ஒரு குழந்தைக்குச் சொன்ன கதை

இருபுறமும் மரங்கள் அடர்ந்த ஒரு நெடுஞ்சாலையில் ராட்சத லாரி ஒன்று பயங்கர வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அதை ஓட்டிக்கொண்டிருந்தது ஒரு முயல்.

லாரி எவ்வளவு வேகமாகப் போய்க்கொண்டிருந்தது என்றால், அதன் முன்புற டயர்களில் ஒன்று – வலப்பக்கம் இருப்பது – பிய்த்துக்கொண்டு தனியாக ஓட ஆரம்பித்துவிட்டது. ஆனால் முயல் அது கழன்று போனது தெரியாமலே தன் பாட்டிற்கு லாரியை ஓட்டிக்கொண்டிருந்தது.

டயர் மிக வேகமாகப் போய் ஒரு பெரிய மாமரத்தின் மேல் மோதி பல முறை சுழன்றுவிட்டு விழுந்தது.

மாமரத்திற்குத் தூக்கம் கலைந்தது. “யாரடா அது என் தூக்கத்தைக் கலைத்தது?” என கர்ஜித்துக்கொண்டே எழுந்தது மாமரம். இலைகளை சிலுப்பிக்கொண்டு எல்லா பக்கமும் பார்த்த மாமரம், கீழே கிடந்த டயரையும் தொலைவில் போய்க்கொண்டிருந்த லாரியையும் பார்த்தது.

“உன்னை விட்டேனா பார்!” என்று கத்திக்கொண்டே மாமரம் நெடுஞ்சாலையில் இறங்கி மிக வேகமாக ஓடி லாரியைத் துரத்தியது. மாமரம் துரத்துவது முயலுக்குத் தெரியவேயில்லை. அது நிறுத்தாமல் லாரியை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தது.

மாமரம் தனது மாங்காய்களை ஒவ்வொன்றாக லாரி மீது விட்டெறிந்தது. மாங்காய்கள் எல்லாம் தீர்ந்து லாரி நிரம்பிவிட்டது. ஆனால் லாரி நிற்கவேயில்லை. பிறகு மாமரம் தனது கிளைகளைப் பிடுங்கி ஒவ்வொன்றாக லாரியின் மேல் வீசியது.

மாமரம் வீசிய ஒரு பெரிய கிளை டயர்களுக்கு இடையில் சிக்கியது. லாரி பெரிய கிறீச்சிடும் ஓசையுடன் சறுக்கி நின்றது. லாரியை ஓட்டுபவரை ஒரு கை பார்க்க மாமரம் விரைந்து சென்றது. ஆனால் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தது ஒரு பொம்மை முயல்.

துணுக்குற்ற மாமரம் அந்த பொம்மை முயலைக் கையிலெடுத்துப் பார்த்தது. பொம்மை முயல் பீப் பீப் பீப் பீப் என்று சத்தம் போட்டுவிட்டு டமால் என்று வெடித்துச் சிதறியது.

முதலையும் சியாமள விகாச பட்சியும்

(குழந்தைகளுக்கான புனைவு)

காலமும் வெளியும் இணையுமொரு புள்ளியில் முகிழ்த்த கண்காணா பூமியொன்றில் ஒரு வனம் இருந்தது. பல்வகை விலங்குகள் பூட்டப்பட்ட, பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு விசித்திரப் பிராந்தியம் அந்த வனம். வாசகர்கள் காலடித் தடம் பதியாத இந்தத் தன்னந்தனித்துவப் பிரதேசத்தை பல்வேறுபட்ட உயிர்வாழ் மிருகங்கள் பகிர்ந்துவந்தன.

அந்த வனத்தினூடே மனிதர் அறியா மர்ம மொழியில் தன்னோடு தானே பேசிக்கொண்டு இலக்கில்லாத் திசையில் ஒரு அவர்ண திரவ நாகமாய் சதா பயணித்தபடி இருந்தது அந்த ஜல நதி. விருட்சங்கள் மண்டிய பச்சிருளில் பரவியிருந்த அதன் கரையோரத்தில் பூமிக்கும் ஆகாயத்திற்குமான ஒரு செங்குத்துப் பாலத்தின் எஞ்சிய துண்டு போல் ஒரு நெடுங்கத்தரி மரம் முளைத்திருந்தது. எண்ணிக்கை துறந்த ஆலகால விழுதுகள் ஆயிரங்கால் மண்டபமாய் அம்மரத்தைத் தோற்றங்கொள்ள வைத்தன.

இப்படியான அந்தக் கத்தரி மரத்தில் ஏறி அதன் கனிகளை உண்டு செரிக்கும் பழக்கத்தைத் தனதாக்கிக்கொண்டிருந்தது ஒரு நதி முதலை. அனுதினமும் சூரியன் ஆகாயத்தின் உச்சிக்கு மெல்லத் தாவிக்கொண்டிருக்கும் காலப்பொழுதில் நமது முதலையும் கத்தரிப்பழம் தேடி மரத்தில் ஆரோகணிக்கும்.

ஒருநாள் முதலையின் கண்களில் பட்டவை ஆற்றுநீரின் மேல் கிளைத்தோங்கிய ஒரு கிளையில் தொங்கிய கத்தரிப் பழங்கள். நான்கு கால்களால் மரத்தைப் பிடித்து ஏறி நீள்முகத்தை நீட்டிக் கத்தரிப் பழங்களை அண்மிக்கையில் சறுக்கி விழுந்தது நதி நீரில் தலைகீழாக நமது கதாநாயக உயர்முதலை. வாயிலும் மூக்கிலும் நீரும் சேறும் உட்புகுந்து மூச்சுத் திணறி முதலை தத்தளித்தது. அதன் குட்டைக் கால்களை ஆற்றின் அல்லிப் பாம்புகள் சுற்றிக்கொண்டன.

திடீரென சிறகடிக்கும் சத்தம் கேட்டு அண்ணாந்தது முதலை. அது சறுக்கிய கிளையில் வந்து அமர்ந்தது ஒரு புராதன சியாமள விகாச பட்சி. முதலை திமிறத் திமிற பாம்புப் பிடிகள் இறுகியதைப் பட்சி பார்த்தது. முதலையின் உயிரூசல் நீடித்தால் அதன் பௌதிக இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும் என உணர்ந்தது பட்சி.

இன்னொரு இணை உலகில் ஒரு மூதாட்டியிடம் களவாடியிருந்த வடையைக் காலடி பொந்திற்குள் பதுக்கிவைத்த அந்தச் சிறகுதாரி, விருட்டென எழுந்து கருஞ்சிறகுகளை அடித்தபடி நீரினுள் பாய்ந்தது. கணப்பொழுதில் பாம்புகளைக் கொய்து முதலையை விடுவித்து முதலையின் நன்றிக்குக் காத்திராமல் வானுக்குள் தாவியது. கத்தரி மரத்தின் நீர் தீண்டாக் கிளையில் ஏறிக் கத்தரிப் பழங்களை உண்டு நதிக்கரைக்குத் திரும்பியது முதலை, புராதன சியாமள விகாச பட்சியின் மேலதிக பிரக்ஞையுடன்.

பிறிதொரு நாள், பிறிதொரு சமயம், பட்சியினுடைய முறையின்பேரில் ஒரு வேட்டுவன் அந்த வனத்தில் பிரவேசித்தான். ஆகாயத்தை இடைவிட்டு மறைத்த இலைகளின் பொய்க் கூரையினுடைய நீலப் பொத்தலில் நின்றிருந்த பட்சியை வேட்டுவப் பார்வை அவதானித்தது. அன்றிரவு சியாமள விகாச பட்சியை அடித்து சூப்புச் செய்துவிடத் தீர்மானித்தது வேட்டுவ மனம்.

அந்நேரம் வேட்டுவத் துப்பாக்கி தோளேறியதைக் கண்ணுற்றது நதியில் நீந்திய உயர்கதாநாயக முதலை. சின்னஞ்சிறு கால்களால் நீரை அளைந்தபடி மெல்லக் கரை நோக்கி முன்னேறிய முதலை, வேட்டுவனின் விழிகளூடே மரணம் தன் இரக்கமற்ற பார்வையைப் பட்சியின் மீது செலுத்தியதைக் கண்டு பதைத்தது. பட்சிக்கு நன்றி சொல்ல இது நல்ல தருணம் என உணர்ந்து வேட்டுவனை நோக்கி விரைந்தது.

மிகைப்படுத்திய மனிதத் தலை போன்றதொரு பாறையின் மேல் நின்றிருந்தான் வேட்டுவன். துப்பாக்கியின் எய்விசையில் விரலை அமர்த்திப் பட்சியின் தரிசனத்தில் அவன் ஆழ்ந்தான். முதலை நீரிலிருந்து வெளிப்பட்டு வேட்டுவனுக்கும் பட்சியின் மரணத்திற்கும் இடையிலிருந்த அரை நொடியில் அடியெடுத்து வைத்தது. வணக்கம் சொல்லிப் பிரியும் கைகள் போன்ற வாயைத் திறந்தது. கடித்தது வேட்டுவனுடைய காலை. வலி பொறுக்காமல் வேட்டுவன் அலறி துப்பாக்கியைத் தலை சுற்றி வீசியெறிந்தான். சப்தம் எழும்பிய இடத்தைப் பட்சியின் காதுகள் தேட, அவற்றைப் பின்தொடர்ந்த அதன் கண்கள் இலை இடைவெளிகளூடே ஓடிய வேட்டுவன் மீது பதிந்து புரிதலில் விரிந்தன.

ஒவ்வொரு பிரதிக்கும் ஒரு நீதி உண்டு. குழந்தைகளே, இந்தப் பிரதிக்கும் அது உண்டு. அது என்ன தெரியுமா? மற்றவர்கள் நமக்கு உதவி செய்தால் நாமும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இன்னொரு முறை நமக்கு உதவி செய்வார்கள்.

மனம் திருந்திய மன்னன்

துவாபர யுகத்தில் மயூரசன்மன் என்றொரு மன்னன் வைரபுரி என்ற நாட்டில் கொடுங்கோலாட்சி புரிந்துவந்தான். பல ஆண்டுகள் தன் பிரஜைகளைக் கொடுமைப்படுத்திவந்த மன்னன், திடீரென ஒரு நாள் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தினான். தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேட விரும்பி ஒரு முனிவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதபூஜை நடத்தி அன்னதானம் செய்தான்.

போஜனம் ஆனவுடன் முனிபுங்கவர், “ராஜனே! எனக்கு போஜனம் அளிப்பதால் மட்டும் நீ செய்த பாவங்கள் கரைந்துவிடாது. அதற்கு நீ பிரம்மதேவனைக் குறித்து நாற்பத்தியாறு லக்ஷம் ஆண்டுகள் தவம் புரிய வேண்டும்” என்று கூறினார்.

மன்னன் முனிவரையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்றுவிட்டு பிரம்மனை நோக்கித் தவமிருக்கலானான். இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல், வெயில் என எல்லா இயற்கைச் சீற்றங்களையும் பொறுத்துக்கொண்டு பிரம்ம தரிசனத்துக்காகத் தவம் கிடந்தான்.

இவ்வாறாகப் பதினாயிரம் ஆண்டுகள் கழிந்தன. திடீரென ஒரு நாள் அவன் முன்னே ஓர் ஒளிப் பிழம்பு தோன்றியது. அதிலிருந்து அழகிய தேவகன்னிகை ஒருத்தி வெளிப்பட்டுப் புன்னகைத்தாள். “நரனே! நான் பிரம்மதேவனின் காரியதரிசி. நீ செய்திருக்கும் எண்ணற்ற பாவங்களுக்கு அவர் அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட மாட்டார். நீ முட்களின் மீது ஒற்றைக் காலில் நின்று இன்னும் ஐம்பத்தியெட்டு லக்ஷம் ஆண்டுகள் தவம் புரிய வேண்டும்” என்று கூறி மறைந்தாள்.

மயூரசன்மன் அவள் சொற்படி முட்களின் மீது ஒற்றைக் காலில் நின்று தவமிருந்தான். அறுபத்தியிரண்டு லக்ஷம் ஆண்டுகள் கழித்து மன்னனுக்கு நா வறண்டுபோய் சொல்லொணாத் தாகம் ஏற்பட்டுத் தவம் கலைந்தது. சிறிது நீர் அருந்திவிட்டுத் தவத்தைத் தொடரலாம் என்று எண்ணிய மன்னன், அந்தக் கானகத்தில் நீர் தேடி நெடுந்தூரம் அலைந்தான். அருவிகள், ஓடைகள் எல்லாம் வற்றியிருந்தன. சுனைகள் காய்ந்த இலைகளால் நிரம்பியிருந்தன. அவனிருந்த மரத்தைத் தவிர எல்லா மரங்களும் வெட்டப்பட்டிருந்தன. மனம் வெறுத்த மன்னன், காட்டிலிருந்து வெளியேறினான்.

மயூரசன்மன் நாட்டுக்குள் நுழைந்ததும் ஆட்டோக்களை, கார்களை, தொலைபேசி பூத்களை, மொபைல் போன் கடைகளை, திரையரங்குகளைக் கண்டான். யுகம் மாறிவிட்டது என்றும் தன் தவத்தை இனியும் தொடரவியலாது என்றும் உணர்ந்தான். கலியுகத் தொழில்கள் எவையும் தெரியாததால் மயூரசன்மன் தாகத்தைத் தணித்துக்கொண்ட பின் காசிக்குச் சென்று பிச்சை எடுக்கத் தொடங்கினான்.

வண்ணத்துப்பூச்சியும் விசித்திர ஓவியனும்

(குழந்தைகளுக்கான மீபுனைவு)

மனித வாழ்க்கை போல் நீண்டு நெடிந்து சுழித்தோடும் ஒரு ஆற்றின் கரையில் அமைந்திருந்தது ஒரு வனம். அந்த வனத்தில் ஜம்பு என்றொரு வண்ணத்துப்பூச்சி இருந்தது.

பொதுப்புத்தியில் பதிந்துள்ள வண்ணத்துப்பூச்சிகளைப் போல் வண்ண-வடிவ விசித்திரங்களை கொண்டதல்ல நமது ஜம்பு. அது பிறவியிலேயே வெண்ணிறம் கொண்டதாக இருந்தது. மற்ற வண்ணத்துப்பூச்சிகள் வண்ணமயமாக இருந்ததைப் பார்த்து ஜம்புவுக்கு அசூயையும் விசனமும் ஏற்பட்டது.

தான் உலகில் தொட்டதில் எல்லாம் படைப்பூக்கம் துலங்கச் செய்த இயற்கைக்கு தன்னை படைக்கும்போது மட்டும் ஏன் பாரபட்சம் என வருந்தியது ஜம்பு. நியாயம்தானே?

வெறும் வெள்ளை நிறத்தால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஜம்பு ஆளானது. மலர் விட்டு மலர் தாவி மகரந்தம் உறிஞ்சும்போது ஜம்புவின் கண்ணீரால் தேனும் உப்பு கரித்தது.

நான் ஒரு வண்ணத்துப்பூச்சியா அல்லது ஒரு குட்டிப் பறவையா? ஜம்புவுக்குக் குழப்பமாக இருந்தது.

ஜம்புவுக்கு ஒரே ஒரு நண்பன் இருந்தான். வனத்தின் நடுவில் இருந்த ஒரு பெரிய மலையில் அமைந்திருந்த ஒரு சுனைக்கு அருகே ஒரு இளநீல மரம் வளர்ந்துகொண்டிருந்தது. அதுதான் ஜம்புவின் தோழன்.

வண்ணம் சார்ந்த வருத்தத்தை தனதாக்கிக்கொள்ளும் போதெல்லாம் அந்த இலைநீள மரத்தின் அடிவாரத்தில் ஓய்வெடுப்பதை ஜம்பு வழக்கமாகக் கொண்டிருந்தது.

நண்பனின் வேதனையைக் காண சகிக்காத மரம், விசித்திர ஓவியனை பற்றிக் கூறியது.

‘ஜம்பு, ஜம்பு, உனக்கு விசித்திர ஓவியன் உதவி செய்வான், தெரியுமா?’ என்றது இளநீல மரம்.

‘விசித்திர ஓவியனா? அட, யாரது? ஓவியன் என்றால் படம் வரைபவனா? எங்கிருக்கிறான்? எப்படி உதவுவான்?’ என்று கேள்விகளை அடுக்கியது ஜம்பு.

கேள்விகளால் திக்குமுக்காடிய இளநீல மரம் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு விசித்திர ஓவியனின் மாந்திரீக ஜாலத்தை விதந்தோதியது. அவன் இருக்கும் இடத்தை ஜம்புவுக்கு சொன்னது.

விசித்திர ஓவியன் தனக்கு வண்ணம் அளிப்பான் என்ற ஆவலில் ஜம்பு என்கிற வண்ணத்துப்பூச்சி பறந்தது, பறந்தது, பறந்துகொண்டே போனது. கடந்த காலத்தின் சுமை தந்த அழுத்தத்தில் பிறந்த வேதனையும் எதிர்கால நிவாரணத்தின் சாத்தியப்பாடு சார்ந்த நம்பிக்கையும் அது பொய்க்குமோ என்கிற பயமும் அதன் பாடலில் வெளிப்பட்டு எல்லா திசைகளிலும் எதிரொலித்தன.

வேகமாகப் பறக்க ஜம்பு என்ன பருந்தா? அது பல நாட்கள் செலவிட்டு வனத்தின் மறுபக்கம்  விசித்திர ஓவியன் வாழ்ந்த மர வீட்டை அடைந்தது.

மர வீட்டின் வாசலில் வீட்டைவிடப் பெரிதான ஒரு பாறை இருந்தது. அந்த பாறையின் மேல் ஒரு மனிதன் கையில் ஒரு கொத்து நெற்கதிர்களை பிடித்திருந்தான். அம்மனிதன் அந்தக் கொத்தை அப்படியும் இப்படியும் ஆட்டியவாறு இருந்தான்.

அவன் தலையில் ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு வண்ணத்தில் இருந்தது. கண்கள் இரண்டும் வெவ்வேறு வண்ணங்களில் இருந்தன. அதே போலக் காதுகளும்.

அவனை பார்த்ததும் அவன்தான் விசித்திர ஓவியன் என ஜம்புவுக்குப் புலப்பட்டது.

‘விசித்திர ஓவியனே, விசித்திர ஓவியனே, எனக்கு வண்ணம் தருவாயா?’ என்று ஜம்பு கேட்டது.

பேச வாயைத் திறந்த விசித்திர ஓவியன், சட்டென நிறுத்தி ஜம்புவின் பெயரைக் கேட்டான். ஜம்பு தன்னை வனத்தில் எல்லோரும் அழைக்கும் பெயரான ‘ஜம்பு’ என்ற பெயரைச் சொன்னது.

‘ஜம்பு, ஜம்பு, நான் உனக்கு வண்ணம் தருகிறேன், நீ எனக்கு ஒரு பாடல் பாடுவாயா?’ என்று விசித்திர ஓவியன் கேட்டான். அவன் பற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் இருந்தது.

ஜம்புவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து ஒரு நீண்ட பாடலைப் பாடியது. ஜம்பு பாடப் பாட விசித்திர ஓவியன் நெற்கதிர் கொத்தைத் தூரிகையாகக் கட்டத் துவங்கினான்.

ஜம்பு பாடப் பாட மழை மேகங்கள் திரண்டன, பரஸ்பரம் மோதின, பெருமழை பெய்தது. ஜம்பு பாடலை நிறுத்தியது. மேகங்கள் விலகி கதிரவன் வெளிப்பட்டான். ஏழு வண்ணங்களுடன் வானவில்லும் மெல்ல வெளிவந்தது.

நெற்கதிர் தூரிகையை வானவில்லின் வண்ணங்களில் தோய்த்து வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளுக்கு வண்ணம் கொடுத்தான் விசித்திர ஓவியன்.

வண்ணமே இல்லாமல் வாழ்க்கையில் பலவித இன்னல்களுக்கு உள்ளான வண்ணத்துப்பூச்சி, விசித்திர ஓவியனுக்கு நன்றி சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு பறந்தது, பறந்தது, பாடிக்கொண்டே பறந்தது. ஆனால் இம்முறை அதன் பாடலில் விகசித்தது புது வாழ்க்கை அளித்த நம்பிக்கையின் புத்துணர்வு.

முற்றும்