புதிய படைப்பு

தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் புனைவின் முதல் அத்தியாயம். முழுவதும் எழுதிய பின் அச்சில் வரும்.

*

ஜூலை, 1904.

“நாங்கள் அகன்று, நீண்டு சென்ற ஒரு பாதையில் மெல்ல நடந்துகொண்டிருந்தோம். தூறலின் ஈரப் புள்ளிகள் விழுந்திருந்த அப்பாதை பழைய காலத்திய பெரிய வீடு ஒன்றின் வழியே செல்வதை என்னால் காண முடிந்தது. “இப்பாதை செம்யனோவ்களின் இல்லத்திற்கு இட்டுச் செல்கிறது” என்றான் புதோவ்கின்.

செம்யனோவ்களில் யாரையும் நான்அறிந்திருக்கவில்லை எனினும் யெவ்கெனி செம்யனோவை அரிதாக நடன விழாக்களில் காண்பதுண்டு. அவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் எப்போதும் ஓடியபடி இருக்கும். இப்போது அவர்களது இல்லத்தைப் பார்த்ததும் அந்த ஆர்வம் மீண்டும் என்னுள் எழுந்தது. ஆந்த்ரெய் யாக்கோவ்லெவிச் செம்யனோவ் அந்த ஊரின் போஸ்ட் மாஸ்டராக இருந்தது மட்டுமின்றி கவர்னரின் தூரத்து உறவினராகவும் இருந்தார். 1843இன் வசந்தகாலத்தில் அவர் ச_______லிருந்து வேரா செம்யனோவாவுடனும் மகள்கள் வேரா மற்றும் அன்னாவுடனும் வந்திருந்தார். நான் செம்யனோவ் பெண்களை இன்று வரை பார்த்ததில்லை.

“வா, அவர்களைப் பார்த்து வரலாம். நீ அவர்களை விரும்புவாய்” என்றான் புதோவ்கின்.

செய்வதற்கு மேலானதாக எனக்கு வேறு எதுவும் இல்லாததால் நான் அவனுடன் செல்லத் தீர்மானித்தேன். நாங்கள் அந்த வீட்டை நெருங்குகையில், தூறல் அதை மேலும் பழையது போல் தோற்றம் கொள்ள வைத்திருந்ததைக் கண்டேன். அதன் ஜன்னல்களில் ஒன்றிலிருந்து மெலிந்த கரம் ஒன்று தோன்றியது, பின் உடனே மறைந்துபோனது. அந்தக் கைக்கு 18 வயதிருக்கலாம் என ஊகித்தேன். அல்லது, ஓரிரு மாதங்கள் இளையதாகவும் இருக்கக்கூடும்.

கிழவன் மிகையில் அனைவரும் நூலகத்தில் இருப்பதாகக் கூறினான். புதோவ்கின், நூலகத்திலிருந்து வந்த மெல்லினிய பியானோ இசையைக் கலைக்க விரும்பாததைப் போல் மிக மென்மையாகப் படிகளில் ஏறினான்.

அது ஒரு மிகப் பழைய பெரிய வாழ்வறை. “நான் ஏதேனும் தொந்தரவு செய்யவில்லையே?” எனக் கேட்டவாறு உள்ளே நுழைந்தான் புதோவ்கின். நானும் பின்தொடர்ந்தேன்.

“வாருங்கள் அலெக்சி பாவ்லோவிச். ஆக உங்களுக்கு எங்களை நிச்சயம் நினைவிருக்கிறது, அல்லவா?” என ஆச்சரியக் கூச்சலிட்டாள் அவர்களில் மூத்தவள். புதோவ்கின் அவளை வேரா செம்யனோவா என அறிமுகப்படுத்தினான் – “

பிரபல ரஷ்ய எழுத்தாளர் அந்தோன் பாவ்லோவிச் சேகவ் என்ற ஆன்டன் செக்காவ் (1860-1904) எழுதுகோலைப் போட்டுவிட்டுக் கழுத்தைப் பிடித்துக்கொண்டார். மின்சாரம் சுண்டியிழுப்பது போல் ஒரு வலி. என்ன ஆயிற்று எனக்கு என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். விளக்கவியலாதபடி, அவருக்கு வியர்க்கத் தொடங்யிருந்தது. அந்த மங்கிய அந்திமாலையின் குளிருக்காக அவர் ஜன்னல்களை சாத்தியிருந்தார். சிறிது காற்றோட்டமாக இருந்தால் சரியாகிவிடும் என்றெண்ணி செக்காவ் எழுந்தார்.

‘அட மனித உடலே, என்னே உனது பலவீனம்!’ என்றபடி தட்டுத் தடுமாறி வீட்டிலிருந்து வெளியே வந்தார். அந்தி நேரம் சூரியனுக்குக் கீழிருந்த அனைத்தையும் வெளிர்ச் சாம்பல் நிறமாக்கியிருந்தது. சாலையைக் கடந்து தனது இல்லத்தை முகங்கொண்டிருந்த சீமெந்து பெஞ்சில் சரிந்து அமர்ந்தார்.

கானல் நீரினூடே ஒட்டகக் கூட்டம் போல் யாரோ வருவது மசங்கலாகத் தெரிந்தது. “பனியில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் அந்தோன் பாவ்லோவிச்?” என்று காதருகில் ஓர் இளம் குரல் கேட்டது. அது சிறுவன் யோஹானாகத்தான் இருக்க வேண்டும். செக்காவின் கண்கள் குத்திடத் தொடங்கின. “அந்தோன் பாவ்லோவிச்! அந்தோன் பாவ்லோவிச்! நீங்கள் சீக்கா?” என்று அலறினான் யோஹான்.

“நானா ஆன்டன் செக்காவ்? இல்லை! நான் அந்தோன் சேகவ்! என் பெயர் அந்தோன் சேகவ் – “

நிலைகுத்தத் தொடங்கியிருந்ததும் பீதி வெளிப்பட்டதுமான செக்காவின் விழிகளிலிருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது. சிறுவன் யோஹான் வான் பெர்க் செக்காவின் மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்தான். ஆன்டன் செக்காவ் சத்தியமாக செத்துப் போயிருந்தார்.

19 Comments »

பேயோன் on August 30th 2010 in புனைவு

நம்மை வாசிக்கும் புத்தகங்கள்

நாம் புத்தகங்களை வாசிப்பது போல புத்தகங்களும் நம்மை வாசிப்பது உங்களுக்குத் தெரியுமா? அனுபவப் பக்கங்களைத் தங்கள் அறிவிற்குள் கோர்த்துக்கொண்டு நடமாடும் புத்தகங்களாக விளங்கும் மனிதர்களை நான் பார்க்கிறேன். மனிதர்களான நாம் புத்தகங்களை வாசிப்பது போல இந்த மனிதர்கள் நம்மைப் புத்தகங்களாக வாசிக்கிறார்கள். நாம் விளிம்பிற்குத் தள்ளப்படும்போதெல்லாம் வாழ்க்கைப் புத்தகத்தில் தாங்கள் கடந்து வந்த பக்கங்களை நமக்குப் படித்துக் காட்டி நம்மை மீட்கிறார்கள்.

எனது பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத அனுபவங்களை எனது பள்ளி நூலகம் எனக்குத் தந்தது. தொலைக்காட்சித் தொடர் வசதி எங்கள் கிராமத்திற்கு இன்னும் வந்தபாடில்லாத காலகட்டம் அது. பள்ளி முடிந்தபின் ஓணான் அடிக்க சக பிள்ளைகள் ஓடுகையில் என் போன்ற வெகு சிலர் பள்ளி நூலகத்தில் தஞ்சம் புகுவோம்.

நான் படிக்கும் புத்தகங்களில் தென்படும் சுவாரசியமான வாக்கியங்களை கருப்பு ஸ்கெட்ச் பேனாவால் வட்டமிட்டு அதனருகே மார்ஜினில் சிவப்பு ஸ்கெட்ச்சால் எனது கருத்துகளைப் பதிவுசெய்யும் பழக்கம் எனக்கிருந்தது. எனது முதல் நூல் மதிப்புரை இப்படித்தான் உருப்பெற்றது. சில கதைப் புத்தகங்களில் கதைகளின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லாதுபோனால் கத்தரித்த வெள்ளைத் தாளை அதன் மேல் ஒட்டி மாற்று முடிவை எழுதும் பழக்கமும் அப்போதே எனக்கிருந்தது.

இப்படி எங்களூரில் ஒரு தலைமுறைக்குப் பள்ளி நூலகமே ஒரு புத்தகமாக இருந்தது. மயிலிறகை இனப்பெருக்கம் செய்யவைக்க எந்த ஆசிரியரும் எங்களுக்குப் பயிற்சியளிக்கவில்லை. எந்த இறகுக்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும், எந்த இறகுக்கு அப்சரா ஒவ்வாமை இருந்தது என புத்தகங்களின் வாயிலாகவே நாங்கள் கற்றுக்கொண்டோம். தனது பக்கங்களை எங்களுக்குப் படிக்கக் கொடுத்த புத்தகமாகத்தான் எங்கள் பள்ளி நூலகத்தை நான் பார்க்கிறேன். நம் ஒவ்வொருவர் விஷயத்திலும் புத்தகங்கள் பல வடிவங்களில் வந்து நம் வாழ்க்கையின் ஓரங்களில் சாலைகளை அமைக்கின்றன. மரங்களை நட்டு மலர்களைப் பொழியவிடுகின்றன.

சமீபத்தில் நான் பார்த்த டாஸ்மேனிய இயக்குநர் ஜி்ம்மி வேல்ஸின் The Paid Piper of Libria என்ற சினிமாவின் முழுக் கதையை வேலை மெனக்கெட்டுச் சொல்கிறேன். லிப்ரியா என்ற ஒரு கற்பனை நாட்டில் எல்லா நூலகங்களிலும் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த தேசத்தில் மனித எண்ணிக்கையைவிட எழுத்தாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வீட்டுக்கொருவரின் படைப்பு பிரசுரம் கண்டுவந்ததால் மரங்கள் நிறைய அழிக்கப்படுகின்றன. மர அழிவால் மழை பொழிவு நின்றுபோய் ஒரு கட்டத்தில் லிப்ரியா நாட்டினர் மழைக்காக அண்டை நாட்டிற்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட லிப்ரியா அமைச்சரவை ஜேம்ஸ் என்கிற ஒரு அறிமுகவாதியை ஏற்பாடு செய்கிறது.

எங்கெல்லாம் புத்தகக் குப்பை சேருகிறதோ அங்கெல்லாம் ஒரு நல்ல தொகைக்கு புத்தக அறிமுகம் எழுதி அவற்றை ஒழிப்பது ஜேம்ஸின் தொழில். லிப்ரியாவிற்கு வரும் ஜேம்ஸ் தனது ஹீரோ பேனாவினால் லிப்ரிய நூலக உள்ளடக்க அறிமுக அழிவைத் தொடங்குகிறான். லிப்ரியாவின் தார் மின்னும் தெருக்களில் நடந்தபடி ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு அறிமுகம் எழுத, நூலகங்களிலிருந்தும் புத்தகக் கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் லட்சோபலட்சம் புத்தகங்கள் கிளம்பித் தெருவில் இறங்குகின்றன. அறிமுகவாதியின் சொற்களில் கட்டுண்டு பின்தொடர்கின்றன. நடந்துகொண்டே செல்பவனுக்கு ஒரு மலையுச்சி கால்வருகிறது. ஹீரோ பேனாவை மலை விளிம்பிலிருந்து தூக்கி ஜேம்ஸ் எறிகிறான். அறிமுகித்த புத்தகங்கள் மலையிலிருந்து வீழ்ந்து அழிகின்றன. மலையுச்சியில் ஒரு பாறைக்கு அடியில் முளைத்த ஒரு நெருஞ்சிப் பூவை சட்டையில் குத்திக்கொண்டு வீடு திரும்புகிறான் ஜேம்ஸ்.

நாமும் இப்படித்தான் வீட்டுக்குப் போகிறோம். காரணம், ஒரு வேலை முடிந்தபின் அந்த வேலை நடந்த இடத்தில் நாம் இருப்பதற்கான காரணங்கள் வலுவிழந்துவிடுகின்றன. நமது மனித வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வீட்டிற்கு செல்லும் வழியில் கடைக்குப் போகும் சூழ்நிலைகளும் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. நுகர்வுக் கலாச்சாரத்தின் தேவைகளை உந்துமையமாகக் கொண்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் தள்ளுபடிகள் வகிக்கும் இடம் புறக்கணிக்க முடியாதது.

சில்வியா ஸ்பேட் கெய்ஷா எழுதிய Discounts and Good Deals for Seniors in Texas-ல் 380க்கு மேற்பட்ட டெக்சாசிய நகரங்களில் மனதையள்ளும் 1,200 தனித்துவ தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஒரு நல்ல பேரத்தை கண்டதுமே இனங்காணும்படியாக இந்நூலை வடிவமைத்திருக்கிறார்கள். தங்குமிடங்கள், கடைத்தெரு, உணவகங்கள், கால்ஃப் மற்றும் பிற கேளிக்கை வாய்ப்புகள், மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேவைகள் ஆகியவை உட்பட 16 வகையான ரம்மியம் கொஞ்சும் தள்ளுபடிகள் இருக்கின்றன.

நமக்கு அறிவை அளிக்கும் ஆகச்சிறந்த கருவிகளுள் அதிக பக்கங்களைக் கொண்டிருப்பவை புத்தகங்களே. நாம் புத்தகம் படிக்கும்போது ஒரு பக்கத்திற்கு இத்தனை நியூரான்கள் வளர்சிதைமாற்றத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய பாங்காங் பல்கலைக்கழக ஆய்வு ஒரு கணக்கு காட்டுகிறது. பெரிய விஷயம்தான்.

26 Comments »

பேயோன் on August 16th 2010 in கட்டுரை

கடிதங்கள்

பிற்கால நூலாக்கத்திற்காக, திட்டமிட்ட இலக்கியத் தரத்துடன் நான் எழுதிய கடிதங்களில் மூன்று.

*

அன்பின் ஜெயக்குமார்,

பாராட்டுதல்களுக்கு நன்றி. நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘மரண வீட்டின் குறிப்புகள்’ தற்போது கைவசமில்லை. எங்கோ அலமாரியில் ஏதோ மூட்டைக்குள் கிடக்கிறது. தேடி எடுக்க நேரமில்லை. அதை இரவல் பெற்றுக்கொண்ட ஒரு நண்பர் தில்லிக்கு மாற்றலாகிக் கையோடு எடுத்துச் சென்றுவிட்டார். பஸ்ஸில் தவற விட்டுவிட்டேன். இந்த விதி நீங்கள் கேட்ட பிற நான்கு நூல்களாலும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

உங்கள் நிதிப் பிரச்சினை எனக்குக் கலக்கமளிக்கிறது. நீங்கள் தொடர்ந்து என்னிடம் ஓயாமல் பணம் கேட்டுக்கொண்டேயிருக்கும் நிலைமை மாறும், நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். கடிதப் போக்குவரத்துச் செலவாக இவ்வார இறுதியில் ஐம்பது ரூபாய்/- ஒரு வாசக நண்பரின் மூலம் கொடுத்தனுப்புகிறேன். தயங்காமல் பெற்றுக்கொள்ளுங்கள்.

இப்பவும் மணி 11.20 ஆகிறது. சென்ற வாரம் இதே நேரத்தில் உங்கள் முந்தைய கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது அதில் நீங்கள் கேட்டிருந்த ஆழமான கேள்விகளைப் பலர் கேட்கக் கேட்டிருக்கிறேன். இம்மாதிரியான கேள்விகள்தாம் நமக்கென ஒரு தனித்துவ அடையாளத்தைத் தருபவை. கேள்விகள் கேட்பதை மட்டும் நாம் நிறுத்திவிடக் கூடாது. உதாரணமாக, சமகால வாழ்வியலில் மனிதன் கால்களை எதற்காகப் பயன்படுத்துகிறான்? நிற்க. அடுத்த இருவாரங்களுக்கு நான் ஊராந்திரம் போவதால் கடிதம் பெற நிலையான முகவரி இருக்காது. குழந்தை இலக்கியனுக்கு அன்பு முத்தங்கள்.

வாழ்த்துக்களுடன்
பேயோன்

* * *

அன்பின் சுலைமான் அபெக்கே,

உங்கள் அளவிற்கு ஆங்கிலப் புலமை எனக்கில்லாமையால் தமிழிலேயே எழுதுகிறேன். நீங்கள் ராஜ குடும்பத்தவர் என்பதால் இதை யாரிடமாவது மொழியாக்கம் செய்து வாசித்துக்கொள்வதில் சிரமம் இருக்காது என நம்புகிறேன்.

உங்கள் உறவினர் மரணப் படுக்கையில் இருப்பது குறித்த உருக்கமான கடிதம் கண்டேன். மகிழ்ச்சி. தமிழ் எழுத்தாளர்கள் இத்தனைப் பேர் இருக்கையில் நீங்கள் என்னிடம் உதவி கேட்டிருப்பது நெகிழவைக்கிறது. நைஜீரியாவில் உள்ள எனது நண்பர் கிரி சொல்லித்தான் உங்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கலாமா? கொஞ்சம் போல் வறுமையில் திண்டாடும் ஒரு முன்னணி தமிழ் எழுத்தாளன் என்ற அறிமுகமே எனக்குப் போதும்.

சகமனிதனுக்கு உதவாத ஒரு எழுத்தாளன் என்ன எழுதியும் பயனில்லாத காரணத்தால் நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். உங்கள் பணம் ரூபாய் 20 மில்லியன் டாலர் வங்கியில் முடங்கியிருப்பது உங்கள் மனதை எந்தளவிற்குப் பாதித்திருக்கும் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு டால்ஸ்டாய் நாவல் படித்துக்கொண்டிருக்கையில் பக்க அடையாளமாக வைத்த 100 ரூபாய் நோட்டு காணாமல் போனதால் 10 நிமிடம் தூக்கத்தை இழந்த அனுபவம் உண்டு எனக்கு.

இந்தத் தொகை எனது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டபின் நான் அதை ஏமாற்றி எடுத்துக்கொள்ள வேண்டாம் என நீங்கள் கெஞ்சியிருப்பது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தவில்லை. அவ்வளவு பெரிய தொகையாக இருக்கும்போது நீங்கள் கொஞ்சினால்தான் ஆச்சரியம். நான் ஒரு நடுத்தரவர்க்கத்தினன். 20 மில்லியன் என்ன, 19 மில்லியனைக்கூட வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று எனக்குத் தெரியாது. உண்மையான எழுத்தாளர்களால் பெரிய பண மோசடிகளைச் சாதித்துவிட முடியாது.

நீங்கள் கூறும் திரு. ஜோசப் மாரா தார்மீக ரீதியில் தனித்துவ மனிதராகத் தென்படுகிறார். இந்த நைஜீரிய பாதுகாப்புத் துணைச் செயலரே என்னைத் தொடர்பு கொள்வார் எனில் பணப் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. 25 சதவீதத்தை எனக்குத் தருவதாகக் கூறியுள்ளீர்கள். நான் பார்த்த வரை 30 சதவீதம்தான் நைஜீரிய சந்தை நிலவரம். இருந்தாலும் உங்களுக்குள்ள சூழ்நிலை காரணமாக நான் பேரம் பேச விரும்பவில்லை. அந்த நேரத்தில் நான் இன்னொரு கடிதம் எழுதிவிடுவேன். எனவே உங்கள் வாழ்வாதாரத்திற்குரிய பணம் உங்களைச் சேர வேண்டியது என்னுடையதும் திரு. ஜோசப் மாராவினுடையதும் பொறுப்பாகும்.

உலகம் சுருங்கச் சுருங்க மனிதர்களிடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டிருந்தால் கடைசியில் மனிதர்கள் உலகிற்கு வெளியே சென்றுவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும். உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் ராயல் வங்கியால் நேரடியாக உங்களுக்கு உங்கள் நாட்டிலுள்ள வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்ப முடியாதது இந்தப் பரஸ்பர மனித அவநம்பிக்கையைத்தான் காட்டுகிறது.

இன்றைக்குச் சற்று வேலையாக இருக்கிறேன். திங்கட்கிழமை (15.03.2010) காலையன்று நீங்கள் கொடுத்த ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் 20,000 ரூபாய்/- செலுத்திவிடுகிறேன். உங்கள் கைக்குப் பணம் வந்த அடுத்த நொடியே எனக்குச் சேர வேண்டிய பணத்தை அனுப்பிவிட்டால் போதும். இனியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எச்சில் கையால் காக்காய் விரட்டும் ஒரு செயலாக இது எனக்கு இருந்துகொள்ளட்டும்.

உதவுதல் நாடி,
பேயோன்

* * *

அன்பின் ரூபேஷ்,

பாராட்டுதல்களுக்கு நன்றி. 2004-ல் ஷாங்காயின் புகழ்பெற்ற ஷாங்காய் மக்லெவ் ரயில் ஓடத் தொடங்கியது. மக்லெவ் (Maglev) என்பது Magnetic Levitation என்பதன் சுருக்கமாகும். இந்த வகை ரயிலில் சக்கரங்கள் இருக்காது. காரணம், அவை மின் மற்றும் காந்த சக்திகளால் இயங்குகின்றன. உலகின் முதல் வணிக மக்லெவ் ரயில் 1984-ல் இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாமில் அறிமுகப்படுத்தப்பட்டது. மணிக்கு 42 கி.மீ. வேகத்தில் ஓடிய இந்த ரயில் 1995-ல் நம்பகத்தன்மை மற்றும் வடிவமைப்புப் பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டது. 2003-ல் ஜப்பானின் மக்லெவ் ரயில் மணிக்கு 361 கி.மீ. வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்தது. இருந்தாலும் அதற்குப் பின்பு வந்த ஷாங்காய் மக்லெவ் ரயில் மணிக்கு 431 கி.மீ. வேகத்தில் ஓடி அந்தச் சாதனையை முறியடித்தது. உலகிலேயே மிக வேகமான இந்த ரயில்கூட மின்சக்தி இன்றி ஓடாது. அது போலத்தான் என்னைப் போன்ற எழுத்தாளர்களும் உங்களைப் போன்ற வாசகர்களின் நேர்மறைக் கருத்துக்களைச் சார்ந்திருக்கிறோம்.

பொதுவாகப் பாராட்டுகள் குவிந்தாலும் அவ்வப்போது சில விமரிசன முட்கள் லேசாகவாவது குத்தத் தவறுவதில்லை. அத்தகைய சூழ்நிலைகளில் “தல, எப்புடி தல!!!!”, “முடியல” போன்ற உங்களுடைய வார்த்தைகளே மனதிற்கு இதம் தந்து படைப்பூக்கம் தொடர்ந்தியங்க உதவுகின்றன. நீங்கள் கேட்டதற்கிணங்க எனது ‘ஆட்டோகிராப்’பை இணைத்திருக்கிறேன். அதை இக்கடிதத்தின் இறுதியில் “வாழ்த்துக்களுடன்” என்கிற வார்த்தைக்குக் கீழ் பார்க்கலாம். வெள்ளி விசில் மட்டும் சாத்தியமில்லை.

தினமும் சுமார் 20 பக்கங்களுக்குக் குறையாமல் கடிதம் எழுதும் உங்களைப் போல் பலரும் எனக்கு தினமும் சுமார் 20 பக்கங்களுக்குக் குறையாமல் கடிதம் எழுதுகிறார்கள். அத்தனையையும் படிப்பது சாத்தியமல்ல. அதனால்தான் உங்கள் தோழியுடனான பிரச்சனை என் கவனத்திற்கு வரவில்லை. கடிதங்களையே அன்றாடப் போக்கில் 200 பக்கங்களுக்கு மேல் படிக்க வேண்டியிருந்தால் படைப்புச் செயல்பாடுகளுக்கு நேரம் இருக்காது. நான் எழுதுவது குறைந்தால் அது உங்களையும்தானே பாதிக்கும். அதனால் எனக்குக் கடிதம் எழுதும்போது அதில் என்னைப் பற்றி எங்கெல்லாம் வருகிறதோ அந்த இடங்களை மஞ்சள் மார்க்கரால் ஹைலைட் செய்துவிட்டால் படித்து நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ள வாகாக இருக்கும்.

தயவுசெய்து என் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்காதீர்கள். படித்தாலும் மறுவாசிப்புச் செய்ய புதிதாக வாங்கிப் படியுங்கள். இதை எனக்குத் தனிப்பட்ட முறையில் செய்யும் பண உதவியாகக் கருதிக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்களுடன்
பேயோன்

16 Comments »

பேயோன் on July 19th 2010 in கடிதம்

Rss Feed Tweeter button Facebook button Delicious button Stumbleupon button

பேயோன் is using WP-Gravatar