ஜென் கதைகள் மூன்று

முன்குறிப்பு: ஜென் கதைகள் என்று இணையத்தில் தேடி இந்த வலைத்தளத்திற்கு வருபவர்களுக்கு: இங்குள்ள ஜென் கதைகள் நானே சொந்தமாக எழுதியவை. எனவே அவற்றை அனுமதியின்றி சொற்பொழிவுகளில் பயன்படுத்துவதோ ஜென் கதைத் தொகுப்புகளில் சேர்ப்பதோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நிரப்புதல்

துறவி ரியோகான் ஒரு மலை உச்சியிலிருந்து சிறு கற்களை ஒவ்வொன்றாக எறிந்துகொண்டிருந்தார். அவரை சாப்பிட அழைக்க வந்த இளம் சீடன், “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் குருவே?” என்று கேட்டான். “இந்தப் பெரும்பள்ளத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறேன்” என்றார் ரியோகான். “உங்களுக்கென்ன பைத்தியமா? இது சாத்தியமா?” என்றான் சீடன். அதற்கு ரியோகான், “அதை நீ பள்ளத்திடம் அல்லவா கேட்க வேண்டும்?” என்றார்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாமே செய்வதாக நம்புவது முட்டாள்தனம்.

ஊற்றுதல்

மெய்ஜி காலத்து ஜென் குருவான தனகவாவைப் பார்க்க ஒரு பல்கலைக்கழகப் பேராசியர் வந்தார். ஜென் பற்றிய முழுமையான விளக்கத்தை அளிக்கும்படி தனகவாவிடம் பேராசிரியர் கேட்டுக்கொண்டார்.

தனகவா பேராசிரியருக்காக ஒரு தேனீர்க் கோப்பையை எடுத்துவைத்து அதில் தேனீரை ஊற்றினார். கோப்பை நிரம்பியது. ஆனால் தனகவா நிறுத்தாமல் ஊற்றிக்கொண்டிருந்தார். பேராசிரியர் திகைத்துப் போய் பார்த்துக்கொண்டிருந்தார். தனகவா இன்னொரு குடுவையில் மேலும் தேனீர் வரவழைத்து தொடர்ந்து அதே கோப்பையில் நிரம்பி வழிய ஊற்றினார். பேராசிரியர் பொறுமையிழந்து, “அதுதான் நிரம்பிவிட்டதே. பிறகு ஏன் விடாமல் ஊற்றுகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வாழ்வில் அபத்தங்களுக்கு முடிவே கிடையாது” என்றார் தனகவா.

சுமத்தல்

ஒரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகளை உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்டையைத் தாண்டிச் செல்ல முடியாமல் நின்றிருந்தாள். மூத்த துறவி அவளிடம் சென்று அவளைத் தூக்கிக்கொண்டு சாலையின் மறு பக்கத்தில் இறக்கிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

“துறவிகளான நாம் ஒரு பெண்ணைத் தொடலாமா?” என்று இளம் துறவி மூத்த துறவியிடம் கேட்டார். “இது தெரிந்தே கேட்கிற கேள்வி மாதிரி இருக்கிறதே” என்றார் மூத்த துறவி.

அறிந்ததைக் கடந்து புதியதை அறி என்று ஜென் கூறுகிறது.

வரும் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்

வரும் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் 124 புத்தகங்கள் என்னுடையவை வெளிவருவனவாகத் திட்டமிருந்தது. பல சிக்கல்களால், இடைப்பட்ட பயணங்களால் 106 புத்தகங்கள்தான் எழுத முடிந்தது. இருந்தாலும் வட்டமாக நூற்றியெட்டு புத்தகங்கள் எழுதிக் கொடுங்கள் என்று பதிப்பாளர் கேட்கவே, சட்டென ஒரு கவிதைத் தொகுப்பும் கட்டுரைத் தொகுப்பும் கொடுத்தேன். நல்ல வேளையாக அவர் கேட்டது ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு. பிரதி ஞாயிறு நான் என் மகனுக்கு ஹோம்வோர்க் செய்து தருவேன். அந்த நேரத்தில் அவன் எனக்குச் சில கவிதைகளோ கட்டுரைகளோ எழுதித் தருவான். ஒரு புத்தகத்தை அவனை எழுத விட்டாயிற்று.

பதிப்பகத்தினர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய எனது நூல்களின் பட்டியலை அப்படியே கீழே தருகிறேன். நான் தொடாத விசயங்களே அவ்வளவாக இல்லை என்றுவிடலாம். இந்த 108 புத்தகங்களுக்காக இரண்டு ஸ்டால்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்டால்களில் கூட்டத்தை நிர்வகிக்க பாப்பாசி பத்து என்.சி.சி. மாணவர்களை நியமித்துள்ளது.

