பேயோன்

படித்ததில் பிடித்தவன்

4. “இன்னொரு மர்டர் கேஸ்”

July 14th, 2011

(ஒரு லோட்டா இரத்தம் 1, 2, 3)

“எங்கே? யார்?” என்றார் மைக்.

“மாக்சிம் கார்க்கி என்று இன்னொரு ரஷ்யாக்காரர்…” என்றாள் அன்னா, பிளாஸ்டிக் கப்பில் லிப்ஸ்டிக் ரேகை பதிய எந்திரக் குளம்பியை உறிஞ்சியபடி.

“ரஷ்ய இலக்கியத்திற்குக் கேடுகாலம்…!” என்றார் மைக்.

அன்னா தயாராக வைத்திருந்த ஃபோல்டரை நீட்டினாள். மைக் அதைப் பெருமூச்சுடன் வாங்கிக்கொண்டார்.

அலெக்செய் மக்சீமோவிச் பெஷ்கோவ் என்ற மக்சீம் கார்க்கி என்ற மாக்சிம் கார்க்கி ஃபைல் ஃபோட்டோ என லேபிள் ஒட்டியிருந்த எண்ணெய் ஓவியத்தில் கம்பீரத் தோற்றமளித்தார். அடுத்த பக்கத்திலிருந்த விவரங்கள் அந்த கம்பீரத்தை உடனே மறக்கடித்தன.

கூர்மையான – ஆனால் கத்தியளவிற்குக் கூர்மையில்லாத – ஒரு ஆயுதம் கழுத்தின் முன்பக்கம் குத்தி கரோட்டிட் தமனிகளூடே பின்பக்கம் வெளியேறியிருக்கிறது. கொடூரம். தொழில்முறைக் கொலையாளியாக இருக்கலாம்.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் இருந்த ஒரு சிறு விவரம் அவர் கவனத்தை ஈர்த்தது. மர்ம ஆயுதம் ஊடுருவியிருந்த இடத்தில் ஃப்தாலோசயனைன் (phthalocyanine) என்ற வேதிப்பொருள் அப்பியிருந்ததாக ரிப்போர்ட்டில் இருந்தது.

அடுத்த புகைப்படத்தில் கார்க்கி ரத்தத்தைத் தனது கடைசி மையாகப் பயன்படுத்தி விரலால் கிறுக்கியிருந்த “045″ மைக்கைப் புதிராக்கியது.

“ஒரு டான் பிரவுன் நாவலில் மாட்டிக்கொண்டுவிட்டேன்,” மைக்கிடமிருந்து ஒரு முணுமுணுப்பு வெளியேறியது.

“சார்?”

“ஒரு மோசமான கொலைக் கதையில் சிக்கிக்கொண்டுவிட்டேன் என்று சொன்னேன்… செக்காவ் துப்பு விடயமாக என்ன கிடைத்தது?”

“கில்லியன் இந்த ப்ரின்ட் அவுட்களைக் கொடுத்தாள்.”

LETEEB என்பது BEETEL. ஒரு இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ஃபோன் மாடல். அந்தத் தொலைபேசியின் ஒயர் கொலைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த நாட்டில் சில பத்து லட்சம் பேராவது அந்தக் கருவியைப் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள். இந்த ஒரு துப்பை மட்டும் வைத்துக்கொண்டு வைக்கோல் போரில் தேட முடியாது. தெளிவு கிடைப்பதற்குள் இன்னொரு அமர எழுத்தாளர் புனர்மரணம் அடையக்கூடும்.

இரு பெண்களைக் கொன்ற ரஸ்லோநிகோவ் (‘குற்றமும் தண்டனையும்’ கதாநாயகன் ரஸ்கோல்நிகவ்) போன்ற குற்ற உணர்வை உணர்ந்தார் மைக். ஆமாம், நான் இன்டர்போலின் ரஸ்லோநிகோவ் என்று சொல்லிக்கொண்டார். உடனே சுரீரென உறைத்தது மைக்கிற்கு. அடுத்த உயிர்ப்பலி தாஸ்தாயெவ்ஸ்கியாக, டால்ஸ்டாயாக, துர்கனேவாக, புஷ்கினாக இருந்தால்…

மைக்கின் கேபின் வாசலில் ஃபைல் அசிஸ்டன்ட் நிழலாடினாள்.

“என்ன?”

“இந்திய பீரோவிலிருந்து ஆள் வந்திருக்கிறார்.”

“அவரை பிரீஃப் செய்தாயா?”

* * *

இந்திய பீரோவிலிருந்து வந்திருந்தது ஒரு இளைஞன். அவன் அப்பா அம்மா அவனுக்குக் குமார் என்று பெயர் வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு அவன் ஐந்தரை அடி சுமாருக்கு வளர்ந்துவிட்டிருந்தான். ஜிப்பா-டை-கார்டுராய் ஜீன்ஸ் என்ற இன்டர்போல் கலை இலக்கியக் குற்றங்கள் பிரிவு சீருடையை நிரப்பியிருந்தான். அறிவுக் குற்றங்களில் பி.ஏ.வும் ஜூடோவில் பிரவுன் பெல்ட்டும் அவன் தகுதிகள். அதையெல்லாம்விட கலாச்சார ஆர்வம் இருந்தது சிறப்புத் தகுதி. அவனது அனுபவம் எல்லாம் வாசிப்பனுபவம்.

“இலக்கியம் கண்ட முதல் சீரியல் கில்லிங் இதுதானா சார்?” என்றான் குமார் கான்பரன்ஸ் அறையில்.

“பட் ஆனால் வேர் இஸ் தி மோட்டிவ்?” என்றார் மைக். “கொலையானவர்கள் இருவருமே புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர்கள்… அவர்கள் செத்துப் போய் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் அவர்களின் பெயரைக் கெடுக்க முடியாது… வேறு என்னவோ நடந்துகொண்டிருக்கிறது… போலீசின் கவனத்தை ஈர்க்க, கிரிமினல்கள் ஆடும் விளையாட்டு மாதிரி தெரிகிறது…” மைக் விஸ்தரித்தார்.

“சாரி சார், எனக்கு அப்படித் தோன்றவில்லை… இரண்டு சம்பவங்களிலுமே கொலையாளி சவாலாகத் தடயம் எதையும் விட்டுச் செல்லவில்லை… அவனை அல்லது அவளை மீறித்தான் துப்பு வெளிப்பட்டிருக்கிறது… துப்புகளை விட்டு வந்தது கொலையாளிக்குத் தெரிந்திருக்கும் என்று வீ கென் நாட் பி ஷ்யூர்… செக்காவ் விஷயத்தில் டெலிபோன் ஒயர் என்றால் கார்க்கி விஷயத்தில் அவரே கைப்பட ஒரு நம்பரை எழுதியிருக்கிறார்” குமார் தன் தரப்பு கண்ணோட்டத்தை ஒளிபரப்பினான்.

“ஓக்கே… ஆதாரங்கள் நம்மிடம் என்ன சொல்கின்றன?” என்றார் மைக் வெறுத்துப் போய். அந்தக் கேள்விக்காகத்தான் காத்திருந்த குமார் சுறுசுறுப்பானான்.

“செக்காவ் துப்பு, கொலையாளி இந்தியாவில் இருப்பதைக் காட்டுகிறது. கார்க்கி கொலைத் துப்பு, கொலையாளி எழுத்தாளனாக இருக்கலாம் எனவும் காட்டுகிறது” என்றான் குமார்.

“அதெப்படி? நமக்குக் கிடைத்ததெல்லாம் 045 என்ற எண் தானே?”

“சார்… சிம்பிள். ஃப்தாலோசயனைன் என்பது பொதுவாக பால்பாயின்ட் பேனா மை தயாரிக்கப் பயன்படும் ஒரு ரசாயனம்… கூகுள் தகவல்… இனி சின்னக் குழந்தைகூட 045க்கும் அதற்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டுவிடும். என் கன்க்ளூஷன்படி ரெய்னால்ட்ஸ் 045 பால் பாயின்ட் பேனாதான் கொலைக் கருவி,” குமாரிடம் ஒரு வெற்றிப் பெருமிதம் பளிச்சிட்டது.

“இன்ட்ரஸ்டிங் ஆங்கிள்,” பீறிட்ட பிரமிப்பை அடக்கிக்கொண்டு சொன்னார் மைக். “பேனாவைக் கொலைக் கருவியாகப் பயன்படுத்துவதால் அப்படிச் சொல்கிறாய். ஆனால் இப்போது எந்த எழுத்தாளர் பேனாவைப் பயன்படுத்துகிறார்? காசோலையில் கூட கணினியால் டிஜிட்டல் சிக்னேச்சர் போடுகிறார்கள்” என்றார் மைக் திடீரென காபியை உறிஞ்சிக்கொண்டு.

குமார் புன்னகைத்தான். “இல்லை சார்… கம்ப்யூட்டர் யுகத்திலும் பேனாதான் எழுத்துத் தொழிலுக்கான குறியீடு… கார்க்கியின் கழுத்தைத் துளைத்த பேனா ஒரு குறியீடு… அது நிஜ பேனா அல்ல… கார்க்கியின் முதிய கண்களால் பொடி எழுத்தில் இருந்த 045 என்ற எண்ணைப் படித்திருக்க முடியாது… கார்க்கியின் காலத்தில் ரெய்னால்ட்ஸ் பேனா இல்லாததால் அதை அவரால் அடையாளம் கண்டிருக்கவும் முடியாது… இட் இஸ் அ மெட்டஃபர்” என்றான் குமார் கான்பரன்ஸ் மேஜையின் மேல் ஒரு புத்தகத்தை வைத்தபடி.

“என்ன அது?” என்றார் மைக் அதைக் கண்ணுற்று.

“சொல்கிறேன்” என்றான் குமார். “தாஸ்தாயெவ்ஸ்கியின் ஃபைல். அனேகமாக அவர்தான் அடுத்த பலி.”

“ஒய் நாட் துர்கனேவ்? ஆர் ஷோலகோவ்?”

“பிகாஸ் தேயார் நாட் தாஸ்தாயெவ்ஸ்கி… செக்காவிற்கு முன்பே தாஸ்தாயெஸ்கிதான் போயிருக்க வேண்டும்… ஆனால் செக்காவை விட தாஸ்தாயெவ்ஸ்கிக்கு ஆயுசு கெட்டி.”

“அப்படியெனில் நேரத்தை வீணாக்க வேண்டாம்… பேக் அப் டு இந்தியா. ஆனால் இந்தியாவில் எங்கே?”

குமார் யோசித்தான். “என்னுடைய ஹோம்வொர்க்படி இந்தியாவில் இந்த எழுத்தாளர்களுக்கு அதிக மவுசு இருக்குமிடம் தமிழ்நாடு… தொடர்ந்து இவர்களைப் பற்றி அங்கே பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது… சென்னைக்குப் போய் சில எழுத்தாளர்களிடம் நூல் விடலாம்… குறிப்பாக மொழிபெயர்ப்பாளர்கள் உட்பட..”

“முழுப் பட்டியல் வைத்திருக்கிறாயா?”

“ஓயெஸ்… எல்லாம் சப்ஜாடாக வைத்திருக்கிறேன் சார்.”

மைக் தனது பைப்பைப் பற்றவைத்தார். புகையை இழுத்து வானுயர் கட்டிடங்கள் தெரிந்த திசையை நோக்கி ஊதினார். “லெட்டஸ் கோ!”

மூன்றாம் அத்தியாயம்

July 11th, 2011

(‘ஒரு லோட்டா இரத்தம்’ என்கிற எனது நெடுங்கதையின் மூன்றாம் அத்தியாயம். முதலிரு அத்தியாயங்கள்: 1, 2)

3. கார்க்கியின் கதி

ஜூலை 1904. பிரபல ரஷ்ய எழுத்தாளர் மக்சீம் கார்க்கி என்ற மாக்சிம் கார்க்கி (1868-1936) கணப்பின் மங்கிய வெளிச்சத்தில் ப்ராவ்தா செய்தித்தாளை மேய்ந்துகொண்டிருந்தார். தனது உடலை ஒரு பிரம்மாண்ட சோபாவுக்குக் கொடுத்திருந்தார். நடுவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் ஒரு சுருட்டு தனது புகையை மெல்ல கூரைக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. புகையோ, கூரையைத் தொடுவதற்குப் பெரிய ஆர்வம் ஏதுமின்றி முன்கூட்டியே கலைந்து அறைச் சூழலில் ஐக்கியமானது.

கிராமபோனில் சைக்கோவ்ஸ்கியின் யூஜின் ஓனெகின் சன்னமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு உச்சத்தையும் கார்க்கியின் தலை ஆமோதித்தது.

காஸ் ‘ஏ’ கார் வாசலில் மெல்ல வந்து நிற்கும் பரிச்சயமான சத்தம் கார்க்கியின் அனுபவமிக்க காதுகளில் அடியெடுத்துவைத்தது. இன்ஜின் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது. கார்க்கி கடிகாரத்தைப் பார்த்தார். சாப்பாட்டு நேரம் இன்னும் ஆகவில்லையே. யாராக இருக்கும்? வியந்தார்.

பனிக்காலக் காலையின் இருளைத் தள்ளிக்கொண்டு பல அடுக்கு ஆடைகளால் இன்னும் குண்டாகத் தெரிந்த ஒரு நெடிய உருவம் வாசலில் கிடந்த ஒரு மூக்குக் கண்ணாடியை பூட்ஸ் காலால் நசுக்கித் தூளாக்கியபடி உள்ளே வந்தது. புகைமூட்டத்தின் மறுகரையிலிருந்து அதன் கை நீண்டது. தந்தி. கார்க்கியின் கை நீண்டு அதை வாங்கிக்கொண்டது. கெட்ட செய்தியா நல்ல செய்தியா?

நல்லது கெட்டதில் நம்பிக்கையிழந்து கார்க்கிக்கு நெடுநாளாகிவிட்டது. தந்தியில் இருந்தது வெறும் செய்தியாகத்தான் இருக்க வேண்டும். தந்தியைக் கணப்பிற்கு அருகில் வைத்துப் படிததார் கார்க்கி.

கடவுளே! என் பிரிய ஆன்டன் பாவ்லோவிச்!

கண்களைப் பனித்த கண்ணீர் போஸ்ட்மேனை மறைத்தது. நடுங்கும் கைகளிலிருந்து நழுவிப் பறந்த மரணத் தந்தி கணப்பின் நெருப்பில் விழுந்து எரியத் தொடங்கியது.

இமயம் போன்ற ஒரு ஆளுமையின் கடைசிக் கணங்களுக்குத் தான் சாட்சியாகிக்கொண்டிருப்பது ராணுவ போஸ்ட்மேன் ஜோசப்பிற்கு மெல்லப் புரிந்தது. “அலெக்செய்! மேலுக்கு ஒன்றுமில்லையே?” என்று அலறினார். “யாராவது வாருங்கள்!”

வாசலை நோக்கி பனித் தரையில் திபுதிபுவென்று பலர் ஓடி வரும் ஒலி பின்னணிச் சத்தமாக, கார்க்கிக்குக் கண்கள் செருகின. கழுத்திலிருந்து ரத்தம் ஊற்றெடுத்து ஓடையாக இறங்கியது. கார்க்கியின் கடைசி வார்த்தைகள் சரித்திரத்தின் செவியில் விழாமல் குழறலாய்க் கரைந்தன. கார்க்கியின் கைவிரல்கள் உலகிற்குத் தமது கடைசிச் செய்தியைக் கழுத்து ரத்தத்தில் தோய்த்து எழுதின. அந்தச் செய்தி: 045.

நான்காம் அத்தியாயம்

ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன்

May 11th, 2011

பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘சூதாடி’ நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். வெறும் 98 பக்கங்கள்தான். புத்தகம் முடிந்த பிறகுகூடக் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டிருப்பார்கள் போலும். அத்தனை கதாபாத்திரங்கள். இந்தச் சிறிய புத்தகத்திற்கு எதற்காக இவ்வளவு கூட்டம் சேர்க்கிறார்? அந்தப் பாட்டியை முதலிலேயே கொன்றுவிட்டிருந்தால் இவ்வளவு கதாபாத்திரங்கள் தேவைப்பட்டிருக்காது. நாயகனுக்கும் நாயகிக்கும் பிரிட்டிஷ்காரனுக்கும் கூடுதல் பக்கங்கள் கிடைத்திருக்கும். வர்ணனைகளையும் வேறு விதமாகக் கொண்டுபோயிருக்கலாம். கிடக்கட்டும்.

லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ ஒருவன் கடந்தகாலத்தில் செய்த ஆகப்பெரிய தவறுக்கு வருந்தி மன்னிப்பு தேடுவதைக் கதையாக வர்ணித்துக் கூறுகிறது. இது டால்ஸ்டாய்க்கும் தெரியும் – இயற்கையாகவே. சுமார் 500 பக்கங்கள். புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்க மாட்டீர்கள். அதுவே தானாகக் கையிலிருந்து நழுவி விழுந்துவிடும். பிறகு யாராவது பார்த்து எடுத்து வைத்துவிட்டு உங்கள் தலைக்குக் கீழே ஒரு தலையணையை வைப்பார்கள். சீதோஷ்ண நிலையைப் பொறுத்து போர்வையும் கிடைக்கலாம். நித்திராதேவிக்கு மாமா வேலை பார்ப்பவனெல்லாம் அமர எழுத்தாளன்!

பொதுவாகவே வேறு எந்த எழுத்தாளரையும்விட டால்ஸ்டாயின் கதாபாத்திரங்கள் எனக்கு வெள்ளந்தியாகத் தெரிகிறார்கள். காரணம், டால்ஸ்டாய் தங்களை மனித தூக்க மாத்திரைகளாகப் பயன்படுத்துவது இந்த அன்னாக்களுக்கும் கோல்யாக்களுக்கும் தெரியாது. மாஸ்லோவாவை ரயில் நிலையத்தில் வைத்து கோமகன் விரான்ஸ்கி சந்திக்கும் தருணம் சமகால தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பொறாமை தரக்கூடியது.

(மூன்றாம் அத்தியாயத்தில் நெஹலூதவை அறிமுகப்படுத்தும்போது “தனது வழவழப்பான, வெள்ளைக் கால்களைக் கீழே வைத்து சப்பாத்துகளுக்குள் அடியெடுத்துவைத்தான்” என்று எழுதுவதற்கான அவசியம் என்ன? எட்டாம் அத்தியாயத்தில் மாஸ்லோவாவைப் பற்றிச் சொல்லும்போது, “சிறையின் மேற்கோட்டிற்கு அடியிலிருந்து விம்மிய மார்பகங்கள்” என வர்ணிக்கிறார். யார் இந்த டால்ஸ்டாய்?)

டால்ஸ்டாய் சிறுகதைகள் மீள்வாசிப்பில் புதுப்புது அர்த்த சாத்தியங்களை ஏற்படுத்தித் தருபவை. எளிதில் செரிமானம் ஆகிவிடுபவை. உதாரணமாக ‘இவான் இலியீச்சின் மரணம்’. ஆனால் நாவல்களின் கதையே வேறு. டால்ஸ்டாய் நல்லவரா கெட்டவரா என்று ஒரு கேள்வி எழுந்தால் பதிலை ஊகிப்பது கடினமல்ல.

மருத்துவர் ஆன்டன் செக்காவின் ‘என் வாழ்க்கை’ ரஷ்ய செவ்வியல் அச்சில் வார்க்கப்பட்ட, 80க்கும் குறைவான பக்கங்களைக் கொண்ட புனைவு. ஒரு தேனீர்க் கோப்பையில் துன்பப் புயல் என வர்ணிப்பார் ஒரு மொழிபெயர்ப்பாள நண்பர். மனித வாழ்வு குறித்த அவருடைய துன்பியல் பார்வையை நம்மீது கொட்டுகிறார் செக்காவ். ஒவ்வொரு கதையையும் விரக்தியில் தோய்த்தெடுத்து நமக்குப் புகட்டுகிறார். வாழ்க்கையின் மற்றும் அவ்வாழ்க்கையில் நேரும் உறவுகளின் அர்த்தமின்மையை இயன்ற வரை துயரம் சிந்த எடுத்துரைத்த திருப்தியுடன் புனைவை முடிக்கிறார். ஒவ்வொரு புனைவையும் முடிக்கையில் நாயகன் அல்லது நாயகி மனநோயாளி ஆகும்போதோ, விரக்தி கலந்த கேள்விக்குறியில் வறட்டுப் புன்னகை கலக்கும்போதோ, அல்லது லட்சியங்கள் தகர்ந்து தனிமை கவியும்போதோ நமக்கு ஆச்சரியம் ஏற்படுவதில்லை. அவர் தொடக்கத்திலிருந்தே அதற்குத்தான் அடிபோட்டுவந்திருக்கிறார் என கூர்மையான வாசகர்கள் அவதானிக்க முடியும். ஒருவாறாகக் கதை முடியும்போது, “இதற்குத்தானே எல்லாம்?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

உலக செவ்விலக்கியத்தில் ரஷ்ய இலக்கியத்திற்குத் தனி இடம் உண்டு. இவர்கள் தவிர புஷ்கின், துர்கெனிவ், ஷோலோக்கோவ் என்று இன்னும் சில கதை மாந்தர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக எழுதக்கூடியவர்கள். துர்கேனிவ் அப்படியே செக்காவ் போல் எழுதக்கூடியவர். அவர் ‘மூன்று ஆண்டுகள்’ என்று எழுதினால் இவர் அதே அளவில் ‘மூன்று காதல் கதைகள்’ என ஒன்று எழுதியிருக்கிறார். மனித வாழ்க்கை அர்த்தமற்றது, துயரமானது, எதுவும் நிலைக்காது என்று எழுத இத்தனை பேர்.

(‘திசை காட்டிப் பறவை’ புத்தகத்திலிருந்து)

இரண்டாம் அத்தியாயம்

March 7th, 2011

(‘ஒரு லோட்டா இரத்தம்’ என்கிற எனது நெடுங்கதையின் இரண்டாம் அத்தியாயம். மொத்தம் ஆறு அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. முதல் அத்தியாயம் இங்குள்ளது)

2. இன்டர்போல் இடையீடு

ஜூலை, 2009

மேகங்களுக்குள் தலையை விட்டிருந்த அந்தக் கட்டிடத்தின் 116ஆம் தளத்தில் இன்டர்போலின் கலை இலக்கியக் குற்றங்கள் பிரிவு பரபரப்பில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது. யாராவது பார்த்தால் கலை, இலக்கியத்தில் குற்றங்களே நடப்பதில்லை என்று நினைத்துக்கொள்ளக்கூடும். பன்னாட்டு நிறுவனத்திற்குரிய பளபளப்பு. வழுக்குத் தரை, விலையுயர்ந்த டிசைனர் மேஜைகள், நாற்காலிகள், அலமாரிகள் – ஒற்றை வார்த்தையில் சொன்னால் ஃபர்னிச்சர் -, வழவழ சுவர்களில் ராட்சத தொலைக்காட்சித் திரைகள், செழிப்பில் திளைத்த ஊழியர்கள்… சி.ஐ.ஏ. அலுவலகம் தோற்றது.

வாட்டர் கூலர் அருகே பாதி குடித்த பிளாஸ்டிக் நீர்க் கோப்பையைக் கையிலேந்தியபடி சிங்கப்பூரின் மற்ற வானுயர் கட்டடங்களுக்கு அப்பால் வெறித்துக்கொண்டிருந்தார் துப்பறியும் அதிகாரி மைக் பிரையர். அமெரிக்கக் கடற்படை உளவுப் பிரிவில் இருபது ஆண்டுகள் ஜேம்ஸ் பாண்ட் வேலை பார்த்த அனுபவம் போன வருடம் அவரை இன்டர்போலுக்கு அனுப்பியிருந்தது. கடற்படையில் பெல்ட்டிற்குப் பின்னால் அடங்கியிருந்த வயிறு இப்போது பெல்ட்டை இறுகப் பிடிக்கத் தொடங்கியிருந்தது.

இங்கு வந்த நாளிலிருந்தே பிரையரின் புகழ்பெற்ற நிபுணத்துவம், மீட்டிங் அறைகளிலும் தொலைபேசி அழைப்புகளிலும் வீணாகிக்கொண்டிருந்தது. தனது முன்னாள் சகஊழியர்களைப் போல் தானும் தொப்பை எக்சிக்யூட்டிவாக மாறிவிட்டதை ஏற்க மறுத்து இப்போதும் தன் பழைய 9 மிமீ சிக் சாயர் பிஸ்டலைக் காதலியின் புகைப்படம் போல் கோட்டிற்குள் வைத்திருந்தார் பிரையர்.

ஆனால் இதெல்லாம் போன வாரத்துக் கதை.

புதிதாக முளைத்திருந்த ஒரு ‘ஹைப்ரொஃபைல்’ கொலை வழக்கு அவரது மூளை நரம்புகளை முறுக்கிக்கொண்டிருந்தது. பத்து வயது குறைந்துவிட்டது போல் உணர்ந்தார் 45 வயது பிரையர். அந்த வினோத வழக்கைப் பற்றிய பிரையரின் யோசனையைக் கலைத்தது அவரது மேஜையில் ஒலித்த தொலைபேசி மணி. மீதமிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு பிளாஸ்டிக் கோப்பையை வாட்டர் கூலரின் தலை மேல் கவிழ்த்து வைத்துவிட்டு நிதானமாக போனை எடுத்தார். சுருக்கமாக பதிலளித்துவிட்டு போனை வைத்தார். அந்த ஹைப்ரொஃபைல் வழக்கின் மீது முதல் கல்லை எறியும் வேளை வந்துவிட்டதா?

பிரையரின் பிரத்தியேக மேஜையில் ஒரு மெல்லிய ஃபைல் பவ்ய ஒழுங்குடன் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கையிலெடுத்த பிரையருக்குக் கண்ணில் பட்ட தேதி உடனே எரிச்சலைக் கிளப்பியது. 14-07-1904.

“நான் கேட்டது புதிய போஸ்ட்மார்ட்டம். இது காலாவதியாகி ஒரு நூற்றாண்டாகிவிட்டது” என்று திரும்பிப் பார்த்துக் கத்தினார் மைக்.

ஆன்டன் செக்காவ் மரண வழக்கு இன்டர்போலுக்கு மாற்றப்பட்டதாக முந்தாநாள்தான் மைக்கிற்குத் தகவல் வந்தது. இது பெரிய விவகாரம் என்பதால் புலனாய்வை விரைவில் தொடங்க வேண்டும் என அன்று சீக்கிரம் வரச் சொல்லியிருந்தது மேலிடம். அதனால் மைக் வழக்கத்தை விடப் பத்து நிமிடம் முன்கூட்டியே அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

ஃபைல் அசிஸ்டன்ட் அன்னா புரூக்ஸ் சாலிட்டேர் யன்னலைச் சிறிதாக்கிவைத்துவிட்டுப் பெரிய மார்பகங்கள் நிமிர எழுந்தாள். ஒரு பக்கச் சுவர் முழுவதையும் அங்குலம் விடாமல் ஆக்கிரமித்திருந்த ஃபைல் காபினட்டிலிருந்து ஒரு ஃபைலை எடுத்து அதனுள் பார்வையை ஓட விட்டாள். பிறகு மைக்கிடம் கொண்டுவந்தாள்.

ஃபைலைக் கையில் வாங்கிக்கொண்ட மைக்கின் கண்கள் அதன் முகப்பில் இருந்த தேதியை உள்வாங்கின. 09.11.2009. “இதுதான்” என்று சொல்லிவிட்டு அதனுடன் உட்கார்ந்தார் மைக்.

ஆன்டன் செக்காவும் ஒரு பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி (1821-1881) கதாபாத்திரம் போல் காசநோய் முற்றி இறந்ததாகத்தான் பழைய போஸ்ட்மார்ட்டம் கருதியது. 09.11.2009 அன்று அவர் இறந்த தகவல் கிடைத்து உள்ளூர் இன்ஸ்பெக்டர் ஒரு மரியாதைக்காக அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று பார்த்திருக்கிறார். கழுத்தில் கயிற்றால் நெரிக்கப்பட்டது போன்ற அடையாளங்களைக் கண்டவர் சந்தேகப்பட்டு உடனே போஸ்ட்மார்ட்டம் செய்ய உத்தரவிட்டிருக்கிறார். இந்தப் புதிய போஸ்ட்மார்ட்டத்தில் காணப்பட்ட புதிய தகவல்கள் செக்காவ் மரண வழக்கை நேரே இன்டர்போலிடம் கொண்டுவந்திருக்கின்றன. இது முன்கதை.

