தயவுசெய்து

ப்ரிய நண்பர்களே, என்மீது நீங்கள்
ரோஜாப்பூக்களை தூவுங்கள், வேண்டாம்
என்கவில்லை. ஆனால்
தூவுவதற்கு முன்னதாக
முட்களை நீக்கிவிடவும்
என்கிறேன், அவ்வளவே.

சில குறிப்புகள்

ஏனெனில் இது குறிப்புகளின் காலம்.

*

சமகால சாகித்யம் குறித்த சாமுவேல் டெய்லர் காலரிட்ஜின் நகைச்சுவை கவிதை ஒன்றினை படித்தேன். ஆனால்…. இதில் சிரிக்க என்ன இருக்கிறது?

A Rhymester

Jem writes his verses with more speed
Than the printer’s boy can set ‘em ;
Quite as fast as we can read,
And only not so fast as we forget ‘em.

*

நாம் நன்றாக உன்னித்துப் பார்த்தோமானால், ஒரு கலைஞன் எப்போதும் தொடக்கத்தில் மட்டுமே சிறப்பான படைப்புகளைத் தருகிறான். பின்னர் பரிணாம வளர்ச்சி அடைந்து, விசயங்களின் உள்ளூடே பயணம் புரிந்து செறிவான படைப்புகளை உருவாக்கத் தொடங்குகிறான். ஆனால் தனது ஆரம்பகால வாசகர்களை இழந்துவிடுகிறான். சில சமயங்களில் திடீரென விசில் சத்தம் நின்றுவிடுகிறது.

*

என்னுடைய சிறந்த படைப்புகள் எனது சுமாரான படைப்புகளை விட மோசமாக இருக்கக் கூடாது. ஒரு படைப்பாளியாக இதுவே என் லட்சியம்.

*

ஒரு சிறுகதைக் கரு: அடிக்கடி ஒருவர் சட்டைப்பையிலிருந்து பணமும் வீட்டிலிருந்து சில பொருட்களும் காணாமல் போகின்றன. அவருக்கு வேலைக்காரி மேல் சந்தேகம் ஏற்படுகிறது. தொடர்ந்து கண்காணிக்கிறார். நீயும் கண்காணிக்குமாறு மனைவியிடமும் சிபாரிசு செய்கிறார். கடைசியில் தன்னுடைய சொந்த மகள்தான் அவற்றைத் திருடித் தன் காதலனுக்குக் கொடுக்கிறாள் என்று அவருக்குத் தெரிகிறது. உண்மையாக உழைக்கும் வேலைக்காரியை சந்தேகப்பட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவருக்கு ஏற்படுகிறது. நல்ல வேளை, எடுத்தது தன் மகள்தானே என்கிற உண்மையாலும் வேலைக்காரர்களை சந்தேகிப்பது தன் வர்க்க இயல்பு மட்டுமே என்கிற ஞானோதயத்தாலும் குற்ற உணர்வு நீங்கிச் சமாதானமடைகிறார்.

*

இணையத்தில் நாம் எழுதுவது/ஒரு விசயத்தைச் சொல்வது நம் கருத்தைத் தெருமுனைச் சுவரில் சுவரொட்டியாக ஒட்டிவைப்பது போன்றதாகும். அதை ஆங்காங்கே கிழித்துவிடுவார்கள். கிழிபட்ட இடங்களில் எல்லாம் முன்பே யாரோ ஒட்டிய சுவரொட்டிக் கிழிசல்கள் சம்பந்தமில்லாமல் தலையைக் காட்டும். கிழித்துக் கிழித்துக் கடைசியில் அர்த்தமில்லாத துண்டுகளே மிஞ்சும். இதில் எது கொடுமை என்றால், இந்தக் கந்தர்வ கோலத்திற்கு அடியில் நம் பெயர் மட்டும் கிழிக்கப்படாமல் இருக்கும்.

*

பெருவெடிப்பிற்கு முன் காலம் இருந்ததா? அல்லது பெருவெடிப்பிற்கு முன் காலம் எங்கே இருந்தது? ஏனென்றால் காலமும் வெளியும் யின்-யாங் பாம்புகளைப் போல் பின்னியுள்ளன. ஒன்று இல்லாமல் இன்னொன்றை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நம்மிடம் இதுதான் ஒரு பெரிய குறை. காலம் ஒரு பிராபஞ்சிக களிமண்ணைப் போன்றது. நாம்தான் அதற்கு நந்நமது இயல்புகளின்படி வடிவம் கொடுத்துக்கொள்கிறோம்.

*

பனியை வெள்ளைக்காரர்கள் சார்ந்த ஒன்றாகவே என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் தாராள எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இந்த எனது முன்முடிவு, எழுத்தாளனாகிய எனக்குத் தர்மசங்கடத்தை அளிக்கிறது. அமெரிக்கவாழ் வாசகர்கள் பனியையும் கருப்பர்களையும் அருகருகே வைத்து எடுத்த புகைப்படம் ஒன்றினை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பக் கோருகிறேன்.

முன்னிலைக் கவிதை

ஒரு ஊருக்குப் போனால் குறைந்தது நான்கு நாட்கள் தங்குகிறாய்
உனக்கு விருப்பமான உணவுகளையே எப்போதும் உண்ணுகிறாய்
நீ எட்டு கோப்பை தண்ணீர் குடிக்காத நாட்களில்லை
மழை பெய்யும்போது குடையோ ரெயின் கோட்டோ இல்லாமல்
வெளியே போக நீ விரும்புவதில்லை
நகைச்சுவையின்போது சிரிக்கிறாய்
கோபம் வந்தால் உளறுகிறாய்
உனக்கொரு துக்கம் என்றால் வார்த்தைகளைக் கொட்டி மகிழ்கிறாய்
வார்த்தைகள் உனக்கு அலுப்பதேயில்லை
உறவுகளைப் பற்றி ஆயிரம் பக்கம் கவிதை எழுதுகிறாய்
துரோகத்தின் கவர்ச்சி உனக்குப் புரிந்திருக்கிறது
துரோகம், தட்பவெப்பம், உருவகம், படிமம் என்கிறாய்
எப்போதும் யுத்தம் செய்துகொண்டிருக்கிறாய்
ஓயாமல் அரசியல் பேசுகிறாய்
உன்னையே தின்று வாழும் விசித்திரமாகவும் இருக்கிறாய் நீ
உன்னைப் பரிமாறிக்கொள்ளும் வழிவகைகளைத் தெரியும் உனக்கு
யாரும் பார்க்காத நேரங்களில் கண்ணாடிக்கு முன்பு நடித்துப் பார்க்கிறாய்
எழுதுவதற்கு வைத்த கையை உன்னால் எடுக்கவே முடிவதில்லை
கொஞ்சம் எழுதுவதை நிறுத்தினோமா, ஏதாவது படித்தோமா
என்பது தமிழில் உனக்குப் பிடிக்காத கேள்வி
இங்கு நீ என்று சொல்லிக்கொள்வது என்னைத்தான் என்பதையும் அறிவாய் நீ.

(பி.கு.: கலகலப்பானதொரு பேச்சு நடந்துகொண்டிருக்கிறது
சிரிப்புகளும் குவிந்த வண்ணமிருக்கின்றன
நீ குறுக்கிட்டு எளிய பங்களிக்கிறாய்
சபை அமைதியாகிறது)