வரும் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் என்னுடைய நூல்கள்:-

1. ஒரு லோட்டா ரத்தம் (நாவல்)
2. தேர்ந்தெடுத்த கவிதைகள் (கட்டுரைகள்)
3. பேபல் இவ்வாறு பேசுகிறான் (கட்டுரைகள்)
4. உற்பத்தி (பத்தி தொகுப்பு)
5. உருவகக் கதைகள் (சிறுகதைகள்)
6. தாங்களும் யானும் (நேர்காணல்கள்)
7. அன்புள்ள கடிதங்களே (கடிதங்கள்)
8. பூபாளம் பாடும் பல்லவி (இசை பற்றிய கட்டுரைகள்)
9. பேயோன் 2000 (ட்விட்டர் நுண்பதிவுகள்)
10. என் வாழ்க்கை (நாவல்)
11. இழவு (நாவல்)
12. படலம் (நாவல்)
13. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (நாவல்)
14. பூனை கோர்த்த மாலை (கட்டுரைகள்)
15. நிமித்தங்களின் நதியில் (நெகிழுரைகள்)
16. உரையுடைமை (செய்யுள் உரைத் தொகுப்பு)
17. ஒரு பேனாவின் காமிரா (திரைக்கதைத் தொகுப்பு)
18. பேயோனின் குற்றமும் தண்டனையும் (மொழியாக்க நாவல்)
19. நான்காம் சுழி (சிறுகதைகள்)
20. விண்ணை எட்டும் தூரிகை (ஓவியம் பற்றிய கட்டுரைகள்)
21. நீங்களும் எழுதலாம் PHP (சுயஉதவி நூல்)
22. அ முதல் னௌ வரை (தமிழ் எழுத்துகள் தொகுப்பு)
23. சுயநானூறு (செய்யுள் தொகுப்பு)
24. நிறைய பக்கங்கள் (கட்டுரைத் தொகுப்பு)
25. எவன் எவனோ (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்)
26. தாம்பரம் முதல் திருவான்மியூர் வரை (பயண நூல்)
27. மீள்பாரதி (பாரதி ஆய்வு நூல்)
28. வடகிழக்கு சினிமா (கட்டுரைகள்)
29. நூன்முகம் (ஃபேஸ்புக் இடுகை தொகுப்பு)
30. அன்னிய தரிசனம் (சிறுகதைகள்)
31. ஆறு கவிதைகள் (கவிதைகள்)
32. காதல் கவிதைகள் முழுத் தொகுப்பு
33. தகவல் பிழை (பத்தி தொகுப்பு)
34. ஐரோப்பியச் சிறுகதைகள் (சிறுகதைகள்)
35. வறுமைக் கோடு (கோட்டோவியத் தொகுப்பு)
36. எதெல்லாம் இலக்கியம்? (கட்டுரைகள்)
37. வண்ணக் கலரி (ஓவியத் தொகுப்பு)
38. ஊராந்திரம் (பயண நூல்)
39. ஜப்பான் முன்னேறியது எப்படி? (அபுனைவு)
40. சங்க இலக்கியத்தில் இலக்கியச் சங்கங்கள் (ஆய்வு நூல்)
41. இப்படி திடீரென்று நாளை காலைக்குள் இன்னொரு புத்தகம் எழுதச் சொன்னால் எப்படி? (கட்டுரைகள்)
42. கதகதக்கும் உலகம் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)
43. ஜெர்மானிய பதின்பருவத்தினர் மத்தியில் சூயிங்கம் பயன்பாடு (ஆய்வு நூல்)
44. இன்னும் எத்தனை (கவிதைகள்)
45. கையால் எழுதுபவன் (உலக இலக்கிய கட்டுரைகள்)
46. 130 கிராம் (சிறுகதைகள்)
47. இலக்கண இம்சைகள் (கட்டுரைகள்)
48. இன்னும் வரும் (பத்தி தொகுப்பு)
49. பண்பாட்டின் அறிகுறிகள் (பயண நூல்)
50. வராக பர்வம் (நாவல்)
51. இம்ப்ரஷனிசம் முதல் ஃபாவிசம் வரை (அபுனைவு)
52. பாரதி யார்? (சிறு புத்தகம்)
53. எதெல்லாம் பின்நவீனத்துவம்? (கட்டுரைகள்)
54. தலைப்பு நல்லதாகக் கிடைக்கவில்லை. நீங்களே ஏதாவது ரம்மியமான தலைப்பாக யோசித்து வைத்துவிடவும். நான் பிறகு பார்த்துக்கொள்கிறேன். சில படங்கள் மின்னஞ்சலில் நான் அனுப்பினேன் பார்த்தீர்களா? கருத்து சொல்லுங்கள். புகைப்படத் தொகுப்பும் போடலாமென உத்தேசம். எப்படி வசதி? மற்றவை போனில் – பேயோன். (கட்டுரைகள்)
55. ஏர்டெல் ஜூனியர் சூப்பர் சிங்கர் – சீசன் 1 (திரைக்கதை-வசனம்)
56. நீயா நானா (திரைக்கதை-வசனம்)
57. விசுவின் அரட்டை அரங்கம் (திரைக்கதை-வசனம்)
58. ஜெயா செய்திகள் (சிறுகதைகள்)
59. வங்க சினிமா (கட்டுரைகள்)
60. கனவுகளின் இரவு (நெகிழுரைகள்)
61. டின்னர் செட் முதல் வால் கிளாக் வரை: சமகால கிப்ட் ஐடியாக்கள் (சுயஉதவி நூல்)
62. ஆடவர் சுயஉதவி (சுயஉதவி நூல்)
63. கட்டுரைகள் (கட்டுரைகள் (கட்டுரைகள்)) (கட்டுரைகள்)
64. ஒவ்வொரு இசத்திற்கு ஒவ்வொரு கதை (சிறுகதைகள்)
65. சாப்ளின் என்னும் பிறவி (வாழ்க்கை வரலாறு)
66. ஜென் திருத்தலங்கள் (தல புராண தொகுப்பு)
67. சிதையளவு நெருப்பு (பத்தி தொகுப்பு)
68. மலையாள சினிமா (கட்டுரைகள்)
69. மீந்தவனின் விழிகள் (நெகிழுரைகள்)
70. சட்டத்தில் இடமிருக்கிறது (கட்டுரைகள்)
71. வளம் தரும் வாஸ்து (சுயஉதவி நூல்)
72. நியூமராலஜி: பெயரெழுத்துகளை மாற்றி நீங்களும்கூட கலக்கலாம் (சுயஉதவி நூல்)
73. அதையும்தான் பார்த்துவிடுவோமே! – @borehayயுடன் சில உரையாடல்கள்
74. தூரத்து சொந்தம் (திரைக்கதை-வசனம்)
75. நைஜீரியா: பணத்தோட்டம் (சுயஉதவி நூல்)
76. தமிழ் அறிவியல் நூல்களில் தற்செயலாக அமைந்த அடுக்குத் தொடர்கள் (ஆய்வு நூல்)
77. இந்திய வரலாறு: நீங்களும் எழுதலாம் அதை (சுயஉதவி நூல்)
78. நோக்கியா 2330 பயனர் கையேடு (சுயஉதவி நூல்)
79. இந்தா பிடி இன்னும் ஐம்பது (கவிதைகள்)
80. இரைப்பை நோய்களுக்கு சைக்ளோஸ்போரின் பயன்பாடு (அபுனைவு)
81. ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன் (கட்டுரைகள்)
82. எது எடுத்தாலும் இலக்கியம் (குறுநாவல்கள்)
83. பேயோனின் கேம்பிரிட்ஜ் மாணாக்கர் அகராதி (மொழியாக்கம்)
84. ஆஸ்கார் ஒயில்டு பொன்மொழிகள் (மொழியாக்கம்)
85. மறவன் புலவு: தமிழர் உணவுகள் (கட்டுரைகள்)
86. பாம்புத் தைலம் (கட்டுரைகள்)
87. 87 (நாவல்)
88. உயர்கவித்துவம் (கவிதைகள்)
89. நியான் ஹோலோகிராம் (அறிபுனை நாவல்)
90. கி.பி. எதிர்காலம் (அறிபுனை சிறுகதைகள்)
91. போடி உள்ளே!: தமிழ் சினிமாவில் பெண்கள் (ஆய்வு நூல்)
92. 108 உலக இலக்கிய நாவல்கள் (கட்டுரைகள்)
93. முன்னேறிடு சுயமே! (சுயமுன்னேற்ற நூல்)
94. சிற்பங்களின் இந்தியா (கட்டுரைகள்)
95. தீராத கப்பங்கள்: ஐ.டி. ரிட்டன்ஸ் செய்வது எப்படி (சுயஉதவி நூல்)
96. மை தீர்ந்த மனம் (கவிதைகள்)
97. பேயோனின் சண்டையும் சமாதானமும் (மொழியாக்கம்)
98. ரோடு போடும் கோடுகள் (கோட்டோவிய தொகுப்பு)
99. ஓ. ஹென்றி கதைகள் (மொழியாக்கம்)
100. அது ஒரு செவ்வாய்க்கிழமை (தூர்தர்ஷன் நாடகத் தொகுப்பு)
101. அங்கே என்ன சத்தம்?: மேலை இசை வடிவங்கள் (கட்டுரைகள்)
102. பேயோன் நாடகங்கள் (நாடகங்கள்)
103. கானலைத் தேடும் தண்ணீர்கள் (நெகிழுரைகள்)
104. பவர்பாயிண்ட் உங்கள் நண்பன் (சுயஉதவி நூல்)
105. சொற்களின் தலைநகரம் (கட்டுரைகள்)
106. ஓட்டல் துறை வேலைவாய்ப்புகள் (சுயஉதவி நூல்)
107. திசை காட்டிப் பறவை – 2
108. சிகரம் தொட்ட சிலபலர் (சுயமுன்னேற்ற நூல்)

குரு லின் ஷி வாங்

“முதுநிலை ஜென் துறவி லின் ஷி வாங் ஒரு சமயம் ஒரு மடாலயத்திற்குச் சென்றார். அங்கு ஓர் இளந்துறவி போன்சாய் மரமொன்றிற்கு நீரூற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். “இதென்ன இந்த மரம் வளரவேயில்லை? இதற்கு சோறு போட மாட்டீர்களா?” என்றார் வாங்.” “குரு லின் ஷி வாங்” என்று திருத்தினார் குரு லின் ஷி வாங்.”

சம்பவக் காலை

புலர்காலை வேளை நாலரை மணி இருக்கும். ஏழு மணிக்கே வெயில் சுள்ளென்று அடிப்பதன் சாத்தியத்தைத் தன்னுள் பதுக்கியிருந்தது சூரியன். என் வீட்டுத் தெருவிற்கு அடுத்த பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் என் நண்பர் ஒருவர் பேருந்துக்காகக் காத்திருந்தார். அவர் முகத்தில் கவலை நிரந்தரமாக ரேகை போட்டிருந்தது. ஆனால் அன்றைய கவலை ரேகைகளுக்கு ஒரு அவசர காரணம் இருந்தது. அன்று வாடகை தினம். பத்து மணிக்கு வீட்டுக்காரன் வந்து வாடகை கேட்பான். செல்வம் அதற்குள் வந்து பாக்கியைக் கொடுத்துவிடுவானா? இம்மாத சம்பளத்தை முன்பணமாக வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டார் என் நண்பர். வாடகை தரத் தாமதமானால் வீட்டுக்காரனின் நடத்தை போகிற போக்கு பற்றி முன்பே செல்வத்தை நண்பர் எச்சரித்திருந்தார். ஒருவேளை வழக்கம் போல் செல்வம் வராமல் கழுத்தறுத்துவிட்டால்? நினைத்ததும் குடல் புரண்டு படுத்தது நண்பருக்கு. சரி, வீட்டுக்காரன் பத்து மணிக்குதானே வருவான், எட்டு மணிக்கே நான் போய் செல்வத்தைப் பார்த்துப் பணத்தை வாங்கிவிடுகிறேன் என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார். அப்போது அந்தப் பக்கமாக யாரோ வேகவேகமாகத் தன் திசையில் வருவது போல் தெரிந்தது நண்பருக்கு. அந்த உருவமும் நடையின் பாணியும் நண்பரின் மனதில் எதையோ மீட்டியது. அந்த நபர் அருகில் வரத் தொடங்கியதும் பரிச்சயம் உறுதிப்பட்டது. அது நான்தான். வியர்க்க விறுவிறுக்க, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, கீழ் உதடெல்லாம் பிதுங்கி, கைவீசப்பா கைவீசு என்கிற ரீதியில், முன்னாள் தென்றலாய், அரை ஓட்டமாய் நடந்து வந்துகொண்டிருந்தேன். நண்பருக்கு என்னைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை. ‘எந்தக் கோட்டையைப் பிடிக்க மற்றும்/அல்லது யாரை அடிக்கப் போகிறார்?’ எனப் புதிருற்றார். “எங்க சார் வேகமா?” என்றார் என்னைப் பார்த்து. நான் நிற்காமல், “என்னை ஒருத்தன் திட்டிட்டான்” என்று ஆத்திரமாக பதிலளித்துவிட்டு விறுவிறு என்று போய்க்கொண்டேயிருந்துவிட்டேன். நண்பர் பிளந்த வாய் மீள்சேராமல் நினைத்துக்கொண்டார் – “வாட் எ மேன்!”