தான் என்னுடைய தொழில், நான் வேறு செயல்பாடு அறியேன் என்கிறார். கடந்த குறைந்தது இரு நூற்றாண்டுகளாக இந்நிலமை மேனாடுகளில் சாத்தியமாக இருந்துவருகின்றது. ஆனால் இங்குக் கவிதை மட்டும் எழுதிக்கொண்டு ஒருவன் ஜீவாதாரத்தை நிறுவிட முடியாது. தமிழிலக்கிய வரலாற்றில் இடம் பிடிக்காமல் ஓய மாட்டுவதில்லை என்று கரை வைத்து நடந்துகொண்டால்கூட மிதமிஞ்சிப்போனால் “தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவர்” என்று பெயர்தான் வாங்கலாமோடு சரி. சம்பந்தப்பட்ட நடத்தையால் ஒரு கவிஞன் கெலிக்கும் வாழ்வாதாரம் கிஞ்சித்தையும்விடக் கம்மியே.

இதே மாதிரியான ஒரு விஷயம் என்னுடைய படைப்பு ஒன்றிலும் அடியோட்டமாக இருப்பதைக் காண்க முடிகிறது. எப்படியென்றால், ஒரு இளைஞன் கவிஞன் ஆகும் கனவுகளோடு சென்னைக்கு வருகிறான். தெருமிகு நகரம் அவனுக்குத் தனிமையைக் கற்றுத் தருகிறது. காதலைக் கற்றுத் தருகிறது. நிராகரிப்பை, துரோகத்தைக் கற்றுத் தருகிறது. கவிதை தவிர பிற தொழில்களையும் அவன் கற்கிறான். அதற்குப் பிறகு அவன் கவிஞன் ஆகிறானா, அப்படியே ஆனாலும் என்ன சாதிக்கிறான் என்று கதை சொல்கிறது.

தமிழ்ப் பதிப்புத் துறை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காகித காலத்தில் “தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவர்”கள் குவிந்துவிட்டனராயினும் அன்றாட மனிதன் கவிதையை இன்னமும் பொருட்காட்சியில் தொலைந்துவிட்ட குழந்தையின் கண்களோடுதான் பார்க்கிறான். ஏன், ஒட்டுமொத்த இலக்கியமே புரிதல் சார்ந்த பிரச்சினைப்பாடுகளால் சாமானியனை அந்நியப்படுத்திப் பகைத்துக்கொள்கிறது.

பொய் விஷயத்திற்கே வருவோமே. அதில்தான் நிறைய கிடைக்கிறது. ‘காலா… என்றன் காலருகே வாடா’ என்று எழுதுகிறார் பாரதியார். இதைச் சற்று விரிவாக அலசி இதன் பொய்யை நிறுவுவதோடு கட்டுரையை முடிப்போம். இந்தப் பாட்டில் பாரதியார் காலன் (எ) எமனைக் காலருகே வரச் சொல்கிறார், தான் மிதிப்பதற்கு. என் அருகே வா என்று சொல்லாமல் என் காலருகே வா என்று சொல்வதற்கு இரு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, எமன் மனிதக் கால் கட்டைவிரல் உயரம்கூட இல்லாது பட்டாணி அளவில் இருக்க வேண்டும். அல்லது கவிஞர் சென்னை மெரீனா கடற்கரையில் அவரின் சிலைக்கு இருப்பது போல் ஒரு பீடத்தின் மீது நின்றிருக்க வேண்டும். புராணங்கள் எமனை அவ்வளவு சிறியவனாக சித்தரிக்கவில்லை. யாரும் சும்மா ஒரு பீடத்தின் மேல் ஏறி நின்றுகொண்டு யாரையும் சண்டைக்குக் கூப்பிடப்போவதும் இல்லை, சென்னையில் பீடங்களை யாரும் காலியாக விட்டுவைப்பதும் இல்லை. எனவே இரு காரணங்களும் சாத்தியமில்லை. இதனால் பாரதியார் தனது காலை ஒரு deterrent போல் பயன்படுத்துவதாகவும் அர்த்தம் கூற முடியாது. இதுதான் இலக்கியம். பாரதியார் பொய் கலக்காமல் “மரணமே, எனக்குச் சாகப் பயமில்லை” என யதார்த்தமாக எழுதியிருந்தால் நமக்கு இலக்கியம் கிடைத்திருக்காது. இலக்கியம் நமக்கு அளிக்கும் மகத்தான ஒரு தகவல் என்னவென்றால் அது பொய்தான்.

இன்றைய செய்தித்தாள் (திரைக்கதை)

இது எனது இன்றைய செய்தித்தாள் கட்டுரைக்கான திரைக்கதை. அந்தக் கட்டுரையைப் படிக்காமல் கீழ்க்காண்பது புரியாது.

*

காட்சி 1

ஒரு சமகால வீட்டின் மரக் கதவில் பெயின்டில் வரையப்பட்ட 70 என்ற எண்ணுக்கு க்ளோசப்.

இரு நொடிகள் கழிந்த பின் இருபத்தி சொச்ச வயது முஷ்டி ஒன்று அதை இருமுறை தட்டுகிறது. யாரும் வரவில்லை. இன்னும் இருமுறை தட்டுகிறது. இன்னும் யாரும் வரவில்லை. பின்னணியில் இரு நொடிகளுக்கு பியானோ இசை.

கை ஸ்லோ மோஷனில் வலப்பக்கமாக மேல்நோக்கி நகர்ந்து காலிங் பெல்லை அழுத்துகிறது. கதவு திறக்கிறது. ஒரு நடுத்தர வயதுக்காரர் பனியன், வேட்டி அணிந்து நிற்கிறார். அவருக்குப் பின்னால் அந்த வீட்டின் சிறிய ஹால். பிரீஸ் பிரேம்.

வாய்ஸ் ஓவர்: இவருதான் இந்தப் படத்தோட கதாநாயகர். இவருக்குப் பின்னணி எல்லாம் கிடையாது. இப்பதான் மொத மொதலா இந்தப் படத்துல வர்றாரு.

காமிரா ஒரு சுற்று சுற்றி காலிங் பெல்லை அழுத்தியவனைக் காட்டுகிறது. இளைஞன். வெளியூரிலிருந்து வந்ததற்கு சாட்சியாக டிராவல் பேகுடன் நிற்கிறான். பிரீஸ் பிரேம்.

வாய்ஸ் ஓவர்: இவன் கதாநாயகரோட நெப்யூ. இப்பத்தான் வெளியூர்லருந்து வர்றான். பைய வெச்சிட்டு ரூமுக்குள்ளாற போயிடுவான். அப்புறம் வர மாட்டான்.

இளைஞன்: (கதாநாயகரின் காலில் விழுந்து எழுகிறான்) மாமா, எப்படி இருக்கீங்க?

வாய்ஸ் ஓவர்: நல்லாத்தான் இருக்கேன் தம்பி. இப்பதான் உங்க ஊர்லருந்து வர்றியா?

இளைஞன்: (சுற்றுமுற்றும் பார்த்து) மாமா, இந்தக் குரல் எங்கேந்து வருது?

மாமா: நான்தான் பேசுறேன். நல்லாயிருக்கியா?

இளைஞன்: நல்லாயிருக்கேன். இருங்க, குளிச்சிட்டு வரேன்.

மாமா: தாராளமா வாப்பா.

இளைஞன் பாத்ரூமுக்கு போகும் வழியில் சோபாவைக் கடந்து செல்கிறான். காமிரா சோபாவில் கிடக்கும் தமிழ் செய்தித்தாளைப் பார்க்கிறது. பிரீஸ் பிரேம்.

வாய்ஸ் ஓவர்: இதுதான் இன்னிக்கி வந்த பேப்பர். ஞாயித்துக்கிழமைங்கிறதால நாலு ரூவா. இதுல தமிழ்ல எழுதிருக்கு.

பின்னணியில் மெல்லிய புல்லாங்குழல் இசை தொடங்குகிறது.

இளைஞன்: (செய்தித்தாளைப் பார்த்துவிட்டு மாமாவை நோக்கித் திரும்புகிறான்) மாமா, இது இன்னிக்கி பேப்பரா? காலையிலேந்து இத யாருமே படிக்கலியா? இல்லன்னா கண்டி இப்பதான் கடைலேந்து வாங்கிட்டு வந்தீங்களா? பொதுவா அன்னன்னிக்கி பேப்பர் அந்தி சாயறதுக்குள்ள வித்துருமே? ரெண்டு வருஷத்துல இந்த ஊரு ரொம்ப மாறிப்போச்சு மாமா.

இளைஞன் பையை சோபாவுக்கு அடியில் தள்ளிவிட்டு பாத்ரூமுக்குள் மறைகிறான்.

கதாநாயகரின் முகத்திற்கு க்ளோசப். பின்னணியில் வேகமான மிருதங்க இசை. கதாநாயகர் முகத்தில் திகைப்பு. காமிரா அவர் முகத்தை ஐந்து முறை ஜூம் இன், ஜூம் அவுட் செய்கிறது.

கதாநாயகர்: (டி.வி. மேல் இருக்கும் சிறிய பிள்ளையார் படத்தை எடுத்து அதனிடம்) ம்ம்ம்? வந்ததும் வராததுமா…, இவன் என்ன சொல்லிட்டுப் போறான்?

கதாநாயகர் சோபாவை நோக்கி விரைகிறார். செய்தித்தாளை எடுத்துப் பார்க்கிறார்.

க்ளோசப்: செய்தித்தாள் ஸ்லோ மோஷனில் புரட்டப்படுகிறது.

கதாநாயகரின் குரல் வாய்ஸ் ஓவர்: இவன் சொல்றதுலயும் உண்மை இல்லாம இல்ல. கிட்டத்தட்ட தெனமுமே பேப்பர் இந்த வீட்டுக்கு வந்து சேர்றதுக்குள்ள கசங்கிப் போயிடுது. இதுக்கு பேப்பர் போடுற குழந்தைத் தொழிலாளிய கொற சொல்ல முடியாது. ஏன், சொல்ல வக்கில்லைன்னு கூட சொல்லலாம்.

க்ளோசப்: கதாநாயகரின் வாய்: கோமதி, கோமதி, இன்னிக்கு பேப்பர் படிச்சியா?

திரையில் சமையலறையைக் காட்ட வெள்ளை மார்க்கரால் அம்புக்குறி வரையப்படுகிறது. பின்னணியில் -

சமையலறையிலிருந்து கோமதியின் குரல்: ஆமா, படிச்சிட்டேன். அதுக்கு என்ன இப்போ?

க்ளோசப்: கதாநாயகரின் முகம்: தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன். நீ வேலையப் பாரு.

கதாநாயகர் சோபாவில் அமர்ந்து பேப்பரை தொடர்ந்து புரட்டுகிறார்.

கதாநாயகர்: (உள்ளறைப் பக்கம் திரும்பிக் கூப்பிடுகிறார்) டேய், இங்க வா.

உள்ளே ஒரு அறையிலிருந்து குண்டாக ஒரு சிறுவன் வருகிறான்.

வாய்ஸ் ஓவர்: இவன்தான் குமார். நம்ம கதாநாயகரோட வாரிசு. ஸ்கூல்ல படிக்கிறான்.

குமார்: என்னப்பா?

கதாநாயகர்: இன்னிக்கு பேப்பரைப் படிச்சியா?

குமார்: நான் கிழிக்கலப்பா.

கதாநாயகர்: அட அதுக்கில்லடா. சரி, போ போ.

குமார் போகத் திரும்புகிறான்.

கதாநாயகர்: டேய், ஒரு நிமிசம் இங்க வா.

குமார் நிற்கிறான்.

குமார்: என்னப்பா?

கதாநாயகர்: அகமதாபாத் சிவில் மருத்துவமனை வெளம்பரம் எத்தனாம் பக்கத்துல வருது சொல்லு பாப்போம்?

குமார்: ஒம்பதாம் பக்கத்துலப்பா.

கதாநாயகர்: சரி. நீ போ.

குமார் போகிறான்.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) அந்த வெளம்பரம் வந்திருக்குறதே…, இவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

Dissolve: fade out.

காட்சி 2

திரையில் எழுத்துக்கள்: சில நொடிகளுக்குப் பின்…

சிறிய அறை. மேஜையில் கணினி, அருகில் படுக்கை, அதில் மூடிய நிலையில் லேப்டாப். இவற்றைக் காட்டியபடி காமிரா லேப்டாப்பை நெருங்குகிறது.

கதாநாயகரின் கை லேப்டாப்பைப் பக்கவாட்டில் திருப்பி புத்தகம் போல் திறக்கிறது. ஸ்கைப்பியில் லாகின் ஆகிறது.

திரையில் இன்னொரு நடுத்தர வயது மனிதர் தோன்றுகிறார்.

வாய்ஸ் ஓவர்: இவர்தான் நம்ம கதாநாயகரோட தம்பி. புள்ள குட்டிங்களோட அமெரிக்காவுல படிக்காரு.

கதாநாயகரின் தம்பி: நாம காலைலதானே பேசினாப்ல?

கதாநாயகர்: (காமிராவை, அதாவது லேப்டாப்பின் வெப்க்யாமை நோக்கி) இதப் பாத்தியா?

…என்று செய்தித்தாளைக் காட்டுகிறார்.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) இது இன்னிக்கி பேப்பர். வீட்ல எல்லாரும் படிச்சாச்சு. எப்புடி இன்னும் கசங்காம இருக்கு பாரு.

கதாநாயகரின் தம்பி ஆச்சரியப்படுகிறாப்ல.

கதாநாயகரின் தம்பி: (காமிராவை நோக்கி) அடடே, இது எப்புடி?

திரும்பிப் பார்த்து மனைவி, குழந்தைகளைக் கூப்பிடுகிறார் -

கதாநாயகரின் தம்பி: சுமதி, வெங்கி, நரேந்திரா, எல்லாருமா சேந்து இங்க வாங்களேன்!

நிறைய நகைகள் அணிந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, 8, 10 வயதுச் சிறுவர்கள் முதலிய எல்லோரும் வந்து பார்க்கிறார்கள்.

கதாநாயகரின் தம்பி: (அவர்களிடம்) இது இன்னிக்கு பேப்பராம். கசங்கவே இல்ல பாரு. பாத்திருக்கியா இது மாதிரி?

கதாநாயகரின் தம்பியின் மனைவி: ஐய, போதுமே உங்கண்ணன் பெருமை!

கதாநாயகர் காமிராவை நோக்கி தம்பியிடம் செய்தித்தாளைப் புரட்டிக் காட்டுகிறார். அகமதாபாத் சிவில் மருத்துவமனை விளம்பரம் வெளிப்படுகிறது.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) உனக்கு இதோட கதை தெரியுமாடா?

ஃப்ளாஷ்பேக்: கதாநாயகர் தன் மகனிடம் அகமதாபாத் சிவில் மருத்துவமனை பற்றிக் கேட்ட காட்சி புகையாலான ஃப்ரேமுக்குள் வருகிறது.

ஃப்ளாஷ்பேக் முடிந்ததும் நடப்பு உலகம் -

கதாநாயகர்: (காமிராவை நோக்கி) சரி, இதுக்குத்தான் கூப்புட்டேன். அப்பறமா பேசுவோம்.

கதாநாயகரின் தம்பி லேப்டாப் திரையிலிருந்து மறைகிறார்.

கதாநாயகர் செய்தித்தாளைப் படிக்கிறார்.

அவர் தோளின் பின்பக்கத்திலிருந்து செய்தித்தாளுக்கு க்ளோசப்.

காமிரா இப்போது கதாநாயகரை மூன்றடி தூரத்திலிருந்து காட்டுகிறது. கதாநாயகர் கூரையைப் பார்க்கிறார்.

கதாநாயகர் குரல் வாய்ஸ் ஓவர்: எனக்கு இப்பவே ஒரு கவிதைத் தொகுப்பு எழுதியாகணும். ஆனா இந்த கசங்காத பேப்பர் என்னை சுண்டியிழுக்குது. ஆனாலும் பாருங்க, ஒரு பேப்பரை முதல் முறையா படிக்கிற சொகம் கிடைச்சாலும்… முன்னாடியே படிச்சிட்டதால நேத்து பேப்பர படிக்கிற மாதிரி இருக்கு.

புரட்டும்போது அகமதாபாத் சிவில் மருத்துவமனை விளம்பரப் பக்கம் வருகிறது.

காமிரா கோணம் இப்போது வலப்பக்கம் கதாநாயகரையும் இடப்பக்கம் கணினி முன் அமர்ந்திருக்கும் குமாரையும் காட்டுகிறது. கதாநாயகர் விளம்பரத்தையும் மாறி மாறிப் பார்க்கிறார். குமார் கவனிக்கவேயில்லை. கதாநாயகரின் தலையிலிருந்து வெளிப்படும் சிந்தனை பலூனில் குமார் “ஒம்பதாம் பக்கத்துலப்பா” என்று சொல்லும் காட்சி தோன்றுகிறது. பிறகு பலூன் மறைகிறது.

கதாநாயகர்: (காமிராவை நோக்கி தலையை மெல்ல அசைத்து வாஞ்சையுடன் புன்னகைக்கிறார்) இந்த காலத்துப் பிள்ளைங்க!

அடுத்த இரு நொடிகளில் ஏழெட்டு ஷாட்களில் கதாநாயகர் மீதப் பக்கங்களைப் புரட்டுகிறார். படித்து முடித்துவிட்டு செய்தித்தாளை இந்தக் காட்சியில் மட்டும் சோபா எதிரில் வந்திருக்கும் டீப்பாய் மேல் விசிறியடிக்கிறார்.

கதாநாயகர்: ஸ்ஸ்ஸ்ஸப்பா!

கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. கதாநாயகர் சந்தேகத்துடன் டீப்பாய் மீதுள்ள செய்தித்தாளைத் தூக்கி அடியில் பார்க்கிறார்.

காலிங் பெல் சத்தம் கேட்கிறது.

கதாநாயகர் எழுந்து போய் கதவைத் திறக்கிறார். பக்கத்து வீட்டு நடுத்தர வயது மனிதர் பனியனுடன் நிற்கிறார்.

பக்கத்து வீட்டுக்காரர்: நல்லாருக்கீங்களா? இன்னிக்கு பேப்பர் கெடைக்குமா?

சமையலறை அருகிலிருந்து லாங் ஷாட்.

கதாநாயகர்: அதுக்கென்ன, கெடைச்சா போச்சு.

பக்கத்து வீட்டுக்காரர்: அதச் சொல்லுங்க!

கதாநாயகர் சோபாவுக்குத் திரும்பிச் சென்று டீப்பாயிலிருந்து கலைந்து கிடக்கும் செய்தித்தாளை எடுத்து கவனமில்லாமல் ஒழுங்குபடுத்துகிறார். பின்னர் வாசல் வரை நடந்து வந்து பக்கத்து வீட்டு மனிதரிடம் கொடுக்கிறார்.

கதாநாயகர்: இந்தாங்க எடுத்துட்டுப் போங்க. இன்னிக்கு புதுசா நிறைய செய்திகள் வந்திருக்கு!

பக்கத்து வீட்டுக்காரர்: இல்லையா பின்னே? உங்க வீட்டு பேப்பராச்சே!

கதாநாயகரின் குரல் வாய்ஸ் ஓவர்: இனி இந்த பேப்பரோட கதை கந்தல்தான்.

பக்கத்து வீட்டுக்காரர் செய்தித்தாளுடன் கிளம்பிச் செல்கிறார்.

காமிரா அவருடன் வெளியே செல்கிறது. லலலல்லா என்கிற ஹம்மிங் தொடங்குகிறது. காமிரா பக்கத்து வீட்டுக்காரர் தம்முடைய வீட்டுக்குள் புகுவதைக் காட்டிவிட்டு தெருவில் தொடர்ந்து செல்கிறது.

“கதை, திரைக்கதை, வசனம் பேயோன்” என்ற வார்த்தைகளுடன் க்ரெடிட்கள் ஓடத் தொடங்குகின்றன.

வாய்ஸ் ஓவர்: குறிப்பு – திரையில் சப்டைட்டில் போடும் இடத்தில் படம் விழாமல் காலியாக விடவும்.