பாலம்

(ஜெர்மன் மொழிச் சிறுகதை)

ஹைன்ரிஷ் போல்*

என் கால்களை எப்படியோ ஒட்டி சரிசெய்து, உட்கார்ந்து பார்க்கிற வேலை ஒன்று கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் புதிதாகக் கட்டியிருக்கும் பாலத்தை எத்தனை பேர் கடந்து போகிறார்கள் என்று எண்ணுவதுதான் என் வேலை. தங்கள் திறமையான பணி பற்றிப் புள்ளிவிவரங்களோடு தகவல் பதிவு செய்வதில் அவர்களுக்கு அப்படியொரு போதை கிடைக்கிறது. ஒரு சில இலக்கங்களில் ஆன அந்த அர்த்தமற்ற பூஜ்யம் அவர்கள் தலைக்கு ஏறிவிடுகிறது. அதே சமயம் நாள் முழுக்க, ஒரு நாள் முழுக்க என் வாய் சத்தமில்லாமல் கடிகார முள் போல அசைந்துகொண்டிருக்கிறது, ஒவ்வொரு எண்ணாக சேர்த்துக்கொண்டு. பிறகு ஒவ்வொரு மாலையும் நான் அவர்களிடம் வெற்றிகரமான எண்ணிக்கை ஒன்றை சமர்ப்பிப்பேன்.

அந்தந்த நாளில் நான் செய்த உழைப்பின் பலனை அவர்களிடம் கொடுக்கும்போது பூரித்துப் போய்விடுகிறார்கள். எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அதற்கேற்ப அவர்கள் புன்னகை பெரிதாக இருக்கிறது. இரவு தூங்கப் போகும்போது அவர்கள் தங்களைப் பாராட்டிக்கொள்வதில் காரணம் இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பாதசாரிகள் அவர்களுடைய புதிய பாலத்தைக் கடந்து போகிறார்கள்…

ஆனால் அவர்களுடைய புள்ளிவிவரங்கள் எல்லாம் தவறு. சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் அதெல்லாம் தவறு. நான் நம்ப முடியாத ஒரு ஜென்மம். நேர்மையே உருவானவனாக என்னைக் காட்டிக்கொள்வதில் எனக்கு ஒரு சிரமமும் இல்லை என்பது வேறு விஷயம்.

அவ்வப்போது ஒரு பாதசாரியை கணக்கில் சேர்க்காமல் ரகசியமாக நழுவவிடுவது எனக்கு சந்தோஷம் கொடுக்கிறது. ஆனால் பிறகு அவர்கள் பாவம் என்று நினைத்து ஒரு சில பேரை எண்ணிக்கையில் கூட சேர்த்துக்கொள்கிறேன். அவர்கள் சந்தோஷம் என் உள்ளங்கையில்தான் இருக்கிறது. நான் மோசமான மனநிலையில் இருக்கும்போது, என் சிகரெட்களையெல்லாம் புகைத்துத் தள்ளிய பிறகு அவர்களுக்கு சராசரி எண்ணிக்கையைத்தான் தருகிறேன். சில சமயம் சராசரியைவிடக் குறைவாகவே தருகிறேன். இறக்கை கட்டிப் பறப்பது போல் நல்ல மனநிலையில் இருக்கும்போது என் தாராள குணத்தைக் காட்டி ஐந்து இலக்க எண்ணிக்கை ஒன்றைத் தருகிறேன். அதைப் பார்த்து அவர்கள் ஒரேயடியாகக் குஷி ஆகிவிடுகிறார்கள்! நான் எண்ணிய தாளைக் கையிலிருந்து பிடுங்குகிறார்கள். அவர்களது கண்கள் மகிழ்ச்சியில் மின்னுகின்றன. என் முதுகைத் தட்டிக்கொடுக்கிறார்கள். உண்மை தெரியாமல் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்! அப்புறம் அவர்கள் பெருக்குகிறார்கள், வகுக்கிறார்கள், சதவீதத்தைக் கணக்கிடுகிறார்கள்… இன்று ஒரு நிமிடத்தில் எத்தனை பேர் பாலத்தைக் கடந்தார்கள் என்றும் இன்னும் பத்து வருடங்களில் எத்தனை பேர் பாலத்தைக் கடந்திருப்பார்கள் என்றும் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கு எதிர்காலக் கணக்கில் ஒரு காதல். எதிர்காலக் கணக்கு போடுவதுதான் அவர்களுடைய விசேஷத் திறமை – இருந்தாலும் இந்த மொத்த விவகாரமும் கேலிக்கூத்துதான் என்று நினைக்கும்போது எனக்கு வருத்தம் ஏற்படாமல் இல்லை.

என் சின்ன தேவதை பாலத்தைக் கடக்கும்போது (ஒரு நாளில் இருமுறை கடக்கிறாள்) என் இதயத் துடிப்பு நின்றுவிடுகிறது. ஓயாமல் துடித்துக்கொண்டிருக்கும் என் இதயம் அவள் திரும்பி சாலைக்குள் நுழைந்து தொலைந்துபோகும் வரை ஸ்தம்பித்து நிற்கிறது. அந்த சமயத்தில் அந்தப் பக்கம் வருபவர்கள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. அந்த இரண்டு நிமிடங்கள் என்னுடையவை, எனக்குச் சொந்தமானவை. அவற்றை யாரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்ளப் போவதில்லை. ஒவ்வொரு மாலையும் அவள் தன் ஐஸ்க்ரீம் பார்லரிலிருந்து திரும்பி வந்து தொலைவிலிருந்து நடந்து வந்து, எண்ணிக்கொண்டே இருக்க வேண்டிய என் வாயைத் தாண்டிப் போன பிறகுதான் என் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பிக்கிறது. அவள் என் பார்வையிலிருந்து தொலைந்து போகும் வரை நான் எண்ணுவதைத் தொடங்குவதில்லை. அந்த நிமிடங்களின்போது என் காணாத கண்களிலிருந்து தப்பித்த அதிர்ஷ்டசாலிகள் என் புள்ளிவிவரங்களின் மூலம் அமரத்துவம் பெற மாட்டார்கள்: அவர்கள் நிழல் மனிதர்கள், நிழல் மனுஷிகள், எதிலும் சேராத பிராணிகள்; எதிர்காலக் கணக்கின் புள்ளிவிவர அணிவகுப்பில் அவர்களுக்கு அனுமதி இல்லை.

நான் அவளைக் காதலிக்கிறேன். அதைச் சொல்லவே தேவையில்லை. ஆனால் அவளுக்கு அதைப் பற்றிக் கொஞ்சம்கூடத் தெரியாது. அவள் கண்டுபிடிக்காமலே இருந்தால் நன்றாக இருக்கும். என் புள்ளிவிவரக் கணக்குகளில் அவள் என்னென்ன ரகளைகளை ஏற்படுத்துகிறாள் என்பது பற்றி அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாது. அவள் ஒரு சந்தேகமும் இல்லாமல், அப்பாவியாய் அந்த நீண்ட பழுப்புக் கூந்தலோடும் மென்மையான பாதங்களோடும் அமைதியாக, சலனமின்றி தன் ஐஸ்க்ரீம் பார்லருக்கு நடந்து போக வேண்டும்; அவளுக்கு நிறைய டிப்ஸ் கிடைக்க வேண்டும். இதுதான் என் ஆசை. நான் அவளைக் காதலிக்கிறேன். நான் அவளைக் காதலிப்பது அப்பட்டமாகவே தெரிய வேண்டுமே.

