பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பாஸ் என்கிற பாஸ்கரன்

November 22nd, 2010

சமீபத்தில் அனேகமாக எனது அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் ராஜேஷின் பாஸ் என்கிற பாஸ்கரனைப் பார்த்தேன். ராஜேஷ் சார் தமிழ் சினிமாவின் புதிய அலையால் அடித்து வரப்பட்டவர். இவருடைய முதல் படம் தமிழ் சினிமாவின் தனித்துவமானதொரு காதல் கதையாகும். இரண்டாவது படமாகிய பாஸ் என்கிற பாஸ்கரன் முற்றிலும் வேறு திசையில் பயணம் கொள்கிறது.

கதையின் நாயகன் பாஸ்கரன் உயர் மத்தியதர வகுப்புக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயது தந்தை இழப்பில் உறவுப் பிரிவை சந்திக்கும் பாஸ்கரன் தாயின் மிகையான அன்பால் லௌகீக ஈடுபாடுகளில் உடல் சாராத யத்தனங்களைக் கைவிடுகிறான். மனதின் வாழ்க்கை அவனுக்கு தந்தை எரித்த சிதையிலேயே அவிந்துவிடுகிறது. இதனால் உடலின் தேவைகளை பிரதானப்படுத்திய ஒரு வாழ்க்கையினை அவன் வாழ்கிறான். சமுதாயத்தில் முனைப்புடன் பங்கெடுக்கத் தனிமனிதனைத் தயார்படுத்தும் ஒரு கருவியாக கல்வியமைப்பை இனங்கண்டு பாஸ்கரன் அதில் மனதைச் செலுத்த மறுக்கிறான். சமூகத்தின் விளிம்பில் நிற்கும் அவனுக்கு ஆறுதலாக உடனிருக்கிறான் அவனின் நண்பன் நல்லதம்பி.

இப்படியான பாஸ்கரனின் வியர்த்தமானதொரு தேர்வு முயற்சியின்போது சந்திரிகாவை அவன் எதிர்கொள்ள நேரும் அனுபவம் ஏறபடுகிறது. அவளை பார்த்தவுடன் காதல் வசப்படுகிறான். அவளோ வாழ்க்கையின் இன்னொரு கூட்டமான முனையில் இருக்கிறாள். துவக்கத்தில் இந்த முரண் இவர்களிடையேயான அடிப்படை சமூக முரண்பாட்டினை வலுவாக்கி வைக்கிறது. கல்வியிலும் சொத்து உருவாக்கும் திறனிலும் உள்ள போதாமை காதலுக்கு தடையாக இருப்பதை தீர்க்க பல முயற்சிகளை மேற்கொள்கிறான். இதற்கிடையில் அவனது முரண்கள் குடும்பத்தினுடனான உறவுகளைக் குலைத்து அவனை பிரிக்கிறது. இதற்கு இன்னொரு இடையில் அவனை காதலிக்க துவங்குகிறாள் சந்திரிகா. அவளுக்காகவாவது பொதுப்புத்தியை செயல்படுத்தும் நெருக்கடிக்கு ஆளாகிறான் பாஸ்கரன்.

எந்த கல்வியமைப்பு தன்னை சமூகத்தின் மையநீரோட்டத்திலிருந்து அகற்றி வைத்ததோ அதே கல்வியமைப்பிற்கு ஒரு கிளையை உருவாக்கி காதலியை அடைவதற்காக சமூகத்துடன் கலக்க பாஸ்கரன் தீர்மானிக்கிறான். நல்லதம்பியின் பணத்தில் கடன் வாங்கி ஒரு டுடோரியல் பள்ளியினை அவன் துவங்குகிறான். கல்வி வணிகமயமாதலால் உண்மையான முன்னேற்றம் கிடைக்காது என்று சித்தரிக்கும் விதமாக சில திருப்பங்களை வைக்கிறார் இயக்குநர். திருப்பங்களின் இறுதியில் நாயகியை அடைகிறான் நாயகன்.

சினிமா முழுவதும் பாஸ்கரன் தனக்கு நேரும் சம்பவங்களை வாழ்க்கையின் பின்விளைவுகளாக ஏற்றபடி அடுத்தடுத்த சம்பவங்களை நோக்கி நகர்கிறான். அக உலகிலேயே வாழும் பாஸ்கரனையும் புற உலகினையும் இணைக்கும் ஊடகமாக வரும் நல்லதம்பி பாஸ்கரனுக்கு கிடைக்காத சராசரி சமூக அந்தஸ்தை பெற்றிருந்தாலும் அதில் திருப்தியுறாமல் அன்னியமானதொரு மொழியில் சதா அதிருப்தியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறான். படிக்காத நடப்பு தலைமுறையை சுரண்டும் முந்தைய தலைமுறையின் கோரப் பிரதிநிதி நம் வேல்பாண்டி. சினிமாவில் வேறு எவரையும் விட அதிக அறிவுசாலியான சந்திரிகா ஒரு சமகால சினிமா கதையின் எல்லைகளை சரியாகப் புரிந்துகொண்டவளாக இருக்கிறாள். இந்த புரிதலே பாஸ்கரனை காதலிக்க அவளைத் தூண்டுகிறது என்று சொல்ல வேண்டும். நாயகனையும் நாயகியையும் அவர்களின் தோற்றத்தைக் கொண்டே அவர்கள்தான் நாயக நாயகியர் என ஊகிக்கும்படி இயக்குநர் செய்திருப்பது பாராட்டத்தக்கது.

இங்கு எடிட்டிங் பற்றி சில வரிகள்.

இயல்பாக அமைய வேண்டிய மனித உறவுகள் சமூகம் விதித்த விதிகளால் எவ்வளவு அல்லல்களுக்கு உட்படுகின்றன என்று இந்த சினிமா கூறுகிறது. அத்துடன் இலக்கின்மை சார்ந்த வாளாவிருத்தலுக்குத் தீர்வாக உலகாயதவாதத்தை முன்வைக்கிறது ராஜேஷ் சாரின் இந்த படம்.

புனைவு

September 1st, 2010

புனைவு from பேயோன் on Vimeo.

-

எனது முதல் குறும்பட முயற்சி. திரைக்கதையையும் சேர்த்து வெளியிட திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஒளிப்பதிவின்போது சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்ததால் திரைக்கதை சில இடங்களில் மாறியது. படத்திற்கேற்ப மாற்றிய பின் வெளியிடுகிறேன்.

படத்தை Vimeo வலைதளத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். திரைக்கதையை தரவிறக்க இங்கு கிளிக் (PDF) செய்யவும்.

நம்மை வாசிக்கும் புத்தகங்கள்

August 16th, 2010

நாம் புத்தகங்களை வாசிப்பது போல புத்தகங்களும் நம்மை வாசிப்பது உங்களுக்குத் தெரியுமா? அனுபவப் பக்கங்களைத் தங்கள் அறிவிற்குள் கோர்த்துக்கொண்டு நடமாடும் புத்தகங்களாக விளங்கும் மனிதர்களை நான் பார்க்கிறேன். மனிதர்களான நாம் புத்தகங்களை வாசிப்பது போல இந்த மனிதர்கள் நம்மைப் புத்தகங்களாக வாசிக்கிறார்கள். நாம் விளிம்பிற்குத் தள்ளப்படும்போதெல்லாம் வாழ்க்கைப் புத்தகத்தில் தாங்கள் கடந்து வந்த பக்கங்களை நமக்குப் படித்துக் காட்டி நம்மை மீட்கிறார்கள்.

எனது பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத அனுபவங்களை எனது பள்ளி நூலகம் எனக்குத் தந்தது. தொலைக்காட்சித் தொடர் வசதி எங்கள் கிராமத்திற்கு இன்னும் வந்தபாடில்லாத காலகட்டம் அது. பள்ளி முடிந்தபின் ஓணான் அடிக்க சக பிள்ளைகள் ஓடுகையில் என் போன்ற வெகு சிலர் பள்ளி நூலகத்தில் தஞ்சம் புகுவோம்.

நான் படிக்கும் புத்தகங்களில் தென்படும் சுவாரசியமான வாக்கியங்களை கருப்பு ஸ்கெட்ச் பேனாவால் வட்டமிட்டு அதனருகே மார்ஜினில் சிவப்பு ஸ்கெட்ச்சால் எனது கருத்துகளைப் பதிவுசெய்யும் பழக்கம் எனக்கிருந்தது. எனது முதல் நூல் மதிப்புரை இப்படித்தான் உருப்பெற்றது. சில கதைப் புத்தகங்களில் கதைகளின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லாதுபோனால் கத்தரித்த வெள்ளைத் தாளை அதன் மேல் ஒட்டி மாற்று முடிவை எழுதும் பழக்கமும் அப்போதே எனக்கிருந்தது.

இப்படி எங்களூரில் ஒரு தலைமுறைக்குப் பள்ளி நூலகமே ஒரு புத்தகமாக இருந்தது. மயிலிறகை இனப்பெருக்கம் செய்யவைக்க எந்த ஆசிரியரும் எங்களுக்குப் பயிற்சியளிக்கவில்லை. எந்த இறகுக்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும், எந்த இறகுக்கு அப்சரா ஒவ்வாமை இருந்தது என புத்தகங்களின் வாயிலாகவே நாங்கள் கற்றுக்கொண்டோம். தனது பக்கங்களை எங்களுக்குப் படிக்கக் கொடுத்த புத்தகமாகத்தான் எங்கள் பள்ளி நூலகத்தை நான் பார்க்கிறேன். நம் ஒவ்வொருவர் விஷயத்திலும் புத்தகங்கள் பல வடிவங்களில் வந்து நம் வாழ்க்கையின் ஓரங்களில் சாலைகளை அமைக்கின்றன. மரங்களை நட்டு மலர்களைப் பொழியவிடுகின்றன.

சமீபத்தில் நான் பார்த்த டாஸ்மேனிய இயக்குநர் ஜி்ம்மி வேல்ஸின் The Paid Piper of Libria என்ற சினிமாவின் முழுக் கதையை வேலை மெனக்கெட்டுச் சொல்கிறேன். லிப்ரியா என்ற ஒரு கற்பனை நாட்டில் எல்லா நூலகங்களிலும் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த தேசத்தில் மனித எண்ணிக்கையைவிட எழுத்தாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வீட்டுக்கொருவரின் படைப்பு பிரசுரம் கண்டுவந்ததால் மரங்கள் நிறைய அழிக்கப்படுகின்றன. மர அழிவால் மழை பொழிவு நின்றுபோய் ஒரு கட்டத்தில் லிப்ரியா நாட்டினர் மழைக்காக அண்டை நாட்டிற்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட லிப்ரியா அமைச்சரவை ஜேம்ஸ் என்கிற ஒரு அறிமுகவாதியை ஏற்பாடு செய்கிறது.

எங்கெல்லாம் புத்தகக் குப்பை சேருகிறதோ அங்கெல்லாம் ஒரு நல்ல தொகைக்கு புத்தக அறிமுகம் எழுதி அவற்றை ஒழிப்பது ஜேம்ஸின் தொழில். லிப்ரியாவிற்கு வரும் ஜேம்ஸ் தனது ஹீரோ பேனாவினால் லிப்ரிய நூலக உள்ளடக்க அறிமுக அழிவைத் தொடங்குகிறான். லிப்ரியாவின் தார் மின்னும் தெருக்களில் நடந்தபடி ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு அறிமுகம் எழுத, நூலகங்களிலிருந்தும் புத்தகக் கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் லட்சோபலட்சம் புத்தகங்கள் கிளம்பித் தெருவில் இறங்குகின்றன. அறிமுகவாதியின் சொற்களில் கட்டுண்டு பின்தொடர்கின்றன. நடந்துகொண்டே செல்பவனுக்கு ஒரு மலையுச்சி கால்வருகிறது. ஹீரோ பேனாவை மலை விளிம்பிலிருந்து தூக்கி ஜேம்ஸ் எறிகிறான். அறிமுகித்த புத்தகங்கள் மலையிலிருந்து வீழ்ந்து அழிகின்றன. மலையுச்சியில் ஒரு பாறைக்கு அடியில் முளைத்த ஒரு நெருஞ்சிப் பூவை சட்டையில் குத்திக்கொண்டு வீடு திரும்புகிறான் ஜேம்ஸ்.

நாமும் இப்படித்தான் வீட்டுக்குப் போகிறோம். காரணம், ஒரு வேலை முடிந்தபின் அந்த வேலை நடந்த இடத்தில் நாம் இருப்பதற்கான காரணங்கள் வலுவிழந்துவிடுகின்றன. நமது மனித வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வீட்டிற்கு செல்லும் வழியில் கடைக்குப் போகும் சூழ்நிலைகளும் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. நுகர்வுக் கலாச்சாரத்தின் தேவைகளை உந்துமையமாகக் கொண்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் தள்ளுபடிகள் வகிக்கும் இடம் புறக்கணிக்க முடியாதது.

சில்வியா ஸ்பேட் கெய்ஷா எழுதிய Discounts and Good Deals for Seniors in Texas-ல் 380க்கு மேற்பட்ட டெக்சாசிய நகரங்களில் மனதையள்ளும் 1,200 தனித்துவ தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஒரு நல்ல பேரத்தை கண்டதுமே இனங்காணும்படியாக இந்நூலை வடிவமைத்திருக்கிறார்கள். தங்குமிடங்கள், கடைத்தெரு, உணவகங்கள், கால்ஃப் மற்றும் பிற கேளிக்கை வாய்ப்புகள், மருத்துவ மற்றும் பல் மருத்துவ சேவைகள் ஆகியவை உட்பட 16 வகையான ரம்மியம் கொஞ்சும் தள்ளுபடிகள் இருக்கின்றன.

நமக்கு அறிவை அளிக்கும் ஆகச்சிறந்த கருவிகளுள் அதிக பக்கங்களைக் கொண்டிருப்பவை புத்தகங்களே. நாம் புத்தகம் படிக்கும்போது ஒரு பக்கத்திற்கு இத்தனை நியூரான்கள் வளர்சிதைமாற்றத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய பாங்காங் பல்கலைக்கழக ஆய்வு ஒரு கணக்கு காட்டுகிறது. பெரிய விஷயம்தான்.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar