ஜென் கதைகள் மூன்று

முன்குறிப்பு: ஜென் கதைகள் என்று இணையத்தில் தேடி இந்த வலைத்தளத்திற்கு வருபவர்களுக்கு: இங்குள்ள ஜென் கதைகள் நானே சொந்தமாக எழுதியவை. எனவே அவற்றை அனுமதியின்றி சொற்பொழிவுகளில் பயன்படுத்துவதோ ஜென் கதைத் தொகுப்புகளில் சேர்ப்பதோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நிரப்புதல்

துறவி ரியோகான் ஒரு மலை உச்சியிலிருந்து சிறு கற்களை ஒவ்வொன்றாக எறிந்துகொண்டிருந்தார். அவரை சாப்பிட அழைக்க வந்த இளம் சீடன், “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் குருவே?” என்று கேட்டான். “இந்தப் பெரும்பள்ளத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறேன்” என்றார் ரியோகான். “உங்களுக்கென்ன பைத்தியமா? இது சாத்தியமா?” என்றான் சீடன். அதற்கு ரியோகான், “அதை நீ பள்ளத்திடம் அல்லவா கேட்க வேண்டும்?” என்றார்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாமே செய்வதாக நம்புவது முட்டாள்தனம்.

ஊற்றுதல்

மெய்ஜி காலத்து ஜென் குருவான தனகவாவைப் பார்க்க ஒரு பல்கலைக்கழகப் பேராசியர் வந்தார். ஜென் பற்றிய முழுமையான விளக்கத்தை அளிக்கும்படி தனகவாவிடம் பேராசிரியர் கேட்டுக்கொண்டார்.

தனகவா பேராசிரியருக்காக ஒரு தேனீர்க் கோப்பையை எடுத்துவைத்து அதில் தேனீரை ஊற்றினார். கோப்பை நிரம்பியது. ஆனால் தனகவா நிறுத்தாமல் ஊற்றிக்கொண்டிருந்தார். பேராசிரியர் திகைத்துப் போய் பார்த்துக்கொண்டிருந்தார். தனகவா இன்னொரு குடுவையில் மேலும் தேனீர் வரவழைத்து தொடர்ந்து அதே கோப்பையில் நிரம்பி வழிய ஊற்றினார். பேராசிரியர் பொறுமையிழந்து, “அதுதான் நிரம்பிவிட்டதே. பிறகு ஏன் விடாமல் ஊற்றுகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வாழ்வில் அபத்தங்களுக்கு முடிவே கிடையாது” என்றார் தனகவா.

சுமத்தல்

ஒரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகளை உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்டையைத் தாண்டிச் செல்ல முடியாமல் நின்றிருந்தாள். மூத்த துறவி அவளிடம் சென்று அவளைத் தூக்கிக்கொண்டு சாலையின் மறு பக்கத்தில் இறக்கிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

“துறவிகளான நாம் ஒரு பெண்ணைத் தொடலாமா?” என்று இளம் துறவி மூத்த துறவியிடம் கேட்டார். “இது தெரிந்தே கேட்கிற கேள்வி மாதிரி இருக்கிறதே” என்றார் மூத்த துறவி.

அறிந்ததைக் கடந்து புதியதை அறி என்று ஜென் கூறுகிறது.

குரு லின் ஷி வாங்

“முதுநிலை ஜென் துறவி லின் ஷி வாங் ஒரு சமயம் ஒரு மடாலயத்திற்குச் சென்றார். அங்கு ஓர் இளந்துறவி போன்சாய் மரமொன்றிற்கு நீரூற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். “இதென்ன இந்த மரம் வளரவேயில்லை? இதற்கு சோறு போட மாட்டீர்களா?” என்றார் வாங்.” “குரு லின் ஷி வாங்” என்று திருத்தினார் குரு லின் ஷி வாங்.”

நகையும் சுவையும்

ஒரு விமானத்தில் ஒரு இந்தியர், பாகிஸ்தானியர், அமெரிக்கர், சீனர், ஜப்பானியர் உட்பட பலர் இருந்தார்கள். விமானத்தில் பழுது ஏற்பட்டு நான்கு பேர் குதித்து உயிர்த் தியாகம் செய்ய வேண்டிய நிலை. முதலில் அமெரிக்கர், அமெரிக்கா வாழ்க என்று கத்திவிட்டு குதிக்கிறார். அடுத்து சீனர், சீனா வாழ்க என்று குதிக்கிறார். பிறகு ஜப்பானியர், ஜப்பான் வாழ்க என குதிக்கிறார். கடைசியில் இந்தியர், இந்தியா வாழ்க எனக் கத்திவிட்டு பாகிஸ்தானியரைத் தள்ளிவிட்டுவிடுகிறார். அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், “பாகிஸ்தானியரை தள்ளிவிட்டால் பாகிஸ்தான் வாழ்க என்றுதானே சொல்ல வேண்டும்? இந்தியா வாழ்க என்று எப்படி வரும்?” என போட்டாரே ஒரு போடு!

மனம் திருந்திய மன்னன்

துவாபர யுகத்தில் மயூரசன்மன் என்றொரு மன்னன் வைரபுரி என்ற நாட்டில் கொடுங்கோலாட்சி புரிந்துவந்தான். பல ஆண்டுகள் தன் பிரஜைகளைக் கொடுமைப்படுத்திவந்த மன்னன், திடீரென ஒரு நாள் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தினான். தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேட விரும்பி ஒரு முனிவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதபூஜை நடத்தி அன்னதானம் செய்தான்.

போஜனம் ஆனவுடன் முனிபுங்கவர், “ராஜனே! எனக்கு போஜனம் அளிப்பதால் மட்டும் நீ செய்த பாவங்கள் கரைந்துவிடாது. அதற்கு நீ பிரம்மதேவனைக் குறித்து நாற்பத்தியாறு லக்ஷம் ஆண்டுகள் தவம் புரிய வேண்டும்” என்று கூறினார்.

மன்னன் முனிவரையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்றுவிட்டு பிரம்மனை நோக்கித் தவமிருக்கலானான். இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல், வெயில் என எல்லா இயற்கைச் சீற்றங்களையும் பொறுத்துக்கொண்டு பிரம்ம தரிசனத்துக்காகத் தவம் கிடந்தான்.

இவ்வாறாகப் பதினாயிரம் ஆண்டுகள் கழிந்தன. திடீரென ஒரு நாள் அவன் முன்னே ஓர் ஒளிப் பிழம்பு தோன்றியது. அதிலிருந்து அழகிய தேவகன்னிகை ஒருத்தி வெளிப்பட்டுப் புன்னகைத்தாள். “நரனே! நான் பிரம்மதேவனின் காரியதரிசி. நீ செய்திருக்கும் எண்ணற்ற பாவங்களுக்கு அவர் அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட மாட்டார். நீ முட்களின் மீது ஒற்றைக் காலில் நின்று இன்னும் ஐம்பத்தியெட்டு லக்ஷம் ஆண்டுகள் தவம் புரிய வேண்டும்” என்று கூறி மறைந்தாள்.

மயூரசன்மன் அவள் சொற்படி முட்களின் மீது ஒற்றைக் காலில் நின்று தவமிருந்தான். அறுபத்தியிரண்டு லக்ஷம் ஆண்டுகள் கழித்து மன்னனுக்கு நா வறண்டுபோய் சொல்லொணாத் தாகம் ஏற்பட்டுத் தவம் கலைந்தது. சிறிது நீர் அருந்திவிட்டுத் தவத்தைத் தொடரலாம் என்று எண்ணிய மன்னன், அந்தக் கானகத்தில் நீர் தேடி நெடுந்தூரம் அலைந்தான். அருவிகள், ஓடைகள் எல்லாம் வற்றியிருந்தன. சுனைகள் காய்ந்த இலைகளால் நிரம்பியிருந்தன. அவனிருந்த மரத்தைத் தவிர எல்லா மரங்களும் வெட்டப்பட்டிருந்தன. மனம் வெறுத்த மன்னன், காட்டிலிருந்து வெளியேறினான்.

மயூரசன்மன் நாட்டுக்குள் நுழைந்ததும் ஆட்டோக்களை, கார்களை, தொலைபேசி பூத்களை, மொபைல் போன் கடைகளை, திரையரங்குகளைக் கண்டான். யுகம் மாறிவிட்டது என்றும் தன் தவத்தை இனியும் தொடரவியலாது என்றும் உணர்ந்தான். கலியுகத் தொழில்கள் எவையும் தெரியாததால் மயூரசன்மன் தாகத்தைத் தணித்துக்கொண்ட பின் காசிக்குச் சென்று பிச்சை எடுக்கத் தொடங்கினான்.