கனவினூடே

சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் பேருந்தை விட்டு ஒவ்வொரு ஆளாக இறங்குகிறார். பேருந்து, ஐந்து ரூபாய் நாணயங்களை டயர்களாகக் கொண்டு ஓடுகிறது. பேருந்திலிருந்து இரண்டடி தூரத்தில் பையுடன் ஒரு வலது கை போகிறது. அந்தக் கையுடன் இணைக்கப்பட்டுள்ள குண்டு மனிதர் நான் பார்வையிலிருந்து மறையும் வரை என்னை முறைக்கிறார்.

கட்டணச் சீட்டைக் கிழித்து நீட்டும் நடத்துநரின் விரல்கள் தீக்குச்சிகள் போல் மெலிந்திருக்கின்றன. பழைய ஒரு ரூபாய் நாணயங்களின் எடையைத் தாங்க முடியாமல் விரல்கள் வளைகின்றன. கட்டணச் சீட்டினால் துண்டாகி விழும் நடுவிரல் நடத்துநராலேயே தெரியாமல் மிதிக்கப்படுகிறது. ‘பரவாயில்லை, வீட்டில் இன்னும் நாலு வைத்திருக்கிறேன்’ என்று நடத்துநர் 10 ரூபாய் காந்தியிடம் சொல்கிறார்.

அருகில் காலைப் பரப்பி உட்கார்ந்திருப்பவரின் பகுதி இருக்கை அவரது வீட்டு சோபாவாக இருக்கிறது. பேருந்தை U போல் வளைத்துத் திருப்பும் ஓட்டுனர் தன் முன்னே தன் பேருந்தின் பின்புறத்தைக் கண்டு வேகமாய் அதைத் தவிர்த்துப் பசுஞ்சொல் உதிர்க்கிறார். தவிர்த்ததில் பேருந்து மோதி வாலிபர் சாவு. உடனே அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக சாகிறார்.

தினமும் பேருந்து நிலையத்தில் பார்க்கும் பெண் நிர்வாணமாக வந்திருக்கிறாள் எனினும் தலை, கால் தவிர மற்ற பகுதிகளைக் காணவில்லை. அமெரிக்க நடிகரின் முகச் சாயல் கொண்ட, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சரியாக உலராத முகம் கொண்ட, காலையில் ஹிண்டு பேப்பர் படிக்கும் பெரியவர் என்னைப் பார்த்து சிநேகமாய் சிரிக்கிறார், அநேகமாய் காரணத்துடன்.

இருக்கைகளிடையே அவசரமாக ஒரு ஆட்டோ புகுந்து ஓடுகிறது. பக்கத்து இருக்கையில் இருப்பவர் அதிலிருந்து இறங்கி ஆட்டோ ஓட்டுநரிடம் காசு கொடுக்கிறார். ஆண் பயணி ஒருவர் யுரேகா விலாஸ் நிறுத்தத்திற்குக் கட்டணச் சீட்டு கேட்கிறார். நடத்துநர் அவரிடம் கட்டணச் சீட்டிற்கு பதிலாகப் பேருந்தின் பிரேக்கைத் தருகிறார். (என் பேருந்தின் எண்ணைக் கொண்ட இன்னொரு பேருந்தைப் பற்றிய எனது வேறொரு கனவு எதிரில் வர, ஓட்டுநர்கள் நலம் விசாரித்துக்கொள்கிறார்கள்)

பிறிதொரு நிறுத்தத்தில் அசட்டுச் சிரிப்புடன் ஏறிய பலரில் அச்சிரிப்பு காணப்படாத முகம் வாய்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் என்னை உற்றுப் பார்க்கிறான், 55 ஆண்டுகள் கழித்து என் கனவில் அவன் மனைவி பேருந்தை விட்டு இறங்கும் விதத்தைப் பற்றி நான் எழுதப் போவது தெரிந்துவிட்டது போல. காலி கிளாஸை அவனிடம் கொடுத்துவிட்டுக் கடையிலிருந்து வெளியேறி சாலையைக் கடக்கிறேன். நான் பயணிக்கும் பஸ் மோதி நான் சாவு. பயம் உலுக்கிக் கனவு கலைந்து கண் விழிக்கிறேன் மூன்றாம் பக்கத்தின் பன்னிரண்டாம் பத்தியில்.

15 Comments »

பேயோன் on July 9th 2010 in சிறுகதை, புனைவு

ஐந்துக் கவிதைகள்

1.

கண் மூடிக்
கண் திறப்பதற்குள்
கடந்துவிட்டது இரவு

2.

வாளை விட வலியதாம்
விசைப்பலகை

3.

பெண்ணைக் கொடுத்த கிழவனுக்கு
காது மூக்கிலும் நரை
முதுமை புகாத துவாரங்கள் ஏது

4.

விழித்திருந்த நேரத்தில்
ரீவைண்ட் ஆகியிருக்கும் போல

விட்ட இடத்திலிருந்து தொடராமல்
வந்ததே வருகிறது கனவில்

5.

இத்தனை மரங்களை அழித்து
இத்தனை புத்தகங்களை எழுதியிருக்கிறார்
அவருக்கு விருது அவசியம்தான்

7 Comments »

பேயோன் on March 24th 2010 in கவிதை

Rss Feed Tweeter button Facebook button Delicious button Stumbleupon button

பேயோன் is using WP-Gravatar