நான் ஒழுங்காக வேலை செய்கிறேனா என்று சில நாட்களுக்கு முன் அவர்கள் சோதித்துப் பார்த்தார்கள். தெருவில் எனக்கு நேரெதிரில் உட்கார்ந்து பாலத்தைக் கடக்கும் கார்களை எண்ணும் என் கூட்டாளி பல முறை எச்சரித்தான். அந்த நாள் நான் கண்குத்திப் பாம்பு போல் கவனித்து எண்ணித் தீர்த்தேன். பித்துப் பிடித்த மாதிரி எண்ணினேன் நான்; எந்த ஸ்பீடாமீட்டரும் என்னை ஜெயித்திருக்க முடியாது. தலைமை புள்ளிவிவர அதிகாரியே தெருவின் மறுமுனையில் ஒரு மணிநேரம் நின்று பார்த்தார். பிறகு அவர் கணக்கோடு என் கணக்கை ஒப்பிட்டார். என் கணக்கில் ஒன்று மட்டும்தான் குறைந்தது. என் சின்ன தேவதை கடந்து சென்றிருந்தாள். நான் உயிரோடு இருக்கும் வரை அந்தச் செல்லக் குழந்தையை அவர்களுடைய எதிர்காலக் கணக்கிற்குக் கொத்திக்கொண்டு போவதை நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் என் சின்ன தேவதையை எடுத்துப் பெருக்கி, வகுத்து, அர்த்தமில்லாத ஒரு சதவீதமாக மாற்ற விட மாட்டேன். அவளைத் திரும்பியே பார்க்காமல் தொடர்ந்து எண்ண வேண்டியிருந்தது இதயத்தில் ரத்தம் கசியவைத்தது. தெருவில் எதிர்ப்பக்கம் கார்களை எண்ண வேண்டியிருக்கும் என் நண்பனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். என் வேலையே, வாழ்க்கையே போயிருக்க வேண்டியது.

தலைமை புள்ளிவிவர அதிகாரி என்னைத் தோளில் தட்டி, நான் ரொம்ப நல்ல மாதிரி, நம்பிக்கைக்குரியவன், விசுவாசமானவன் என்றெல்லாம் சொன்னார். “ஒரு மணிநேரத்தில் ஒன்றே ஒன்றை மட்டும் தவறவிடுவதால் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடாது. நாம் எப்போதுமே தவறுகளுக்குக் கொஞ்சம் இடம் விடுகிறோம். உன்னைக் குதிரை வண்டிகளுக்கு மாற்றல் செய்ய விண்ணப்பிக்கப்போகிறேன்” என்றார் அவர்.

குதிரை வண்டிகள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு செய்யலாம். அதில் ஒன்றுமே இல்லை. ஒரு நாளில் இருபது, இருபத்தைந்து குதிரை வண்டிகள்தான் வரும். அரை மணிநேரத்திற்கு ஒரு முறை மனத்தில் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும் – எவ்வளவு சுலபம்!

குதிரை வண்டிகளை எண்ணுவது அட்டகாசமான வேலை. நான்கு மணி முதல் எட்டு மணி வரை குதிரை வண்டிகளுக்குப் பாலத்தைக் கடக்க அனுமதி இல்லை. அந்த சமயத்தில் நான் ஐஸ்க்ரீம் பார்லருக்கு நடந்து போகலாம்… அவள் அழகைக் கண்களால் குடித்துத் தீர்க்கலாம் அல்லது அவளுடன் அவள் வீடு வரை பாதி தூரம் நடந்து போகலாம், என் சின்ன, கணக்கில் சேர்க்கப்படாத தேவதையுடன்…


* Heinrich Böll

ஆங்கில மொழிபெயர்ப்பு: Leila Vennewitz.

ஆங்கிலவழி மொழியாக்கம்: பேயோன்

4. “இன்னொரு மர்டர் கேஸ்”

(ஒரு லோட்டா இரத்தம் 1, 2, 3)

“எங்கே? யார்?” என்றார் மைக்.

“மாக்சிம் கார்க்கி என்று இன்னொரு ரஷ்யாக்காரர்…” என்றாள் அன்னா, பிளாஸ்டிக் கப்பில் லிப்ஸ்டிக் ரேகை பதிய எந்திரக் குளம்பியை உறிஞ்சியபடி.

“ரஷ்ய இலக்கியத்திற்குக் கேடுகாலம்…!” என்றார் மைக்.

அன்னா தயாராக வைத்திருந்த ஃபோல்டரை நீட்டினாள். மைக் அதைப் பெருமூச்சுடன் வாங்கிக்கொண்டார்.

அலெக்செய் மக்சீமோவிச் பெஷ்கோவ் என்ற மக்சீம் கார்க்கி என்ற மாக்சிம் கார்க்கி ஃபைல் ஃபோட்டோ என லேபிள் ஒட்டியிருந்த எண்ணெய் ஓவியத்தில் கம்பீரத் தோற்றமளித்தார். அடுத்த பக்கத்திலிருந்த விவரங்கள் அந்த கம்பீரத்தை உடனே மறக்கடித்தன.

கூர்மையான – ஆனால் கத்தியளவிற்குக் கூர்மையில்லாத – ஒரு ஆயுதம் கழுத்தின் முன்பக்கம் குத்தி கரோட்டிட் தமனிகளூடே பின்பக்கம் வெளியேறியிருக்கிறது. கொடூரம். தொழில்முறைக் கொலையாளியாக இருக்கலாம்.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் இருந்த ஒரு சிறு விவரம் அவர் கவனத்தை ஈர்த்தது. மர்ம ஆயுதம் ஊடுருவியிருந்த இடத்தில் ஃப்தாலோசயனைன் (phthalocyanine) என்ற வேதிப்பொருள் அப்பியிருந்ததாக ரிப்போர்ட்டில் இருந்தது.

அடுத்த புகைப்படத்தில் கார்க்கி ரத்தத்தைத் தனது கடைசி மையாகப் பயன்படுத்தி விரலால் கிறுக்கியிருந்த “045″ மைக்கைப் புதிராக்கியது.

“ஒரு டான் பிரவுன் நாவலில் மாட்டிக்கொண்டுவிட்டேன்,” மைக்கிடமிருந்து ஒரு முணுமுணுப்பு வெளியேறியது.

“சார்?”

“ஒரு மோசமான கொலைக் கதையில் சிக்கிக்கொண்டுவிட்டேன் என்று சொன்னேன்… செக்காவ் துப்பு விடயமாக என்ன கிடைத்தது?”

“கில்லியன் இந்த ப்ரின்ட் அவுட்களைக் கொடுத்தாள்.”

LETEEB என்பது BEETEL. ஒரு இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ஃபோன் மாடல். அந்தத் தொலைபேசியின் ஒயர் கொலைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த நாட்டில் சில பத்து லட்சம் பேராவது அந்தக் கருவியைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். இந்த ஒரு துப்பை மட்டும் வைத்துக்கொண்டு வைக்கோல் போரில் தேட முடியாது. தெளிவு கிடைப்பதற்குள் இன்னொரு அமர எழுத்தாளர் புனர்மரணம் அடையக்கூடும்.

இரு பெண்களைக் கொன்ற ரஸ்லோநிகோவ் (‘குற்றமும் தண்டனையும்’ கதாநாயகன் ரஸ்கோல்நிகவ்) போன்ற குற்ற உணர்வை உணர்ந்தார் மைக். ஆமாம், நான் இன்டர்போலின் ரஸ்லோநிகோவ் என்று சொல்லிக்கொண்டார். உடனே சுரீரென உறைத்தது மைக்கிற்கு. அடுத்த உயிர்ப்பலி தாஸ்தாயெவ்ஸ்கியாக, டால்ஸ்டாயாக, துர்கனேவாக, புஷ்கினாக இருந்தால்…

மைக்கின் கேபின் வாசலில் ஃபைல் அசிஸ்டன்ட் நிழலாடினாள்.

“என்ன?”

“இந்திய பீரோவிலிருந்து ஆள் வந்திருக்கிறார்.”

“அவரை பிரீஃப் செய்தாயா?”

* * *

இந்திய பீரோவிலிருந்து வந்திருந்தது ஒரு இளைஞன். அவன் அப்பா அம்மா அவனுக்குக் குமார் என்று பெயர் வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு அவன் ஐந்தரை அடி சுமாருக்கு வளர்ந்துவிட்டிருந்தான். ஜிப்பா-டை-கார்டுராய் ஜீன்ஸ் என்ற இன்டர்போல் கலை இலக்கியக் குற்றங்கள் பிரிவு சீருடையை நிரப்பியிருந்தான். அறிவுக் குற்றங்களில் பி.ஏ.வும் ஜூடோவில் பிரவுன் பெல்ட்டும் அவன் தகுதிகள். அதையெல்லாம்விட கலாச்சார ஆர்வம் இருந்தது சிறப்புத் தகுதி. அவனது அனுபவம் எல்லாம் வாசிப்பனுபவம்.

“இலக்கியம் கண்ட முதல் சீரியல் கில்லிங் இதுதானா சார்?” என்றான் குமார் கான்பரன்ஸ் அறையில்.

“பட் ஆனால் வேர் இஸ் தி மோட்டிவ்?” என்றார் மைக். “கொலையானவர்கள் இருவருமே புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர்கள்… அவர்கள் செத்துப் போய் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் அவர்களின் பெயரைக் கெடுக்க முடியாது… வேறு என்னவோ நடந்துகொண்டிருக்கிறது… போலீசின் கவனத்தை ஈர்க்க, கிரிமினல்கள் ஆடும் விளையாட்டு மாதிரி தெரிகிறது…” மைக் விஸ்தரித்தார்.

“சாரி சார், எனக்கு அப்படித் தோன்றவில்லை… இரண்டு சம்பவங்களிலுமே கொலையாளி சவாலாகத் தடயம் எதையும் விட்டுச் செல்லவில்லை… அவனை அல்லது அவளை மீறித்தான் துப்பு வெளிப்பட்டிருக்கிறது… துப்புகளை விட்டு வந்தது கொலையாளிக்குத் தெரிந்திருக்கும் என்று வீ கென் நாட் பி ஷ்யூர்… செக்காவ் விஷயத்தில் டெலிபோன் ஒயர் என்றால் கார்க்கி விஷயத்தில் அவரே கைப்பட ஒரு நம்பரை எழுதியிருக்கிறார்” குமார் தன் தரப்பு கண்ணோட்டத்தை ஒளிபரப்பினான்.

“ஓக்கே… ஆதாரங்கள் நம்மிடம் என்ன சொல்கின்றன?” என்றார் மைக் வெறுத்துப் போய். அந்தக் கேள்விக்காகத்தான் காத்திருந்த குமார் சுறுசுறுப்பானான்.

“செக்காவ் துப்பு, கொலையாளி இந்தியாவில் இருப்பதைக் காட்டுகிறது. கார்க்கி கொலைத் துப்பு, கொலையாளி எழுத்தாளனாக இருக்கலாம் எனவும் காட்டுகிறது” என்றான் குமார்.

“அதெப்படி? நமக்குக் கிடைத்ததெல்லாம் 045 என்ற எண் தானே?”

“சார்… சிம்பிள். ஃப்தாலோசயனைன் என்பது பொதுவாக பால்பாயின்ட் பேனா மை தயாரிக்கப் பயன்படும் ஒரு ரசாயனம்… கூகுள் தகவல்… இனி சின்னக் குழந்தைகூட 045க்கும் அதற்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டுவிடும். என் கன்க்ளூஷன்படி ரெய்னால்ட்ஸ் 045 பால் பாயின்ட் பேனாதான் கொலைக் கருவி,” குமாரிடம் ஒரு வெற்றிப் பெருமிதம் பளிச்சிட்டது.

“இன்ட்ரஸ்டிங் ஆங்கிள்,” பீறிட்ட பிரமிப்பை அடக்கிக்கொண்டு சொன்னார் மைக். “பேனாவைக் கொலைக் கருவியாகப் பயன்படுத்துவதால் அப்படிச் சொல்கிறாய். ஆனால் இப்போது எந்த எழுத்தாளர் பேனாவைப் பயன்படுத்துகிறார்? காசோலையில் கூட கணினியால் டிஜிட்டல் சிக்னேச்சர் போடுகிறார்கள்” என்றார் மைக் திடீரென காபியை உறிஞ்சிக்கொண்டு.

குமார் புன்னகைத்தான். “இல்லை சார்… கம்ப்யூட்டர் யுகத்திலும் பேனாதான் எழுத்துத் தொழிலுக்கான குறியீடு… கார்க்கியின் கழுத்தைத் துளைத்த பேனா ஒரு குறியீடு… அது நிஜ பேனா அல்ல… கார்க்கியின் முதிய கண்களால் பொடி எழுத்தில் இருந்த 045 என்ற எண்ணைப் படித்திருக்க முடியாது… கார்க்கியின் காலத்தில் ரெய்னால்ட்ஸ் பேனா இல்லாததால் அதை அவரால் அடையாளம் கண்டிருக்கவும் முடியாது… இட் இஸ் அ மெட்டஃபர்” என்றான் குமார் கான்பரன்ஸ் மேஜையின் மேல் ஒரு புத்தகத்தை வைத்தபடி.

“என்ன அது?” என்றார் மைக் அதைக் கண்ணுற்று.

“சொல்கிறேன்” என்றான் குமார். “தாஸ்தாயெவ்ஸ்கியின் பர்சனல் டைரி. அனேகமாக அவர்தான் அடுத்த பலி.”

“ஒய் நாட் துர்கனேவ்? ஆர் ஷோலகோவ்?”

“பிகாஸ் தேயார் நாட் தாஸ்தாயெவ்ஸ்கி… செக்காவிற்கு முன்பே தாஸ்தாயெஸ்கிதான் போயிருக்க வேண்டும்… ஆனால் செக்காவை விட தாஸ்தாயெவ்ஸ்கிக்கு ஆயுசு கெட்டி.”

“அப்படியெனில் நேரத்தை வீணாக்க வேண்டாம்… பேக் அப் டு இந்தியா. ஆனால் இந்தியாவில் எங்கே?”

குமார் யோசித்தான். “என்னுடைய ஹோம்வொர்க்படி இந்தியாவில் இந்த எழுத்தாளர்களுக்கு அதிக மவுசு இருக்குமிடம் தமிழ்நாடு… தொடர்ந்து இவர்களைப் பற்றி அங்கே பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது… சென்னைக்குப் போய் சில எழுத்தாளர்களிடம் நூல் விடலாம்… குறிப்பாக மொழிபெயர்ப்பாளர்கள் உட்பட..”

“முழுப் பட்டியல் வைத்திருக்கிறாயா?”

“ஓயெஸ்… எல்லாம் சப்ஜாடாக வைத்திருக்கிறேன் சார்.”

மைக் தனது பைப்பைப் பற்றவைத்தார். புகையை இழுத்து வானுயர் கட்டிடங்கள் தெரிந்த திசையை நோக்கி ஊதினார். “லெட்டஸ் கோ!”

மூன்றாம் அத்தியாயம்

(‘ஒரு லோட்டா இரத்தம்’ என்கிற எனது நெடுங்கதையின் மூன்றாம் அத்தியாயம். முதலிரு அத்தியாயங்கள்: 1, 2)

3. கார்க்கியின் கதி

ஜூலை 1904. பிரபல ரஷ்ய எழுத்தாளர் மக்சீம் கார்க்கி என்ற மாக்சிம் கார்க்கி (1868-1936) கணப்பின் மங்கிய வெளிச்சத்தில் ப்ராவ்தா செய்தித்தாளை மேய்ந்துகொண்டிருந்தார். தனது உடலை ஒரு பிரம்மாண்ட சோபாவுக்குக் கொடுத்திருந்தார். நடுவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் ஒரு சுருட்டு தனது புகையை மெல்ல கூரைக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. புகையோ, கூரையைத் தொடுவதற்குப் பெரிய ஆர்வம் ஏதுமின்றி முன்கூட்டியே கலைந்து அறைச் சூழலில் ஐக்கியமானது.

கிராமபோனில் சைக்கோவ்ஸ்கியின் யூஜின் ஓனெகின் சன்னமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு உச்சத்தையும் கார்க்கியின் தலை ஆமோதித்தது.

காஸ் ‘ஏ’ கார் வாசலில் மெல்ல வந்து நிற்கும் பரிச்சயமான சத்தம் கார்க்கியின் அனுபவமிக்க காதுகளில் அடியெடுத்துவைத்தது. இன்ஜின் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது. கார்க்கி கடிகாரத்தைப் பார்த்தார். சாப்பாட்டு நேரம் இன்னும் ஆகவில்லையே. யாராக இருக்கும்? வியந்தார்.

பனிக்காலக் காலையின் இருளைத் தள்ளிக்கொண்டு பல அடுக்கு ஆடைகளால் இன்னும் குண்டாகத் தெரிந்த ஒரு நெடிய உருவம் வாசலில் கிடந்த ஒரு மூக்குக் கண்ணாடியை பூட்ஸ் காலால் நசுக்கித் தூளாக்கியபடி உள்ளே வந்தது. புகைமூட்டத்தின் மறுகரையிலிருந்து அதன் கை நீண்டது. தந்தி. கார்க்கியின் கை நீண்டு அதை வாங்கிக்கொண்டது. கெட்ட செய்தியா நல்ல செய்தியா?

நல்லது கெட்டதில் நம்பிக்கையிழந்து கார்க்கிக்கு நெடுநாளாகிவிட்டது. தந்தியில் இருந்தது வெறும் செய்தியாகத்தான் இருக்க வேண்டும். தந்தியைக் கணப்பிற்கு அருகில் வைத்துப் படிததார் கார்க்கி.

கடவுளே! என் பிரிய ஆன்டன் பாவ்லோவிச்!

கண்களைப் பனித்த கண்ணீர் போஸ்ட்மேனை மறைத்தது. நடுங்கும் கைகளிலிருந்து நழுவிப் பறந்த மரணத் தந்தி கணப்பின் நெருப்பில் விழுந்து எரியத் தொடங்கியது.

இமயம் போன்ற ஒரு ஆளுமையின் கடைசிக் கணங்களுக்குத் தான் சாட்சியாகிக்கொண்டிருப்பது ராணுவ போஸ்ட்மேன் ஜோசப்பிற்கு மெல்லப் புரிந்தது. “அலெக்செய்! மேலுக்கு ஒன்றுமில்லையே?” என்று அலறினார். “யாராவது வாருங்கள்!”

வாசலை நோக்கி பனித் தரையில் திபுதிபுவென்று பலர் ஓடி வரும் ஒலி பின்னணிச் சத்தமாக, கார்க்கிக்குக் கண்கள் செருகின. கழுத்திலிருந்து ரத்தம் ஊற்றெடுத்து ஓடையாக இறங்கியது. கார்க்கியின் கடைசி வார்த்தைகள் சரித்திரத்தின் செவியில் விழாமல் குழறலாய்க் கரைந்தன. கார்க்கியின் கைவிரல்கள் உலகிற்குத் தமது கடைசிச் செய்தியைக் கழுத்து ரத்தத்தில் தோய்த்து எழுதின. அந்தச் செய்தி: 045.

நான்காம் அத்தியாயம்

ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன்

பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘சூதாடி’ நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். வெறும் 98 பக்கங்கள்தான். புத்தகம் முடிந்த பிறகுகூடக் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டிருப்பார்கள் போலும். அத்தனை கதாபாத்திரங்கள். இந்தச் சிறிய புத்தகத்திற்கு எதற்காக இவ்வளவு கூட்டம் சேர்க்கிறார்? அந்தப் பாட்டியை முதலிலேயே கொன்றுவிட்டிருந்தால் இவ்வளவு கதாபாத்திரங்கள் தேவைப்பட்டிருக்காது. நாயகனுக்கும் நாயகிக்கும் பிரிட்டிஷ்காரனுக்கும் கூடுதல் பக்கங்கள் கிடைத்திருக்கும். வர்ணனைகளையும் வேறு விதமாகக் கொண்டுபோயிருக்கலாம். கிடக்கட்டும்.

லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ ஒருவன் கடந்தகாலத்தில் செய்த ஆகப்பெரிய தவறுக்கு வருந்தி மன்னிப்பு தேடுவதைக் கதையாக வர்ணித்துக் கூறுகிறது. இது டால்ஸ்டாய்க்கும் தெரியும் – இயற்கையாகவே. சுமார் 500 பக்கங்கள். புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்க மாட்டீர்கள். அதுவே தானாகக் கையிலிருந்து நழுவி விழுந்துவிடும். பிறகு யாராவது பார்த்து எடுத்து வைத்துவிட்டு உங்கள் தலைக்குக் கீழே ஒரு தலையணையை வைப்பார்கள். சீதோஷ்ண நிலையைப் பொறுத்து போர்வையும் கிடைக்கலாம். நித்திராதேவிக்கு மாமா வேலை பார்ப்பவனெல்லாம் அமர எழுத்தாளன்!

பொதுவாகவே வேறு எந்த எழுத்தாளரையும்விட டால்ஸ்டாயின் கதாபாத்திரங்கள் எனக்கு வெள்ளந்தியாகத் தெரிகிறார்கள். காரணம், டால்ஸ்டாய் தங்களை மனித தூக்க மாத்திரைகளாகப் பயன்படுத்துவது இந்த அன்னாக்களுக்கும் கோல்யாக்களுக்கும் தெரியாது. மாஸ்லோவாவை ரயில் நிலையத்தில் வைத்து கோமகன் விரான்ஸ்கி சந்திக்கும் தருணம் சமகால தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பொறாமை தரக்கூடியது.

(மூன்றாம் அத்தியாயத்தில் நெஹலூதவை அறிமுகப்படுத்தும்போது “தனது வழவழப்பான, வெள்ளைக் கால்களைக் கீழே வைத்து சப்பாத்துகளுக்குள் அடியெடுத்துவைத்தான்” என்று எழுதுவதற்கான அவசியம் என்ன? எட்டாம் அத்தியாயத்தில் மாஸ்லோவாவைப் பற்றிச் சொல்லும்போது, “சிறையின் மேற்கோட்டிற்கு அடியிலிருந்து விம்மிய மார்பகங்கள்” என வர்ணிக்கிறார். யார் இந்த டால்ஸ்டாய்?)

டால்ஸ்டாய் சிறுகதைகள் மீள்வாசிப்பில் புதுப்புது அர்த்த சாத்தியங்களை ஏற்படுத்தித் தருபவை. எளிதில் செரிமானம் ஆகிவிடுபவை. உதாரணமாக ‘இவான் இலியீச்சின் மரணம்’. ஆனால் நாவல்களின் கதையே வேறு. டால்ஸ்டாய் நல்லவரா கெட்டவரா என்று ஒரு கேள்வி எழுந்தால் பதிலை ஊகிப்பது கடினமல்ல.

மருத்துவர் ஆன்டன் செக்காவின் ‘என் வாழ்க்கை’ ரஷ்ய செவ்வியல் அச்சில் வார்க்கப்பட்ட, 80க்கும் குறைவான பக்கங்களைக் கொண்ட புனைவு. ஒரு தேனீர்க் கோப்பையில் துன்பப் புயல் என வர்ணிப்பார் ஒரு மொழிபெயர்ப்பாள நண்பர். மனித வாழ்வு குறித்த அவருடைய துன்பியல் பார்வையை நம்மீது கொட்டுகிறார் செக்காவ். ஒவ்வொரு கதையையும் விரக்தியில் தோய்த்தெடுத்து நமக்குப் புகட்டுகிறார். வாழ்க்கையின் மற்றும் அவ்வாழ்க்கையில் நேரும் உறவுகளின் அர்த்தமின்மையை இயன்ற வரை துயரம் சிந்த எடுத்துரைத்த திருப்தியுடன் புனைவை முடிக்கிறார். ஒவ்வொரு புனைவையும் முடிக்கையில் நாயகன் அல்லது நாயகி மனநோயாளி ஆகும்போதோ, விரக்தி கலந்த கேள்விக்குறியில் வறட்டுப் புன்னகை கலக்கும்போதோ, அல்லது லட்சியங்கள் தகர்ந்து தனிமை கவியும்போதோ நமக்கு ஆச்சரியம் ஏற்படுவதில்லை. அவர் தொடக்கத்திலிருந்தே அதற்குத்தான் அடிபோட்டுவந்திருக்கிறார் என கூர்மையான வாசகர்கள் அவதானிக்க முடியும். ஒருவாறாகக் கதை முடியும்போது, “இதற்குத்தானே எல்லாம்?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

உலக செவ்விலக்கியத்தில் ரஷ்ய இலக்கியத்திற்குத் தனி இடம் உண்டு. இவர்கள் தவிர புஷ்கின், துர்கெனிவ், ஷோலோக்கோவ் என்று இன்னும் சில கதை மாந்தர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக எழுதக்கூடியவர்கள். துர்கேனிவ் அப்படியே செக்காவ் போல் எழுதக்கூடியவர். அவர் ‘மூன்று ஆண்டுகள்’ என்று எழுதினால் இவர் அதே அளவில் ‘மூன்று காதல் கதைகள்’ என ஒன்று எழுதியிருக்கிறார். மனித வாழ்க்கை அர்த்தமற்றது, துயரமானது, எதுவும் நிலைக்காது என்று எழுத இத்தனை பேர்.

(‘திசை காட்டிப் பறவை’ புத்தகத்திலிருந்து)