திசை காட்டிப் பறவை – 19
அத்தியாயம் 19 – முன்கதை
சேல்ஸ் பிரிவில் வேலைபார்த்த 31 வயது குமார் தங்கமானவன். சொந்தப் பிரச்சினைகளால் இரண்டு ஆண்டுகள் என்னால் எழுத முடியாமல் போய்த் திரும்ப எழுதத் தொடங்கியதும் குமாருக்கு 33 வயதாகிப் பணப் பிரச்சினை. அதைத் தீர்க்கும் வகையாக அப்போது குமாருக்கு அறிமுகமானவர்தான் பணக்கார பாகிஸ்தானியரான அவனது அப்பா.
அப்பா குமாருக்கு இருப்பது போல் எனக்கும் உண்டு. எனவே இதற்கிடையில் என் அப்பாவைப் பார்க்க அப்பாவின் நண்பர் வந்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடமிருந்து நானே பேனா இரவல் வாங்குகிற இழிநிலை. கிடக்கட்டும். பேனாவை வாங்கப்பட்டபின் என்ன எழுதப்பட்டது?
குமாரின் இரண்டாவது தங்கைக்கு அப்பா பாகிஸ்தானியராகிவிட்ட காரணத்தால் திருமணம் அசாத்தியமாகிக்கொண்டிருந்த நிலையில் அப்பாவை சீனராக மாற்றிக் குமாருக்கு மீளறிமுகம் செய்துவைத்தேன். பிறகு குமார் ரஷ்யாவில் ஒரு புகையிலைக் கடைக்காரரின் மகளைக் கெடுக்கப் பார்த்து முடியாமல் திருந்தி அக்டோபர் புரட்சியை விளைவித்தார். இந்நிலையில் நானோ குமாரோ மொட்டை மாடியில் சிந்தனையில் ஆழ்கிறோம். குமாருக்குக் கண்ணாடி உடைந்தால் பிரச்சினை. செல்போன் வைத்திருக்கிறான்.
குமாருக்கு நிழலுண்டா என்று இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுந்தாலும் முன்கதைச் சுருக்கத்தில் தத்துவங்களுக்கு இடமில்லை. இதற்கிடையில் குமார் தனது வயதான 33இலிருந்து பிரிய மறுக்கிறான். எனக்கு மற்றும் குமாருக்கு உள்ள கலா ரசனையின் பலனாகப் பின்னவன் ஒரு மேலான ஓவியம் தீட்டுகிறான்.
இடையில் ஒரு நாள் என் பாலிய கால ஓவிய ஆசிரியர் சாலையில் எதிர்ப்பட, காரட் நிறைய தின்றால் உடலுக்கு ஆகாது, பாகற்காய் உடலுக்கு ஆனாலும் அபரிமிதக் கசப்பு. இந்த நாவலைத் தானே எழுதுவதாகக் குமார் குடிக்கும் மனப்பாலில் ஒரு சொட்டு புளித்த மோரை ஊற்றி உறைகுத்திவிடுகிறேன்.
குமார் என்ற வேறொருவன் எனது குமாரை ஆள்மாறாட்டம் செய்யப் பார்க்கிறான். ரிசப்ஷனிஸ்ட்டின் உதவியால் அவனை அடையாளம் கண்டுபிடிக்கிறேன். நல்ல வரனைத் தட்டிக்கழிக்க வேண்டாம் என்று ரிசப்ஷனிஸ்ட்டிற்கு அறிவுரை அளிக்கப்போனால் அவள் என்னைத்தான் காதலிப்பதாக ஒரு கடிதம் எழுதித் தன் கைப்பையிலேயே வைத்துக்கொள்கிறாள்.
இதென்ன வில்லங்கம் என்று அடுத்த அத்தியாயத்தில் அவளது தாய் தந்தை மூலம் அவள் அந்த வரனையே திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறேன். குமார் இருக்கும் தெருவின் முனைவீட்டில் திருடுபோகிறது. குமாருக்கு கணேசு என்றொரு நண்பன் இல்லை. இந்த இன்மை நிலை அவனது காதலில் குறுக்கிடுகிறது.
தங்கமான 31 வயது குமாரின் அப்பா பாகிஸ்தானியர். எனக்கு வீட்டில் பிரச்சினை. அப்பாவை பார்க்க நண்பர் வர, பேனா கடன் வாங்கிக்கொள்கிறேன் என்னிடமே. குமாரின் அப்பா சீனர். குமார் ரஷ்ய சீமானாக ரஷ்யப் பெண்ணைக் கவர முயன்று தோற்றுத் திருந்தி அக்டோபர் புரட்சி செய்கிறான். மொட்டை மாடியில் சிந்தனை. கண்ணாடி உடைந்தால் குமாருக்குப் பிரச்சினை. குமார் செல்போன் வைத்திருக்கிறான். குமாருக்கு இப்போதும் 33 வயது. படம் வரைகிறான். எனது ஓவிய ஆசிரியரால் மனத் தோட்டத்தில் காய்கறிகள். இந்த நாவலை எழுதுவது குமார் அல்ல. குமாராக வேடமிடும் ஒருவனை ரிசப்ஷனிஸ்ட் கண்டுபிடிக்க, நான் அவனை நிராகரிக்கிறேன். திருமணம் செய்துகொள்ள மறுக்கும் ரிசப்ஷனிஸ்ட் என்னைக் காதலிப்பதால் அவள் வேறொரு ஆளை மணம் புரிய ஏற்பாடு செய்கிறேன். குமாரின் தெருவில் திருடுபோகிறது. குமாருக்கு நண்பன் இல்லாததால் அந்த நண்பனின் தங்கையை அடைய வழியில்லை.
குமாரின் அப்பா பாகிஸ்தானியர், பின்னர் சீனர். குமார் ரஷ்யாக்காரன், புரட்சிப் பித்தன், சிந்தனையாளன், கிட்டப்பார்வையாளன், செல்போன்தாரி, மார்க்கண்டேயன், ஓவியன், கனவு காணி, குற்றத் துவேஷி, காதலன். நான் எழுத்தாளன்.
முற்றும்
பேயோன் on June 18th 2010 in புனைவு