09.11.2009 தேதியிட்ட போஸ்ட்மார்ட்டத்தின் ஆறு பக்கங்கள் 600 பக்கங்களாகக் கனத்தன மைக்கிற்கு. காசநோய் முற்றியிருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட தேதியில் அவர் இறந்தது கழுத்து நெரிப்பால். ஃபைலில் இணைக்கப்பட்டிருந்த கோரமான புகைப்படங்கள் மைக்கின் ரத்தத்தைக் கொதிக்கத் தூண்டின.

கல்லூரிப் பருவத்தில் அவர் படித்த செக்காவ் சிறுகதைகள் தூக்கத்தை வரவழைத்தவை. நாடகங்களை அவர் தொடக்கூட விரும்பவில்லை. ஆனால் உலகம் போற்றும் ஒரு எழுத்தாளனை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் யாராக இருக்க முடியும்? அவன் எப்படிப்பட்ட ஆளாக இருப்பான்? அவன் நோக்கம் என்ன? அதில் அவனுக்கு என்ன லாபம்? எத்தனை பேர் அவனுக்கு உதவியிருப்பார்கள்? அல்லது கொன்றது பெண்ணாக இருக்குமா? பெண்ணாக இருந்தால் அவள் எப்படிப்பட்டவளாக இருப்பாள்? அவள் நோக்கம் என்ன? அதில் அவளுக்கு என்ன லாபம்? எத்தனை பேர் அவளுக்கு உதவியிருப்பார்கள்? இவை மைக்கிற்கு சர்வநிச்சயமாகப் புரியவில்லை.

செக்காவ் இறந்ததை நேரில் பார்த்த ஒரே சாட்சியான ஜெர்மானியச் சிறுவன் யோஹானிடம் மிக விரிவான விசாரணை நடத்தியாயிற்று. செக்காவ் அவனை மாதிரியாகக் கொண்டு ‘இயோனிட்ச்’ என்ற சிறுகதையில் பாவ்லுஷா என்ற கதபாபாத்திரத்தை உருவாக்கியிருந்தது பற்றிய டைரிக் குறிப்புகளும் அதற்காக அவனைப் பற்றி எழுதிவைத்திருந்த விலாவரியான குறிப்புகளும் யோஹானை அப்பாவியாகக் காட்டின.

இணைக்கப்பட்டிருந்த எட்டுப் படங்களில் ஆறு படங்கள் கழுத்தின் குளோசப்கள். மற்ற இரண்டில் ஒன்று பக்கவாட்டுத் தோற்றம். இன்னொன்று செக்காவ் பற்றிய பத்திரிகைக் கட்டுரைகளில் தவறாமல் இடம்பெறும் பிரபல புகைப்படம்.

கழுத்துப் படங்களில் ஒன்றில் நெரிபட்ட இடத்தில் பிசிறாக ஏதோ எழுத்துக்கள் போல் தெரிந்தன. அவருக்குத் தெரிந்து 19ஆம் நூற்றாண்டு ருஷ்ய எழுத்தாளர்களுக்குப் பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. ‘மூன்று சகோதரிக’ளை எழுதியவர் அப்படியிருக்க வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.

டிராயரிலிருந்து பூதக் கண்ணாடியை எடுத்தார் மைக். அதில் தூரத்தை சரிசெய்து எழுத்துக்கள் போல் தெரிந்த இடத்தின் மேல் வைத்துப் பார்த்தார். அவை எழுத்துக்கள்தான். ஆனால் ரஷ்ய மொழி அல்ல, ஆங்கிலம். அதில் இருந்த வார்த்தை: LETEEB.

மூன்றாம் அத்தியாயம் »

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar