பேயோன்

படித்ததில் பிடித்தவன்

வாழும் கணங்கள்

September 7th, 2010

முக ரோமத்தின் கடைசி மில்லிமீட்டரில் ஒரு பகுதியை மட்டும் சதைக்குள் மிச்சம் வைத்து சவரத்தை முடித்துத் தெருவில் இறங்கினேன். காற்றும் வெப்பமும் ஊடும் பாவுமாகக் கலந்திருந்தாலும் அப்போதுதான் சவரம் செய்து கழுவப்பட்டிருந்த முகவாயில் காற்று படும்போதெல்லாம் குளிர்ந்தது. அந்தக் குளிர்ச்சியையும் ஷேவிங் லோஷனின் மெல்லிய ரசாயன நறுமணத்தையும் அதைவிட மெல்லியதாக ரசித்தபடியே எனது கால்களை ஒவ்வொன்றாக எடுத்துவைத்துத் தெருவில் நடந்தேன். ஒரு காலைத் தரையிலிருந்து எடுக்கும்போது சமநிலை தவறி கீழே விழ வாய்ப்பளிக்காதபடிக்கு மறு கால் உடனே தரையிறங்கிவிடும் அதிசயத்தை ரசிக்காதிருக்க முடிக்கவில்லை.

தெரு முடியும் இடத்தில் ஒரு பெரிய மரம் பல்வேறு கிளைகளை நீட்டி என்னை வரவேற்றது. பார்த்ததும் நெகிழ்ந்தேன். இன்றுதான் முளைத்தது போல ஒரு புத்துணர்ச்சி உடனே என்னுடனான ஒரு பந்தத்தை நிறுவிவிடுகிறது. இந்த மரத்திற்கு அங்குமிங்கும் நகரும் வசதி இல்லை. அதன் உடலின் ஆயிரக்கணக்கான உறுப்புகள் சதா அழிந்துகொண்டும் உதிர்ந்துகொண்டும் இருக்கின்றன. இருந்தாலும் அந்த மரம் தொடர்ந்து தழைத்துக்கொண்டுதான் உள்ளது. வெயில் அடித்தால் காய்வதும் மழை பெய்தால் நனைவதும் காற்றடித்தால் அசைவதுமாக, எந்த நூற்றாண்டிலோ கொடுக்கப்பட்ட ஏதோ ஒரு அற்புத சாபத்தை நிறைவேற்றிக்கொண்டிருப்பது போல் நிற்கிறது அந்த மரம். மரங்களின் கடமையுணர்ச்சி, அசகாய உழைப்பு மற்றும் உறுதி ஆகியவற்றிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு இலையும் ஒரு பாடம்.

உடலில் துணி மூடாத இடங்களில் ஆங்காங்கே சிறு குளிர்ச்சிகள். தூறல் போடத் தொடங்கியிருந்தது. ரசிக்கலாமா ஒதுங்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கும்போது சாலை ஈரமாகிவிட்டிருந்தது. மழை என்றாலே ஈரம்தான். பல சிறு ஈரங்கள் சேரும் பெரிய, பரவலான ஈரம். இன்னும் கனத்துப் பெய்தால் ஓடும், தேங்கும், நனைக்கும் ஈரம். ஒரு திரவப் பனி போல் மேலே கவிந்துகொண்டிருக்கிறது மழையின் ஈரம். மர இலைகளும் மழைத் துளிகளும் நிலத்தில் விழுவதை ஒப்பிட்டுக்கொண்டேன்.

ஒரு முதியவர். வயது எண்பது இருக்கலாம். சைக்கிளில் சுக்கு காபி கேன் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். மழை காரணமாக நல்ல கூட்டம் இருந்தது. முகத்தில் ஒரு புன்னகையை ஓடவிட்டபடி ஒரே ஆளாக சுமார் 20 வாடிக்கையாளர்களைக் கையாண்டுகொண்டிருந்தார். வாழ்வின் அனுபவங்கள் ஏற்படுத்திய அந்த ஆழமான சுருக்கங்களின் கால்வாய்களில் மழைத் துளிகள் இறங்கி ஓடின. அவருக்கு சர்வ கண்டிப்பாகக் குடும்பம் இருக்கும். அன்றன்றைக்குக் கிடைக்கும் வருமானத்தில் பேரக் குழந்தைகளுக்கு இனிப்புகளையும் விளையாட்டுப் பொருட்களையும் அவர் வாங்கிச் செல்லக்கூடும். அம்மனிதர் அந்தத் தள்ளாத வயதிலும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தெருத் தெருவாக வியாபாரம் செய்துகொண்டிருந்தது எனக்குள் ஒரு இனம்புரியாத பெருமிதத்தைக் கிளறியது. இவரைப் போன்றவர்கள் வாழும் உலகில்தான் நாமும் வாழ்கிறோம் என்கிற புரிதல் புன்னகையைத் தருவித்தது. பத்து ரூபாயை அவர் கையில் கொடுத்துவிட்டு அவர் சில்லறையை எண்ணித் திரும்பத் தருவதற்குள் ரகசியமாக விலகி நடந்தேன். ஒரு அற்பத் திருப்தி நிறைவேறிய திருப்தி.

சாலையோர மழைக் குட்டை ஒன்றில் குடிசைப் பகுதிக் குழந்தைகள் இருவர் சட்டை கூட அணியாமல் குதித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். வரும் வழியில்தான் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் “தண்ணில வெளையாடாதடா கபோதி” என்று கண்டித்ததைப் பார்த்தேன். இருவேறு உலகத்துப் பெற்றோர்கள். நமது நடுத்தரவர்க்க பாதுகாப்பின்மை உணர்வை நம் குழந்தைகளுக்கு இளமையிலேயே புகட்டிவிடுகிறோம். அவர்களுடைய இளமைக்கு ஆயிரம் கவலைகளைக் கற்றுத் தருகிறோம். இப்படித்தான் நடுத்தரவர்க்கக் கவலைகள் மரபணு அமைப்பில் பதியப்பெற்று ஒரு வர்க்கத்தின் பரம்பரைக் குணாம்சமாக மாறுகின்றன. விளைவு, ஒரு பக்கம் குழந்தைகள் சேற்றில் விளையாடுகிறார்கள், இன்னொரு பக்கக் குழந்தைகள் எதையும் அனுபவிக்காமல் வீட்டில் தொலைக்காட்சி பார்த்து வளருகிறார்கள். இருவரும் பள்ளியில் சந்திக்கும்போது பகிர்ந்துகொள்ளும் அனுபவங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கின்றன.

மாலைக்கு முதுமை கூடிப் பார்வை மங்கி இருட்டிக்கொண்டது. வெளிச்சத்தின் அனைத்துக் கதவுகளையும் சாத்திவிட்டது போல் ஒரு இருட்டு. பூச்சிகளின் இசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. கூடவே ஏகாந்தத்தின் இரைச்சலும் குருவிகளின் கீச்சொலியும் ஓணான்களின் சரசரப்பும் எனது காலடி ஓசையும். தெருவோர எருக்கஞ்செடிகளின் தாழ்வான நீண்ட கிளைகள் கால்களில் தட்டுப்பட்டன. எருக்க மொட்டுகளை மனதால் உடைத்துக்கொண்டு நடந்தேன். அந்தக் கும்மிருட்டில் கண்களைத் திறந்தாலும் மூடினாலும் காட்சி ஒரு வண்ணத்தியதாகவே இருந்தது. காதுகள் கண்களாக மாறி ஒவ்வொரு சிறு சப்தத்தையும் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன. சில நொடிகளில் அங்கிருந்த உயிரினங்களும் வாயை மூடிக்கொண்டு தத்தம் வேலையைப் பார்த்துக்கொண்டு போயின. காதை அடைக்கும் நிசப்தம். அந்த நிசப்தத்தினைத் தட்டித் தட்டி வடிவம் கொடுக்கும் ஒலி போல் எனது காலடிச் சத்தம் மாறாத லயத்துடன் கேட்டுக்கொண்டிருந்தது. இருளும் நிசப்தமும் பிறப்பில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் போலும்.

இருளில் எதிரே இழுத்துக் கிடந்த சாலைக்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மங்கிய விளக்கொளியில் புகுந்தார்கள். இருவரும் தங்கள் எண்ணங்களைத் தாங்கள் பொதுவாக அறிந்த ஒரு மொழியில் பரஸ்பரம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர் பேசுவதும் அதை இன்னொருவர் கேட்பதும், பிறகு இருவருடைய பாத்திரமும் தலைகீழாகி பேசுபவர் கேட்பதும் கேட்பவர் பேசுவதுமாக, ஒரு தொலைக்காட்சித் தொடரில் இருவர் பேசும் காட்சி தெருவிற்கு இறங்கி வந்தது போலிருந்தது. இவர்களது உறவின் தன்மை குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். கணவன்-மனைவியாகவோ காதலர்களாகவோ இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு ஆணும் பெண்ணும் தெருவில் போகிறார்கள் என்றால் அவர்கள் தம்பதியாகவோ காதலர்களாகவோதானே இருக்க முடியும். மிஞ்சிப்போனால் மணமக்களாக இருக்கலாம். நாமுள்ள இடமப்படி. தெருவில் கணவன்-மனைவியே நடந்துபோனால் கூட அவர்களுக்கு இடையே ஏதோ உறவு இருப்பதாக சந்தேகப்படும் சமூகம் இது.

ஏதோ ஒரு வீட்டினுள்ளிருந்து குறுந்தொகைப் பாடல்கள் ஒலித்தன. நான் நெருங்குகையில் பாடல்கள் முடிந்து விளம்பரம் ஒலிக்கத் துவங்கியிருந்தது. தெருவில் இன்னும் சிலர் மிச்சமிருந்ததோடு அவர்கள் நடமாடிக்கொண்டும் இருந்தார்கள். எல்லோருமே அவரவர் நோக்கங்களுக்கேற்ப ஒவ்வோரிடத்திற்குச் சென்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் புரிந்துகொள்ளலாம். குறும்பட திரையிடல்கள் போன்ற நிகழ்வுகளுக்குத்தான் இவர்கள் தங்கள் வித்தியாசங்களை மறந்து ஒரே இடத்திற்குச் செல்லக்கூடியவர்கள். தொலைவில் எனது வீடு தெரிந்தது. உலகையே சுற்றி வந்தாலும் நம்முடைய வீட்டினை அடையும்போது அவரவருக்கு ஏற்படும் பரிச்சய ஆசுவாசம் மனதைக் கவ்விக்கொண்டது. இருளின் முடிவில் எனது தெரு தொடங்கிவிட்டிருந்தது.

அடைத்தாலும் தப்புவேன்!

July 29th, 2010

(என் விமர்சகர்களுக்கு, வைரமுத்து பாதிப்புடன்)

என் வறிய எதிரிகளே!

மழைக்கால வெயிலில் உங்களை
நினைத்தால்
உடல் கொஞ்சம் விறைக்கிறது.

உங்கள் முகவரியை
நீங்கள் ஏன் என்
நிமிராத வாலில்
எழுதிவிட்டுப் போகிறீர்கள்?

எருக்கம் பூவையும்
மல்லிகைப் பூவையும்
எப்படி உங்களால்
ஒரே நாறில்
ஒரே நேரத்தில்
கோர்க்க முடிகிறது?

இப்போதெல்லாம்
உங்கள் பேனா
எழுத்துக்களையும் எண்களையும் தவிர
வேறெதையும்
எழுதுவதில்லையே!

நீங்கள் தூவிய
பூக்கள் என் காலைத் தடுக்கியது.

நீங்கள்
தட்டிக் கொடுத்தபோது
என் சட்டையில் தையல் விட்டது.

வறிய எதிரிகளே!

பீடியால் சுட்டு – என்
வெள்ளத்தை வற்றச் செய்யத் திட்டமா?

என்ன செய்வீர்கள் என்னை?
பணமும் புகழும் சோறும்
இல்லாத தேசத்திற்கா
என்னை நாடு கடத்திவிட முடியும்?

பூண்டி நீர்த் தேக்கத்தில்
எனக்கான நீரைக்
களவாடிவிடவா முடியும்?

தமிழகப் பெட்டிக் கடைகளில்
எனக்கான தேன்மிட்டாய்களை
அமுக்கிவிடவா முடியும்?

எழுதிக்கொள்ளுங்கள்
எதிரிகளே!

என்னைச் சிறையிலடைத்தாலும்
நான் கம்பியிடம் கவிதை பாடி
வெளியே வந்துவிடுவேன்.

என் வறிய எதிரிகளே!

நீங்கள் என் மேல் எறிந்த
தீப்பந்தங்களைக்
கொண்டு நான் முதுகு
சொறிந்துகொள்கிறேன்.

என் மீது வீசும் காகித
அம்புகளால் நான் காது
குடைந்துகொள்கிறேன்.

என் மானம் அறிவு தொட முடியாத
தூரத்தில் இருக்கிறது.
சமூகத்தின் சம்மதத்தோடு
நான் சாகாமல் இருக்கிறேன்.

என் பென்சிலுக்கு ரப்பர் இல்லை.

என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.

என் கவிதைகளை
பல்லிகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுப் போவேன்.

என் எழுத்து
படிக்கும் மக்களின் தலையெழுத்து!

என் வறிய எதிரிகளே
என் இதயத்தைச் சொறியாதீர்கள்.

பேண்ட்டைக் கிழித்து
பெர்முடாஸ் ஆக்கிவிடலாம் என்று
பிழை செய்யாதீர்கள்.

சில நூற்றாண்டுகளுக்குத்
தேவையான தாட்களை – என்
கொடவுனில் நான்
சேமித்து வைத்திருக்கிறேன்.

(வைரவரிகளில் ஒரு பகுதி: இவள் வியந்து நிற்கின்றாள்!)

கடிதங்கள்

July 19th, 2010

பிற்கால நூலாக்கத்திற்காக, திட்டமிட்ட இலக்கியத் தரத்துடன் நான் எழுதிய கடிதங்களில் மூன்று.

*

அன்பின் ஜெயக்குமார்,

பாராட்டுதல்களுக்கு நன்றி. நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘மரண வீட்டின் குறிப்புகள்’ தற்போது கைவசமில்லை. எங்கோ அலமாரியில் ஏதோ மூட்டைக்குள் கிடக்கிறது. தேடி எடுக்க நேரமில்லை. அதை இரவல் பெற்றுக்கொண்ட ஒரு நண்பர் தில்லிக்கு மாற்றலாகிக் கையோடு எடுத்துச் சென்றுவிட்டார். பஸ்ஸில் தவற விட்டுவிட்டேன். இந்த விதி நீங்கள் கேட்ட பிற நான்கு நூல்களாலும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

உங்கள் நிதிப் பிரச்சினை எனக்குக் கலக்கமளிக்கிறது. நீங்கள் தொடர்ந்து என்னிடம் ஓயாமல் பணம் கேட்டுக்கொண்டேயிருக்கும் நிலைமை மாறும், நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். கடிதப் போக்குவரத்துச் செலவாக இவ்வார இறுதியில் ஐம்பது ரூபாய்/- ஒரு வாசக நண்பரின் மூலம் கொடுத்தனுப்புகிறேன். தயங்காமல் பெற்றுக்கொள்ளுங்கள்.

இப்பவும் மணி 11.20 ஆகிறது. சென்ற வாரம் இதே நேரத்தில் உங்கள் முந்தைய கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது அதில் நீங்கள் கேட்டிருந்த ஆழமான கேள்விகளைப் பலர் கேட்கக் கேட்டிருக்கிறேன். இம்மாதிரியான கேள்விகள்தாம் நமக்கென ஒரு தனித்துவ அடையாளத்தைத் தருபவை. கேள்விகள் கேட்பதை மட்டும் நாம் நிறுத்திவிடக் கூடாது. உதாரணமாக, சமகால வாழ்வியலில் மனிதன் கால்களை எதற்காகப் பயன்படுத்துகிறான்? நிற்க. அடுத்த இருவாரங்களுக்கு நான் ஊராந்திரம் போவதால் கடிதம் பெற நிலையான முகவரி இருக்காது. குழந்தை இலக்கியனுக்கு அன்பு முத்தங்கள்.

வாழ்த்துக்களுடன்
பேயோன்

* * *

அன்பின் சுலைமான் அபெக்கே,

உங்கள் அளவிற்கு ஆங்கிலப் புலமை எனக்கில்லாமையால் தமிழிலேயே எழுதுகிறேன். நீங்கள் ராஜ குடும்பத்தவர் என்பதால் இதை யாரிடமாவது மொழியாக்கம் செய்து வாசித்துக்கொள்வதில் சிரமம் இருக்காது என நம்புகிறேன்.

உங்கள் உறவினர் மரணப் படுக்கையில் இருப்பது குறித்த உருக்கமான கடிதம் கண்டேன். மகிழ்ச்சி. தமிழ் எழுத்தாளர்கள் இத்தனைப் பேர் இருக்கையில் நீங்கள் என்னிடம் உதவி கேட்டிருப்பது நெகிழவைக்கிறது. நைஜீரியாவில் உள்ள எனது நண்பர் கிரி சொல்லித்தான் உங்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கலாமா? கொஞ்சம் போல் வறுமையில் திண்டாடும் ஒரு முன்னணி தமிழ் எழுத்தாளன் என்ற அறிமுகமே எனக்குப் போதும்.

சகமனிதனுக்கு உதவாத ஒரு எழுத்தாளன் என்ன எழுதியும் பயனில்லாத காரணத்தால் நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். உங்கள் பணம் ரூபாய் 20 மில்லியன் டாலர் வங்கியில் முடங்கியிருப்பது உங்கள் மனதை எந்தளவிற்குப் பாதித்திருக்கும் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு டால்ஸ்டாய் நாவல் படித்துக்கொண்டிருக்கையில் பக்க அடையாளமாக வைத்த 100 ரூபாய் நோட்டு காணாமல் போனதால் 10 நிமிடம் தூக்கத்தை இழந்த அனுபவம் உண்டு எனக்கு.

இந்தத் தொகை எனது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டபின் நான் அதை ஏமாற்றி எடுத்துக்கொள்ள வேண்டாம் என நீங்கள் கெஞ்சியிருப்பது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தவில்லை. அவ்வளவு பெரிய தொகையாக இருக்கும்போது நீங்கள் கொஞ்சினால்தான் ஆச்சரியம். நான் ஒரு நடுத்தரவர்க்கத்தினன். 20 மில்லியன் என்ன, 19 மில்லியனைக்கூட வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று எனக்குத் தெரியாது. உண்மையான எழுத்தாளர்களால் பெரிய பண மோசடிகளைச் சாதித்துவிட முடியாது.

நீங்கள் கூறும் திரு. ஜோசப் மாரா தார்மீக ரீதியில் தனித்துவ மனிதராகத் தென்படுகிறார். இந்த நைஜீரிய பாதுகாப்புத் துணைச் செயலரே என்னைத் தொடர்பு கொள்வார் எனில் பணப் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. 25 சதவீதத்தை எனக்குத் தருவதாகக் கூறியுள்ளீர்கள். நான் பார்த்த வரை 30 சதவீதம்தான் நைஜீரிய சந்தை நிலவரம். இருந்தாலும் உங்களுக்குள்ள சூழ்நிலை காரணமாக நான் பேரம் பேச விரும்பவில்லை. அந்த நேரத்தில் நான் இன்னொரு கடிதம் எழுதிவிடுவேன். எனவே உங்கள் வாழ்வாதாரத்திற்குரிய பணம் உங்களைச் சேர வேண்டியது என்னுடையதும் திரு. ஜோசப் மாராவினுடையதும் பொறுப்பாகும்.

உலகம் சுருங்கச் சுருங்க மனிதர்களிடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டிருந்தால் கடைசியில் மனிதர்கள் உலகிற்கு வெளியே சென்றுவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும். உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் ராயல் வங்கியால் நேரடியாக உங்களுக்கு உங்கள் நாட்டிலுள்ள வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்ப முடியாதது இந்தப் பரஸ்பர மனித அவநம்பிக்கையைத்தான் காட்டுகிறது.

இன்றைக்குச் சற்று வேலையாக இருக்கிறேன். திங்கட்கிழமை (15.03.2010) காலையன்று நீங்கள் கொடுத்த ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் 20,000 ரூபாய்/- செலுத்திவிடுகிறேன். உங்கள் கைக்குப் பணம் வந்த அடுத்த நொடியே எனக்குச் சேர வேண்டிய பணத்தை அனுப்பிவிட்டால் போதும். இனியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எச்சில் கையால் காக்காய் விரட்டும் ஒரு செயலாக இது எனக்கு இருந்துகொள்ளட்டும்.

உதவுதல் நாடி,
பேயோன்

* * *

அன்பின் ரூபேஷ்,

பாராட்டுதல்களுக்கு நன்றி. 2004-ல் ஷாங்காயின் புகழ்பெற்ற ஷாங்காய் மக்லெவ் ரயில் ஓடத் தொடங்கியது. மக்லெவ் (Maglev) என்பது Magnetic Levitation என்பதன் சுருக்கமாகும். இந்த வகை ரயிலில் சக்கரங்கள் இருக்காது. காரணம், அவை மின் மற்றும் காந்த சக்திகளால் இயங்குகின்றன. உலகின் முதல் வணிக மக்லெவ் ரயில் 1984-ல் இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாமில் அறிமுகப்படுத்தப்பட்டது. மணிக்கு 42 கி.மீ. வேகத்தில் ஓடிய இந்த ரயில் 1995-ல் நம்பகத்தன்மை மற்றும் வடிவமைப்புப் பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டது. 2003-ல் ஜப்பானின் மக்லெவ் ரயில் மணிக்கு 361 கி.மீ. வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்தது. இருந்தாலும் அதற்குப் பின்பு வந்த ஷாங்காய் மக்லெவ் ரயில் மணிக்கு 431 கி.மீ. வேகத்தில் ஓடி அந்தச் சாதனையை முறியடித்தது. உலகிலேயே மிக வேகமான இந்த ரயில்கூட மின்சக்தி இன்றி ஓடாது. அது போலத்தான் என்னைப் போன்ற எழுத்தாளர்களும் உங்களைப் போன்ற வாசகர்களின் நேர்மறைக் கருத்துக்களைச் சார்ந்திருக்கிறோம்.

பொதுவாகப் பாராட்டுகள் குவிந்தாலும் அவ்வப்போது சில விமரிசன முட்கள் லேசாகவாவது குத்தத் தவறுவதில்லை. அத்தகைய சூழ்நிலைகளில் “தல, எப்புடி தல!!!!”, “முடியல” போன்ற உங்களுடைய வார்த்தைகளே மனதிற்கு இதம் தந்து படைப்பூக்கம் தொடர்ந்தியங்க உதவுகின்றன. நீங்கள் கேட்டதற்கிணங்க எனது ‘ஆட்டோகிராப்’பை இணைத்திருக்கிறேன். அதை இக்கடிதத்தின் இறுதியில் “வாழ்த்துக்களுடன்” என்கிற வார்த்தைக்குக் கீழ் பார்க்கலாம். வெள்ளி விசில் மட்டும் சாத்தியமில்லை.

தினமும் சுமார் 20 பக்கங்களுக்குக் குறையாமல் கடிதம் எழுதும் உங்களைப் போல் பலரும் எனக்கு தினமும் சுமார் 20 பக்கங்களுக்குக் குறையாமல் கடிதம் எழுதுகிறார்கள். அத்தனையையும் படிப்பது சாத்தியமல்ல. அதனால்தான் உங்கள் தோழியுடனான பிரச்சனை என் கவனத்திற்கு வரவில்லை. கடிதங்களையே அன்றாடப் போக்கில் 200 பக்கங்களுக்கு மேல் படிக்க வேண்டியிருந்தால் படைப்புச் செயல்பாடுகளுக்கு நேரம் இருக்காது. நான் எழுதுவது குறைந்தால் அது உங்களையும்தானே பாதிக்கும். அதனால் எனக்குக் கடிதம் எழுதும்போது அதில் என்னைப் பற்றி எங்கெல்லாம் வருகிறதோ அந்த இடங்களை மஞ்சள் மார்க்கரால் ஹைலைட் செய்துவிட்டால் படித்து நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ள வாகாக இருக்கும்.

தயவுசெய்து என் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்காதீர்கள். படித்தாலும் மறுவாசிப்புச் செய்ய புதிதாக வாங்கிப் படியுங்கள். இதை எனக்குத் தனிப்பட்ட முறையில் செய்யும் பண உதவியாகக் கருதிக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்களுடன்
பேயோன்

கனவினூடே

July 9th, 2010

சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் பேருந்தை விட்டு ஒவ்வொரு ஆளாக இறங்குகிறார். பேருந்து, ஐந்து ரூபாய் நாணயங்களை டயர்களாகக் கொண்டு ஓடுகிறது. பேருந்திலிருந்து இரண்டடி தூரத்தில் பையுடன் ஒரு வலது கை போகிறது. அந்தக் கையுடன் இணைக்கப்பட்டுள்ள குண்டு மனிதர் நான் பார்வையிலிருந்து மறையும் வரை என்னை முறைக்கிறார்.

கட்டணச் சீட்டைக் கிழித்து நீட்டும் நடத்துநரின் விரல்கள் தீக்குச்சிகள் போல் மெலிந்திருக்கின்றன. பழைய ஒரு ரூபாய் நாணயங்களின் எடையைத் தாங்க முடியாமல் விரல்கள் வளைகின்றன. கட்டணச் சீட்டினால் துண்டாகி விழும் நடுவிரல் நடத்துநராலேயே தெரியாமல் மிதிக்கப்படுகிறது. ‘பரவாயில்லை, வீட்டில் இன்னும் நாலு வைத்திருக்கிறேன்’ என்று நடத்துநர் 10 ரூபாய் காந்தியிடம் சொல்கிறார்.

அருகில் காலைப் பரப்பி உட்கார்ந்திருப்பவரின் பகுதி இருக்கை அவரது வீட்டு சோபாவாக இருக்கிறது. பேருந்தை U போல் வளைத்துத் திருப்பும் ஓட்டுனர் தன் முன்னே தன் பேருந்தின் பின்புறத்தைக் கண்டு வேகமாய் அதைத் தவிர்த்துப் பசுஞ்சொல் உதிர்க்கிறார். தவிர்த்ததில் பேருந்து மோதி வாலிபர் சாவு. உடனே அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக சாகிறார்.

தினமும் பேருந்து நிலையத்தில் பார்க்கும் பெண் நிர்வாணமாக வந்திருக்கிறாள் எனினும் தலை, கால் தவிர மற்ற பகுதிகளைக் காணவில்லை. அமெரிக்க நடிகரின் முகச் சாயல் கொண்ட, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சரியாக உலராத முகம் கொண்ட, காலையில் ஹிண்டு பேப்பர் படிக்கும் பெரியவர் என்னைப் பார்த்து சிநேகமாய் சிரிக்கிறார், அநேகமாய் காரணத்துடன்.

இருக்கைகளிடையே அவசரமாக ஒரு ஆட்டோ புகுந்து ஓடுகிறது. பக்கத்து இருக்கையில் இருப்பவர் அதிலிருந்து இறங்கி ஆட்டோ ஓட்டுநரிடம் காசு கொடுக்கிறார். ஆண் பயணி ஒருவர் யுரேகா விலாஸ் நிறுத்தத்திற்குக் கட்டணச் சீட்டு கேட்கிறார். நடத்துநர் அவரிடம் கட்டணச் சீட்டிற்கு பதிலாகப் பேருந்தின் பிரேக்கைத் தருகிறார். (என் பேருந்தின் எண்ணைக் கொண்ட இன்னொரு பேருந்தைப் பற்றிய எனது வேறொரு கனவு எதிரில் வர, ஓட்டுநர்கள் நலம் விசாரித்துக்கொள்கிறார்கள்)

பிறிதொரு நிறுத்தத்தில் அசட்டுச் சிரிப்புடன் ஏறிய பலரில் அச்சிரிப்பு காணப்படாத முகம் வாய்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் என்னை உற்றுப் பார்க்கிறான், 55 ஆண்டுகள் கழித்து என் கனவில் அவன் மனைவி பேருந்தை விட்டு இறங்கும் விதத்தைப் பற்றி நான் எழுதப் போவது தெரிந்துவிட்டது போல. காலி கிளாஸை அவனிடம் கொடுத்துவிட்டுக் கடையிலிருந்து வெளியேறி சாலையைக் கடக்கிறேன். நான் பயணிக்கும் பஸ் மோதி நான் சாவு. பயம் உலுக்கிக் கனவு கலைந்து கண் விழிக்கிறேன் மூன்றாம் பக்கத்தின் பன்னிரண்டாம் பத்தியில்.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar