சொற்கம்

எப்போதாவதிற்கென
எடுத்துப் பார்க்க
உன் உடலிளைத்த
பழைய புகைப்படம் ஒன்று
பசித்தால் புசிக்க
நிலவில் தோய்த்த
தாரகைத் துண்டுகள்
கடலை தியானிக்காத
பொழுதுகளில் படித்தாழ
தேவதைக் கதைகள்
அந்திக்குச் சுவை கூட்ட
ஒரு மொந்தை அனிச்ச மது
ஆளில்லாத ஒரு தீவில்
என் தனித் தங்கலுக்குப்
போதுமிவை மட்டுமெனக்கு.

காதல் கவிதை

எனக்கு யாரும்
அழகில்லை
அறிவில்லை
சரியில்லை
நல்லதில்லை
பிரச்சினையில்லை
பரவாயில்லை
தெரியவில்லை
புரியவில்லை
தேவையில்லை
யாருமில்லை
ஒன்றுமில்லை
உன்னைத் தவிர

மூன்று கவிதைகள்

என்ன வேண்டுமானாலும் செய்
எல்லாவற்றைப் பற்றியும்
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்

*

மாறியும்
துரத்தியும்
சீண்டியும்
வாழ்க்கை
கொண்டிருக்கிறது

*

அன்பே, அன்பே
என்றுன்னை அழைத்துக்
கவிதை எழுதிக்கொண்டிருந்துவிட்டு
இப்போது ரெஸ்பெக்டட் மேடம்
என்றழைத்துக் கவிதை எழுதுவது
இதயம் கனக்கச் செய்கிறது.